Sunday, March 25, 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் பதினாறு )



                                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                                 -----------------------------------------------

                                                      ----  16  -----

          ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே பாபு டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் சியாமளாவின் வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே அவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் பாபு நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்க்ளும் வ்ந்து போய் விட்டது. சியாமளா வரவில்லை. பாபுவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப் பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. சியாமளா அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது பாபுவுக்கு தன் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது.போன்ற எண்ணம். கைகால்கள் சற்றே நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆயிரக் கணக் கானவர்கள் முன்பு நிதானம் தவறாமல் நினைவு சிதறாமல் எண்ணிய வற்றை ஒழுங்காக,அழகாக, கோர்வையாக எடுத்தியம்பும் திறன் பெற்ற பாபு, சியாமளா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.


    பஸ்ஸிலிருந்து இறங்கிய சியாமளா சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் கணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேற்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு பாபு தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்

               பாபுவும் சியாமளாவைக் கண்டதும அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். பாபு அவனை மறந்து சியாமளாவின் அருகே போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். சியாமளா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பாபுவுடன் ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று பாபுவுக்கும் ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான். .

    ”என்ன சியாமளா.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.

    பாபுவையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளா அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.என்றாள்.

   “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய். சியாமளா உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?

      வேண்டாம் ,வேண்டாம், நடந்தேபோகலாம். போகும்போது பேசிக் கொண்டே போகலாம்.

      நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.

       “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “

       “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?

       “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “

       என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு சியாமளா.உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “

       “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “
சியாமளாவுக்கும் பாபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.

       “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சியாமளா..?

       என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.

       விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?
      
       இல்லை.

       நிச்சயமாக...? :

       நிச்சயமாக.

       “ சியாமளா, எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா, சியாமளா.?

       பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.

      சியாமளா பதில் பேசவில்லை.அவளால் முடியவில்லை.. பாபு தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.

      வீதியில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த பாபு,உடனே தன்னிலை வரப் பெற்றான்.

      “ ஐ ஆம் சாரி, சியாமளா. உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. சியாமளா. “

      “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?

      “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.

      “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?

      வாட்.? சியாமளா நான் கேட்பது, பொய்யில்லையே “

      எளிதில் உணர்ச்சி வசப் படும் பாபுவுக்கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது

     உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.

    “ சியாமளா என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால் அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் சியாமளா. எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால் இன்னும் ஒரு வருஷம் கழிந்ததும் உரிமையொடு உன்னைக் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச ஒரு வருஷம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் என்னால் அப்படி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.

     உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு ஒரு வருஷம் அவகாசம் தேவை என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?

            வேண்டாம் சியாமளா,இன்ப வானில் சிறகடித்துப் பறக்கும் நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிட்டால் அது உனக்கும் சரி எனக்கும் சரி துன்பத்தைத்தான் தரும். தயவு செய்து என்னை வற்புறுத்தாதே.

     முக்கியமாய் கேட்க வேண்டியதை பாபுவால் கேட்க முடிய வில்லை என்றால், அதற்கு முக்கிய காரணம்,பாபுவுக்கு விளங்காத எச்சரிக்கையை அவன் மனம் அவனுக்கு அளித்தது.தான். தான் இன்னும் ஒரு வருஷத்தில் இறந்து விடுவோம் என்ற இனம் தெரியாத புதிர்தான் சியாமளாவை மனைவியாகும்படி அவனால் கேட்க முடியாமல் செய்தது. நிகழ் காலத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்க மறுக்கும் கற்பனையின் வேகம்தான், அவனுடைய உணர்ச்சியின் வேகத்துக்குத் தடை போட்டது. சியாமளாவைப் பொறுத்தவரை புதிர் புதிராகவே நின்றது. அது விடு படாத வரைக்கும் அவளுக்கு மன அமைதி இருக்காது. இருந்தாலும் பாபுவின் வேண்டு கோளுக்கு இணங்கி அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் இருவரும் லயித்தவராக அவர்கள் நடந்து கொண்டே வந்தனர்.. இருந்தாற்போலிருந்து பாபு ,சியாமளா, நீ என்னோடு இருக்கும்போது எனக்கு பாரதியின் காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பார்வையிலேஎன்ற பாடலின் நினைவுதான் வருகிறது. அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது, “ என்றான்.

               எனக்கு நேரமாகிவிட்டது.வீட்டில் தேட ஆரம்பிப்பார்கள் “ என்றாள் சியாமளா.

       பாபுவுக்குப் பிரிய மனமில்லை என்றாலும் விடை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலையில் அங்கு வந்த ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றி அனுப்பினான். அவள் சென்ற திக்கிலேயே மனம் பறிகொடுத்து நின்றவன் திரும்பியதும், கமலத்தின் கணவன் சிவராமன் தன் அருகில் நின்று கொண்டு விஷமமாகச் சிரிப்பதைக் கண்டான்.

