Thursday, October 27, 2011

அனுபவி ராஜா அனுபவி....

அனுபவி   ராஜா  அனுபவி --------- ஒரு சிறு  கதை
-----------------------------------------------------------------
          "என்னடி  அம்மா இது ! இந்த  போஸ்ட்மேனை  இன்னும் காணலை. இவனும்  இவன் கொண்டுவந்து  கொடுக்கும்  பிச்சைக்காசும் ....எல்லாம்  சவம்டியோ ...”



    அவனைப்பார்த்ததும்  இந்த  டயலாக்தான்  சுந்தாவுக்கு  நினைவுக்கு  வந்தது .மேலத்தெருவில்  பக்கத்து வீட்டில்  இருந்த லட்சுமியம்மாளின்  மகனல்லவா  இது ? சதாசிவம்  என்ற பெயரை  வைத்துக்கொண்டு  சதா  எல்லோரையும்  சவமாகத்திட்டுவானே ---- ஒ  ! எத்தனை வருஷங்களாச்சு  இவனைப்பார்த்து .ஐம்பது  ஆண்டுகளுக்கு  மேலாகி  இருக்கும்.


." சதா... சதா.. " என்று சற்று  உரக்கவே  கூப்பிட்டான்  சுந்தா.
       

 "எந்த சவம்டா  என்னை  சதான்னு கூப்பிடறது ?" என்று சற்று  உரக்கவே  கூறி திரும்பியவனைப  பார்த்ததும்  சுந்தாவுக்கு அவன்தான்  என்று நிச்சயமாகத  தெரித்தது .


 “ஐயாம்  ஸாரி..... நான்தான்  மேலத்தெருவில் ...உங்க  பக்கத்து வீட்டு ...."
       

 "சுந்தா ...!  அடடா ..! நீயா    அடையாளமே   தெரியலியே ..."
       

  பின்னே ... ஐம்பது  வருஷம்னா   சும்மாவா ..வாயேன் வீட்டுக்கு  பக்கத்திலேதான்  இருக்கு ..நிறையப்  பேசலாம் "
        

 "ஹூம் , என்னத்தப் பேசப் போறோம் , சரி வா ,"  என்று சற்றே  சலிப்புடன்  கூறிய சதாசிவம் கொஞ்சமும் மாறவில்லையோ என்று தோன்றியது சுந்தாவுக்கு.

 மாசத்தின்   முதல் நாளே போஸ்ட்மேனின்  வரவை  எதிர் பார்க்க  ஆரம்பித்து  விடுவார்கள்  லட்சுமி  அம்மாளும்  பிள்ளைகளும் . அன்றைக்கு  இல்லாவிட்டால்  மறு  நாளாவது  கட்டாயமாக மணியார்டர்  வர வேண்டும் . கடன்காரர்களுக்கு  எவ்வளவு  நாள்  வாய்தா  சொல்ல முடியும் . கடன்  வாங்காமல்  இருக்கலாம்  என்றால்  முடியவா செய்யும் ? அந்த மட்டிலாவது  குடும்பம்  ஓடியது  அவர்கள்  வீட்டு  மூத்த பிள்ளை  கிச்சா அனுப்பும் ரூபாய் நூறால்தான். வீட்டிற்குப் 
 போகும்  வழியில்  பழைய  எண்ணங்களில் நினைவோடியது .
        

"என்ன ஒரு சவமடி --மாத்திக்கட்ட  நல்ல வேஷ்டியும்  ஷர்ட்டும்  இல்லாம---சே ! நான் ஒரு நல்ல ஸ்திதிக்கு  வந்து  ஒரு  டஜன்  வேஷ்டி  ஒரு டஜன் ஷர்ட்  ஒரு டஜன் பேன்ட்  எல்லாம் வாங்கி  ஆசை தீரப  போட்டுக்கணும் ...இஷ்டப்படி  சாப்பிட வேண்டும் ..வாழ்க்கையை  நன்னா  அனுபவிக்கணும் ".
   

 சதாசிவம்  இப்போது  சுமாராக  உடுத்தியிருந்தான் . பார்த்தால் ஓஹோ  என்ற நிலைக்கு  வந்த மாதிரித  தெரியவில்லை .
        

