Thursday, October 31, 2013

தீபாவளி நினைவுகள்.

                            தீபாவளி நினைவுகள்......
                           ------------------------------



எத்தனையோ தீபாவளித் திரு நாட்கள் வந்து போய் விட்டன. இருந்தாலும் நினைவை விட்டகலாத தீபாவளி என்று சொல்ல வேண்டுமானால் அது நாங்கள் கோவிந்தராஜபுரத்தில் எங்கள் பாட்டியின் வீட்டில் இருந்தபோது எனது பத்தாவதோ பதினோறாவதோ வயதில் வந்ததுதான். நாங்கள் இருந்த அக்கிரகாரத்தில் (கிராமம் என்பார்கள்) வசித்தவர்கள் எல்லாம் தமிழ் பேசும் பிராம்மணர்கள். கிராமம் இருந்த கேரளத்தில்.தீபாவளிப் பண்டிகைக்கு மவுசு கிடையாது. புதுத் துணி, பட்டாசுகள் எல்லாம் விஷ்வுக்குத்தான். வீடுகளில் காலையில் எண்ணைக் குளியல் இருக்கும். ஏதோ பெயருக்கு சில இனிப்புகள் செய்வார்கள். நானும் என் தம்பியும் தீபாவளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புதிய ஆடைகள் பட்டாசுகள் இனிப்புகள் என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தோம், பாட்டி எங்களுக்குப் புத்தாடைகள் ஏதும் கிடையாதென்று சொல்லிவிட்டார். பாவம் அவரால் ஒன்றும் செய்ய முடியாத குடும்ப நிலை. அக்கம் பக்கத்து வீடுகளில் பட்டாசுகள் வெடிக்கத் துவங்கி விட்டன. ( பட்டாசுகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவை மிகவும் அவசியம் என்று கருதப்படாத ஒரு சூழல் )நாங்கள் முகம் வாடி இருந்தபோது, தற்செயலாக எங்கள் தாய் மாமா ஒருவர் அங்கு வந்தார். எங்கள் நிலைகண்டு இரக்கப் பட்டு ரூபாய் இரண்டு கொடுத்துப் பட்டாசுகள் வாங்கிக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு திடீர் என்று உற்சாகம் வந்தது. கிராமத்தின் அருகே ஓடும் நதியின் அக்கரையில் கந்தகத் தூள் விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டுஒரு ரூபாய்க்கு கந்தகத் தூள் வாங்கினோம். சிகரெட் பாக்கெட்டுகளில் இருக்கும் ஜிகினா ஃபாயில்களைப் பொறுக்கினோம். ஒரு நீளக் கோலில் துளை இருக்கும் பெரிய சாவி ஒன்றைக் கட்டினோம். ஜிகினாப் பேப்பரைத் துண்டுகளாக கத்தரித்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் சிறிது கந்தகத் தூளைப்போட்டு சிறு உருண்டையாகச் சுருட்டிக் கொண்டோம். அந்த உருண்டைகளை சாவித்துவாரத்தில் போட்டோம். ஒரு நீள ஆணியை  அந்தக் கோலில் கட்டி  ஆணியைத் துளையின் மேல் வைத்து ஓங்கிப் அடித்தால் டமார்என வெடி....! இந்த improvised   வெடியை நாள் முழுவதும் வெடித்துக் கொண்டு தீபாவளி கொண்டாடினோம் மீதி இருந்த ஒரு ரூபாய்க்கு ஓலை வெடியும் வெங்காய வெடியும் .கொண்டாட்டம்தான்.
இன்னொரு தீபாவளியும் மறக்க முடியாது. தீபாவளி அன்று விடியற்காலையில் பட்டாசுகள் எல்லாம் வெடித்து விட்டு  பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெடிக்காத பட்டாசுகளைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தான் என் தம்பிகளில் ஒருவன். ஒரு கையில் பட்டாசும் மறு கையில்  பற்றவைத்த ஊதுபத்திக் குச்சியையும் அருகே வைத்து ஊதிக் கொண்டிருந்தவன் , திடீரென்று “ அம்மா செத்தேன்என்று கூச்சலிடவே வந்து பார்த்தால் அந்த ஊசி வெடி வெடித்து அவன் முகமெல்லாம் கரியுடன்......! அன்று அது சிறிய ஊசி வெடியாய் இருந்ததால் சேதம் இல்லாமல் தப்பினான்.
திருமணமாகி எங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அதிகாலையில் ஒரு பட்டாசு கொளுத்தி வெடி போட்டு . குளியல் எல்லாம் முடிந்து பிள்ளைகள் பட்டாசு வெடித்து மகிழ்வது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும். இப்போதெல்லாம் தொலைக் காட்சி பெட்டி முன் அமர்ந்து பட்டிமன்றம் நிகழ்ச்சிகளைக் காண்பதோடும் உலகத் தொலைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக என்று ஒளிபரப்பாகும் திரைப் படங்களைப் பார்ப்பதிலும் தீபாவளி சென்று விடுகிறது.....!  
   
ஆயிரம் தீபங்கள் உங்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்.


.......
            
                            ------------------------------

16 comments:

  1. ஆயிரம் தீபங்கள் உங்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்.

    மலர்ந்த நினைவுகள் அருமை..

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. அன்றைய சந்தோசமே தனி தான் ஐயா...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தீபாவளித் திருநாள் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்தது சுவாரசியம்.
    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. கந்தகதுளும், அதை தரையில் ஓங்கி அடித்து வெடிக்க வைக்க இரும்பு குழாயும் உண்டு , பொட்டு வெடிகளை ஒரு இரும்பு நட் போல் உள்ளதில் போட்டு அதையும் ஓங்கி தரையில் அடித்தால் பயங்கர சத்ததுடன் வெடிக்கும் தீபாவளி சமயத்தில் விற்கும் கடைகளில் நாங்கள் தூத்துக்குடி ஊரில் இருக்கும் போதுஅண்ணன் வாங்கி வெடிப்பான். அப்பா திட்டுவார்கள். வேறு மத்தாப்பு, வெடிகள் வெடிக்க சொல்வார்கள்.

    மலரும் நினைவுகள் அருமை.
    //ஆயிரம் தீபங்கள் உங்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்//
    அருமையான வாழ்த்து.
    நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.
    உங்களுக்கும், உங்கள் குடும்பதினர்களுக்கும், இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. உங்கள் மலரும் நினைவுகளைப் படிக்கும் போது எனக்கும் பழைய நினைவுகள் வந்து மோதின.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா..
    மலரும் நினைவுகளில் உங்கள் மனமும் சேர்ந்து பயணித்ததைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நீங்கள் குடியிருந்த கோவிந்தராஜபுரம் பற்றி ஏற்கனவே எழுதியது ஞாபகம் வருகிறது. இந்த பதிவில் அந்நாளைய நினைவுகளை, இந்நாளில் ஆயிரம் வசதிகள் இருந்தும் ஏக்கமாகவே சொன்னீர்கள். படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. நானும் அந்த மாதிரி சாவியில் பட்டசு வெடித்திருக்கிறேன். தீக்குச்சி மருந்து கூட அந்த மாதிரி வெடிக்கும். கொள்ளுப் பட்டாசு என்று ஒரு வகை. தரையில் தேய்த்தால் படபடவென்று வெடிக்கும். அது விபத்து ஏற்படுத்துகிறதென்று தடுத்து விட்டார்கள்.

    இன்று ஒவ்வொரு குடும்பத்தில் பட்டாசுக்கும் துணிமணிகளுக்கும் செலவு பண்ணும் காசில் ஒரு வருடத்திற்கே குடும்ப செலவு பண்ணலாம்.

    ReplyDelete
  10. இந்த டிவி வந்தாலும் வந்தது தீபாவளி போன்ற விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆவல் பலரையும் குழந்தைகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வது பெருமளவு குறைந்துபோனது.

    உங்களுக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆயிரம் தீபங்கள் உங்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்.


    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. @ இராஜராஜேஸ்வரி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ டி.என்.முரளிதரன்
    @ கோமதி அரசு
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ அ. பாண்டியன்
    @ தி.தமிழ் இளங்கோ
    @ டாக்டர் கந்தசாமி
    @ டி.பி.ஆர் ஜோசப்.
    @ ரிஷபன்
    வருகை தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.கோவிந்தராஜபுரம் பற்றி நான் எழுதி இருந்தது நினைவில் வைத்திருக்கும் இளங்கோவுக்கு,தீபாவளியின் போது பத்து வயது சுமாரில் நடந்தது இப்போது என் நினைவுக்கு வந்ததால் ஏற்கனவே பதிவில் வந்திருந்த நிகழ்வுதான் என்றாலும் எழுதினேன் நன்றி. நான் குறிப்பிட்டது இரும்புக் குழல் அல்ல கோமதி அரசு மேடம். பெரிய துவாரம் உள்ள சாவி.டாக்டரின் அனுபவம் அதுதான் என்று தெரிகிறது.

    ReplyDelete
  13. அருமையான நினைவுகள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  14. @ suresh
    @ அப்பாதுரை
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. இரண்டு ரூபாய்க்கு என்ன/எத்தனை பட்டாசு கிடைத்திருக்கும். என்று யோசிக்கிறேன.

    ReplyDelete