Saturday, November 13, 2010

நான் நாத்திகனா ஆத்திகனா..?

 நான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.
(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)

இந்தக்  கேள்விக்குப்  பதில்  தேடும்  முன்பு  ஆத்திகன்  என்பவன்  யார்  நாத்திகன்  என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன்  அல்லது  கடவுள்  இருக்கிறான்  என்று நம்புபவனை  ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை  என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக்  கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும்  அவர்கள்  கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால்  அமைந்ததே. நம்பிக்கை  என்பது உணர்வு  பூர்வமானது. இதில் எது  சரி  எது தவறு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.

ஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு
இயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும்  உணருகிறார்கள்.

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறை, கற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.

ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும், பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

இந்த நம்பிக்கைகளினால்   உந்தப்பட்டு, வாழ்க்கை   நடத்தும்  நாம் ஆத்திகர்களா.? ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.?கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த புற வழிபாடு  செய்பவர்கள்  எல்லோரும்  ஆத்திகர்களா.?

காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால், செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  ஆத்திகனா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?

நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக்  கேட்கும்  கேள்வி.  
" அப்பா,  நீங்கள் நல்லவரா ,கெட்டவரா" தந்தை  கூறுவார், " தெரியவில்லையே, அம்மா", என்று. நானும்  கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள்,  நான்  ஆத்திகனா,  நாத்திகனா. .?
       -----------------------------------------------------------------------------------------------------















.





  

11 comments:

  1. The question itself becomes redundant in the present age.One is either scientific in outlook or not.For those who are not ,no amount of logic or reasoning would help

    ReplyDelete
  2. //ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும் உணருகிறார்கள்.//

    மிக நன்றாக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் ஆராய்ந்து கூறியுள்ளீர்கள். உங்கள் கருத்துகளேதான் என்னுடையதும்.

    கடவுள் என்பது யார் அல்லது எது என்பதில்தான் இருவருக்கும் வேற்றுமை. ஆத்திகர்கள் கடவுள் என்றும் நாத்திகர்கள் இயற்கை என்றும் நம்புகிறார்கள். நீங்கள் சொன்ன மாதிரி இரு சாராரும் ஏதோவொரு நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் எந்த வேறுபாடும் இல்லையென்று நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  3. To Sri. Nimmie
    To say, one is in scientific outlook,or not,is too

    General a statement. Belief is based on conviction
    THANK YOU FOR YOUR COMMENTS.

    ReplyDelete
  4. திரு.கந்தசாமி அவர்கள வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. அன்பின் அய்யா ஜிஎம்பி - நல்லதொரு ஆய்வுக் கட்டுரை. நாத்திகனும் சரி ஆத்திகனும் சரி - எதோ ஒன்றை நம்புகின்றனர். அவ்வடிப்படையில் எழுதப்பட்ட இடுகை. வெற்றி பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நாத்திகர்களைப் பற்றி நீங்கள் கூறியது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.

    ReplyDelete

  7. @ தருமி
    நாத்திகர்களைப் பற்றி நான் கூறியது சரியாகத் தோன்றவில்லை என்று கூறி நிறுத்தினால் எப்படி.?சரி எது என்று உங்கள் கருத்தையும் வைத்தால் நானும் அறிந்து கொள்ள முடியும் அல்லவா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. சார்! நீங்கள் ஆத்திகனே! உங்களுக்கு அன்பில் நம்பிக்கை உள்ளதல்லவா! மனித உயிர்களை மதிப்பதிலும், மனிதத்திலும் நம்பிக்கை உள்ளதே! அதுவே ஆத்திகம்தான். நாத்திகம் என்ற சொல் எங்களைப் பொருத்தவரை கிடையாது. கடவுள் நம்பிக்கை மட்டும்தான் ஆத்திகம் என்பதல்ல. என்பதன் அடிப்படையில் சார். அருமையான பதிவு சார். நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒரு சக்தி இருக்கின்றது. பல கேள்விகளுக்கு இன்னும் இரு சாராரும் சரியான பதில்கள் கூற முடியாத நிலைதான்.

    ReplyDelete
  9. கடவுள் நம்பிக்கை உள்ளவர் ஆத்திகர்; இல்லாதவர் நாத்திகர். நீங்கள் ஒரு ஆத்திகர்தான். இந்து மதத்தில் உள்ள சில சம்பிரதாயங்களை, மூட நம்பிக்கைகளை,வெளிப்படையாக நீங்கள் விமர்சனம் செய்வதாலேயே உங்களை நாத்திகர் என்று சொல்லி விட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என் எண்ணங்கள் பற்றிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறதோ என்றே தோன்று கிறது

      Delete