நாவல்-தொடராக. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல்-தொடராக. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 மார்ச், 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் பதினேழு )


                                    நினைவில் நீ ( நாவல் தொடராக.)
                                    ---------------------------------------------

                                                      -----   17   -------

        தமிழ் மன்றம் மக்கள் மன்றமாய் மாறும் நாள் நெருங்க நெருங்க அதில் சம்பந்தப் பட்டவர்களின் வேலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பிரமாண்டமான முறையில் மூன்று நாள் விழாக் கொண்டாட திட்டமிட்டு அதன்படி செயல் நடத்தும்போதுதான்,இது எதிர்பார்த்த சுபிட்ச பாதையில் முன்னேற , அந்தப் பாதையின் துவக்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

     நிகழ்ச்சியின் முதல் நாளும் வந்தது. ஊரே திரண்டு வந்து ஆதரவு கொடுத்ததைக் கண்டபோதுதான், தாங்கள் பட்ட கஷ்டத்தின் பயனை அடைந்ததாக ஒரு நிறைவு ஏற்பட்டது.முத்தமிழ் விழாவில் இயல் இசை நாடகம் எல்லாம் பங்கு பெற்றன. பட்டிமன்றமும் கவி அரங்கமும் ,ஆடலும் பாடலும், நாடகமும், ஓவியமும் எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றதோடு, அவர்கள் கொண்ட லட்சியத்தின் அடிப்படையில் எழுந்ததால், அவ்விடத்தில் தமிழ் மன்றம் ஒரு புரட்சியையே தோற்றுவித்து விட்டது.

     வீட்டிற்கு வீடு சென்று எல்லோரையும் அழைத்தனர். தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த திட்டங்களை விவரமாக எல்லோருக்கும் எடுத்துரைத்து அதில் எல்லோரும் பங்கு பெறுவதான ஒரு திருப்தியை எல்லோருக்கும் அளித்தனர்.

    எந்தக் காரியத்திலும் ஒவ்வொரு தனி மனிதனும் பங்கு பெறுகிறான் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான் அந்தக் காரியம் வெற்றி பெறும் என்பதை நன்கு உணர்ந்திருந்த பாபு ,திட்டங்களை நிறைவேற்ற சீரான வழி முறைகளை வகுத்துக் கொடுத்திருந்தான். அதையும் அவரவர்களே உணர்ந்து செயவது போன்ற ஒரு சூழ் நிலையையும் ஏற்படுத்தி இருந்தான். எந்தக் காரியத்துக்கும் ஒரு காசு கூட தராத மகாப் பிரபுக்கள் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கும் மீறி உதவினார்கள் என்றால் அது அவர்களுக்கே மனதில் பட்ட குறைகளை சீர் திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பின் காரணம் என்றே திட்ட வட்டமாகக் கூறலாம்..

     இன்ன காரணத்துக்காக விழா நடைபெறுகிறது, இன்னின்ன பிரச்சினைகள் தீர்வு காணப் பெறப் போகின்றன என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அவை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், மன்றத்து உறுப்பினர்களேகூட எதிர் பார்க்கவில்லை., பாபுவைத் தவிர.. பாபுவுக்கு இதையும் விட நன்றாகச் செய்ய முடிய வில்லையே என்ற குறைதான் மேலோங்கி இருந்தது. ஊண் ஒழித்தான், உறக்கம் ஒழித்தான், உடலின் உபாதைகளையே மறந்தான் தான் செய்யும் பணியில் ஆண்டவனைக் கண்டான். லட்சியக் கனவு ஈடேறுகிறது என்று அறியும்போது, ,--ஆண்டவனே இந்தப் பணி சீரான பாதையில் சென்று ,இந்த சமுதாயம் ஓரளவு நன்மை பெறுகிறது என்றால், அது தொடர்ந்து நடக்க அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருக்கும் உன் ஆசிகள் தேவை. நல்லெண்ணத்தில் எழும் காரியங்களை செயல் படுத்த மனோ திடமும், உடல் தெம்பும் எங்களுக்குக் கொடுப்பாய் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பணிகளை செய்ய எவ்வளவு பிறவிகள்  எந்த இன்னல்களிலும் , வேண்டுமானால் எடுக்கத் தயாராய் இருக்கிறேன் ---என்று அடிக்கடி வேண்டிக் கொண்டான்

   பாபுவுக்கு இரு கரங்களாகவும் , கண்களாகவும்,சியாமளாவும் கானும் பணி புரிந்தனர். பட்டி மன்றத்தில் விவாதம், “ சமுதாயம் வளர்வது தனி மனிதன் முயற்சியாலா, அல்லது கூட்டுறவாலா “ என்ற தலைப்பில் நடந்தது. சான்றோர்களும் பாமரர்களும் பங்கு கொண்ட விவாதம் சூடு பிடித்தது.

     “ கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது, தேடும் பாதையாகக் கூட்டுறவு கொள்கை உருவாகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற அளவில் எல்லோரும் செயல் படுவது , அவரவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துஆட்சிக்கு அனுப்புவதில் மட்டும் இருக்கக் கூடாது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால், அது நன்மையாகத்தான் முடியும். ஆக அந்த உணர்வோடு செயல்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளரும் என்று ஒரு கட்சியினர் சான்றுகளும் மேற்கோள்களும் காட்டி விவாதித்தனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது கடமைகளை ,உடைமைகளைப் பெருக்கும் விதத்தில் செயலாற்று கையில் சமுதாயம் தானாக வளரும் என்றும் விவாதித்தனர்.

     கூட்டுறவு முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள் தங்களது தனிப்பட்ட பல கருத்துகளை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழ வைப்பதோடு தாங்களும் வாழ வேண்டும் என்ற கொள்கையில் எழுந்தால், சீர் கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும் பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து , நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும் கட்டுப் பாடு அதிகரிக்கும்.விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும், போட்டி பொறாமை குறையும் .எல்லோரும் ஓர் குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் சமதர்மம் சிறப்பாக நிலை பெறும். என்றெல்லாம் மற்ற கட்சியினர் விவாதித்தனர்

    தீர்ப்போ,தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் மேன்மையடைவது என்பது இயலாத காரியம் ஆதலால், அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனி மனிதனின் கட்டுப் பட்ட வளர்ச்சி கூட்டுறவால் விளைந்தால் வளர்ந்த வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஆதலால் அதுவே சிறந்தது என்று இருந்தது.

