Monday, June 24, 2013

நதிமூலம்.... ரிஷி மூலம்....


                                நதி மூலம்...... ரிஷி மூலம்......( சிறு கதை.)
                                ------------------------------------



என்னுடைய மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இந்த சம்பந்தம் கைகூடிவர எத்தனை எத்தனைத் தெய்வங்களைப் பிரார்தித்திருப்பேன். .ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாளிப்புகள். பெண் படித்திருக்கிறாளா, லட்சணமாய் , அழகாய் இருக்கிறாளா என்பதைப் பார்ப்பதை விட்டு குலம் என்ன கோத்திரமென்ன , அப்பா யார் அம்மா யார் என்பதோடு நிறுத்திக் கொண்டால் போதாதா. ? தாத்தா யார், பாட்டி யார் ஊர் என்ன வீடு என்ன அப்பப்பா  போதுமடா சாமி.... இவ்வளவு சலிப்பு ஏன். ? உள்ளதை உள்ளபடி சொல்லிப் போனால் என்ன.? முடியவில்லையே... எனக்கே நான் யார் வந்த வழி என்ன என்று யோசித்துப் பார்த்தால் எங்கோ இடிக்கிறமாதிரி இருக்கிறதே..

சின்ன வயதில் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதே அபூர்வம்., சொந்தங்கள் பந்தங்கள் என்று குழுமும்போது எல்லோரிடமும் ப்ழக வேண்டும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து தவிக்கும். ஆனால் அப்பா ஏதாவது காரணங்கள் சொல்லி தவிர்த்து விடுவார். என்னுடைய தாத்தா பாட்டி என்று எல்லோரும் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்த்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பார்த்த நேரங்களிலும் அவர்களிடம் இருந்து பாசம் என்றால் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாது. இரண்டு வழி தாத்தா பாட்டிகளுமே ஒருவித காழ்ப்பினைக் காட்டி வந்தார்கள். அந்த வயதில்  பட்டும் படாமலும் யாராவது பேசுவதைக் கேட்டு ஒன்று மட்டும் தெளிவாகி இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள், அதனால் உறவுகளால் தூற்றப்பட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது. ஆனால் அது என் மகள் திருமணத்திலும் பாதிப்பு உண்டாக்கும் என்பது எதிர்பாராதது.

படித்து முடித்து உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்த பிறகு ஜாடை மாடையாக அப்பாவிடம் அவர் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பேன்.
YOU DON’T WORRY ABOUT ANYTHING.  VALUES IN LIFE CHANGE WITH EVERY GENERATION” என்று கூறி என் வாயை அடைத்துவிடுவார். ஆக அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வாழ்வின் மதிபீடுகளில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும் என்று எண்ண வைத்தது.

எனக்கும் நம் உறவுகள் யார் , என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமிருந்தது. நான் அவர்களிடம் தொடர்பு கொள்ளலாமா  என்று அப்பாவைக் கேட்ட போது. “ நீ வளர்ந்து விட்டாய் . உன்னைத் தடுத்து நிறுத்துவதில் அர்த்தம் இல்லை. ஆனால் யார் என்ன பேசினாலும் பிடிக்காவிட்டால் அங்கிருந்து விலகி வந்துவிடு. எதையும் நியாயப் படுத்தும் செயல்களில் ஈடுபடாதே “ என்று மட்டும் கூறினார்.

அப்பாவின் அம்மாவுக்கு ஒரு நிக் நேம் இருந்தது. அவர்களை GOD MOTHER  என்று அழைத்தார்கள். அந்தப் பெயர்க் காரணம் புரியவில்லை. ஒருவேளை எல்லோரும் தன் பேச்சுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ என்னவோ.... பட்டும் படாமலும் பலர் பேசக் கேட்டதிலிருந்து  எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. ‘ இவர் என் அப்பாதானா.?இந்தக் கேள்வியே அபத்தமாக இருப்பதுபோல் தோன்றியது. எப்பவுமே அம்மா அம்மாதான்... அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். எல்லாமே நம்பிக்கைதான். மேல் நாட்டில் திருமணம் ஆவதும் மணமுறிவு ஏற்படுவதும்  மறு மணம் புரிவதும் வெகு சகஜமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும்போது .என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு ஆடுகிறார்கள் “ என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும், ஆனால் நம் நாட்டில் அப்படிப் பேசுவது அநேகரது புருவங்களை உயர்த்தும்.

