Saturday, August 31, 2013

நான் கனாக் காண்கிறேன் நண்பா......


                                                 I HAVE A DREAM
                                                 ----------------------




இரண்டாம் உலகத் தமிழ்ப் பதிவர் விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்னும் ஆசை அளவில்லாமல் இருந்தது. எப்படியாவது பங்கேற்று விடலாம், அப்படி பங்கேற்க முடிந்தால் இவ்வுரையை அனைவர் முன்னிலையிலும் நிகழ்த்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என்னால் பங்கேற்க முடியவிலை. இருந்தால் என்ன. ? பதிவாக எழுதி விட்டேன்.

அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாயுள்ள உலகத் தமிழ் பதிவர் பெருமக்களே,முதற்கண் என் வணக்கம் முகந்தெரியா நட்புகளை முகந்தெரிந்து முகமன் கூறி வரவேற்றுக் களிக்கும் நல் உள்ளங்களே, இந்த இனிய வேளையில் ஒரு கனமான தலைப்பில் நான் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உள்ளங்களைச் சிந்திக்க வைக்க இது போன்ற சந்தர்ப்பம் அமையுமோ தெரியாது. அப்படியே அமைவதாய் இருந்தாலும் உங்களுடன் கருத்துக்களைப் பகிர நான் இருப்பேனோ தெரியாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சொல் வழக்கு, அதைத்தான் நான் செய்கிறேன்.


நண்பர்களே எனக்கு ஒரு கனவு உண்டு. “ பெரிய மார்ட்டின் லூதர் கிங் “ என்னும் நினைப்பு என்று நீங்கள் எண்ணலாம். ஏன் அவர் மட்டும்தான் கனவு காண முடியுமா.?அவர் அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகக் கனவு கண்டார். நான் நம் சமுதாய மககளுக்காகக் கனாக் காண்கிறேன்.
   கனவுகள் பகற்கனவாய் , நிகழ முடியாததாய் இருக்கக் கூடாது.உள்ளத்தின் ஆதங்கங்கள் நலம் விளைக்கும் கனவாய் மலர்ந்து நிஜமாய் நிகழக்கூடாதா.? பல முறை நான் என் பதிவுகளில் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள்தான் இப்போது உங்கள் முன் கொட்டக் காத்திருக்கிறேன். என் பதிவுகளைத் தொடர்பவர்கள் சுமார் நூறு பேர் இருக்கலாம். அவர்களிலும் எழுத்தை ஒருபொழுது போக்காய் நினைப்பவர்கள் அறுபது சதவீதத்துக்கும் மேலிருக்கலாம். மீதி இருப்பவர்களில் பலரும் கருத்துக்களில் இருந்து மாறுபடலாம். ஏதோ ஒரு சிலர் கருத்துக்களுடன் ஒன்று பட்டாலும் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி தூரப் போகலாம். ஆனால் நான் கூறும் செய்திகளில் உண்மை ஒளிவீசுகிறது என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என்பது அவரவர்  நன்னெஞ்சங்களுக்குத் தெரியும். இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரியும் , எல்லோரும் சொல்வதுதான் , வள்ளுவன் முதலே சொல்லி வருவதுதான். “பிறப்பொக்கும் இதை உண்மையில் உணர்கிறோமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மார்ட்டின் லூதர் கிங்   I HAVE A DREAM என்று சொன்னான் I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.”
இங்கு நான் சொல்கிறேன் “ நான் ஒரு கனவு காண்கிறேன். நம்மிடையே ஒரு சமுதாயம் உருவாகும் கனவு காண்கிறேன், அதில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லாதிருக்கக் காண்கிறேன் அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் சமத்துவம் உரிமை எல்லாம் எல்லோருக்கும் சென்றடையக் கனாக் காண்கிறேன் ஏனென்றால் இவை எல்லாம் ஏட்டளவிலேயே இருக்கிறது ஏட்டளவில் உறுதியளித்திருந்தாலும் மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வில்லையே.
நண்பர்களே பலருக்கும் தெரிந்திருக்கும் இக்குறைபாடுகள் நீங்க என்ன வழி..?
பிறப்பொக்கும் என்று நம்பும் நாம் . அவரவர் வாழ்க்கைமுறை அமைவது அவர்களது பூர்வ ஜென்ம பலன் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சமுதாய நடைமுறைகளுக்கு நாமோ நம்முடைய முன்னோரோ காரணம் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியும்.அற்றைக் காலத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுத்து விடப்பட்ட பணி முறைகள் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் ஆதிக்க முறைகளுக்கு வழி வகுத்து விட்டது. சரி எது தவறு எது என்று கேள்வி கேட்கும் திறன் தரக்கூடிய கல்வி பலருக்கும் மறுக்கப் பட்டது
இது அந்நியரின் ஆட்சிக்  காலத்தில்தான் வேர் பிடித்தது என்று கூறி சமாதானம் அடைய முடியாது. காரணகர்த்தா யாராவது இருந்து போகட்டும். இன்றும் இந்நிலை நீடிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கும் இங்குமாக COSMETIC  சரிகட்டல்கள் தென்படுகின்றன. ஒடுக்கப் பட்டோருக்கு ஒதுக்கீடுகள் என்று நடை முறையில் சில சட்டங்கள் காண்கிறோம் சட்டங்களால் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் அல்ல.இவை. மன மாற்றங்கள் வர வேண்டும் அம்மாதிரியான மாற்றங்கள் நிகழ்த்தக் கூடிய சட்டங்கள் வேண்டும் எல்லோருக்கும் சம உரிமைகள்  என்பது மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் அது நடக்கும் என்று நான் கனாக் காண்கிறேன். சாதி மத பேதங்களும் ஏழை பணக்காரன் எனும் வேறுபாடுகளும் வளர்ந்து வரும் சமுதாயத்திடம் இருக்காது என்று கனாக் காண்கிறேன். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் வளரும் பிஞ்சுகள் . எதிர்காலத் தலை முறைகள் மனம் பாதுகாக்கப் பட வேண்டும். அது கல்விக் கூடங்களில்தான் தொடங்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு என்று இருந்தால் சிறார்களின் சிந்தைகளில் வேற்றுமை எண்ணம் உருவாகாது. எல்லோருக்கும் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச உணவு என்று கட்டாயப் படுத்தினால் மலரும் பிஞ்சு மனங்களில் வேற்றுமை எண்ணங்கள் உருவாகாது. ஒதுக்கீடு என்று கீழே உள்ளோரை மேலே கொண்டுவரும் முயற்சியில் மேலே இருப்பவர் மனம் மாற வாய்ப்பில்லை. ஏழை பணக்காரன் என்று கல்வியை வியாபாரம் ஆக்கும் முயற்சி தொடரும். கல்வி என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் வர்க்க பேதமற்ற , ஏற்ற தாழ்வில்லாத கல்வி முறையே நம் அடுத்த சந்ததியினரிடமாவது “பிறப்பொக்கும் என்னும் உண்மை நிலையை நிலை நிறுத்தும் என்று நான் கனாக் காண்கிறேன்.

முகம் தெரிந்திராத பதிவுலக நண்பர்களைக் கண்டோம் , சிரித்தோம், உண்டோம் மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற  எண்ணத்தின் உந்தலே  இவ்வுரைக்குக் காரணம். அனைவருக்கும் வணக்கம். நன்றி.

19 comments:

  1. சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் உந்தலே இவ்வுரைக்குக் காரணம்.

    அனைவருக்கும் எட்டிய அருமையான உரைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. உங்கள் கனவு பலிக்கட்டும்.

    ReplyDelete
  3. கனவு மெய்ப்பட வேண்டும் - பராசக்தி
    கனவு மெய்ப்பட வேண்டும்

    ReplyDelete
  4. சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற தங்களின் மேலான எண்ணம் - மெய்ப்பட வேண்டும் ஐயா!..

    ReplyDelete
  5. உங்கள் கனவு பலிக்கட்டும். விழா சிறப்பாக அமையட்டும்.

    ReplyDelete
  6. முகம் தெரிந்திராத பதிவுலக நண்பர்களைக் கண்டோம் , சிரித்தோம், உண்டோம் மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் உந்தலே இவ்வுரைக்குக் காரணம்.//

    உங்கள் உயர்ந்த எண்ணம் வாழ்க!
    இந்த உயர்ந்த எண்ணம் நிறைவேற பதிவர் பெருவிழா துணை நிற்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும்//உண்மைதான்.நீங்களும் வந்திருக்கலாம்

    ReplyDelete
  8. சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும்//உண்மைதான்.நீங்களும் வந்திருக்கலாம்

    ReplyDelete
  9. // இந்த இனிய வேளையில் ஒரு கனமான தலைப்பில் நான் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உள்ளங்களைச் சிந்திக்க வைக்க இது போன்ற சந்தர்ப்பம் அமையுமோ தெரியாது. அப்படியே அமைவதாய் இருந்தாலும் உங்களுடன் கருத்துக்களைப் பகிர நான் இருப்பேனோ தெரியாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சொல் வழக்கு, அதைத்தான் நான் செய்கிறேன். //

    இந்த வரிகள் என் மனதை மிகவும் உணர்ச்சி வசப்பட செய்து விட்டன. நான் எவ்வளவோ ஆசைப்பட்டும் இன்று (01.09.2013) நடக்கும் சென்னை பதிவர் விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.

    உலகம் சமநிலை பெற வேண்டும் என்ற உங்கள் கனா ஒருநாள் பலிக்கும். வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  10. உங்கள் கனவு மெய்ப்பட வேண்டுமே !

    அருமையாய் மனதில் உள்ளதை கொட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  11. நல்ல சிந்தனைகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அன்புள்ள ஐயா.

    உங்கள் எண்ணங்களைக் கனவாக்கிப் பதிவர் விழாவில் அனைவர் மனத்திலும் சிந்தைக்கொள்ள முயன்றிருக்கிறீர்கள்.