     கவி அரங்கம் கூடி இருந்த மக்களின் அறிவுக்கு விருந்தாகவும் ,வளர்ந்து வரும் சமுதாயத்தின் சிறப்பை உணர்த்துவதாகவும் இருந்தது.. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நமது கலை வளர்ச்சியை எடுத்துக் காட்டும் முறையில் இருந்தது. நாடகமோ நல்லது கெட்டது என்பன போன்றவற்றை நகைச் சுவையோடு வெளிப் படுத்துவதாக அமைந்தது.

     நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் நிறைவு பெற்றனர். நினைத்ததை நினைத்தபடி எடுத்துரைக்கவும், எடுத்துரைக்கப் பட்டவற்றை சீர்தூக்கி முடிவுக்கு வரவும் அவர்களால் எளிதில் முடிந்தது என்றால்,,எடுத்துரைக்கப் பட்டவை அனைத்தும் ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவும் சார்ந்ததாகவும்  இருந்ததாகும்

     நிகழ்ச்சிகளாலும் நன்கொடைகளாலும் ரூபாய் ஐம்பதாயிரம் திரட்டினர். அதுவே மக்கள் மன்றத்தின் தொடக்க ரொக்கமாக அமைந்தது.

    ” என்னடா பாபு, வேளா வேளைக்குச் சாப்பிடாமல்,தூங்காமல் இப்படி உழைத்தால் உடம்பு என்னத்துக்காகும்? சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும். என்பார்கள். முதலில் உடம்பு ஆரொக்கியத்தைப் பார்த்துக் கொள்ளணும்டாதன் மகனின் தன்மை உணர்ந்த கல்யாணி அம்மாவின் பேச்சில் கனிவோடு, பரிவும் ஆதங்கமும் கலந்திருந்தது., பாபுவின் தளர்ந்த உடம்புக்கு இதமாகத்தான் இருந்தது.இருந்தாலும் இதே போன்ற உள்ளுணர்வோடு இதே தாயால், தன்னோடும் தன்னைவிடவும் அதிகமாக உழைத்த தன் நண்பர்களிடம் பரிவு காட்ட முடியுமா என்றே அவன் எண்ணினான். இவர்களாவது வளர்த்த பாசத்தால் எழும் உணர்ச்சிகளைத் தன் மகனிடம் காட்டுகிறார்கள். இந்த அனுபவம் இல்லாத சியாமளாவால் எல்லோரையும் ஒரே மனத்தோடு நேசிக்க முடியுமா, கனிவு காட்ட முடியுமா என்றும் அவன் சிந்தித்தான். சியாமளாவின் நினைவு வந்ததும் அவனது உடற்சோர்வும் உள்ளச் சோர்வும் அவனிடமிருந்து சற்றே விலகிச் செல்வது போல்ஒரு பிரமையும் அவனுள் எழுந்தது. அவள் நினைவே இப்படி என்றால் ..அவள் அருகில் இருந்தால்....?அருகில் இல்லாமலா இருந்தாள்.? விழாவின் பெரும் சுமையைத் தாங்கினவர்களில் அவளும் ஒருத்தி அல்லவா.விழாவே இவ்வளவு சிறப்பாக நடந்தது என்றால் அதில் பெரும் பகுதி பெருமை அவளையே சாரும். என்றெல்லாம் எண்ணத்தொடங்கிய பாபுவுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவளிடம் தனிமையில் பேச வேண்டும் போல இருந்தது. அவளோடு காதற் பண் பாட வேண்டும் போல இருந்தது.

     கல்யாணி அம்மாவைத் திருப்திப் படுத்தவென்றே ஒன்றிரண்டு கவள்ம் சோறு சாப்பிட்டு, சியாமளாவைக் காணப் புறப்படத் தயாரானான்.வாசல்படி அருகே வந்தவன் திடுக்கிட்டான். அவன் அங்கு கனவிலும் கமலத்தை எதிர் பார்த்திருக்க மாட்டான்.அவளது தோற்றம், நடை அதில் கண்ட பரபரப்பு எல்லாம் பாபுவுக்கு ஏதோ எதிர்பாராத சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்த்தியது.

     வந்தவள் அந்த நிலையிலும் வீட்டுப்படி ஏற வில்லை. வாசலில் இருந்தபடியே பாபுவைத் தன்னோடு வரும்படி அழைத்தாள்.

    “ உள்ளே வா, அக்கா. விஷ்யத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் .அம்மாவும் தம்பிகளும் ரொம்ப சந்தோஷப் படுவார்கள்.

    “ நான் இப்போது இருக்கும் நிலை எல்லோரும் சிரிக்கும்படித்தான் இருக்கு. பாபு நான் இப்போது உள்ளே வரதா இல்லை.உனக்கு உன் அக்கா மேல் அன்பிருந்தால் உடனே என் கூட வா. “

     வெளியே புறப்பட்ட பாபு யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும் கல்யாணி அம்மா வெளியே வந்து பார்த்தாள்., கூடவே ராஜுவும் விசுவும் வெளியே வந்தனர். வந்தவர்களைக் கண்டதும், கமலம் எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டாள். பாபுவுக்கு எதுவும் புரிய வில்லை. கல்யாணி அம்மாவுக்கு கமலம் வந்ததும், அவள் தன்னைக் கண்டும் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றதையும் பார்த்த போது மனசை என்னவோ செய்தது போல இருந்தது.
”அவள் வந்து என்னிடம் பேசியதைக் கேட்கும்போது, ஏதோ கலவரம் நடந்த மாதிரித் தெரிகிறது. என்னவென்று விசாரித்து வருகிறேன் அம்மாஎன்று தெரிவித்தவனுக்கு  ஏனோ தானே குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் இருந்தது. தாயிடம் தமக்கை நடந்து கொள்ளும் விதம் இதுவல்ல என்று அவன் உள்மனம் கூறியது. தாயென்றே அவள் ஏற்க வில்லையே என்று மறு புறம் சமாதானம் கூறிக் கொண்டது.

   “ இந்தப் பெண்ணுக்கு என்னிடம் ஏன் தான் இந்த வெறுப்போ.என்று நினைத்துக் கொண்ட கல்யாணி அம்மா, பாபு சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ராஜுவுக்கும் விசுவுக்கும் பற்றிக் கொண்டு வந்தது. “ வீடு வரை வந்தவளுக்கு வீட்டுக்குள் மட்டும் வரப் பிடிக்க வில்லை என்றால் வராமலேயே இருந்திருக்கலாம்என்றான் ராஜு.