 வீட்டிற்கு  வந்ததும் , "கமலா, இது சதாசிவம் . கிராமத்தில்  எங்கள்  வீட்டுக்கு  அடுத்த  வீடு . ஐம்பது  வருஷங்களுக்குப  பிறகு  பார்க்கிறோம் .நல்ல காப்பி  போட்டுக்கொண்டுவா ", என்று கூறி மனைவிக்கு  அறிமுகப்படுத்தினான்


”சொல்லு  சதா .உன்னைப் பார்த்ததும்  அந்தக் கால நினைவுகள்  வந்து தாக்குகிறது .வீட்டில் எல்லோரும் சவுக்கியமா ....குழந்தை  குட்டிகள் ....."
       "

”நிறுத்து .. நிறுத்து ..நானே  சொல்கிறேன் . எனக்கு  வேலை  கிடைத்த  கையோடு அம்மா  போய்ச் சேர்ந்து விடடாள். என்னோட  துரதிர்ஷ்டம் நான்  நன்னா இருக்கிறதப்  பார்க்க  அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ,. என்ன  இருந்து  என்ன பயன் ? வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேணும் "


சதா பேசப்பேச  அவனுடைய  அடிப்படைப் பிரச்சினை -- எதிலும்  ஒரு விரக்தி ...கொஞ்சம்   கூட  மாறாமல்  இருந்தது சுந்தாவுக்கு  ஆச்சரியமாக  இருந்தது.  இதற்கு  என்ன காரணம்  என்று அறியும்  ஆவலும் அதிகமாயிற்று .


 “என்ன சதா  சலிச்சுகறே....வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ! பெரியவனாகி  சம்பாதிக்கும்போது  அப்படி  இருப்பேன்  இப்படி  இருப்பேன்  என்றெல்லாம்  சொல்லுவாயே ”


"இல்லை சுந்தா . அது ஒரு கதை . நான் ஏன்  இப்படி  இருக்கிறேன்  என்று எனக்கே  புரியாத  சவம் ..டா ”.


  சுந்தா  அவனே மேலும் சொல்லட்டும்  என்று மௌனமாக  இருக்க சதாசிவம்  தொடர்ந்தான்
       

 “பார் ,  எனக்கு வேலை  கிடைத்ததா ---வாழ்க்கையில்  முன்னேறணும்னு  அப்படி  ஒரு  வெறி .கண்  மண்  தெரியாமல்  உழைத்தேன் . சப்பாதிக்கும்போது  சரியாக  சாப்பிடாமல் , தூங்காமல்  வேலையே கதி என்றிருந்தேன் .அதற்கு நல்ல பலனும் கிடைத்தது .நான் இப்போது  ஒரு நல்ல நிலையில்  ஒரு கம்பெனியின் மேனேஜராக  வேலை  பார்க்கிறேன்” .


  சதாசிவம் ஒரு கம்பனியின்  மேனேஜரா ? நம்பவே முடியவில்லை சுந்தாவுக்கு . ஒட்டிய கன்னமும்  கூன் விழுந்த  முதுகும இடுங்கிய கண்களும்  பஞ்சத்தில்  பரிதவிப்பவன்  போலல்லவா  இருக்கிறான் . உடை விஷயத்திலும்  வெகு  சுமாராகத்தான் இருக்கிறான் 


 ” ஒரு கம்பனியின்  மேனேஜர் என்கிறாய் . பார்த்தால் ....."என்று சுந்தா சந்தேகம்  தெரிவிக்க 
,
       "அதுதான்  சொன்னேனே   ,வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேண்டும் என்று "


       " அது  உனக்கு இல்லையா   ஏன்?



"சுந்தா , கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமா ,  நமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் .   
 அதுவுமில்லாமல் யாராவது நல்ல முறையில்  உடுத்தினாலோ  நன்றாக சாப்பிட்டாலோ எனக்கு என்னையும் அறியாமல்  அவர்கள் மேல் கோபம்  வருகிறது. கஷ்டப்பட்டிருந்தால்தானே  சுகத்தின்  அருமை  தெரியும் . இவர்கள் எல்லாம் கஷ்டப்படாமலேயே  அனுபவிக்கிறார்கள்  என்று பொறாமையாகக்கூட  இருக்கும் . எனக்கே இது அவ்வளவு  சரியில்லையோ  என்று கூடத்தோன்றும் . இருந்தாலும் வாழ்க்கையை  அனுபவிக்க   சவம் - மனசு  வர 
மாட்டேன்  என்கிறது ”


 சதாசிவம் சொல்லச்சொல்ல  சுந்தாவுக்கு  நினைத்துப்  பார்க்கவும்  முடியாத  ஒரு கோணம்  வாழ்க்கையில்  இருப்பதும் தெரிந்தது . ஆனால்   இப்படியுமா ?
----------------------------------------------------------------------------------------
        










  








     








   



      
















      
     




    











 .
       