       “பலே, பாபு, என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆசாமிதான் நீ. உனக்குத் தெரியாத வித்தையே இல்லை போலிருக்கே.
       
        தன் தமக்கையின் கணவன் என்ற நினைப்புதான் பாபுவைக் கட்டுப் படுத்தியது. சிவராமன் பார்த்த விதம் அவன் நின்று கொண்டிருந்த தோரணை மேலே பேசிய பேச்சுக்கள் ஒன்றுமே பாபுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவன் பெசிய போது வீசிய வாடை  வேறு அவன் நன்றாகப் போட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதையும் உணர்த்தியது.குடியின் பிடியில் சிக்கி இருப்பவனின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதுதான் சிறந்தது என்று பாபுவுக்குத் தெரிந்திருந்தாலும், சில வினாடிகள் கழித்து
“ அது சரி, யார் அந்தக் குட்டி.?எங்கிருந்து பிடித்தாய்.?என்று அவன் கேட்டதும், பாபுவால் அவனையும் மீறி வந்த கோபத்தை அடக்க முடிய வில்லை.

     “ சிவராம், கொஞ்சம் ஜாக்கிரதையாய்ப் பேசுங்கள்..யாரிடம் என்ன பேசுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். குடிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்து விட்டு, அதையும் மீறிக் குடித்து விட்டு அனாவசியமாகப் பிதற்ற வேண்டாம். “

     முதன் முறையாக பாபு தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டதே சிவராமனுக்கு அந்த நிலையிலும் உறைத்தது. மரியாதை, பணிவு எல்லாம் குறைந்து, தன்னை மிரட்டும் தொனியில் பாபு பேசியது அவன் கோபத்தைக் கிளறியது. மனிதனுக்கு தன்னுடைய மதிப்பில் பிறர் ஏற்படுத்தும் களங்கத்துக்கு காரணம் தானாகவே இருக்கலாம் என்றே தெரிவதில்லை. சிவராமனுக்கும் தெரியவில்லை.

     “சரிதான் போடா...ஊருக்கு உபதேசம் செய்கிறாய்.நீ சரியாக இருக்கப் பழகிக் கொள். இவளைப் போல எத்தனை பெண்களை இப்படிக் கெடுக்கத் திட்டம் போட்டிருக்கிறாயோ. சொல்ல வந்தால் கோபம் வேறு வருகிறதோ.? தான் இருக்கிற கேட்டில் மற்றவர்களுக்கு வேறு உபதேசம். நான் குடிப்பேன். அப்படித்தான் குடிப்பேன்.உங்க தாத்தா வீட்டுக் காசிலா குடிக்கிறேன்.!

      அவன் பேசி முடிப்பதைக் கேட்டு அதற்கு பதில் சொல்ல பாபு அங்கிருக்க வில்லை. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் நிலைமை மிகவும் அசம்பாவிதமாக முடியுமென்று தெரிந்ததால் வேகமாக அங்கிருந்து பாபு சென்றுவிட்டான்.
---------------------------------------------------------------------
                                                            ( தொடரும் )   ,                  

       


  
   


       

    



5 comments:

  1. “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு.

    விறுவிறுப்பான கதை..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இந்த அத்தியாயம் நன்றாக வந்திருக்கிறது. சில மாற்றங்களும் தெரிகிறது. இன்னும் சில சின்னச் சின்ன திருத்தங்கள் இன்னும் சுவைகூட்டி படிப்பவருக்கு படிப்பதுடன் ஒன்ற முடியும்.

    ” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?”

    --இப்படியாக ஒருவர் தனக்குள்ளேயே
    நினைக்கும் இடங்களில் '....' இப்படியும், உரையாடுகையில்,
    "...." இப்படியும், நினைப்பதற்கும் பேசுவதற்கும் வித்தியாசம் காட்டி குறியீடுகள் போட்டுக் கொள்ளுங்கள்.

    //வேண்டாம் சியாமளா,இன்ப வானில் சிறகடித்துப் பறக்கும் நான்... //

    நாடக வசனம்?..

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. @இராஜராஜேஸ்வரி,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. @ஜீவி,

    // இந்த அத்தியாயம் நன்றாக வந்திருக்கிறது.// அப்படியானால் இதுவரை....... குறியீடுகள் தெரியும்.ஆனால் என் கணினியில் ஒற்றைக்கொம்பு குறியீடு இடத் தெரியவில்லை. உணர்ச்சி வசப் படுகையில் பேசும்போது நாடகத்தன்மை வந்து விடுகிறதோ.?விமரிசனம் பர்ர்த்தோ பின்னூட்டங்கள் பார்த்தோ எழுத முடியாது. உங்களுக்கே தெரியும் இதை நான் எழுதியது அறுபதுகளில் என்று முன்பே கூறியிருக்கிறேன். தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  5. நிதர்சனமான காதல் உணர்வுகள்
    ரொம்ப இயல்பாக அழகாக கோர்த்திருக்கிறீர்கள் :)

    ReplyDelete