அங்கும் இங்கும் கேள்விப்பட்டதைப் பொருத்திப் பார்க்கும்போது, என் அப்பா அம்மா வாழ்க்கையில் சமகால புரிதல்களை மீறி ஏதோ நடந்திருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்க மனசு ஒப்பவில்லை. என்னதான் இருந்தாலும் அப்பாவிடமும் அவரது அந்தரங்க வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியுமா. ? இருந்தாலும்  உறவுகளில் இருக்கும் ஒரு stigma  தாங்க முடியாமல் இருக்கவே கேட்டு விட்டேன்.

“ அப்பா. உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்க்றாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா. நானும் வளர்ந்து விட்டேன் இல்லையா

“ நிச்சயம் நீ இந்தக் கேள்வியோடு வருவாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய திருமணத்தின்போதே இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். நல்ல காலம் காதல் திருமணம் ஆனதால் பல கேள்விகள் கேட்கப் படாமலேயே போயிற்று.. நீ காதலித்துத் திருமணம் செய்து கொண்டாயே. காதலிக்கப் போகும் முன்னால் உன் காதலியின் பின் புலம் பற்றி எல்லாம் கேட்டுத்தான் காதலித்தாயா.?

“ கண்டோம் காதலினால் கட்டுண்டோம். கல்யாணமும் உங்கள் சம்மததோடுதானே நடந்தது. “

“ சமதித்திருக்காவிட்டால் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டீர்களா.?

IT IS A HYPOTHETICAL QUESTION.”

எப்படி எதையும் கேட்காமல் காதலித்தீர்களோ . அது போலத்தான் நானும் உங்கம்மாவும் காதலித்தோம்.

“ அதற்காக எதிர்ப்பு இருந்ததா?


“ ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. நான் உங்கம்மாவைக் காதலிக்கத் துவங்கும்போது . உங்கம்மாவுக்கு ஏற்கனவே மணமாகி கணவனும் இருந்தார்.

கதை முற்றிலும் எதிர்பார்க்காத திசையில் செல்வது கண்டு  காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்டேன்.

VERY INTERESTING !. PLEASE BEGIN FROM THE BEGINNING. “

ஊர் பேர் எதுவும் வேண்டாம். நான் படித்து முடித்து வேலைக்குப் போன ஊரில் என்னுடைய அத்தை மகனும் இருந்தான். புதிதாக போகும் ஊரில் எல்லாம் சரிபட்டு வரும் வரை அவன் வீட்டிலேயே தங்கலாம் என்றான்
நானோ மிகவும் சங்கோஜி. யாருடனும் பழக மாட்டேன். திருமணமாகிக் குழந்தையோடு இருக்கும் அத்தை மகன் வீட்டில் தங்குவது முதலில் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சைத்தான் குடி இருந்திருக்க வேண்டும். அத்தை மகனின் மனைவி அங்கும் இங்கும் போகும் போது மனசில் பளீரென ஏதோ வெடிக்கும். தப்புடா தப்பு என்று மனசு சொன்னாலும் அதையும் மீறி ஒரு வேட்கை எழுந்தது நிஜம். அத்தைமகனுக்கு சம்பாத்தியம் குறைவு. நான் அங்கு ஒரு பேயிங் கெஸ்ட் ஆக இருந்ததால் அவனுக்கு  ஓரளவு வசதியாய் இருந்தது. அவன் ஆரோக்கியமும் அவ்வளவு சரியாய் இருக்க வில்லை. அடிக்கடி மருத்துவம் பார்க்கவும் அவனுக்கு சிசுருக்ஷை செய்வதுமாக உன் அம்மா இருந்தாள்

“ என்னது...? என் அம்மாவா....? அப்போ......