10 comments:

  1. // நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது .//

    இது ஒரு உண்மையான காம்ப்ளெக்ஸ். இதை விட்டு வெளியில் வர மிகுந்த மனோதிடம் வேண்டும். நானும் இதில் சிக்கி வெளியில் வந்தவன்தான்.

    ReplyDelete
  2. அருமையான அனுபவக்கதை தான்
    .
    இளமையில் வறுமையை அனுபவித்த சிலரால், எவ்வளவு பணம் வந்தாலும் செல்வழிக்க மனசு வராது என்பது உண்மை தான்.

    சிலரால் தான் தங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள முடியும். சிலரால் அது முடியவே முடியாது.

    அந்த சிலரின் வாரிசுகள் நேர் மாறாக நிறைய செலவுகள் செய்வார்கள். அதையும் இவர்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கும்.

    ReplyDelete
  3. நல்ல அனுபவம்.
    நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. இந்த பிரசண்டேஷன் நன்றாக இருந்தது.
    எழுதியவர் கதைக்கு ஒட்டாமல், தனியாக கதைக்கு ஊடெ ஊடே தன் கருத்தைச் சொல்லாமல் இருந்ததும்,சொல்ல நினைப்பதை கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியதும் கதைக்கு பலத்தைச் சேர்த்தது. ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ என்று ஒரு நப்பாசை.

    ReplyDelete
  5. காசிக்குப் போனாலும் கருமம் தீரவில்லை என்பார்கள்
    முதலில் கருமத்தைத் தீர்க்கவேண்டும் என்கிற
    மனோபாவம் வேண்டும்
    இல்லையெனில் தீர்வது கஷ்டமே
    சுருக்கமாகவும் சொல்லவேண்டியதை
    மிக தீர்க்கமாகவும் சொல்லிப் போகும் கதை அருமை
    தொடர வாழ்த்துக்க

    ReplyDelete
  6. உண்மையில் இதை தாழ்வு மனப்பான்மை என்று பலர் நினைப்பதுண்டு, ஆனால் இது சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை என்று சொல்லும் படி தான் கதை அமைத்திருக்கிறீர்கள்... அருமை... வம்சி சிறுகதை போட்டிக்கு இதை பரிந்துரைக்கிறேன்

    ReplyDelete
  7. இன்றும் நிறைய மனிதர்களிடம் காண்கிற இந்தப் பழக்கத்தை இத்தனை உன்னிப்பாய்ப் பார்த்தவர்கள் வெகு குறைவு. அதுவும் அந்த சவம் உபயோகம் இன்றைக்கும் கோவை-பாலக்காடு பகுதியிலும், நெல்லை முதல் திருவனந்தபுரம் வரையிலும் வெகு ப்ரஸித்தி.

    அது சிறுகதையில்லை பாலு சார்.பெருங்கதை.

    ReplyDelete
  8. சதாசிவம் சொல்லச்சொல்ல சுந்தாவுக்கு நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு கோணம் வாழ்க்கையில் இருப்பதும் தெரிந்தது . ஆனால் இப்படியுமா ?/

    எதிர்பாராத கோணம்.!

    ஆழ்ந்த அனுபவம் செறிந்த கருத்துக்களம்!

    பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  9. செலவழிக்கி தெரிஞ்சவனுக்கு தான் சம்பாரிக்க தெரியும் என்று என் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது, உண்மையை உரக்க சொன்ன கதை அய்யா.

    ReplyDelete
  10. வருகை தந்து கருத்துக்கள் கூறிய டாக்டர் ஐயா,கோபு சார், ரத்னவேல்,ஜீவி சார்,ரமணி,சூர்யஜீவா, சுந்தர்ஜி, ராஜராஜேஸ்வரி,ராஜகோபாலன் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete