நாவல்-தொடராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல்-தொடராக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மார்ச், 2012

நினைவில் நீ ( அத்தியாயம் பதினைந்து )



                                 நினைவில் நீ ( நாவல் தொடராக.)
                                 ----------------------------------------------
                                                -------  15  ---------

          பாட்டி இற்ந்து போன பிறகு கமலத்துக்கு உறவினர்களின் க்ஷேம லாப நஷ்டங்களைப் பற்றி செய்தி கிடைப்பது மிகவும் அரிதாயிருந்தது. மேலும் அவ்வப்போது கிடைத்துவந்த கணிசமான உதவிகளும் நின்று போயிற்று. பாட்டியின் பெருமைகளைப் பற்றி பிரலாபித்துப் பேசியே கிட்டத்தட்ட  ஒரு மாத காலத்தை ஓட்டிவிட்டாள். கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணம் போதாத போதெல்லாம் பாட்டியின் ஞாபகமே அவளுக்கு வந்தது. கண்ணன் கல்யாணமான பிறகு அவளை வந்து பார்ப்பதைக் கூட நிறுத்தி இருந்தான்.பாபுவைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.முன்பும் அவன் அடிக்கடி வருபவனல்ல. இப்போதும் கிடையாது. எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் என்னடா பாபு, உன் அக்காளின் ஞாபகமே உனக்கு இல்லை. யாருக்கெல்லாமோ. என்னவெல்லாமோ செய்கிறாயே ஒரு முறை வந்தாவது, அக்கா ஏதாவது என்னால் ஆகணுமான்னு, கேட்டிருப்பாயா.? நானென்ன அப்படி உங்கிட்டேதான் ஏதாவது இதுவரைக் கேட்டிருப்பேனாஎன்று தொண தொணப்பாள். பாபுவும் சாதுரியமாக “ உனக்கு நான் ஏதாவது வேண்டுமா என்று கேட்பதே அத்திம்பேரை அவமதிப்பதாய் இருக்கும். அவரிருக்கும்போது உனக்கென்ன குறைஎன்று கேட்டே மடக்கி விடுவான்.

      பாபுவுக்கு பெயரும் புகழும் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கேள்விப் பட்டிருந்தாள், அதுவும் அரையும் குறையுமாக தன் கணவனிடமிருந்து. எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது அவளுக்கு. அதற்காகவே கண்ணனின் வீட்டுக்கு ஒரு நடை வந்தாள்.. அவள் வந்த நேரம் சரியாக இருக்கவில்லை.. அதற்கு முந்தின தினம்தான் கண்ணனும் மாலதியும் பாபுவின் வீட்டுக்குச் சென்று கோபப் பட்டு திரும்பி இருந்தனர்.

      கமலத்தைப் பார்த்ததும் கண்ணன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டான்.. வாவென்று கூடச் சொல்லவில்லை. அந்த ஆத்திரம் கமலத்துக்கு மாலதியிடம் திரும்பியது.

          நான்கைந்து நண்டும் சிண்டுமான வாண்டுகளுடன் கமலம் வந்ததும் மாலதிக்குப் பகீரென்றது. “ இதுகளுக்கு காப்பி, பலகாரம் இத்தியாதி வகையறாக்களுக்கு எங்கே போவது.ஏற்கனவே அரைப் பட்டினியாகக் காலம் தள்ள வேண்டி இருக்கு.இன்றைக்கு முழுப் பட்டினி என்றே அவள் எண்ணம் ஓடியது. அதனால் அவளுக்கு கமலத்தை வா என்று வரவேற்கவும் மறந்து போயிற்று. அது கண்டு “ என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்.? நான் வந்தது கூடத் தெரியாமல் பிரமிச்சு நிக்கறேளே. கல்யாணம் ஆனதற்கப்புறம் கண்ணன் ரொம்பவே மாறிட்டான்.அதுக்கு முன்னால் அக்கா, அக்கான்னு உயிரையே விடுவான். இதுக்குத்தான் சொல்றது; நல்லது பொல்லாது தெரியாமே ஒரு வீட்டிலேருந்து பொண் எடுக்கக் கூடாதுன்னு. டேய். சனியன்களா வந்த இடத்திலேயாவது வாலைச் சுருட்டிண்டு இருக்க மாட்டேள். “

          அக்கா, நான் பண்ணிண்ட கல்யாணத்தில் ஒண்ணும் குறைச்சல் இல்லை.. எல்லாம் நம்ம குடும்ப தோஷந்தான்.அண்ணா தம்பிகள் மாதிரியா இருக்கு. சேச்சே.! சுத்த மோசம். எல்லாருக்கும் கொடுக்கிற வரைக்கும்தான் நல்லவன். இல்லாட்டா பொல்லாதவன். அப்பா விஷயத்திலேயும் அப்படித்தான். இப்போ உன் விஷயத்துலேயும அப்படித்தான்.

           கமலத்துக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்து விட்டது. மெள்ள மெள்ள எல்லா சமாச்சாரங்களையும் கறந்து விட்டாள். பாபுவுக்கும் க்ண்ணனுக்கும் மனத்தாங்கல்.இதுக்குக் காரணம் கண்ணன் பாபுவிடம் உதவி கேட்கப் போயிருக்கிறான். அவன் கண்ணனைக் கன்னா  பின்னா வென்று பேசியிருக்கிறான்  அவன் இதையும் செய்வான் இதுக்கு மேலேயும் செய்வான். எல்லாம் அந்த சாதி கெட்டவளோட வேலையாய்த் தானிருக்கும். பாபுவுக்கு ரொம்ப நல்ல பெயராமே. ஹூம்.! எப்படி எப்படி எல்லாம் பேசி யாரையெல்லாம் ஏமாற்றுகிறானோ. ! அதுக்கு மட்டும் அவனுக்கு கொள்ளை சாமர்த்தியம். ..... என்றபடியெல்லாம் முடிவுக்கு வந்து, பொருமியும் ,சிலாகித்தும் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட கமலம், மாலதி பயந்ததுபோல் அவர்களை முழுப் பட்டினி யாக்கிவிட்டுத்தான், அங்கிருந்து போனாள்.