    உங்கள் கனவு கனியவேண்டும்.

    ஆனாலும் நம்முடைய கல்விமுறையும் பிள்ளைகளும் கனிந்து கைகோர்க்கும் ஒரு சமுகச் சூழலே இதனை கனியவைக்கும் முதன்மையானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  13. அன்பின் ஜிஎம்பி அய்யா - சிந்தனை நன்று - சென்னைத் திருவிழா - பதிவர் சந்திப்பு - இரண்டாம் ஆண்டுத் திருவிழா - கோலாகாலமாக நடந்து கொண்டிருக்கும். நாங்கள் அயலகத்தில் இருப்பதனால் கலந்து கொள்ள இயலவில்லை. காணொளி காண்போம் - கண்டு மகிழ்வோம் - கனவு மெய்ப்பட வேண்டும் - பராசக்தியின் கருணை என்றென்றும் இருக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. சீரிய சிந்தனை..சக மனிதன் மேல் இருக்கும் சம தர்ம நேசம்.
    வாழ்க நீங்கள் மற்றும் இத்தகு சிந்தனை கொண்டோர்.
    இதெல்லாம் இங்குள்ள மனிதர் நினைத்தாலே செய்தாலே தான் நடக்கும்.
    எங்கே இருந்தும் எந்த மாற்றமும் தானாக வராது.
    சரியான நேரத்தில் உங்களின் நினைவூட்டல் மிக பொருத்தம்.
    தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்ன வார்த்தைகளின் உண்மை அனைவருக்கும் தெரிதல் வேண்டும்.

    ReplyDelete
  15. //சட்டங்களால் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் அல்ல.இவை. மன மாற்றங்கள் வர வேண்டும்// உண்மையான வரிகள். இன்று தனியாரிடம் இருக்க வேண்டியது அரசாங்கத்திடம் இருக்கிறது (டாஸ்மாக்), அரசாங்கத்திடம் இருக்க வேண்டியது தனியாரிடம் இருக்கிறது (கல்விக்கூடம்) இருப்பினும் நிச்சயம் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும், ஏற்றத்தாழ்வு களையப்படும். தங்களது கனவு பலிக்கும். நன்றி அய்யா.

    ReplyDelete
  16. பதிவர் விழா எப்படி நடந்ததோ தெரியாது, உங்கள் பேச்சு நிச்சயம் நன்றாகச் சிறப்பித்திருக்கும்.
    கனவு மெய்ப்பட்டால் நன்றே.

    ReplyDelete

  17. சீரிய சிந்தனைகளின் விளை நிலமாக இப்பதிவர் திருவிழாஇருக்க வேண்டும் என்னும் என் எண்ணத்துக்கு உரமேற்றியும் கனவு மெய்ப்படவேண்டும் என வாழ்த்துக் கூறியும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. @ ஹரணி ஐயா,/நம்முடைய கல்விமுறையும் பிள்ளைகளும் கனிந்து கைகோர்க்கும் ஒரு சமுகச் சூழலே இதனை கனியவைக்கும் முதன்மையானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து./ முதிர்ந்த எண்ணமுடைய பெரியோர்களே இது பற்றி சிந்திக்க விரும்பாதபோது பிள்ளைகள் என்ன செய்ய முடியும்.?
    @ssk /சீரிய சிந்தனை..சக மனிதன் மேல் இருக்கும் சம தர்ம நேசம்.
    வாழ்க நீங்கள் மற்றும் இத்தகு சிந்தனை கொண்டோர்.
    இதெல்லாம் இங்குள்ள மனிதர் நினைத்தாலே செய்தாலே தான் நடக்கும்.
    எங்கே இருந்தும் எந்த மாற்றமும் தானாக வராது./
    சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.
    ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. இப்பதிவினை, விழா ஏற்பாடுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கு அனுப்பி இருந்தேன்.காணொளி ஏமாற்றிவிட்டது என்றும் தெரிவித்திருந்தேன். என்ன சொல்ல........?

    ReplyDelete
  18. இந்த பதிவ இன்னைக்கித்தான் பார்த்தேன். இதையே நேர்ல வந்து பேசியிருந்தா எவ்வளவு அருமையா இருந்துருக்கும்! கூட்டத்தில் இந்த மாதிரி சீனியர் பதிவர்களை பேச வைத்து மகிழ்ந்திருக்கலாம்... ஹூம்... போனத பத்தி பேசி என்ன பலன்?

    ReplyDelete
  19. இந்த பதிவ இன்னைக்கித்தான் பார்த்தேன். இதையே நேர்ல வந்து பேசியிருந்தா எவ்வளவு அருமையா இருந்துருக்கும்! கூட்டத்தில் இந்த மாதிரி சீனியர் பதிவர்களை பேச வைத்து மகிழ்ந்திருக்கலாம்... ஹூம்... போனத பத்தி பேசி என்ன பலன்?

    ReplyDelete