Saturday, December 25, 2010

தகப்பன்சாமி அல்ல --- தாத்தா சாமி

தகப்பன்சாமி  அல்ல ---  தாத்தா சாமி
-==================================

        பாட்டெழுதுவதென்ன  பெரும்
        பாடா , என்  பாட்டா
        என்றென்னைக்  கேட்டான் என்
        பெயர் சொல்ல  வந்த பேரன்.

நான் அவனிடம் பாட்டெழுத
மொழி அறிவு அனுபவம் இன்னும்
என்னவெல்லாமோ   வேண்டும்  என்றேன்.

          ஒ...அது  அந்தக்காலம்  என்று
           என்னைப் பற்றி நீ எழுதிய  பாட்டை
           பிறர் படிக்க   நான் கேட்டேன்.
           எனக்கு தமிழ்  எழுதத் தெரியாது
           அதனால் உன்னைப்பற்றி   நான் சொல்ல
           எனக்காக நீ  எழுது  என்றான்.

"என் தாத்தாவை  நான் அப்பா  என்றழைப்பேன்
என் அப்பாவுக்கப்பா   எனக்கும் அப்பாதானே.
அவர் சொல் எனக்குப் பாடம்போல,
அர்த்தமும்   இருக்கும்,  உண்மையும் இருக்கும்.
அவர் பேச்சு எனக்கு ஊக்கம் தரும்
அவருக்கென்மேல் இருப்பது  அன்பல்ல,
அதற்கும்  மேலே.
அவர் ஒரு பால்கோவா  போல,
சர்க்கரையும்  பாலும்  சேர்ந்த  கலவை.

          நான் இதை ஒரு கவிதை என்று
          தங்கலீஷில்  எழுதினேன் என்றால்
          அதற்கும்   அவரே  காரணம்.
          நன்றி  அப்பா."

அவன் கூற  நான் எழுத
ஒரு உண்மை  புரிந்தது.
எண்ணுவதைச்  சொல்ல
வெறும்  மொழியும்
வார்த்தைகளும்  வேண்டா.
உணர்வினால்  உந்தப்பட்டு
எழுதினால்  அதில் உயிரிருக்கும்
என்றெனக்கு  உணர்த்தினான்  என்
பேரன், தகப்பன் சாமி  அல்ல, தாத்தா  சாமி. !
-------------------------------------------------- 









     

16 comments:

  1. குழந்தைகள் எதையுமே காரணமில்லாமலோ யோசிக்காமலோ செய்வதோ சொல்வதோ இல்லை.

    அவர்கள் கையில் எந்த நிர்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது உண்மையாகவோ கவிதையாகவோ இருக்கிறது.

    இன்றைக்கு எனக்கு தஞ்சாவூர்க்கவிராயர் ஒரு கவிதை தொலைபேசியில் வாசித்துக் காட்டினார்.

    வானத்தில்
    வசிப்பது யார்
    என்று
    கேட்ட குழந்தையிடம்
    கடவுள் என்றேன்.
    இல்லை
    காகம் என்று
    திருத்தியது குழந்தை.

    இது அவருக்கும் அவர் பேரனுக்கும் நடுவே நடந்த சம்பாஷனையில் பிறந்த கவிதை.

    ஸென் தத்துவம் இதைத்தான் சொல்கிறது.எது அநுபவமோ அது கவிதை என.

    ஒரு விஷயம் பாலு சார்.

    தாத்தா கவிஞனாக இருக்கும்போதுதான் தன் பேரனைக் கடவுளாகப் பார்க்கமுடியும்.அதற்காகவாவது பேரப்பிளைகளின் தாத்தா கவிஞனாக இருக்கவேண்டியிருக்கிறது.

    அற்புதமான பதிவு.கை கொடுங்கள் ஒத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. உங்களுக்கு தொலைபேசியில் வந்த கவிதை ஒரு ஆத்மார்த்தமான அநுபவத்தின் விளைவு. மிக அழகாக இருக்கிறது மேலும் உடனுக்குடனான உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. நன்றி என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது என்னால்.A BIG THANKS ONCE AGAIN.

