Wednesday, December 26, 2012

நான் நல்ல பையன்...


                         நான் நல்ல பையன்.
                         ---------------------------


நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்


(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)

பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
--------------------------------






                     

7 comments:

  1. காலத்திற்கேற்ற அருமையான கவிதை. பெண்களைக் கண்டால் விலகிப் போவதே இக்காலத்தில் அறிவுடமை.

    ReplyDelete
  2. பெண்ணின் ஏழுவகை பருவங்களையும் குறிப்பிட்டு எல்லா பருவத்திலும் அவர்களுக்கு ஆபத்து சில காமுகர்களின் வடிவில் வருகிறது என்று இக்கால நிலையை உரைக்கும் வரிகள். அருமை அய்யா....ஒரு சின்ன சந்தேகம் அது பத்மினியா இல்லை பத்தினியா?

    ReplyDelete
  3. இக்காலச் சூழலுக்கான அருமையான கவிதை
    முத்தாய்ப்பு மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  4. @ ராபர்ட் நானறிந்தவரை அது பத்மினியே. நால்வகைப் பெண்டிர் அவர்களது அங்க லாவண்யங்களின் மூலம் பிரித்து அறியப் படுகின்றனர். .எனக்கு இன்னொரு சந்தேகம். பெண்களின் ஏழு வகைப் பருவங்களெல்லாம் 36 வயதுக்குள் கூறப்பட்டது. 36 வயதுக்குமேல் இருப்பவரின் பருவ பெயர்கள் எங்காவது கூறப் பட்டுள்ளதா.?உங்கள் வரவு க்கும் பருத்துக்கும் நன்றி.
    @ ரமணி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ டாக்டர் கந்தசாமி. இப்போது இருக்கும் களேபரங்களில் எதுவும் நடக்கலாம் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாரதிதாசன் கவிதை கவர்கிறது.

    ReplyDelete