     “ உன்னையும் என்னையும் காண வரவில்லை அவர்கள். பாபு அண்ணாவைப் பார்க்க வந்தார்கள். பார்த்தார்கள்,பேசினார்கள் போய் விட்டார்கள். ஏதோ இழவுக்கு சொல்லிக் கொள்ள வந்த மாதிரி இருக்கு “ என்றவனை மேலே பேச விடாமல் “கண்டபடி உளறாதேடா விசு. தமாஷுக்கும் அரட்டைக்கும் கூட அந்த மாதிரிப் பேசக் கூடாதுஎன்று கல்யாணி அம்மா தடுத்து விட்டாள்.

     கமலத்தை தொடர்ந்து சென்ற பாபு, அவளோடு அவள் வீட்டை அடையும்போது குழந்தைகள் எல்லாம் பயந்து போய் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நடந்த சம்பவங்களை ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டான் பாபு.

   ” நேற்றைக்கு இவர் வீட்டுக்கு வரும்போதே ராத்திரி பத்து மணிக்கு மேலாயிடுத்து. நீ அன்றைக்கு கொண்டு வந்த மாதிரி நேற்றைக்கு யாரோ கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ராத்திரி பூரா மூன்று நாலு தடவை வாந்திதான். ரொம்ப துவண்டு போனவருக்கு காலையிலேருந்து நல்ல சுரம். என்னென்னவோ சொல்றார். எனக்கு ரொம்ப பயமாயிடுத்து. கண்ணனைக் கூப்பிடலாம்னு போனா அவன் அங்கிருக்கலை.பாட்டியும்தான் இல்லையே. டாக்டர் கிட்டே காட்டலாம்னா கையிலெ கொஞ்சங்கூடப் பணமில்லை. கடைசிலே உங்கிட்ட வந்தேன். பாபு இந்த தடவை எப்படியாவது உதவி பண்ணு. அப்புறம் உதவின்னு நீ இருக்கிற திக்குலே கூடத் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.

     கமலம் பேசிய விதமே பாபுவுக்குப் பிடிக்க வில்லை. வேறு கதி இல்லையே  என்று அவனிடம் வந்த்ததாகக் கூறியவள் நடந்து கொண்ட முறையிலும் அதேதான் தெரிந்தது. எந்த வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்று கூடத் தெரியாமல் இருக்கிற திக்குலே கூட தலை வைக்க மாட்டேன் என்கிறாள்

    அறியாதவர்கள் அறியாமல் செய்யும் பிழைகள் பொறுக்கப் படட்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டவன், சிவராமனை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். மூடிய கண்களிலும் குழி விழுந்து கரு வளையம் மூடிக் கொண்டிருந்தது. உயர்ந்த உருவம் குறுகிய் மார்பு ஒட்டிய கன்னம் எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு சிவ ராமனின் உதடுகளும் நாசியும் புரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பாவனையில் இருப்பது போல் தோன்றியது. அதிலும் ஒரு குரூரத் தன்மை, மூச்சுவிட்டு இழுக்கும்போது மூக்குடன் சேர்ந்தியங்கும் உதடுகளில் இருப்பது தெரிந்தது.

   “ பாபு உன்னை என் கூட வரச் சொன்னேன். நீயும் வந்தாய். விவரங்களும் புரியும்படி சொல்லி யாயிடுத்து.நீ என்னடான்னா, பேசாமலேயே இருக்கே. என்ன பண்றதுன்னு சீக்கிரம் சொல்லு. எனக்கென்னவோ பகீர் பகீர்ன்னு அடிச்சுக்கிது. “

   “அளவுக்கு மீறி குடிச்சதுனால ஏற்படற ஆஃப்டர் எஃபெக்ட்ஸ். அன்னக்கே நான் சொன்னேனே. அத்திம்பேர் இந்தப் பழக்கத்த நிறுத்தப் பண்றது உன் பொறுப்புன்னு. நீ கேட்கலை. என்ன உதவி என்னாலே இப்போ செய்ய முடியும்னு நீ நெனைக்கிறே. அவருக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மயக்கம் தெளிஞ்சா எல்லாம் சரியாயிடும். உடம்பு சூடு குடிச்சதனாலே ஏற்பட்டது. சுரம் அல்ல. நீயும் வீணா மனசைக் குழப்பிக்காதே.நான் வரேன்.என்று வெளியேறியவனை கமலம் தடுத்து நிறுத்திக் கேட்டாள்..

     “என்ன பாபு பேசாமப் போறியே. உன் அக்காள் இருக்கும் நிலையில் அவளுக்கு உதவணும்னு கூடத் தோணலியா. வராத இடத்துக்கு வந்து உதவி கேட்டவளை இப்படித்தான் நடத்திறதா.?

     . கோபமும் ஆத்திரமும் மேலிடப் பேச ஆரம்பித்தவளுக்கு, அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பாபுவுக்கும் தான் செய்வது சரியல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் மறுகணமே அவன் மனம் மாறிவிட்டது.ஏமாற்றுகாரர்களின் வலையில் தான் வந்து விழ இருந்த நிலை பூரணமாகப் புரிய ஆரம்பித்தது. அவன் கண்கள் வீட்டு சன்னலிலிருந்து இங்கு நடப்பதை ஆராய்ந்து கொண்டு இருந்த சிவராமனைக் கண்டன. ஒரு நாடகமே தன் முன்னால் நடிக்கப் ப்டுகிறது என்று ஒரு நொடிப் பொழுதில் யூகித்துக் கொண்டான்.

      “ அக்கா ...நான் உனக்கு உதவினால் அது உபத்திரவமாகத்தான் முடியும். குடியைக் கெடுக்கும் குடிக்குப் பணாம் கொடுத்து உதவ என்னிடம் காசில்லை. பணத்துக்காக இந்த நாடகம் நடித்திருக்கவும் தேவை இல்லை. “என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டான்.

       சென்று கொண்டிருந்தவன் காதில் “அவன் கிடக்கிறான் மடப் பயல் “ என்ற சிவராமனின் குரல் தெளிவாக விழுந்தது.
------------------------------------------------------------------------------------------ 
                                                                        ( தொடரும் )                   
  
 .
          


      



ஞாயிறு, 25 மார்ச், 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் பதினாறு )



                                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                                 -----------------------------------------------

                                                      ----  16  -----

          ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே பாபு டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் சியாமளாவின் வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே அவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் பாபு நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்க்ளும் வ்ந்து போய் விட்டது. சியாமளா வரவில்லை. பாபுவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப் பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. சியாமளா அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது பாபுவுக்கு தன் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது.போன்ற எண்ணம். கைகால்கள் சற்றே நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆயிரக் கணக் கானவர்கள் முன்பு நிதானம் தவறாமல் நினைவு சிதறாமல் எண்ணிய வற்றை ஒழுங்காக,அழகாக, கோர்வையாக எடுத்தியம்பும் திறன் பெற்ற பாபு, சியாமளா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.


    பஸ்ஸிலிருந்து இறங்கிய சியாமளா சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் கணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேற்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு பாபு தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்

               பாபுவும் சியாமளாவைக் கண்டதும அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். பாபு அவனை மறந்து சியாமளாவின் அருகே போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். சியாமளா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பாபுவுடன் ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று பாபுவுக்கும் ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான். .

    ”என்ன சியாமளா.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.

    பாபுவையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளா அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.என்றாள்.

   “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய். சியாமளா உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?

      வேண்டாம் ,வேண்டாம், நடந்தேபோகலாம். போகும்போது பேசிக் கொண்டே போகலாம்.

      நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.

       “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “

       “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?

       “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “

       என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு சியாமளா.உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “

       “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “
சியாமளாவுக்கும் பாபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.

       “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சியாமளா..?

       என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.

       விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?
      
       இல்லை.

       நிச்சயமாக...? :

       நிச்சயமாக.

       “ சியாமளா, எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா, சியாமளா.?

       பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.

      சியாமளா பதில் பேசவில்லை.அவளால் முடியவில்லை.. பாபு தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.

      வீதியில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த பாபு,உடனே தன்னிலை வரப் பெற்றான்.

      “ ஐ ஆம் சாரி, சியாமளா. உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. சியாமளா. “

      “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?

      “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.

      “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?

      வாட்.? சியாமளா நான் கேட்பது, பொய்யில்லையே “

      எளிதில் உணர்ச்சி வசப் படும் பாபுவுக்கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது

     உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.

    “ சியாமளா என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால் அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் சியாமளா. எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால் இன்னும் ஒரு வருஷம் கழிந்ததும் உரிமையொடு உன்னைக் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச ஒரு வருஷம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் என்னால் அப்படி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.

     உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு ஒரு வருஷம் அவகாசம் தேவை என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?

            வேண்டாம் சியாமளா,இன்ப வானில் சிறகடித்துப் பறக்கும் நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிட்டால் அது உனக்கும் சரி எனக்கும் சரி துன்பத்தைத்தான் தரும். தயவு செய்து என்னை வற்புறுத்தாதே.

     முக்கியமாய் கேட்க வேண்டியதை பாபுவால் கேட்க முடிய வில்லை என்றால், அதற்கு முக்கிய காரணம்,பாபுவுக்கு விளங்காத எச்சரிக்கையை அவன் மனம் அவனுக்கு அளித்தது.தான். தான் இன்னும் ஒரு வருஷத்தில் இறந்து விடுவோம் என்ற இனம் தெரியாத புதிர்தான் சியாமளாவை மனைவியாகும்படி அவனால் கேட்க முடியாமல் செய்தது. நிகழ் காலத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்க மறுக்கும் கற்பனையின் வேகம்தான், அவனுடைய உணர்ச்சியின் வேகத்துக்குத் தடை போட்டது. சியாமளாவைப் பொறுத்தவரை புதிர் புதிராகவே நின்றது. அது விடு படாத வரைக்கும் அவளுக்கு மன அமைதி இருக்காது. இருந்தாலும் பாபுவின் வேண்டு கோளுக்கு இணங்கி அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் இருவரும் லயித்தவராக அவர்கள் நடந்து கொண்டே வந்தனர்.. இருந்தாற்போலிருந்து பாபு ,சியாமளா, நீ என்னோடு இருக்கும்போது எனக்கு பாரதியின் காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பார்வையிலேஎன்ற பாடலின் நினைவுதான் வருகிறது. அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது, “ என்றான்.

               எனக்கு நேரமாகிவிட்டது.வீட்டில் தேட ஆரம்பிப்பார்கள் “ என்றாள் சியாமளா.

       பாபுவுக்குப் பிரிய மனமில்லை என்றாலும் விடை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலையில் அங்கு வந்த ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றி அனுப்பினான். அவள் சென்ற திக்கிலேயே மனம் பறிகொடுத்து நின்றவன் திரும்பியதும், கமலத்தின் கணவன் சிவராமன் தன் அருகில் நின்று கொண்டு விஷமமாகச் சிரிப்பதைக் கண்டான்.

       “பலே, பாபு, என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆசாமிதான் நீ. உனக்குத் தெரியாத வித்தையே இல்லை போலிருக்கே.
       
        தன் தமக்கையின் கணவன் என்ற நினைப்புதான் பாபுவைக் கட்டுப் படுத்தியது. சிவராமன் பார்த்த விதம் அவன் நின்று கொண்டிருந்த தோரணை மேலே பேசிய பேச்சுக்கள் ஒன்றுமே பாபுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவன் பெசிய போது வீசிய வாடை  வேறு அவன் நன்றாகப் போட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதையும் உணர்த்தியது.குடியின் பிடியில் சிக்கி இருப்பவனின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதுதான் சிறந்தது என்று பாபுவுக்குத் தெரிந்திருந்தாலும், சில வினாடிகள் கழித்து
“ அது சரி, யார் அந்தக் குட்டி.?எங்கிருந்து பிடித்தாய்.?என்று அவன் கேட்டதும், பாபுவால் அவனையும் மீறி வந்த கோபத்தை அடக்க முடிய வில்லை.

     “ சிவராம், கொஞ்சம் ஜாக்கிரதையாய்ப் பேசுங்கள்..யாரிடம் என்ன பேசுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். குடிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்து விட்டு, அதையும் மீறிக் குடித்து விட்டு அனாவசியமாகப் பிதற்ற வேண்டாம். “

     முதன் முறையாக பாபு தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டதே சிவராமனுக்கு அந்த நிலையிலும் உறைத்தது. மரியாதை, பணிவு எல்லாம் குறைந்து, தன்னை மிரட்டும் தொனியில் பாபு பேசியது அவன் கோபத்தைக் கிளறியது. மனிதனுக்கு தன்னுடைய மதிப்பில் பிறர் ஏற்படுத்தும் களங்கத்துக்கு காரணம் தானாகவே இருக்கலாம் என்றே தெரிவதில்லை. சிவராமனுக்கும் தெரியவில்லை.

     “சரிதான் போடா...ஊருக்கு உபதேசம் செய்கிறாய்.நீ சரியாக இருக்கப் பழகிக் கொள். இவளைப் போல எத்தனை பெண்களை இப்படிக் கெடுக்கத் திட்டம் போட்டிருக்கிறாயோ. சொல்ல வந்தால் கோபம் வேறு வருகிறதோ.? தான் இருக்கிற கேட்டில் மற்றவர்களுக்கு வேறு உபதேசம். நான் குடிப்பேன். அப்படித்தான் குடிப்பேன்.உங்க தாத்தா வீட்டுக் காசிலா குடிக்கிறேன்.!

      அவன் பேசி முடிப்பதைக் கேட்டு அதற்கு பதில் சொல்ல பாபு அங்கிருக்க வில்லை. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் நிலைமை மிகவும் அசம்பாவிதமாக முடியுமென்று தெரிந்ததால் வேகமாக அங்கிருந்து பாபு சென்றுவிட்டான்.
---------------------------------------------------------------------
                                                            ( தொடரும் )   ,                  

       


  
   


       

    



ஞாயிறு, 11 மார்ச், 2012

நினைவில் நீ ..( அத்தியாயம்- பதின்மூன்று )


                                   நினைவில் நீ..( நாவல் தொடராக. )
                                   -------------------------------------------------

                                                 --------  13  -------

      பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள். .அனுபவ பூர்வமாக உணர்ந்து கூறப்பட்ட வார்த்தைகள் அல்லவா.. .ஆஷாவின் மரணமும், -கொலையென்று எண்ணவே நடுங்கியதுமகனுக்குக் கிடைத்த தண்டனையும் பாட்டியை ஒரேயடியாக ஆட்டிவிட்டிருந்தது, என்பதோடு கூட தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளின் அலட்சியமும் அவளை வெகுவாக பாதித்தது. கல்யாணமான பிறகு கண்ணனும் கூட பாட்டியை லட்சியம் செய்து ஆதரவு காட்ட வில்லை. நல்ல விளை நிலத்திலே புல்லும் பூண்டும் தன் காலத்திலேயே விளைந்து மண்ணின் வளத்தையே கொள்ளை கொண்டு போகிறதே. ஒரு சமயம் தான் விளைத்ததே இந்தக் கள்ளியும் காளான்களும்தானோ. என்றெல்லாம் உள்ளம் உருகத் துவங்கிய பாட்டி, நாளாவட்டத்தில் படுத்த படுக்கையாகி விட்டாள். செல்வாக்கும் பதவிசும் இருக்கிற காலத்திலேயே அவள் எதிர்பார்க்காத ஏகப்பட்ட எதிர்ப்புகளிருந்த தென்றால், எல்லாம் இழந்த நிலையில் அவளை சீந்தக் கூட ஒரு ஜீவன் இல்லாமல் போய் விட்டது. துயரத்தால் உருகி, உடலில் வலுவிழந்து பாதிக்கப் பட்ட பாட்டிக்கு , பேசவோ நடக்கவோகூட முடியாதபடி,உடலின் அங்கங்கள் எல்லாம் கட்டுப் படுத்தக்கூட திராணி இல்லாமல் முடங்கிப் போயிற்று. இந்த நிலையில் ஒடுங்கிக் கிடந்தவள் அடுத்துள்ளவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருந்தபோது, வாய்விட்டு  ஆண்டவனை துணைக்கு அழைக்கவும் முடியாத துன்பத்தில் துவண்டு போனாள். தன் அந்திம காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்ற எண்ணம் தனக்குச் சீக்கிரம் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையை வளரச் செய்தது. வாழ்வின் பல கோணங்களை தன் நிலையில் இருந்து தான்  ரசித்து அனுபவித்த விதம் அடிப்படையிலேயே தவறு அவள் எண்ணும்போது, தன்னை அறியாமலே கண்களில் நீர் வழிய ஆண்டவனை மனசால் துணைக்குக் கூப்பிடுவாள். அப்போது ஒரு அலாதியான அமைதி கிடைப்பதையும் உணர்வாள். கடைசி காலத்தில் இந்த நிலையில்தான் ஆண்டவனை உளங்கனிந்து வழிபடுகிறோம் என்று தெரிய வந்தபோது  ஆயுட்காலம் பூராவும் வீணாக்கப் பட்டு விட்டதே என்று குமுறி மனம் நொந்தாள். அவள் செய்த குற்றங்களுக்கும்,கொண்டிருந்த எண்ணங்களுக்கும் தகுந்த தண்டனை கொடுத்தாகி விட்டது என்றே கடவுளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒரு நாள் யாரும் அறியாமலேயே அவளுடைய உயிர்ப் பறவை சிறகடித்துச் சென்றிருந்தது. கண்கள் திறந்த நிலையில் நாக்கு உலர்ந்திருந்த முறையில் யாரும் கவனிப்பார் இல்லாது கிடந்த அந்த சடலத்தை முதன் முதலில் கண்ட சரஸ்வதிக்கு பயமாகவே இருந்தது. அவளது மரத்துக் கிடந்த உணர்வுகளுக்கு இன்னுமொரு உயிர் போயிற்று என்றே சாதாரணமாகவே எண்ணத் தோன்றிற்று.

         பாட்டியின் சவ அடக்கத்துக்குச் சென்று திரும்பி இருந்த பாபு அவள்து முடிவை எண்ணி மனம் வருந்தித் திரும்பும்போது கல்யாணி அம்மா கூறிய செய்தி அவனை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது..ராஜுவுக்கும் விசுவுக்கும் சிக்கென் பாக்ஸ் போட்டிருந்தது. முத்துமாரி அம்மன் விளையாடுகிறாள்; சுத்தமாக இருக்க வேண்டும். என்று பாபுவிடம் கல்யாணி அம்மா கேட்டுக் கொண்டாள். பாபு சாவு வீட்டிலிருந்து வந்தவன் குளிக்காமல் தன் தம்பிகளைக் காணவும் கூடாது என்று தடை போட்டாள். பாபுவுக்கு அது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றியது. கிருமிகளாலும் உடல் வெப்பத்தாலும் ஏற்படும் வியாதியை ஆண்டவனின் முத்து என்று மரியாதையுடன் அழைக்கும் மூடத்தனம் கண்டு மனம் வெம்பினான். சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால் சொல்லவே இடம் கொடுக்க வில்லை கல்யாணி அம்மா. பாபு தீவிரமாகத் தம்பிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றான்.அதை கல்யாணி அம்மா மூர்க்கமாக எதிர்த்து, தன் பிள்ளைகளைக் கவனிக்கும் முதல் பொறுப்பு தன்னுடையது, பிறகுதான் மற்றவருக்கு என்ற முறையில் பேசியது பாபுவை மிகவும் வருந்தச் செய்தது/ தனக்குத் தம்பிகளின் நலனில் அக்கறை கொள்ள அருகதை இல்லை என்று ஏசிவிட்டார்களே என்று வெதும்பினான். தடுக்க முடியப் பெறாதவைகள் அனுபவிக்கப் பட வேண்டியது தானே. என்று சமாதானம் செய்து கொண்டான். தன் மனக் குறைகளையும் சஞ்சலங்களையும் தன் உற்ற நண்பன் கானிடம் கூறி நிம்மதியடைய அவனைக் காணச் சென்றான்.ஒரு எதிர்பார்க்காத நிகழ்ச்சி அவனை எதிர் கொண்டழைத்தது. கானும் அம்மை வாய்ப்பட்டிருந்தான். அதுவும் அநாதரவான நிலையில்.பாபுவுக்கு சட்டென என்னதான் தோன்றியதோ நண்பனை வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். “ அம்மா, என் கூடப் பிறக்காத ஒரு சகோதரன் கான்..அவனையும் கவனிப்பது உன் பொறுப்புஎன்று கூறி கல்யாணி அம்மாவைத் திகைக்கச் செய்து விட்டான். அம்மனின் ஆட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் ஆட்களும் நல்லவர்களே என்று எண்ணிய படியே கானையும் கவனிக்கத் தொடங்கினாள்.

    அம்மா ,எனக்கு மட்டும் இந்த வியாதி வரட்டும் அப்போது தெரியும். சுத்த முட்டாள்தனமாக ஒரு வியாதியைக் கடவுளாகக் காண மாட்டேன். நீங்கள் நினைப்பதுபோல் இந்த வியாதி கடவுளானால் அது எனக்கும் வரட்டும். நான் எதிர்க்கிறேன். வியாதிதான் என்றால் அதை விரட்டி வெற்றி காண்பேன். இல்லையென்றால் நான் அழிக்கப் படட்டும். என்று பலமுறை கட்டுப்படுத்தியும் கட்டுக்கடங்காத எண்ணச் சுமைகளை வெளிப் படுத்தினான்.

        அடுத்த நாள் காலையிலேயே உடலில் குறு குறுப்பான ஒரு உணர்ச்சி. மூட்டுகளெல்லாம் குடைச்சல்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்கும் சென்றான். வேலை செய்ய முடியாதபடி ஒரு சோர்வு. அசதி தன்னை ஆட்கொள்ளுவதை உணர்ந்தான். தன் எண்ணங்களே சரி என்று நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று விட்டதாக எண்ணிக் குதூகலித்தான். வியாதியா, கடவுளா பார்க்கலாம் ஒரு கை. என்று சவால் விட்டுக் கொண்டான்.மாலை வீடு திரும்பொயதும் முதல் வேலையாக பாத் ரூமுக்குச் சென்று தன் உடலை நன்றாக சோதனை போட்டான். சிவப்பு முத்துக்கள் பரவிக் கிடந்தன.சட்டை செய்யாமல் குளிர்ந்த நீரை வாரிக் கொட்டிக் கொண்டு குளித்தான்.உடற்சோர்வு அவனை அடக்கி ஆண்டது.

   கல்யாணி அம்மாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. “ தாயே என் பிள்ளையை மன்னித்து விடம்மா. அறியாமல் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கரை தேற்றம்மா.என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள். ராஜுவும் விசுவும், கானும் குணமடைந்து வர வர பாபுவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. அவனும் விநாடிக்கு ஒரு முறை அம்மனின் ஆட்டம் என்றழைக்கப் படும் அம்மை வியாதியிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தா.ன். தான் பேசப் பேச தன் தாய் மனம் வாடுகிறாளே என்ற உணர்வே இல்லாமல் வியாதியை அருவருத்துப் பழித்துப் பேசினான்

   .      ஒரு நாள் மாலை அடக்கமுடியாத எரிச்சல், தாங்க முடியாத தலைவலி இவற்றால் தாக்கப் பட்ட பாபு இறுதி வெற்றி யாருக்கு என்று தெரியும் நிலை வந்து விட்டது என்று உணர்ந்து, தன் சக்தியெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு போராட்டத்துக்கு தயாராகி விட்டான். வேதனைகளின் உபாதைகளோடு கூட, உள்ளத்துப் போராட்டத்தின் வேகம் போட்டி போட்டது. கட்டுப் படுத்த முடியாத நிலையில் பாபு “ ஆண்டவனே, மூடப் பழக்கங்களை எதிர்த்து, அன்பே கடவுள் என்று நான் வணங்கும் நிலை சரியானால்,இந்த வியாதி என்னைவிட்டு ஓடட்டும். இல்லை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்ற வாக்கு பொய்யாகி, வியாதியும் ,வீம்பும், அகங்காரமுமே ஆண்டவன் வடிவென்றால், நான் சாகத் தயாராயிருக்கிறேன் “ என்று வேண்டிக்கொண்டான்.மற்ற மூவரும் கூட அம்மையால் பாதிக்கப் பட்டார்கள். ஆனால் கஷ்டம் சிறிதுமே கூட இல்லாமல் தேறி விட்டார்கள். யாரும் உடல் எரிச்சல் என்று ஒரு முறை கூடக் கூறவில்லை. தனக்கு மட்டும் எரிதணலில் இருப்பது போன்ற எண்ணம் ஏன் என்று பாபுவுக்குப் புரிந்து அனுமானித்துக் கொள்ள முடியவில்லை. 

        நேரம் செல்லச் செல்ல, தலைவலி மண்டையைப் பிளந்தது. உடல் எரிச்சல் உச்சஸ்தாயிக்குப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று பாபு தான் தோற்றுக் கொண்டிருப்பதாக எண்ணினான். தோல்வியடையக்கூடாது, தான் சாகக் கூடாது என்ற உத் வேகத்தில் தன்னைச் சுற்றிப் பின்னப் படும் இருளுக்குள்ளிருந்து வெளியே வர முயன்றான். தன்னால் முடியவில்லை, இனி முடியாது என்று எண்ணும்போது பாபுவுக்குக் காது கேட்கவில்லை, கண் தெரிய வில்லை,நாக்கு எழவில்லை உடல் லேசாவது போன்ற உணர்ச்சி.உண்மையில் சாவு இதுதான் என்ற நினைவு. கண்களில் நீர் வழிய கீழே விழுந்து அதல பாதாளத்தில் உருண்டு போவது போன்ற உணர்ச்சி. “நான் செத்துப் போய்க் கொண்டிருக்கிறேன், ...நான் செ..த்..து........

       கண் விழித்த போது கல்யாணி அம்மா பாபுவுக்கு உப்பில்லாத கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள்.அந்த இரவு நேரத்தில் கெம்பம்மா கோவிலுக்கு உப்பும் தயிரும் கொண்டு சென்று அங்கிருந்து விபூதி கொண்டு வந்திருந்தாள். அதைப் பூசியவுடன் பாபு விழித்துக் கொண்டான். விளக்கம் கேட்டு விளங்கப் பெற்றவன் தன் தாயின் நம்பிக்கை தன்னைக் காப்பாற்றியது என்று உணர்ந்தான். சாவின் பயங்கரத்தை தெரிந்தவன், இன்னுமொரு முறை அந்த உணர்வுகளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்று அறிந்தான். ஆண்டவனைப் பல கோணங்களில் கண்டாலும் நம்பிக்கைதான் முக்கியம் என்று தெரிந்து கொண்டவன், அசாதாரண முறையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான்.
-----------------------------------------------------------------------------

                                                          ( தொடரும் )        .                                      .        .                                   



  


புதன், 1 பிப்ரவரி, 2012

நினைவில் நீ ..( அத்தியாயம் ஐந்து )


                                   நினைவில் நீ..( நாவல் தொடராக )
                                    ---------------------------------------------

                                                     ----- 5 ------

        

   அம்மா அண்ணா வர நேரமாயிடுத்து. நான் ஸ்டேஷனுக்குப் போய் கூட்டி வருகிறேன் “ என்றான் ராஜு.
 “அம்மா, அண்ணா கார்ல வருவானா,நடந்து வருவானா. என்று கேட்டான் சந்துரு.
 “ போடா,அண்ணா கார்லதான் வருவான் இல்லியா விசு. “என்றான் ரவி.
 “ ஏண்டா பறக்கறே.அண்ணா ஆட்டோல வந்தாலும் வரலாம்என்றான் விசு, எதையும் தீர யோசித்துப் பேசுபவன் போல.
கல்யாணி அம்மாவுக்கு கை ஓடவில்லை, கால் ஒடவில்லை. இயந்திர கதியில் வேலை செய்து கொண்டிருந்தவள் ஓரோர் சமயம் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆறப் போட்ட காயத்தை ஆற்றும் பணியைக் காலம் செய்து கொண்டிருந்தது .பூராவும் ஆற முடியாத காயம். ஆறினாலும் அதன் வடு அதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அதனுடே சில பசுமையான எண்ணங்களும் தோன்றத்தான் செய்யும். இந்தப் பசுமை நினைவுகள்தான் காயத்தையும் வடுவையும் மறக்கச் செய்கிறது.

     டேய் ராஜு ,சீக்கிரம் போடா நீ போறதுக்குள்ள வண்டி வந்துடப் போறது,என்று கூறியவளை , :என்ன மாமி வீடே அமர்க்களப்படறது. யார் வரா.?என்ற குரல் திரும்ப வைத்தது. திரும்பியவளின் பார்வையில் என்றுமில்லாத தீட்சண்யத்தை உணர்ந்தாள் சியாமளா.

      “ என்ன மாமி ,அப்படிப் பார்க்கறேள். நாந்தான் சியாமளி. “
“இல்லையடி, சியாமளி. உன்னை எவ்வளவோ தடவைப் பார்த்திருந்தாலும், இன்னிக்கிப் பார்க்கறப்போ ஏதோ ஒரு கணக்குப் போட்டது என் மனசு.அது சரி என்ன இன்னிக்கிக் கார்த்தாலயே வந்துட்டியே

       எப்பவும்போல பள்ளிக்கூடம் முடிஞ்சு போரப்போதான் உங்களப் பார்க்கணுமா.?என்னவோ இன்னக்கி காலையிலேயே உங்களைப் பார்க்கணும்போல இருந்தது.வந்துட்டேன். ஆமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலியே. இன்றைக்கு யார் வரா... என்ன டிபன்...அடடா, பூப்போல இட்லியா...யாருக்கு என்ன சமச்சாரம். ?

      இன்னும் கொஞ்ச நேரத்தில் பாபு வந்துடுவன்.அவனுக்காக ஸ்பெஷலா இட்லி பண்றேன். நீயும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல். நல்லாயிருக்கா.?

      “ என்னவொ காந்தி ,நேருன்னு சொல்ற மாதிரி மொட்டையா பாபுன்னா யாருக்குத் தெரியும்.? நீங்க பாபுன்னதும் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வந்தது.அவர் பம்பாயில இருக்காராம். இந்தப் பக்கத்து ஆள்தான் போலிருக்கு. “

     இந்த பாபு என் பிள்ளை.,உனக்குத் தெரியாது. நீ பார்த்ததில்லை. நீ சொல்ற பாபு யாரோ எனக்குத் தெரியாது.

      “உங்க பிள்ளையா....அப்படின்னா ராஜுவுக்கு மேலயா...எனக்குச் சொல்லவே இல்லையே.

          எல்லாத்தையும் சமயம் வரும்போதானேம்மா சொல்லலாம்.உனக்குத் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம். பாபு என் மூத்த பிள்ளை .இப்போதைக்கு இது போதும் பின்னே சொல்றேன்.:சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு சொல்லிக் கொள்ளாமலேயே கண்களில் நீர் வந்து விட்டது. துடைத்துவிட முயன்றவள் துடைக்கத் துடைக்க ஆறாகப் பெருகியது கண்ணீர். சியாமளாவுக்கு எதுவும் விளங்க வில்லை. கேட்கக் கூடாத ஏதோ ஒன்றைக் கேட்டு கல்யாணி அம்மாவைக் கலங்க வைத்துவிட்டோமோ என்று சஞ்சலம். பதட்டத்துடன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
 
          “ ஆமாம் சியாமளி..என் பிள்ளை. என் மூத்த பிள்ளை பாபு. அவன் வருவதைக் காணக் கொடுத்து வைக்காமல் அவர் போயிட்டார். இந்த நிலையிலே பாபு வரதப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையிருந்தது. அவரும் இருந்திருந்தா.....

     பேச்சை மாற்ற விரும்பிய சியாமளா, “ அப்போ இன்னிக்கு சந்துருவும் ரவியும் ஸ்கூலுக்கு மட்டமா.?என்றாள்.

      மட்டமில்லை டீச்சர் .இன்னிக்கு லீவு..அண்ணாவே லீவ் லெட்டர் எழுதித் தருவார் என்ற சந்துரு தொடர்ந்தான்.அம்மா முகம் கழுவிக்கட்டுமா.? புதுச் சொக்காய் தரியாம்மா

     “ புதுத் துணி போட்டு எங்கே போறீங்க.

     “ எங்கயும் போகலை டீச்சர். அண்ணா வரும்போது அழகா இருக்க வேண்டாமா... அதுக்குத்தான்.

     சியாமளா சந்துருவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றாள். அவள் வாசலில் இறங்குவதற்கும் பாபுவும் ராஜுவும் ஆட்டோவிலிருந்து இறங்கவும் சரியாயிருந்தது. பாபுவைப் பார்த்த சியாமளா ஒரு கணம் திகைத்து விட்டாள். பாபுவும் சியாமளாவைப் பார்த்து ஒரு கணம் தயங்கினான். வெளியே போகக் கிளம்பிய சியாமளாவை ஏதோ ஒரு எண்ணம் பின் தங்கச் செய்தது. சிறிது நேரம் பிரிந்தவர் கூடிய களிப்பு நிலவியது. பம்பாயிலிருந்து அல்வா வாங்கி வந்திருந்தான் பாபு. அதை எல்லோருக்கும் கொடுத்தவன் சியாமளாவை கவனித்துஇவர்களை உனக்குத் தெரியுமா அம்மா “ என்று கேட்டான்.

      “ தெரியுமாவாவது... இவள் தான் சியாமளா. சந்துரு ரவியோட டீச்சர். இதாம்மா என் மூத்த பிள்ளை.

      “ நான்சொன்னவரும் இவர்தான் மாமி “ என்றாள் சியாமளா.

      “ உங்களுக்கு ஒருவரை ஒருவர் முன்னமே தெரியுமா ?

      “ தெரியும்னு சொல்றத விட ,பார்த்திருக்கோம் என்பதுதான் சரியம்மாஎன்றான் பாபு.

     அவனுக்கு ஏனோ சியாமளாவை முன்பே தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் அவ்வளவு விருப்பமிருக்கவில்லை. சியாமளாவும் அதை அவ்வளவாக விரும்பி இருக்க மாட்டாள் .காலம் செல்லும் கோலத்தில் ஒருஆணும் பெண்ணும் பார்த்துப் பேசினாலே கதைகள் பல கட்டிவிடும் உலகில் அதை நன்கு புரிந்து கொண்டிருந்தன இரண்டு ஜீவன்கள் .ஆனால் பாபு சொல்லாததும் சியாமளா விரும்பாமலிருப்பதும் அவர்கள் அத்தனை அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் என்ற காரணத்தால் அல்ல. ஆனால் சமயங்களில் சரியாக நடப்பிக்கும் ஒரு உள்ளுணர்வுக்குக் கட்டுப் பட்டவர்கள். அப்போது நடந்த சிறிய அறிமுகப் படலமும் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தைகளும் இதையே காட்டின. சிறிது நேரத்தில் சியாமளா விடை பெற்றுச் சென்றாள்.

        பாபு எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வளர்ந்திருக்கவில்லை.ஆனால் அதே சமயம் யாரும் அதிக கஷ்டத்துக்கு உள்ளானவர்கள்போல் தோன்றவில்லை.ஒரு அதீதமான திருப்தி ,சோபை, இவை உள்ளத்திலிருந்து எழும்புகிறது. அதனை முகம் காட்டுகிறது. கல்யாணி அம்மாவும் பிள்ளைகளும் இருந்திருக்க வேண்டிய பயங்கர நிலையைவிட, இருக்கும் ஓரளவு சாதாரண நிலையில் திருப்தி அடைந்தனர். ஒன்றுமே இல்லாதவனுக்கு ஒரு வேளைச் சோறு பெரிதல்லவா.? இந்த நிலைக்காவது தன்னை விட்டுச் சென்ற கணவனை எண்ணி விம்மியது அவள் உள்ளம். ஆனால் இதே நிலை நீடிக்க வேண்டுமானால், இனி அதை நீடிக்கச் செய்வது பாபுவின் கையில் தான் இருக்கிறது. அதையேதான் ரங்கசாமியும் அறிந்திருந்தார். ஆனால் உலகில் ஒருவரையே நம்பி ஒருவரை ஆண்டவன் இருக்க விடுவதில்லை. நிலைமை அப்படியிருக்குமானால் எண்ணற்ற குடும்பங்கள் வேரோடு சாய்ந்திருக்கும்.

    கஷ்டமும் நஷ்டமும் வாழ்வின் சோதனைகள். மலைபோல் நம்பி இருக்கப் படுபவர்கள் பொசுக் என்று போய் விடுவதால், நம்பி இருக்கிறவர்கள் வாழாமல் போய் விடுவார்களா என்ன.? இந்த எண்ணம் உதவுபவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். ஆள்வதும் அனுபவிப்பதும் நம் செயல்கள் அல்ல. ஆனால் பகுத்தறிவு கொண்ட நாம் அதனை பரிபூரணமாக உபயோகித்தால் குடும்பங்கள் செழிக்கும் சமுதாயம் சீர்திருந்தும், நாடு வளரும்.

      பாபு கல்யாணி அம்மாவையும் அவன் தம்பிகளையும் ஆதரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான் என்றால், அது அவன் பகுத்தறிவை சுயமாக உபயோகித்தறிந்த முடிவின் பலனாகும்.இப்படி ஒரெயடியாகக் கூறுவதும் பாபுவின் குணத்துக்கு அவதூறு விளைப்பது ஆகும். தாய் தம்பிகள் என்ற பாசம், தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி மேலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் சம நோக்குடன் ஆராயும் குணம் ஆகியவற்றின்  கூட்டு பலன் , அன்று முதல் கல்யணி அம்மாவின் மன சஞ்சலத்தை ஓரளவு போக்க உதவியது.அதாவது பற்றுகோல் ஒன்று கிடைத்தது.

       பாபுவுக்கு எண்ணற்ற ஆசைகள். சிதறிய குடும்பத்தை ஒட்டுவிப்பதே தன் முதல் கடமை என்று கருதினான். தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தொழிற்சாலைக்கு மாடாக உழைக்க எண்ணினான். பம்பாயில் குடியரசு தின விழாவில் ஏற்பட்ட சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்க விரும்பினான்.

      உயர்ந்த எண்ணங்களும் பரந்த உள்ளமும் களங்க மற்ற உள்ளுணர்வுமே பாபுவிடம் இருந்த கருவிகள். அவன் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததோ.........உறவின் பூசலும்  ஏசலும் , உண்மை உழைப்பை ஏமாளித்தனமாகக் கருதி நசுக்கும் நய வஞ்சக சமுதாயம், ஜாதி மதப் போர்வைக்குள் புகுந்து வெளிப்படும் உலுத்தர்கள் கூட்டம்......அம்மம்மா......ஏராளம், ஏராளம்..!
----------------------------------------------------------------------        
                                                                                                        ( தொடரும் )