Wednesday, December 19, 2012

மடே ஸ்நானமா..இல்லை. மட ஸ்நானமா.?


                           மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
                          ----------------------------------------------------------


கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்.
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி விட்டது. இனி என்ன .? எல்லோரும் பிராமணர் உண்ட எச்சில் இலையில் தாராளமாக உருண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்க விஷயம்
                                             -------------------------------
என் பதிவொன்றில் சுடோகு புதிர் ஒன்றை பிரசுரித்து அந்தப் புதிரை சால்வ் செய்பவருக்கு பட்டம் கொடுக்கலாம் என்று எழுதி இருந்தேன். அந்தப் புதிர் ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கியது. மிகக் கஷ்டமான புதிர் என்று கருதப் பட்டது. நான்கு , ஐந்து நட்சத்திரக் கடினமான புதிர்களை சால்வ் செய்து பழக்க முள்ள எனக்கு லாஜிக்கலாக தீர்வு காண முடியவில்லை. புத்திசாலித்தனமான யூகங்களால்மட்டுமே முடியும் என்று அப்படி செய்யாமல் இருந்து விட்டேன். என்னால் முடியாதது சிரமமானதாகத்தான் இருக்கும் என்னும் மதர்ப்பில்(?) இருந்தேன். ஆனால் இரண்டு பதிவர்கள் அதை சால்வ் செய்து எனக்கு அஞ்சல் அனுப்பி இருந்தனர் . அவர்களுக்கு நான்

GENIUS

என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன். மூன்றாம் சுழி திரு அப்பாதுரை அவர்களும் மணிராஜ் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களும் இந்தப் பட்டத்தை பெறுகிறார்கள். அவர்கள் தயை கூர்ந்து இதை அங்கீகரிக்க வேண்டுகிறேன்.அவர்களுக்கு  என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.  
 ------------------------------------------------------------





10 comments:

  1. //அவர்களுக்கு நான்
    GENIUS என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன்//

    பட்டாபிஷேகத்திற்கு நன்றிகள் ஐயா..

    GENIUS என்ற பட்டம் எவ்வளவு உயரத்தில் பறக்கும் ??

    எனது மகள் கல்லூரியில் படிக்கும் போது பதிரிகைகளில் வரும் புதிர்களை நிரப்ப மிகவும் ஆர்வம் காட்டுவார் ..

    ஒரு பெரிய புத்தகம் வாங்கி முழுவதும் இருந்த புதிர்களை சிறப்பாக நிரப்பினார் ...

    அந்த ஆர்வம் என்க்கும் தொற்றிக்கொண்டது ..

    ReplyDelete
  2. சமூக ஏற்றத்தாழ்வுகள், வர்ணாஸ்ரம தர்மத்தினால் வரும் ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இவைகளைக் கண்டு மனம் சலனப்படுவது இயற்கை. ஏன் பலரும் அதை கண்டுகொள்வதில்லை என்றால் கையாலாகத்தனம்தான்.

    ReplyDelete
  3. G.M.B. அவர்களே! மூகாம்பிகை கோவிலில் பேதம் பர்ப்பதில்லை! சுப்பிரமன்யா நான்சென்றதில்லை ! சிருங்கேரியில் பிரமனர்களுக்கு தனி பந்தி நடக்கிறது ! (பெயரளவிலாவது) அவர்களை பிராமனர்களா என்று பரி சொதிப்பதில்லை ! பிராமனரல்லாதவர்களும் அதே பிராமணர்களுக்கான பந்தியில் உண்வருந்தியதைப் பார்த்தேன் ! எது எப்படியாயினும் இதனை சட்டபூர்வமாக நிறுத்த வேண்டும் ! முடியாவிட்டல் அந்த கொவில்களையும்,மடங்களையும் நம் ஊர்களில் புறக்கணிக்க வேண்டும் ! ---காஸ்யபன்

    ReplyDelete
  4. கடவுள் பெயரால் எதையும் செய்யவில்லை - கடவுள் நம்பிக்கை இருப்பதால் செய்கிறார்கள். அந்த வகையில் கடவுள் நம்பிக்கை தான் அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது என்பேன். ஒவ்வொரு கண்மூடியும் ஒவ்வொரு வகை. சிலர் வெளிப்படையாக எச்சிலில் உருளுகிறார்கள். சிலர் ரகசியமாகச் செய்கிறார்கள். சிலர் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு என்று என்று கடவுள் பெயரில் ஏதாவது செய்வதும் பழைய எச்சிலில் ஊறி உருளுவதேயாகும். எல்லாமே அருவருப்பு தான்.

    ReplyDelete
  5. கோவில் பிராகாரத்தை சுற்றுவது எந்த வகையில் வித்தியாசம் என்கிறீர்கள்? எச்சில் இலையில் உருளாவிட்டால் சரியாகிவிடுமா?

    பெண்ணைக் கற்பழித்தவனுக்கும் பெண்ணை மனதில் நினைத்து சுய இன்பம் அடைபவனுக்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
  6. பட்டத்துக்கு ரொம்ப நன்றி சார்.

    யூகம் இல்லாமல் இந்தப் புதிரை அவிழ்க்க முடியாது என்று நினைக்கிறேன். லாஜிக்கில் தொடங்க வேண்டும். லாஜிக் சரியாக இருந்தால் தான் யூகமும் சரியாக அமையும் - இல்லையென்றால் குருடன் யானையறிந்த கதை.

    இராரா பல பரிமாணங்கள் கொண்டவர் என்பதை மறுபடி நிரூபிக்கிறார்.

    ReplyDelete

  7. @ டாக்டர் கந்தசாமி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ அப்பாதுரை,
    @ காஷ்யபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சில அவலங்கள் கடவுள் பெயராலோ, நம்பிக்கையின் பெயராலோ நியாயப் படுத்துவது ஏற்புடையதல்ல. தகர்த்து எறிய வேண்டும் என்னும் எண்ணம் பீறிட வேண்டாமா. வெகு நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி திரு. காஷ்யபன்.

    ReplyDelete
  8. உங்களிடம் GENIUS பட்டம் பெற்ற திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. அப்பதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. "உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள்" - இது தவறுதான். ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் ஒன்றுதான். ஆனால், அங்கு, அவனுக்கு சேவை (Service.. இது எதுவாகவேணுமானாலும் இருக்கலாம். ஆலயத் தூய்மைக்கு உழைப்பது, ஓதுவது, வரிசையை ஒழுங்குபடுத்துவது) செய்பவர்களுக்கு சிறிது சலுகை காண்பிப்பதில் தவறில்லை. ஆனால் பிரசாதத்தில் வேறுபாடு காண்பிப்பது, என்னைப் பொறுத்தவரையில், மனிதத் தவறு. ஆலயத்தில் evaluating factor பக்தி (உள்ளன்போடு கூடிய) ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. என் பழைய பதிவுகளை நீங்கள் படித்து வருவது மக்ழ்ச்சி தருகிறது பக்தியின் வெளிப்பாடக அவர்கள் இதை கருத வில்லை ஏதோ ஒரு பரிகாரமாகச்செய்கிறாற்போல் தோன்ற வில்லை நான் இந்த மடேஸ்நானம் பற்றிக் கூறுகிறேன் உணவு பரிமாறப்படுவதில் பேதம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

      Delete