“ ஆம் உன் அம்மாதான். என் அத்தானின் மனைவிதான்.

என் உள்ளத்தின் உள்ளே ஏதேதோ உணர்ச்சிகள் எழுந்தன. எதுவுமே புரியாதது போலும் எல்லாமே புரிந்தது போலும் தோன்றியது.

“ அப்படியானால் என் அப்பா...?

“ இருக்கிறார். ..நல்ல மனுஷன். ஒரு வாலிப வயது மாமா பிள்ளை. இவனே வாவென்று வரவழைத்துத் தங்கச் செய்தது. மனைவிக்கும் மாமா மகனுக்கும் இருந்த ஈர்ப்பைப் புரிந்து கொண்டு  விலகி சென்று விட்டார் குடும்பத்தில் ஒரு பூகம்பமே வெடித்தது. GOD MOTHER  நொறுங்கியே போய்விட்டார். உன் அம்மாவுக்கும் எனக்கும் ஏற்பட்டத் தொடர்பின் விளைவாக.ஒரு குழந்தையும் பிறந்தது. இனி  உறவை மூடிவைத்தால் பலரது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டி இருந்திருக்கும். உன் அப்பா.... நல்ல மனுஷன் ஒதுங்கிப் போய்விட்டார். இப்போது சொல் என்றைக்காவது எங்கள் உறவு குறித்து நீ சந்தேகப் பட்டிருக்கிறாயா. எங்கெல்லாம் யார் யாருடைய நாக்கு நீண்டு பேசுவதைத் தவிர்க்கவே  உறவுகளைப் புறக்கணித்து வந்தோம். எனக்கும் இப்போது மனப் பாரம்குறைந்தது போல் இருக்கிறது.
 என்று கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

இனிமேல் எனக்கே எங்கோ இடிக்கிறமாதிரி தோன்றாது. எல்லாம் தெரிந்து விட்டதே.   நம்மை நமக்காகவே விரும்பி திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் ஓக்கே.. என் மகளுக்கு என்று இனிமேல் ஒருவன் பிறக்கப் போவதில்லை. .இந்தத் திருமணம் நடக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது.          

 



18 comments:

  1. கதை எதிர்பார்க்காத திருப்பத்துடன் சுவாரஸ்யம்... நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete
  2. அருமையான கதை. பலமுறை படித்து ரசிப்பேன்.

    ReplyDelete

  3. "நதிமூலம்.... ரிஷி மூலம்...."

    ஆராய்ச்சிக்கு
    அப்பாற்பட்டதாயிற்றே..!

    ReplyDelete
  4. நல்ல கற்பனை! பூர்வாஸ்ரமத்தில் எல்லாம் ஒன்ணுதான்!
    இந்தக் கதையைப் படித்து முடித்ததும், விக்கிரமாதித்தன் கதையில் வரும் , வேதாளம் கடைசியாக சொன்ன “முறை தெரியாத கதை” தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete

  5. @ திண்டுக்கல் தனபாலன்
    ஒரு மாற்றத்துக்காக அவ்வப்போது எழுதும் சிறுகதைகளில் வித்தியாசமான சிந்தனைகளில் இதுவும் ஒன்று. நன்றி
    .
    @ டாக்டர் கந்தசாமி
    / அருமையான கதை பலமுறை படித்து ரசிபேன்/ நல்ல ரசனை. நன்றி.

    @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    @ இராஜராஜேஸ்வரி
    / ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாயிற்றே/ அதனால்தான் எந்த ஆய்வுக்கும் உட்படுத்தவில்லை. நன்றி

    @ தி. தமிழ் இளங்கோ
    /நல்ல கற்பனை/ பாராட்டுக்கு நன்றி. எனக்கு முறை தெரியாத கதை படித்த நினைவில்லை.

    ReplyDelete
  6. வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் இப்படிப் பல குடும்பங்களிலும் நடந்திருக்கலாம்.

    ReplyDelete
  7. விட்டுக் கொடுத்து விலகிச் சென்ற அந்தக் கணவர் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. உங்களின் எழுத்து நடை வெகு ஜோர்!

    ReplyDelete
  8. கதை என்றாலும் சில இடங்களில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது.சமூகத்தில் கஷ்டபடுவது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்.
    @ கோமதி அரசு
    இந்தமாதிரி சிந்தனைக்கு எதிர்ப்புக் குரல்கள் இருக்கும் என்று தோன்றியது. THE POSSIBILITIES OF SUCH HAPPENINGS இருக்கலாம் என்ற கருத்து சற்று நிம்மதி தருகிறது.நன்றி.

    @ பாலகணேஷ்.
    எழுத்து நடையைப் பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  10. //அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். //

    யாரோ 'ஒரு மாதிரி' சொன்னது இது. 'அறிமுகப்படுத்துதல், அறிதல்' எல்லாம் வெற்று வார்த்தைக் கோர்வைகள். அம்மாவையும், அப்பாவையும் தம் விசேஷ உணர்வாலேயே குழந்தைகள், ஒரு வயது ஸ்டேஜிலேயே அறிகின்றன. (கண்டு கொள்கின்றன)

    ReplyDelete
  11. தடம்புரண்ட வாழ்க்கையொன்று காதலின் பெயரால் சீராக்கப்பட, சுகமாய் பயணிக்கிறது அடுத்த தலைமுறையின் காதல் வாழ்க்கை. மூன்றாம் தலைமுறையும் காதலில் வீழ்ந்திருக்குமேயானால் நதிமூலம் தேடிப்போவதற்கான தேவை தேவைப்பட்டிருக்காது.கதைக்கருவும் எழுதிய விதமும் மனம் ஈர்த்தன. பாராட்டுகள் ஐயா.


    ReplyDelete
  12. என்னால் இதை ஜீரணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.இது கதைக்கு வேண்டுமானால் முற்போக்கு சிந்தனையாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இந்த மாதிரி நடக்காமல் இருந்தால் தான் நலம் என்பது என் அபிப்பிராயம்.

    ReplyDelete

  13. @ ஜீவி
    தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அறிமுகப்படுத்தல் என்றால் தாய் குழந்தையிடம் இவர் உன் தந்தை என்று அறிமுகப்படுத்தல் அல்ல. ”அப்பா என்று சொல்லு. இது அப்பா இது அண்ணா’ என்று கூற வளர்வதைக் குறிக்கும். இதே கதையில் இவன தந்தை என்று எண்ணிக் கொண்டு இருந்தவரே தந்தை அல்ல. பொதுவாகக் குடும்பங்களில் குழந்தைகள் உறவுகளை உணர்ந்தும் , சில நேரங்களில் அறிமுகப்படுத்தப் பட்டும் வளர்கின்றன. மீண்டும் நன்றி.

    ReplyDelete

  14. @ கீதமஞ்சரி.
    தடம் புரண்ட வாழ்க்கையே இவ்ர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருந்ததால்தான் என்றும் கொள்ளலாம்.சரியாய்ப்புரிந்து கொண்ட கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    முற்போக்கு சிந்தனை அல்ல. ஜீரணிக்க முடியாத நிகழ்வுகளும் வாழ்க்கையில் நடக்கின்றன என்று தோன்றியதன் விளைவே இக்கதை. வருகைக்கும் உள்ளம் திறந்த கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. art imitates life - இன்னொரு சிறப்பான உதாரணம் இந்தக் கதை.
    இந்த வருடத்திய உங்கள் சிறந்த பதிவு.
    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  17. உடன்பிறந்த சகோதரன் மனைவியுடன் முப்பது வருடங்களுக்கு மேல் (சாகும்வரை) உறவு வைத்திருந்த அசல் நிகழ்வை அறிவேன்.

    ReplyDelete