Friday, December 13, 2013

ஆவிகள் உலகம் .........


                            ஆவிகள் உலகம்........ஒரு சிறுகதை
                          ------------------------  -----------------------
( சிறுகதை எழுதுவது என்பது சிலநேரங்களில் சிக்கலாய் இருக்கிறது. புனைவுதான் என்றாலும் உண்மைபோல் இருகக வேண்டும் அதற்கான கருவாக நான் தேர்ந்தெடுத்தது நம்பமுடியாத , நம்ப விரும்பாத ஒன்று. படித்துப் பாருங்களேன் )



இவனுக்குத் தூக்கத்தில் இருந்து திடீரென்று விழிப்பு வந்தது. ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தோமே , என்ன அது.?நினைவு படுத்திக் கொள்ள முயன்றால் ஏதோ மச மசவென்று காட்சிகள் விரிவது போல் தோன்றுகிறது. பிள்ளைகள் என்னவோ ஓஜா போர்ட் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
 இப்போது அந்த போர்டின் நினைவு ஏன் வர வேண்டும். கனவில் கண்ட காட்சிக்கும் இந்த ஓஜாபோர்டுக்கும் என்ன சம்பந்தம்.? இதெல்லாம் வேண்டாம் என்று படித்துப் படித்துச்சொன்னான் இவன். கேட்டார்களா.... எல்லாம் வயசுக் கோளாறு.. யாரோ ஆவிகளுடன் பேச முடியும் என்று சொன்னார்களாம். உடனே அதைச் செயல் படுத்திப் பார்த்துவிட வேண்டுமே. இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அப்படியே ஆவியுடன் பேச முடிந்தால் அது மனசை பாதித்துவிடும் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.


ஒரு அட்டையில் மேல் வரிசையில் ஒன்று முதல் ஒன்பது வரை எண்களை எழுதிக் கொள்கிறார்கள்.நடுவில் ஒரு சதுரத்துக்கு காலியாக இடம் விடுகிறார்கள்.அதைச் சுற்றிலும் ஆங்கில எழுத்துக்களை  வரிசையாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஆவியுடன் பேசப் போகிறோம் என்று நம்பிக்கை வேண்டுமாம்.நடுவில் உள்ள சதுரத்தின் நடுவே ஒரு ரூபாய் நாணயம் வைக்கவேண்டுமாம் அதன் மேல் ஒரு சின்ன டம்ப்ளரைக் கவிழ்க்க வேண்டுமாம்  ஆவியுடன் பேச ஆயத்தங்கள்தான் இவை.
  
ஆவியுடன் பேச நம்பிக்கை உள்ள இர்ண்டு பேர் வேண்டுமாம்.இந்த இரண்டு பேரும் அறிந்த இறந்த ஒருவரின் ஆவியைத்  தொடர்பு கொள்வது சிறிது எளிதாகலாமாம்
இருவரும் கண்மூடிப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். கவிழ்த்து வைக்கப் பட்ட டம்ப்ளர் மேல் இருவரும் லேசாகக் கை வைத்துக் கொண்டு ஆவியை அழைக்க வேண்டும் சற்று நேரத்தில் அவர்கள் கை லேசாக நடுங்கத் தொடங்குமாம். முதலில் வந்திருப்பது அவர்கள் கூப்பிட்ட ஆவியா என்று உறுதி செய்து கொள்கிறார்கள் மூன்றாவதாக இருப்பவர் நகரும் டம்ப்ளர் எந்தெந்த எழுத்தில் நிற்கிறதோ அதை குறித்துக் கொள்கிறார்


இவனுக்கு ஒரே சலிப்பு. நாம் ஏதாவது சொன்னால் கேட்டால்தானே. எதையும் செய்து பார்த்து விட வேண்டும் என்ற வேகம் இவனுடைய மகன் இந்த ஓஜா போர்ட் பற்றி சொன்னபோது இவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஆவியுடன் பேச முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று உறுதியாய் இருந்தான். மகனுடைய நண்பனின் தந்தை இறந்து போய் சில நாட்களே ஆகி இருந்தன. இறந்த மனிதர் இவனுக்கும் நல்ல நண்பன். அன்றுமாலை இவனுடைய மகன் வந்த போது முகமெல்லாம் வெளிறி மிகவும் பயந்தவன் போல் காட்சியளித்தான். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறதென்று இவனால் யூகிக்க முடிந்தது. என்ன விஷயம் என்று கேட்டாலும் ஒன்றுமில்லை என்னும் மழுப்பலே பதிலாய் வந்தது.