    ReplyDelete
  3. ஒரு முறை ஒரு குழந்தை
    தனது தாயிடம் கேட்டது
    "ஏனம்மா வானத்தில் புல் முளைக்கவில்லை? " என்று
    அதற்கு அந்ததாய்
    "வானத்தில் புல் முளைத்தால்
    மாடுகளுக்கு சிறகு முளைக்கும் "
    என்றாள்.

    (கவிஞர் காசி ஆனந்தன் தனது ஹை கூ கவிதை ஒன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்)

    நாம் சிந்திக்காத திசையில் சிந்திப்பவர்கள் குழந்தைகள். அவர்களது சிந்தனையும் அதன் வேகமும் நம்மால் ஈடு கொடுக்க முடியாதது.

    இப்படித்தான் ஒரு முறை எனது மகள் என்னிடம் கேட்டாள்

    "ஏம்ப்பா... மாடுகளை வாயில்லா ஜீவன்னு சொல்றொம்,
    அதற்குதான் வாய் இருக்கே, அப்படின்னா
    அத நாம பேச்சில்லா ஜீவன்னுதானே சொல்லனும் என்றாள்"

    இப்படி அவர்களது நேரிடையான பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லைஎன்றுதான் சொல்லவேண்டும்.


    கவிதை அருமை. தங்களது பேரனுக்கு எனது வாழ்த்துகள்.

    -தோழன் மபா

    ReplyDelete
  4. குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து வந்திருக்கிறீர்கள்.உங்கள் பேரன் கொடுத்து வைத்தவன். என் மகனுக்கு கதை சொல்லவும் , கேட்கவும் தாத்தா இல்லை

    ReplyDelete
  5. sir- en blog la unga comment padichchen-.. :D
    oru clarification.. antha essayslaam enga amma enna paththi sollaraapla oru series! anga 'ithu' ngarathu naan...

    ReplyDelete
  6. சுந்தர்ஜி நான் என் பேரனை கடவுளாகப் பார்க்கவில்லை, ஆசானாகத்தான் பார்க்கிறேன். அன்பு சிவகுமாரா நான் உன்னையும் என் ஆசானாகப் பார்க்கிறேன்.உன்னிடமிருந்து நான் கற்க நிறையவே விஷயங்கள் உள்ளது. உன் குழந்தைகளுக்கு நீ தாய், தந்தை, தாத்தாவாக இருக்கலாம். உன்னால் முடியும்.ஊக்கமூட்டும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கு என்நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  7. கற்பித்தவர் யாராய் இருந்தால் என்ன? அவர் ஆசான் தான்!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  8. i liked your writting. finding it difficult to make a tamil comment with the help of jaffna typewriter not yet familiar with it.

    ReplyDelete
  9. காட்சியை கவிதைப் படுத்திய விதம் மிக அழகு!

    ReplyDelete
  10. என்ன GMB சார், நம்ம பக்கம் வரக் காணோம்.?

    ReplyDelete
  11. கற்றும் கொள்ளும் பக்குவம் இருந்தால் யாரிடமும் எப்போதும் எவ்வயதிலும் கற்கலாம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே..
    G.M.B..அய்யா கவிதை அருமை ..

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. சொல்லிக்கொடுக்காது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் குழந்தைகள். அவர்கள் விளையாட்டாகச் செய்யும் ஒவ்வொன்றும் நமக்குப் புதுப் பாடமாகவும் அமைந்து விடுகிறது. குழந்தைகளைக் கொண்டாடும் கவிதை அருமை..

    ReplyDelete
  14. //உணர்வினால் உந்தப்பட்டு
    எழுதினால் அதில் உயிரிருக்கும்//

    இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete
  15. அழகான உணர்வுபூர்வமான கவிதை சார்! எப்பொழுதுமே சிறு குழந்தைகள்தான் தகப்பன் சாமியாகிறார்க்ள்! அவர்களிடம் நாம் கற்றுக் கொள்வது பல! ஆனால் பெரியோர்களாகிய நமக்கு ஈகோ இல்லாமல் இருந்தால்தான் அதையும் கற்றுக் கொள்ள முடியும்! தங்கள் உணர்வுகள் மிகவும் மேன்மையானது சார்!

    ReplyDelete