       வீட்டிற்கு திரும்பியவள் காட்சி, அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளுடைய கணவன் கட்டிலில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான். அருகில் பாபுவும் இன்னொருவனும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

        முதலில் கமலம் பதறிப்போனாள். கணவனுக்கு என்னவோ ஏதோ என்று கலங்கினவளுக்கு, அருகில் சென்றதும் எழுந்த நெடியும் கணவன் கிடந்த நிலையும் அவன் நன்றாகக் குடித்துவிட்டுப் போதையிலிருக்கிறான் என்று தெரிய வைத்தது. கணவன் குடிப்பது கமலத்துக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் நினைவு தவறும்வரைக் குடித்து வந்து பார்த்ததில்லை.

      அவளுக்கு பாபுவிடம் என்றுமில்லாத ஒரு தனி அன்பு அன்று ஏற்பட்டது. நிலை தவறி விழுந்து கிடந்த கணவனை வீட்டில் சேர்ப்பித்தவன் என்பதற்காக மட்டுமல்லாமல் இப்படி நடந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் போகப் பண்ணியவன் என்பதாலும் அவளுக்கு அவனிடம் மதிப்பும் சற்றே கூடியது.

     ”அக்கா, நான் எதுவும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நீயே யூகித்திருக்கிறாய். அத்திம்பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு என்று எனக்குத் தெரியாது. நல்ல காலம்.! நான் பார்த்திருக்காவிட்டால், அவர் இந்நேரம் லாரியில் அறைபட்டு ஆஸ்பத்திரியில்தான் இருந்திருப்பார். ஹும். அது போகட்டும். இனிமேலாவது அவர் இந்த வழிக்குப் போகாமல் நீதான் தடுக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து பார்ப்பேன். இப்போதுதானே தெரிகிறது, நீ ஏன் கஷ்டப் படுகிறாய் என்று. அவரை இந்தப் பழக்கத்திலிருந்து நீதான் மாற்றி திருத்தணும். நேரமாயிட்டது. நாளை வந்து பார்க்கிறேன். “ என்று கூறிவிட்டு பாபு சென்றுவிட்டான். அவனைப் பற்றி அவளுக்குக் கிடைத்த தகவல்களவன் அவளுக்குச் செய்த உதவி, இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது கமலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.

        “ இந்தப் பிள்ளைக்குத்தான் எவ்வளவு நல்ல குணம். இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. “ என்று முதன் முதலில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். பாபு போன பிறகு தன் கணவனைக் கண்ட போது அவளுக்கு ஒருவித அருவருப்பு கலந்த பயமும் ஏற்பட்டது. தன்னுடைய தலை விதி என்று விதியின் மேல் பழியைப் போட்டு சமாதானம் அடைந்து கொண்டாள்.

      மறுநாள் பாபு வந்தபோது, அவனைப் பார்க்கவே கமலத்துக்கும் அவள் கணவனுக்கும் வெட்கமாயிருந்தது. பக்குவமாகப் பேசி பாபு தன் அத்திம்பேரின் தவற்றை சுட்டிக் காட்ட, ஏதாவது பதில் சொல்ல வாயெடுத்த தன் கணவனை கமலம் பார்த்த பார்வையில் அவர் அடங்கி விடுவதை பாபு கவனித்தான்.இனிமேல் இந்த மாதிரி தவறான வழிக்குச் செல்லாமலிருந்தால், தன்னால் கூடிய மட்டும் உதவி செய்வதாகவும் வாக்களித்தா.ன்..அதற்கு இருவரும் சரி என்று தலை அசைக்கவே இருபத்தைந்து ரூபாய்களை கமலத்திடம் கொடுத்துவிட்டு பாபு சென்று விட்டான்.

      அவன் எதிர்பார்த்த பலன் கிடைத்து விட்டதாக ஏமாந்துதான் போனான். கமலத்தால் கணவனைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை. அவனால் குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. பாபு வரும்போதெல்லாம், கேட்கும்போதெல்லாம், குடிப்பதை ஒரேயடியாக நிறுத்தி விட்டேன். அப்போதாவது ஏதாவது கஷ்டம் வரும்போது குடியில் மறந்து போயிருந்தேன். ஆனால் குடிதான் மறைந்து விட்டதே தவிர கஷ்டம் வடியவில்லை என்று கூறி பாபுவிடம் அனுதாபத்துடன் பணமும் பெற்று வந்தான்-இன்னும் குடிப்பதற்கு
-----------------------------------------------------------------------
                                                         ( தொடரும்.)
   

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஏழு )

                   நினைவில் நீ (நாவல் தொடராக )                                                                    
                   ----------------------------------------------
                                    -----  7  ------
         ( இது ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இளைஞனின் குடும்பக் கதை,மனித
                 மனங்களின் உணர்வுகள்,ஆசாபாசங்கள்,அபிலாக்ஷைகள்,அறியாமைகள்
         கோப தாபங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றைக் கதையின் போக்கிலேயே எழுதி
.                இருக்கிறேன் தொடர்ந்து படித்தால் தெளிவாகத் தெரியும்..இருந்தாலும் இதுவரை பதிவிட்ட ஆறு அத்தியாயங்களில் வந்த கதையின் ரத்தினச் சுருக்கம் இதோ.
         
           ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு மூத்த
                தாரத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டாம் தாரத்தால் 
                நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். முதல் இரு பிள்ளைகளும் பெண்ணும் 
               முதல் தார உறவினர்கள் பேச்சைக் கேட்டு அப்பாவுக்கு எதிராக இருக்கிறார்கள்.
               முதல்தாரத்தின் கடைசி பிள்ளை பாபுவிடம் அவருக்குப்பின் அவந்தான் 
                பொறுப்பேற்று  எல்லோரையும் கரையேற்றவேண்டும் என்று உறுதி
                பெறுகிறார். மூத்தவன் சுந்தரம் ஒரு மனஸ்தாபத்துக்குப் பிறகு எங்கோ
                சென்று விடுகிறான். இரண்டாம் மகன் கண்ணன்,வேலையிலிருக்கும்போது
                பாட்டி முதலான உறவினர் சொல் கேட்டு தந்தைக்கு எதிராக இருந்தவன்
                வேலை போன நிலையில். பாட்டியின் வீட்டை விட்டு அகற்றப்படுகிறான். 
                பெண் கமலம் மணம் புரிந்து குழந்தை குட்டிகளுடன் கஷ்ட ஜீவனம் 
                நடத்துகிறாள.


                தன் இறந்த மகளின் இடத்தில் இருக்கும் ஒரு மகளை ரங்கசாமிக்கு மணம்
                முடிக்க முயற்சித்து, அது நடக்காமல் போகவும், யாரும் எதிர்பாரா வகையில்
               ஒரு வேற்றுசாதிப் பெண்ணை மணந்தவரை மன்னிக்க முடியாமல்,அந்தக் 
                குடும்பத்தை எதிர்த்து நிற்பதில் எல்லா வழிகளையும் பாட்டி கையாண்டாள்
.
               பயிற்சி முடிந்து திரும்பி வரும் பாபு,பம்பாயில் எதேச்சையாக அறிமுகமான
               சியாமளாவை பெங்களூர் வீட்டில் சந்திக்கிறான்

               பம்பாயில் இருந்து திரும்பிய பாபு, முதல் வேலையாக, கண்ணன் இருக்கும்
               இடம் சென்று குடும்பம் ஒன்றாயிருக்க வேண்டுகிறான். அங்கு வந்திருந்த 
               பாட்டியின் பேச்சால் பாபுவை அவன் வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று 
               பாட்டியிடம் தெரிவிக்கிறான். .பாட்டி வேண்டியதும் அதுதானே.)                                     
                                   
                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                 -----------------------------------------------
                                    ------ 7 ------
 பாபு, இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான்வீட்டில் இருக்கும் அரிசி வரும்.உனக்குச் சம்பளம் வரவோ இன்னும் பத்து நாட்களுக்கும் மேலே இருக்கு.ஏதாவது வழி பண்ணணும்,என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் கல்யாணி அம்மா. காதில் விழுந்ததைக் கேட்காத மாதிரி வெளியில் புறப்பட ஆயத்தமானான் பாபு.
      “ விசுவுக்கும் உடம்பு சரியில்லை.சுரம் அடிக்கிறது.அவனானால் சட்டை செய்யாமல் இரண்டு நாட்களாக சுரத்துடன் ஸ்கூல் போய் வருகிறான் டாக்டரிடம் போகலாமென்றாலொ பணமும் இல்லை. அவனும் உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று படுத்துக் கொண்டிருக்கிறான்.

       “ என்னை என்னச் செய்யச் சொல்கிறாய்பாபு கோபம் மீறிக் கேட்டான்.
இப்படிக் கேட்டால் என்னடா பதில் சொல்வது.ஹூம் ! இதைச்செய் அதைச் செய் என்று சொல்லும் நிலையிலா என்னை விட்டுப் போனார் உங்கப்பா.?கல்யாணி அம்மாவுக்குக் கண்ணீர் வந்தது.அதைக் கண்டதும் பாபு, “அரிசி இல்லையென்றால் பட்டினி கிடவுங்கள் .உடம்பு சரியில்லை என்றால் செத்துத் தொலையுங்கள். என் உயிரை எடுப்பதால் அரிசி வருமா, டாக்டருக்குப் பணம் வருமா. ?இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்என்று வெடித்தான்.

           கல்யாணி அம்மாவுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.இருப்பது இல்லாதது அறிந்து கொண்டு தரும் வீட்டுக்குத் தலைவன் இல்லை.அந்த நிலையில் இருக்கும் தான், வளர்த்த பிள்ளையிடமே சுடு சொல் கேட்க வேண்டி இருக்கும் விதியின் கொடுமையினைக் கண்டு குமுறினாள்.கணவன் இருந்தவரை மட்டும் இல்லை என்றில்லாமல் இருந்ததில்லை உள்ளது இல்லாதது என்பவற்றை சம உரிமையுடன் தெரியப் படுத்திஅதற்கேற்ற முறையில் செயல் படுத்த இருவருமாக முடிவெடுக்கலாம்.இப்போது அந்த உரிமை போய் விட்டது யாசகம் கேட்கும் நிலையாகி விட்டது. பெற்ற பிள்ளையானால் பெறுவது உரிமை எனலாம்.என்னதான் இருந்தாலும் பாபு கல்யாணி அம்மா வயிற்றுப் பிள்ளை இல்லையே.உள்ள வேதனை நினைவுகளால் வெதும்பிற்று பாபுவுக்கும் என்னவோ போலிருந்தது. தனக்கு இப்படி அடிக்கடி ஆத்திரம் வருவது ஆக்க வேலை ஏதுமில்லாமல் இயந்திர கதியில் நாட்களைக் கடத்துவதால் தானென்று அவன் எண்ணினான் அன்று கண்ணனின் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை வீசி எறியாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்றும் அம்மாவிடம் கோபப் படாமல் இருந்திருந்தால்,அவருடைய துயர நினைவு இந்த நேரத்தில் எழாமல் தடுத்திருக்க முடியும். தான் இனிமேல் தன்னிலை தவறுவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டான்.

    அம்மா.. அம்மா. நான் இங்கு வந்து ஆறு மாதங்களாகிறது இல்லையா அம்மா. இந்த ஆறு மாத காலத்தில் உங்களை ஒரு நாளாவது பட்டினி என்று இருக்க விட்டிருக்கேனா. எனக்குத் தெரியாதா வீட்டு நிலை. விசுவுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துப் போடா என்றல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். என்னிடமோ பணம் இல்லை என்ற நிலை.அது சுட்டிக் காட்டப் படும்போது ஏற்படும் கோபத்தில் உங்கள் மனசை புண் படுத்தி விட்டேன்..என் அம்மா.! கொஞ்சம் சிரியுங்களேன்என்று கூறி முடிக்கையிலேயே பாபுவால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவனால் தாய்க்கு ஏற்பட்ட வேதனையின் வெம்மையை  கண்ணீரால் நனைத்துக் குளிர வைத்தான்.சிறிது நேரத்தில் தன் வசமானான்.

     “ விசு உடம்புக்கு எப்படி இருக்கிறது.?உன்னால் வரமுடியுமென்றால், பரவாயில்லை என்றால் என் கூட வா . உனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிக்கிறேன் “என்று புதிர் போட்டான். விசுவும் பெரும் உபாதையையும் சிறு தூசாக மதிக்கும் சிறுவன் அண்ணனைத் தொடர்ந்தான்.

    “ எங்கேடா இப்படி... காப்பி கூடக் குடிக்காமல்...கல்யாணி அம்மா முடிக்கும் முன்னே, “ ஆமாமாம். காப்பி. மறந்தே போய்விட்டேன்.என்று திரும்பி வந்து காப்பி அருந்தி புறப்படத் தயாரானான் பாபு.

     சற்று முன்னிருந்த நிலைக்கு இப்போது புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அந்த அமைதியில் அவரவர் எண்ணங்களை அசை போட்டவாறு சில நிமிஷங்களைக் கழித்தனர்.அந்த அமைதியைக் கலைக்காமலேயே சைகையால் தாயிடம் விடை பெற்றுச் சென்றனர் பாபுவும் விசுவும்.

    எனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிப்பதாகச் சொன்னீர்களே என்னண்ணா அதுவிசு கெட்டான்.
“சொன்னால் சுவை போகும் சங்கதியடா தம்பி .அதைக் கண்டு புரிது கொள்வதே நல்லதடா தம்பி.என்று நாடக பாணியில் கூறி சிரித்தான் பாபு.
    உண்டு உடுத்து உறங்குவதோடு தன் ஆக்க உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க விரும்பிய பாபு அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.கலை மன்றங்களை நாடினான் நாடியவனின் உண்மை உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட பலர் அவனுக்கு உற்சாகமூட்டி மதிப்பும் கொடுத்தனர். சொற்ப காலத்திலேயே பாபுவின் பேச்சென்றால் அதற்கு தனி மவுசு என்று பலர் கூறுமளவுக்கு அவன் புகழ் வளர ஆரம்பித்தது. தன்னுடைய வெளியுலக நடவடிக்கைகளை தன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமலேயே மறைத்து வைத்து இருந்தான் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்து தானே ஆகவேண்டும். தெரிவிக்கும் பணி விசுவுக்குக் கிடைத்தது.

    பாட்டுக்கு  ஒரு புலவன் பாரதிக்கு விழா எடுக்க விழைந்திருந்த தமிழ் கலை மன்றத்தினர் பாபுவையும் பேச அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டத்துக்கு விசுவையும் அழைத்துப் போனான் பாபு.பாரதியின் கண்ணோக்கு “என்ற தலைப்பில் பேச பாபு எழுந்தபோது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.பேச்சுத் துவங்கும் முன்னே இவ்வளவு வரவேற்பு என்றால் அண்ணா பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் விசு. “ இந்த மனிதரா பேசப் போகிறார் “ என்று ஆச்சரியத்தில் நிலை குத்தி நின்றாள் சியாமளா.. இவனென்ன பேசப் போகிறான் என்று அலட்சிய பாவத்தோடு இருந்தாலும் இவனுக்கு இவ்வளவு மதிப்பா என்று பொருமினாள் பாட்டி. இவனுடைய நாடகமெல்லாம் பள்ளியில்தான் செல்லுபடியாகும் என்றிருந்தேனே இங்கும் கூடவா.?இருந்தாலும் என் தம்பி அல்லவா என்று உள்ளத்துப் பொறுமலை உறவால் கட்டுப் படுத்த முயன்றான் கண்ணன்.

       இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் முகத்தில் அமைதி நிலவ, கண்களில் ஒளி படர கொண்ட எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க ஒரே மூச்சாக எழுந்து நின்ற பாபு, கம்பீரமான குரலில், “ பெரு மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, சகோதர சகொதரிகளேஎன்று ஆரம்பித்ததும் சியாமளாவுக்கு விவேகாநந்தரின் நினைவே யெழுந்தது. கூட்டத்தில் அமைதி நிலவியது.

     பாரதியின் கண்ணோக்கு என்ற தலைப்பில் பேச எழுந்துள்ள நான் ,பேசும் முன்பாக உங்கள் அனைவரையும் வேண்டுவது, அவர் விரும்பிய புதியதொரு சமுதாயத்தைத் தோற்றுவிக்க எழுப்பப்படும் அஸ்திவாரத்தின் ஒரு கல் இந்தக் கூட்டம் என்று எண்ணி ,எண்ணியதை எண்ணியதாங்கு செயல் படுத்தும் முயற்சியில் இகழ்ச்சி அடைய விடக் கூடாது என்பதுதான் “ என்று ஆரம்பித்தவன் பாரதியின் எண்ணத்தில் ஏற்பட்ட எழுச்சியை அவர் இயற்றிய பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கினான்.
“ மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதி தனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனித்ருணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப் படும் தன்மையுடைத்தாய்தான் இருக்கும் பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும். ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.


    விழா முடிந்து கூட்டம் கலைய ஆரம்பிக்க இரவு ஒன்பது மணியாகிவிட்டது. விசுவுக்கு கொஞ்சம் தெம்பு இருந்தது என்றால் அது பாபுவின் பேச்சைக் கேட்ட பெருமையால் வந்ததாகும். டௌன்ஹாலிலிருந்து அலசூர் செல்வது எப்படி என்ற எண்ணம் கூட்டம்கலைந்த பிறகு தான் பாபுவுக்கு எழுந்தது. நடந்து செல்வது என்றால் குறைந்தது நான்கு மைல்களாவது இருக்கும். தனக்காவது பரவாயில்லை.விசுவையும் நடத்திச் செல்வது என்பது முடியாத காரியம். பஸ்ஸில் செல்லலாம் என்றால் கையில் காசில்லை. எச்சரிக்கை இல்லாமல் விசுவைக் கூட்டி வந்த பாபுவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.எப்படியும் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் முன்பே யாரிடமாவது சொல்லி இருந்தால் அவர்களாவது ஏதாவது வழி செய்திருப்பார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே விசுவையும் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டியவன் சிறிது தூரம் சென்றதும் சம்பங்கி டாங்க் அருகில் பஸ்ஸுக்காக காத்திருந்த நண்பர்கள் சிலரையும் சியாமளாவையும் அவள் கூட வந்த பெண்மணியையும் ஒரு சமயம் சியாமளாவின் தாயாக இருக்கலாம்- கண்டான். பஸ்ஸுக்கு நிற்காமல் மேலே தொடர்ந்து சென்றவனை தடுத்து நிறுத்தி விளக்கம் கேட்டார்கள். நண்பர்கள். பிடி கொடுக்காமல் பேசிய பாபுவிடம் பர்ஸ் காலி என்பதையறிந்த அவனுடைய ஆருயிர் நண்பன் கான்விடாப்பிடியாக வற்புறுத்தி பாபுவுக்கும் விசுவுக்கும் சேர்த்தே டிக்கட் வாங்கினான்.கானுக்கு பாபுவை நன்றாகத் தெரியும். பாபுவின் உள்ளத்தில் எழும் எண்ணங்களை அவன் வெளியிடாமலேயே உண்ரும் அளவுக்குத் தெரியும். அவ்வளவு அத்தியந்த நண்பர்கள். பஸ்ஸிறங்கி வீடு செல்லும்போதுஅன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளை கான் துருவித் துருவிக் கேட்டு கிரகித்துக் கொண்டான். பாபுவுக்கு அதனால் அந்த பற்றாக்குறை நிலை சமாளிக்கும் பொறுப்பு சுலபமாகி விட்டது.யூ ஆர் எ ஃப்ரெண்ட் இன் டீட், அண்ட் ஸோ  இண்டீட்(You are a friend in  deed  and so indeed.) என்று கூறி கானிடம் விடை பெற்றான் பாபு.
  ---------------------------------------------------------------------
                                             (தொடரும்)    

            .  .                 ;            .  

     ..    
  
   











ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் ஆறு )

                     
                         நினைவில் நீ ( நாவல் தொடராக )
                         ----------------------------------------------
                                          (---6---)

               கண்ணன் அருள் வீட்டில் தங்க ஆரம்பித்ததில் முதலில் அருளுக்கு ஆட்சேபமிருக்கவில்லை. என்றாலும் கண்ணனின் பர்ஸ் காலி என்று தெரிந்ததும் ஓரளவு மனத்தாங்கல் ஏற்படத்தான் செய்தது. என்னதான் நண்பன் என்றாலும் காலம் இருக்கிற நிலையில் ,விலைவாசிகள் ராக்கெட் போல் மேலேறும் காரணத்தால் கண்ணன் ஒரு பாரமாகத்தான் இருந்தான்.அருளுக்கு மெல்லவும் முழுங்கவும் முடியாத நிலை. அடித்துப் பேசி கண்ணனை விரட்டியிருக்கலாம். ஆனால் அருளிடம் இருந்த ஒரு நல்ல குணம், எவ்வளவு கெட்ட குணங்களிருந்தாலும் ,நன்றி மறவாத தன்மை ஒன்றுதான். எவ்வளவு நாட்கள் கண்ணன் அருளைப் பராமரித்திருப்பான்.! தன் சகோதரர்கள் மேலுள்ள பாசத்தை ஒரு வீம்புக்காக உதறியெறிந்திருந்தவன், அவர்கள் ஞாபகம் வரும்போதெல்லாம், அருளையும் மற்ற நண்பர்களையும் சகோதரர்களைப் போல் பாவித்து, அவர்களுக்கு உதவுவதை தன் தம்பிகளுக்கு உதவுவதுபோல் எண்ணி சமாதானம் அடைவான். அது அருளுக்குத் தெரியுமோ என்னவோ, கண்ணன் உதவி இருந்ததை மட்டும் அவன் மறக்கவில்லை. அதற்காக கண்ணனை என்றைக்கும் பராமரிக்கும் நிலையிலும் இருக்கவில்லை. மெல்ல பிட்டுப் பிட்டு விஷயத்தை விளக்கினான்.விளக்கியவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது என்றாலும் விளக்கப் பட்டவனுக்கு விரக்தியே மேலிட்டது. விளங்கியதைப் பட்டவர்த் தனமாக ஒப்புக்கொண்டான். முடிவில் அவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் விளைவிக்கும் முறையில், ஒரு ஆட்டோ கராஜில் மெகானிக்காக சேர்ந்தான். இந்த வரைக்குமாவது நிலைமை சமாளிக்கப் பட்டு விட்டதில் அருளுக்கு சந்தோஷம்தான்.



அருளுக்கும் கண்ணனுக்கும் இருந்த பல குணாதிசய வேறு பாடுகளுள் முக்கியமானது, அருளின் நிதானமும் கண்ணனின் படபடப்பும்தான். எந்த நிலையிலும் தன்னிலை மறவாத அருள் பல தடவை அதை மறந்த கண்ணனை சுய நிலைக்குக் கொண்டு வந்தவன். கண்ணனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படச் செய்தால், அவனைப் போல் ஒரு நல்லவனைப் பெறுதல் மிகவும் கஷ்டம். கண்ணன் அன்புக்காக ஏங்கினான். ஏக்கத்தில் எடுப்பார் கைப் பிள்ளையானான். ஏமாளியானான். சுற்றியிருந்தவர்கள் சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப் பட்ட சுரங்கம் என்ற நிலையில் அவனை மதிப்பதாகக் கணக்கும் போட்டான். அவனிடம் எதையும் பொருளாக ஏற்காத பாட்டியையும்  மாமாக்களையும் தெய்வமெனக் கருதினான். ஆனால் பொருளுக்காக மட்டும்தானா உறவு கொண்டாடுகிறார்கள்.?ஒருவனுடைய சன்னமான உணர்வுகளால் அவனை கருவியாக்கி விளையாடுபவர்கள் எத்தனை பேர்கள்தான் இல்லை.?இதைக் கண்ணன் உணர வில்லை. உணர்ந்திருந்தால் அவனுடைய வாழ்க்கையே மாறுபட்டிருந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ கண்ணன் தந்தையைப் பழித்துக் கொண்டான்.அவர் இறந்த பிறகு, அவர் இருக்கும்போது தான் உதவ வில்லையே என்ற உணர்வால் உருக்கப் பட்டான். இருந்தாலும் தன் தவறை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு வீம்பு ,தான் செய்ததுதான் சரி என்று அவனைப் பேச வைத்தது. நாவிலிருந்து வெளிவருவது அவன் நினைப்புதான் என்றறிந்தவர்கள்தானே ஏராளம். ஆக அன்றிருந்த கண்ணந்தான் என்றும் என்று எல்லோரும் நம்பினார்கள்.

 இந்த நிலையில்தான் பாபு பெங்களூர் வந்ததை கண்ணன் அறிந்தான்..அறிவித்ததோ அவன் பாட்டி. பாட்டிக்கு ஒரு பயம். தன் செல்வாக்குக்குக் கட்டுப்பட மறுத்த பாபு, எங்கே மற்றவர்களையும் அதிலிருந்து பிரித்து விடுவானோ என்ற திகில். பாட்டி உலகையறிந்தவள். மனிதர்களை நன்கு படித்தறிந்தவள். எந்த இடத்தில் எந்த சொல்லைச் சொன்னால் அதற்கு மிக அதிகம் சக்தி இருக்கும் என்ற வித்தை தெரிந்தவள். சுருங்கச் சொன்னால் , வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர்களிடம் தன் கருத்தை பதிய வைப்பவள். பாபு வந்து விட்டான். கண்ணனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதால் நொந்திருப்பான்.இந்த நேரத்தில் பாபுவின் பேச்சு கண்ணனுக்குப் புரியும். ஆனால் புரிய வைக்க விடக் கூடாது. அப்படியானால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். சேச்சே ! அது நடக்கவே கூடாது.!

ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யும் செயல்கள்தான் சரி என்ற எண்ணம். அதன்படி செய்யப்படும் செயல்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்க வேண்டும்; இருந்திருக்கும், சரியானதெது, தவறானதெது என்பதை அளக்கும் அளவுகோல் இருந்திருந்தால்.ஒருவருக்குச் சரியானது மற்றவருக்குத் தவறான தாகிறது.இதற்கு ஒரே காரணம் அவரவர்கள் இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையும், வளரும் சமுதாய சட்ட திட்டக் கட்டுப் பாடுகளும்தான். மாறுபட்ட சந்ததியினர் வளர்ந்து வருவது, மாறாமல் வளர்ந்த சந்ததியினரின் செல்வாக்குக்கு இழுக்கு, அவர்களது அட்சியின் பிடிப்புக்குஒரு வழுக்கு.

பாட்டிக்கு ரங்கசாமியின் மீது ஒரு தனி மதிப்பு இருந்தது. ,அவர் பாட்டியின் மகளுக்குக் கணவன் என்றிருந்த வரையில்..மகளோ நான்கு மக்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு தொடங்கு முன்பாகவே சுமங்கலியாகச் சென்று விட்டாள். சென்றவளுடைய இடம் நிரப்பப் பட்டது. ஆனால் நிரப்பப்பட்ட விதம்தான் பாட்டிக்குப் பிடிக்கவில்லை. மகளே சென்ற பிறகு மாப்பிள்ளையிடம் பற்றுதல் குறைந்திருந்தாலும் பேரப் பிள்ளைகளிடம் அன்பு வளர்ந்திருக்கலாம். வளர்ந்துமிருக்கும் என்றுதான் பாட்டி நம்பினாள்.,ரங்கசாமி மட்டும் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கா விட்டால்.

       என்னமாக ஏமாற்றி விட்டார். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எரிச்சலே பாட்டியின் புகைச்சலுக்கு மூலக் காரணம். சென்ற மகளின் இடத்தை இருக்கும் இன்னொரு மகள் நிரப்பட்டுமே என்று பாட்டி விரும்பினாள். விரும்பியதை வெளியிடவும் செய்தா.ள். ஆனால் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் சுபகாரியம் அல்லவா. ! கேவலம் மனிதனின் ஆசாபாசங்களுக்குக் கட்டுப் பட வைக்க முடியுமா.?

ரங்கசாமியாவது வேண்டாம் இல்லை என்று மறுத்திருக்கலாம்.ஆனால் மழுப்பி மறுத்தவர், அதோடு நிற்காமல் வேற்று ஜாதிப் பெண்ணையுமல்லவா இரண்டாம் தாரமாக மணந்தார்.! அதனால் பாட்டியின் மதிப்பும் கௌரவமும் எவ்வளவு குறைந்து விட்டது. ரங்கசாமி செய்த தவறுக்கு அவர் தண்டனை பெற வேண்டும்.எப்படி தண்டிப்பது.? ஏன், அவர் பெற்றெடுத்த செல்வங்கள்தான் இருக்கின்றனவே. அவர்களாலேயே அவரது செய்கை தவறு என்று உணர்த்துவதுதான் சரியான தண்டனை. பாட்டி எந்த அளவுக்கு ரஙகசாமியின் தவறை உணர்த்த நினைத்தாரோ, அந்த அளவுக்கு அவருக்கு அவருடைய செய்கையின் சரித்தன்மை உணர்த்தப் பட்டது. ரங்கசாமி வேண்டுமென்றே  ஒரு வேற்று ஜாதிப் பெண்ணை மண்ந்தாரா.? மனம் லயித்தவர் மணத்தில் முடித்தாரே. ,அதுவே ஒரு பண்பல்லவா. இருந்தாலும் நிகழ்ந்தது நடந்திருக்கக் கூடாது. நடந்ததால் ரங்கசாமி அதன் பலனை அனுபவிக்க வேண்டும். பாட்டியின் கணக்கும் தீர்ப்பும் ரங்கசாமி இருந்தவரை அவரை சஞ்சலப் படுத்தியதைவிட அவர் இறந்த பிறகு கல்யாணி அம்மாவை அதிகமாகத் தாக்கவேண்டும் என்பதே. அதையும் தூள் தூளாக்க முயல்கிறான் நேற்று முளைத்த இந்த பாபு.

அதற்காகத்தான் விரட்டியடித்த கருவியான கண்ணனிடம் பாட்டி செய்தி தெரிவிக்க வந்தாள். அவள் போதாத காலம் அவள் அங்கு இருக்கும்போதேபாபுவும் கண்ணனைக் காண வந்திருந்தான்.
“ வாடா ,பாபு, ரொம்பப் பெரியவனாயிட்டே.பம்பாயிலிருந்து வரதக் கூடத் தெரியப் படுத்தக் கூடாதா.”.என்று கண்ணன் கேட்டான்.

“நான் கடிதம் போட்டிருந்தேன் அண்ணா.ஆனால் நீதான் விலாசமிட்ட இடத்தில வாங்கக் கூட இருக்கலை போலிருக்கு. வந்தவுடன் விஷயம் தெரிந்ததும் உன்னைப் பார்க்க  நேரிலே வந்துட்டேன்.வந்த இரண்டு நிமிடங்களிலேயே பாபு தன்னை உதாசீனப் படுத்தி விட்டான். உதாசீனப் படுத்தப் பட்டதாக கண்ணன் நினைக்கக் கூடாது என்று துரிதமாகக் கணக்குப் போட்ட பாட்டி,நீ கண்ணனுக்கு எழுதிய கடுதாசி இன்னக்கிதான் கிடச்சுது.உடனே சேதி சொல்ல வந்தேன்.சௌக்கியமா இருக்கியா பாபு.என்று துணிந்து பொய் சொல்லிக் கேட்டாள் பாட்டி.

வலுவிலே வந்து பேசுபவரை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு பாபுவுக்கு யாரிடமும் வெறுப்பு கிடையாது.மனிதர்களை அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக வெறுக்கும் குணத்தை விட அவர்கள் மீது பச்சாதாபமே மேலிடும் வர்க்கத்தவன் ஆதலால் அவனும் பாட்டி கேட்ட கேள்விக்கு “சௌக்கியம் “ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.

     கண்ணனின் க்ஷேமலாபங்களை விசாரித்தான்.கண்ணனும் விட்டுக் கொடுக்காமல் பேசினான்.அண்ணா ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.சிதறி இருக்கும் நம் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். என்ற ஆசையால் உந்தப்பட்டு ஓடோடி வந்திருக்கிறேன். “

      “    “என்னவோப்பா, நீ இந்த மாதிரிஒரு பாசத்தோட பேசறதக் காணக் குடுத்து வைக்காத உன் அம்மா போயிட்டா. உங்களையெல்லாம் பெரியவாளாப் பார்க்கும்போது என் பாழும் மனசு உங்க அம்மாவை நெனச்சுப் புலம்பறது. ஏனோ தானோன்னு வளர்த்தின உங்க அப்பாவும் போயிட்டான் இனிமேயாவது உங்களுக்கு நல்ல காலம் வரட்டும்.கிடைக்கிற சம்பளத்தை செட்டு சிக்கனமாச் செலவு செய்து,மிச்சமிருக்கிறத அழகாச் சேத்து வெச்சுகூடிய சீக்கிரத்திலேயே குடியும் குடித்தனமுமா நீங்க வாழறத என்னக்கித்தான் பார்ப்போமொன்னு இருக்கு. “

     பாட்டி உண்மையாகவும் போலியாகவும் பேசியதிலும் உள்ளர்த்தம் இருப்பது பாபுவுக்குப் புரிந்தது.முகம் கடுமையாக மாறியது.. கண்ணனுக்குப் புரியவில்லை. கலங்கி விட்டான்.

      “ஆமாண்டா பாபு, இப்பத்தான் என் மனசு ஏதோ நிம்மதி அடைந்த மாதிரி இருக்கு.பாட்டி சொல்றது எவ்வளவு உண்மை. “என்றும் கூறினான்

அண்ணா, நிம்மதி அடைந்த மாதிரி தோன்றுவது தப்பில்லெ. உண்மையாகவே நிம்மதி அடைய முடியும். போயிட்ட அம்மாவப் பத்தி பாட்டி புலம்பறா.அது அவங்களுக்குப் பொருந்தும். ஆனா, நினைவு தெரியறதுக்கு முன்னாடி போன அம்மாவை நினைத்துப் புலம்பறத விட நம்மை வளர்த்து ஆளாக்கின ,இருக்கிற அம்மாவப் பத்தி எண்ணறதும் அதிலே நிம்மதி அடையறதும்தான் நமக்குப் பொருந்தும். அப்பா இருக்கிற போதில்லாத நல்ல காலம் அவர் பொன பிறகாவது நமக்கு வேணும்னா, அவர் விட்டுப் போயிருக்கிற கடமைகளை தொடர்ந்து செய்யறதுலதானே வரும். அதுக்குத்தான் நானும் துடிச்சுக் கிட்டு இருக்கேன்.பழசை எல்லாம் மறந்து என் கூட வா அண்ணா.வாழவும் விடாம சிந்திக்கவும் விடாமபிரிச்சுப் பார்க்கற இந்தப் பாழும் சொந்தங்களை நம்பாதே.அண்ணா! நம்பி இதுவரை வாழ்ந்ததுல உனக்கு உண்மையா மனத்திருப்தி ஏற்பட்டிருக்கா? சொல்லு அண்ணா.!கண்களில் நீர் மல்கக் கெஞ்சினான் பாபு.

  
      “அப்பவே நான் சொல்லலயா கண்ணா..நீ ஏமாளி, நீ இப்பொ சுதந்திரமா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கிறது, அந்த நீச சாதிப் பொம்மனாட்டிக்குப் பிடிக்கலை. உன்னைச் சுரண்ட பாபுவை அனுப்பி இருக்கிறாள் பாபுவும் பாவம்..ஏதோநல்லது செய்யறதா தவறா எண்ணிட்டு பாம்புக்குப் பால் ஊத்தறான்.அது போறாது அதுக்கு மேல தன்னால முடியாதுன்னு தெரிஞ்சு, அவ பேச்சைக் கேட்டு உன்னையும் அந்தச் செயலை செய்யக் கூப்பிடறான்.நீ போவியோ என்னவோ அது உன் இஷ்டம்.ஆனா நீ ஒரு ஏமாளி உன்னை இப்படி எல்லாரும் படுத்தறத நெனச்சுதான் எனக்குப் பாவமா இருக்கு. “ பாட்டியும் விட்டுக் கொடுக்காமல் முந்தானையால் கண்ணைத் துடைத்து ,மூக்கை சிந்தி புலம்பினாள். கண்ணனுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. மதில் மேல் பூனையை ஒத்ததாய் இருந்தது அவன் நிலை. இல்லை இப்படியும் சொல்லலாம். ஓட்டுக் கேட்க வந்த இரண்டு வேட்பாளர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற புரியாத நிலை படைத்த பாமரனாய் நின்றான்.

இல்லை அண்ணா இல்லை. உன்னை ஏமாளி என்று அறிந்தவர்கள் இவர்கள்தான்.அதனால் நீதான் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறாய்.உன்னை இதுவரை சுரண்டியது யாரண்ணா.? என்றைக்கு நீ படிக்கும்போது லீவில் இவர்கள் வீட்டுக்கு வந்து போனாயோ அன்றையிலிருந்துதானே அண்ணா உனக்கு அம்மா மேல் கோபம். அதுவரைக்கும் என்னைவிட நீயும் அவர்கள்மேல் அன்பு செலுத்த வில்லையா...அவர்களைப் பராமரிக்க முடியாம உன்னை உதவிக்கு அழைக்கிறதா யாராவது சொன்னா அதைப் பொல ஒரு அபாண்டம் வேற இருக்காது. உனக்கு வேலை போன பிறகு எவ்வளவு நாள் உன் பாட்டி வீட்டில் இருந்தாய் அண்ணா... உனக்கு புத்தி சொல்ல எனக்கு வயசாகலை. நம் குடும்பம் இப்படி சின்னாபின்னமாக இருக்கிறத எண்ணி நொந்துபோய் உன்னைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் பார்க்க விரும்பாதவங்களையும் பார்த்தேன். என் வாதம் உனக்குப் புரியுமா புரியாதா என்பது எனக்கு நாளைக்குத் தெரியும்..புரிஞ்சிருந்தா நாளைக்கு நீ நம் வீட்டுக்கு வருவாய். இல்லையென்றால் புரிந்தபிறகு கட்டாயம் வருவாய். பாட்டி.. இப்படி உங்களைக் கூப்பிடவே வெட்கமா இருக்கு.சொந்தத்துக்காக அல்ல. உங்க வயச நெனச்சு கூப்பிடுகிறேன் அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். உங்களுடைய தீவினைகளுக்கு நன்றாக தெய்வம் பதில் சொல்லும். சாகிற சமயத்திலாவது உங்கள் தவறு உங்களுக்கு புரியணும்.ஆண்டவன் அதைப் புரியவும் வைப்பான். உங்க பெண் விட்டுப் போன இடத்திலே இருக்கிற பெண்ணை உங்க பெண் மாதிரி நீங்க நினைத்திருக்க வேண்டியதுதான் முறை. அதைச் செய்யாத நீங்கள் ....எனக்கு எப்படி சொல்வதுன்னே தெரியலே. அண்ணா நான் வரேன் “...ஆத்திரம் கோபம் வெறி மேலிட வார்த்தைகளை வீசி எறிந்துவிட்டுச் சென்றான் பாபு.

 பார்த்தியாடா, பார்த்தியாடா.. அந்தப் பிள்ளை எப்படி எல்லாம் பேசிட்டுப் போறதை

      “இது ஒண்ணும் பிரமாதம் இல்லை பாட்டி. இதை விடக் கேவலமா எங்கப்பாவை நான் பேசி இருக்கேன் இதுக்கே நீ இப்படி எண்ணினா, எங்கப்பா எப்படி வருத்தப் பட்டிருக்கணும்.ஹூம்.!எனக்கு எதுவுமே புரியலை. பாபு பெசியதை கேட்டு என் மனசு ரொம்பவே குழம்பிக் கிடக்கு. “ என்றான் கண்ணன்.
.
       “ நீ பாவம்டா கண்ணா....உன்னை யாருக்கும் தெரியாது. எனக்கு நன்னாத் தெரியும். நீ சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு. ஏதாவது மனசுக்கு கஷ்டம் வந்தா என்னை நெனச்சுக்கோ.எல்லாம் சரியாயிடும்.பரிவுடன் கண்ணன் தலையைக் கோதியபடி ஆதரவளித்தாள் பாட்டி.. பாட்டிக்குத்தான் கை வந்த வேலையாயிற்றே அது..!போலி அன்பில் கட்டுப்பட்டு கண்ணன் பாட்டியைப் போலொருவர் வேறில்லை என்று நினைத்தான்.


கண்ணனுக்கு பாட்டி தன்னை மறைமுகமாக வீட்டை விட்டுப் போ என்று சொன்னது கூட தன் நலனில் அக்கறை கொண்டு சொன்னதாகத்தான் இப்போது எண்ண முடிந்தது. இல்லையென்றால் தன் இடம் தேடி பாட்டி வர வெண்டிய அவசியம் இருந்திருக்காதே. பாபுவோ பாவம் ஏமாளி.. என்னைப்போய் ஏமாளி என்கிறானே. பாட்டி அப்படிச் சொல்வது நான் ஏமாந்து விடுவேனோ என்ற பயத்தால்தான்.பாட்டியை ஏமாற்றக் கூடாது. பாபு மேடையில் உணர்ச்சி வசப் பட்டுப் பேசுவது போல் பேசுகிறான். அவன் ஒருமேடை நடிகன்தானே. எத்தனையோ நாடகங்கள் நடத்தி இருக்கிறான். இப்போது உணாமையாகவே நாடகமாடுகிறான். இவன் நடிப்பில் ஏமாந்து நாளை நான் அவள் வீட்டுக்கு அதை நம் வீடு என்கிறானே.போக வேண்டுமாம். நானா போவேன்? எனக்கா தெரியாது.?பாட்டி சொல்லும் முன்பாகவே கண்ணன் முடிவெடுத்து விடுகிறான். எடுத்த முடிவைப் பாட்டியிடம் தெரியப் படுத்தவும் செய்தான். புன்னகைப் பொலிவுற பாட்டியும் விடை பெற்றாள்..
------------------------------------------------------------------------------------------------------------ ( தொடரும் )- ,