அன்றிரவு தூங்கப் போன இவனுக்கு திடீரென விழிப்பு வரவும் தன் மகன் பயந்து போனது போல் வந்ததும் நினைவுக்கு வந்தது.

காலையில் அவசர அவசரமாக இவனது மகன் எங்கோ போகத் தயாராகி இருந்தான். வீட்டில் அவன் தாயிடம் டேப் ரெகார்டர் கண்டிஷனில் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தான். என்ன செய்வது...! பிள்ளைகள் வளர்ந்து விட்டால் தோளுக்கு மேல் தோழன்தானே.கண்டிக்கவும் முடிவதில்லை. கவலைப் படாமலும் இருக்க முடிவதில்லை. இவனுக்கும் மகனின் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க விருப்பம்தான். பார்க்கலாம் சொல்லாமல் போய்விடுவானா என்று எண்ணிக் கொண்டே இவனது தினசரி அலுவல்களைக் கவ்னிக்கச் சென்றான். 


மாலை அலுவலகத்திலிருந்து வந்தவன் தன் ம்கன் வந்து விட்டானா என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான்.

மகன் வந்ததும்,என்ன இன்றைய அனுபபங்களையாவது சொல்லப் போகிறீரா இல்லை பயத்தில் அப்படியே இருக்கப் போகிறீர்களா.?

“ ஆவியாவது ஒன்றாவது என்று சொன்னீர்களே...! உஙகளுக்குத் தெரியாதது இல்லை என்றாகுமா

“ அதாவது நீ ஆவியுடன் தொடர்பு கொண்டாய்.. அதை நான் நம்பவேண்டும். சில சமயங்களில் மனப் பிராந்தியேகூட உண்மைபோலத் தெரியலாம்

மனப் பிராந்தியுமில்லை, விஸ்கியுமில்லை.  நாங்கள் ஆவியுடன் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது தெரியுமா... இவன் மகன் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினான். “ நேற்று  நாங்கள் அங்கிளின் ஆவியை வரவழைத்தோம். வந்திருப்பது அவர்தான் என்று நிச்சயம் செய்து கொண்டோம். அப்போது என் நண்பன் துக்கம் தாங்காமல் அழ ஆரம்பித்து விட்டான். இந்த மாதிரி ஓஜாபோர்ட் மூலம் பேசுவது கஷ்டம் . ஆகவே நாளைஇன்னும் நம்பிக்கையோடு வாருங்கள். சில விஷயங்களை உங்களில் ஒருவர் மூலம் நான் சொல்ல விரும்புவதை நீங்கள் கேட்கலாம்என்று சொன்னான். “அதற்காகத்தான் டேப் ரெகார்டரை எடுத்துக் கொண்டு போனேன்என்றும் சொன்னான்.


“ அவர் என்னதான் பேசினார் என்று நாங்களும் கேட்கிறோமேஎன்று இவன் சொன்னதும் “ இப்போது அது என்னிடம் இல்லை. அங்கிளின் மகன் அதை எடுத்துக் கொண்டு போய் விட்டான் ஓஜாபோர்டில் நாங்கள் அங்கிளைக் கூப்பிட்டதும் உடனே வந்தவர் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி எங்கள் இரண்டாவது நண்பனின் உடலில் புகுந்து விட்டார். அவனது உடல் ஒரு மாதிரி முறுக்கி கொண்டது. அப்போது அவன் பேசியது அங்கிள் பேசுவது போல் இருந்தது, நான் தயாராய் வைத்திருந்த டேப் ரெகார்டரை ஆன் செய்து அவர் பேசுவதைப் பதிவு செய்தேன். அங்கிளுக்கு அவர் மகன் நன்கு படித்து முன்னுக்கு வர வேண்டும் என்றும் மகளுக்குத் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற விருப்பமும் இருப்பதாகக் கூறினார்.பிறகு திடீரென்று எந்த வித முன் அறிவிப்பு மின்றிப் போய்விட்டார்.. பிறகு நாங்கள் ரெகார்டரை ஆன் செய்து ப்ளே செய்து பார்த்தால் அங்கிளின் குரலிலேயே அவர் சொன்னது பதிவாயிருந்தது. அங்கிளின் மகன் டேப்பை அவன் அம்மாவுக்குப் போட்டுக் காட்ட எடுத்துச் சென்றுவிட்டான் “என்று கூறினான்

.


இவனுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. இவனும் கூட இருந்திருந்தால் மரணத்துக்குப் பின் ஆவியுலகம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. மனசின் ஒரு ஓரத்தில் இறக்கும் முன் தான் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் ஒரு வேளை இப்படி ஆவியாகி அலையாதிருப்பாரோ என்றும் தோன்றியது.

--------------------------------------------------  


 
 
 
 

16 comments:

  1. நல்லதொரு சுவாரஸ்யமான கற்பனைக் கதை.

    பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. ஓஜா பலகை முறையில் - நான் ஒரே ஒரு முறை பேசி இருக்கின்றேன். சரியாகத் தான் இருந்தது.

    ReplyDelete
  3. அது என்ன ஓஜா பலகை ? நமக்கு ம் சில பல ஆவிகள் உள்ளன . பேசி பாக்கலாம்னு ஐடியா !

    ReplyDelete
  4. உங்கள் கற்பனைக் குதிரை எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருக்கிறதே!நல்ல கற்பனை.
    ஓஜா பலகை எல்லாம் நம்புகிறீர்களா?

    ReplyDelete
  5. ஒரு மூலையில் yes எனவும் மற்றொரு மூலையில் no எனவும் எழுதி வைத்து இருக்கும்.

    சிறிய வயதில் நானும் பார்த்திருக்கிறேன் - இந்த ஓஜா போர்ட் வைத்து ஆவிகளுடன் பேசுவதை!

    நல்ல கதை.

    ReplyDelete
  6. கற்பனைக் கதை அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இவருக்கு ஒருவிதமான நம்பிக்கை. மகனுக்கு வேறுவிதமான நம்பிக்கை. அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழ்க்கை. நல்ல சுவாரசியத்துடன் கொண்டு சென்றமை சிறப்பு. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  8. நம்மூரில் சாமி வந்து ஆடுவார்களே அதுபோலத்தான் ஆவியுடன் பேசுவதும். இருப்பினும் கற்பனை அருமை.!

    ReplyDelete

  9. @ கோபு சார்
    பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.

    @ துரை செல்வராஜு
    ஓஜா பலகை அனுபவம் உங்களுக்கு உண்டா? சுவாரசியமாக இருந்தால் பகிரலாமே

    @ டி.பி.ஆர் ஜோசப்
    சார் நம்பிக்கை இருந்தால் முயன்று பாருங்களேன்.

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    கதையின் துவக்கத்தில் எழுதி இருப்பதைப் பார்க்கவில்லையா. பாராட்டுக்கு நன்றி.

    @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    @ வெங்கட் நாகராஜ்
    நீங்கள் விளையாடியதில்லையா. அதிகம் கூட்டம் இருந்தால் ஆவிகள் வராதாமே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    @ கீத மஞ்சரி
    ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதியதைப் பாராட்டியதற்கு நன்றி.

    @ வே.நடன சபாபதி.
    சாமி ஆடுவதுபோல் ஆவியுடன் பெசுவது இருக்குமா. இறந்தவரின் குரல் பதிவாகி இருப்பது பற்றி யாருமே கூறவில்லையே. பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  10. கதை துவக்கியதும் முடித்ததும் அருமை
    இருக்கிறது இல்லையென்ற கருத்துக்கு ஆட்படாமல்
    எழுதிப்போனது பிடித்தது
    வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் ஒரு
    மறைவுத்தனமை உண்டு
    அதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே
    அது இல்லையெனில் வாழ்வு அட்டர் போராகிவிடும்
    மனம் கவர்ந்த கதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சிறு வயதில் எங்கள் வீட்டில் பெரியவர்கள் இப்படி ஓஜா பலகையில் ஆவிகளுடன் பேசியதை பார்த்து இருக்கிறேன்.
    கதை மிக இயல்பாய் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  12. என் பதிவிலும் சுத்த ஹம்பக் என்று சொல்பவர் பெயர் பாலு!

    சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  13. இன்று மறுபடியும்....

    நன்றி... http://engalblog.blogspot.com/2015/06/blog-post_24.html

    ReplyDelete
  14. Ouija boardடை நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
    பதில் கிடைத்திருக்கிறது.
    எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete