Saturday, January 10, 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை..?


                       கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை...?
                       --------------------------------------------------------------


இன்றைக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகளின்  168-வது ஆராதனை திருவையாறில் அமோகமாக நடந்தேறியது, இசை பற்றி ஏதுமே தெரியாத நான் அது குறித்துப் பதிவிடுவது சரியா. ?தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேனே.  1980-களில் ஒரு ஆண்டு இந்த ஆராதனைக்குச் சென்றிருக்கிறோம். இன்று நேரடி ஒளிபரப்பில் கண்டதுபோல் அவ்வளவு பெரியதாகப் பந்தல் இருக்கவில்லை. திருச்சியிலிருந்து காலை சுமார் ஆறு மணி அளவில் புறப்பட்டு அங்கே ஆற்றின் கரையில் அமர்ந்து காலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆராதனை பற்றி ஏதும் எழுதாமல் என்னென்னவோ எழுதுகிறேன். அதுதான் தலைப்பிலேயே கூறிவிட்டேனே...!இன்று அதிகாலை இந்தியா ஆஸ்திரேலியா நான்காம் டெஸ்ட் மாட்சின் கடைசி நாள்.ஆட்டம் தொலைக்காட்சியில் காண உட்கார்ந்து விட்டேன். 349 ரன்கள் என்னும் இலக்கை அடைய 90 ஓவர்களும் ஆட்டக்காரர்கள் அனைவரும் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த லோகேஷ் ராஹுல் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காத முரளியும் ரோஹித் ஷர்மாவும்நின்று ஆடுவதைப் பார்த்ததும் புரிந்து போயிற்று. ஆட்டத்தை வெல்ல முயற்சிகள் இல்லையென்றும் எப்படியாவது சமன் செய்ய வேண்டும் என்றும் ஆடினார்கள். வழக்கப் படி நன்றாக ஆடிக்கொண்டிருப்பவர்கள் திடீரென்று ஆட்டமிழந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள். ஷர்மா ஆட்டமிழந்ததும் கோஹ்லி வந்தார். நத்தை வேகத்தில் போய்க் கொண்டிருந்த ஸ்கோரை முரளி ஒரு ஓவரில் 15 ஓ 16ஓ ரன் எடுத்து என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தார். இடையில் என் மனைவி ஆராதனை நேரடி ஒளிபரப்பு இருப்பதை நினைவூட்ட. இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று பார்க்கத் தொடங்கினேன். பஞ்சரத்ன கிருதி என் மனைவி கற்றுக் கொண்டிருக்கிறாள். பாடவும் தெரியும். ஆனால் நான் கேட்டுப் பாடியது இல்லை. மறுபடியும் digression. என்ன செய்வது ? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. கீர்த்தனை தெரியாவிட்டாலும் ஆண்டுக்கொரு முறை இசையால் வாழ்க்கை நடத்திப் பெயரும் புகழும் அடைந்தவர்கள் அந்த மகானை நினைத்து அவர் சமாதியில் பாடுவது மதிக்கப் பட வேண்டியதுதானே..ஆராதனை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் as usual  அதற்கு சம்பந்தப் படாத(?) எண்ணங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. முதலில் மங்கல இசை. மங்கல இசையா மங்கள் இசையா திடீரென்று சந்தேகம். நாதஸ்வர வித்வான்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டார்கள். நாதஸ்வரம் ஒரு அசுர வாத்தியமாமே. ஒரு பெண்மணி உட்பட பலரும் ஜோடி ஜோடியாக வாசித்தார்கள். என்ன பாட்டு வாசிக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொண்டுஇருந்தேன் எனக்கு திடீர் சந்தேகம் எழுந்தது. வாசித்தவர்களின் உடல் அடையாளங்கள் நிச்சயம் அந்தணர் அல்லாதவர் என்றே காட்டியது அசுர வாத்தியம் அந்தணர்களுக்கு வசப் படாதோ.? எனக்குத் தோன்றுவது தவறாயிருக்கலாம். அந்த இசை ஏதோ ஜாதிக்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்டதோ.? வாசிதவர்களில் ஒருவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லைஒரு சிலரது நாயனக்களில் தங்கக் காசுகள் தொங்கிக் கொண்டிருந்தன, அவர்களின் status ஐ பறை சாற்றுகிறதோ.?. அதன் பிறகு சேதுலரா என்று போட்டு புல்லாங்குழல் இசையைப் பலரும் தவழ விட்டார்கள். இந்த வரிசை ஏதாவது சம்பிரதாய்ப்பட்டதோ ’தெரியவில்லை’. மீண்டும் என் உள்மனசு குத்திக் காண்பித்தது, அதைத்தான் தலைப்பிலேயே சொல்லி விட்டாயே என்று- .சிறிது நேரத்தில் அபிஷேகங்களுக்கு இடையே ஆராதனை தொடங்கியது. தியாக ராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள். இன்னும் ஒரு முறையாக என் மனைவி இந்த கீர்த்தனைகளைக் கூடவே பாடுவதைக் கேட்டேன். எனக்குப் பாட்டைவிட கூட்டத்தினரை ரசிப்பதில் மனம் சென்றது. அண்மையில் எங்கள் ப்ளாகில் ஆராதனையின் ஒரு பாட்டின் காணொளியை வெளியிட்டு யாரையெல்லாம் அடையாளம் தெரிகிறது என்று கேட்டிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்த பலரில் சிலரை தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அடையாளம் கண்டு கொள்ள முயற்சித்தேன். இதன் நடுவே என் மனைவி அவளது சிநேகிதி ஒருத்தியை அடையாளம் கண்டுகொண்டாள். ஜீ.கே வாசனை அடையாளம் தெரிந்தது. அவரது தந்தை ஜீ.கே மூப்பனாரின் அடிச்சுவட்டில் இவரும் இசைக்குப் புரவலரோ ஐ மீன் ஆராதனை இசையின் ஏதாவது பொறுப்பில் உள்ளவரோ?இசைதவர்களில் பெண்கள் பலரும் அதீத மேக் அப்புடன் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி வித்தியாசமாக இடது வகிட்டோடு அடிக்கடி புன்னகைத்து என் கவனம் அவர் மேலேயே இருக்குமாறு இருந்தார். இந்த வயதில் பெண்களின் அழகை ரசிக்கலாமா என்னும் கேள்வி எழுந்தாலும் A thing of beauty is a joy for ever என்று சமாதானப் படுதிக் கொண்டேன் பஞ்ச ரத்ன கீர்த்தனை பற்றி எழுதும் போது அவற்றை எழுதிப் பதிவிடவும்  வேண்டுமோ தெரியவில்லை. அண்மையில் மார்கழி மாதப் பதிவுகள் பலவும் திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களுடன் வருவது கண்டு இந்த சந்தேகம் வேண்டுமானால் அந்தக் கீர்த்தனைகளை அவற்றின் ஸ்வரங்களுடன் பதிவிட முடியும்.. என்மனைவியிடம்தான் இருக்கிறதே. இருந்தாலும் இது ஒரு இசைப் பதிவானதால் கீர்த்தனையின் தலைப்புகளுடன் ராக தாளங்களையும் குறிப்பிடுகிறேன்.
 முதல் கீர்த்தனை-நாட்டை ராகத்தில் ஆதி தாளத்தில் ஜகதா நந்தகா ரக
  இரண்டாவது கீர்த்தனை கௌளை ராகம் ஆதி தாளம்துடுகு கல நந்நே தொ ர
  மூன்றாவது கீர்த்தனை ஆரபி ராகம் ஆதி தாளம்ஸா தி ஞ்செ னெ ஓ மனஸா
  நான்காவது கீர்த்தனை வராளி ராகம் ஆதி தாளம்கன கன ருசி ரா
  ஐந்தாவது கீர்த்தனை ஸ்ரீராகம் ஆதி தாளம்எந்தரோ மஹானு பாவலு

கீர்த்தனைகள் முடியக் காத்திருந்தேன் டெஸ்ட் மாட்சின் நேரடிஒளிப்பதிவைக் காண. சுலபமாக ட்ராசெய்யும் சாத்தியம் இருப்பதுபோல் இருந்த போது மள மளவென்று விக்கெட்டுகள் சரிந்து தோல்வியைத் தழுவும் நிலை. சரி இந்த இசைப்பதிவை எழுதலாம் என்று துவங்கினாலும் எழுத மனம் ஓடவில்லை. சுரேஷ் ரைனா இரண்டு இன்னிங்ஸிலும் 0 அடித்தது மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அஜின்க்ய ரஹ்னேவும் குமாரும் சமாளித்து ஆடி ட்ரா செய்தனர். பரவாயில்லை. ஆராதனைப் பதிவு எழுதும் போதுஒரு கேள்வி எழுந்தது வராளி ராகம் யாருக்கும்கற்றுக் கொடுக்கப் படுவதில்லையாமே. கற்றுக் கொடுக்கப் படாமலா இத்தனை பேரும் பாடுகிறார்கள் என்றுபதிலும் சொல்லிக் கொள்கிறேன். முன்பே கர்நாடக இசையும் நானும் என்று ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் என் இசைப்பயணம் அரை குறையாய்க் கேட்டு முழிப்பதிலேயே கழிந்து விட்டது. நான் அறிந்த பல பதிவாளர்கள் இசையில் கரை கண்டவர்கள். ஓரிருவரது குரலையும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அது அவர்களுக்கே கூட மறந்து போயிருக்கலாம்  


  .       

29 comments:

  1. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பற்றியும், திருவையாறு கிரிக்கெட் பற்றியும் படித்தேன். சுவாரஸ்யம்!

    பஞ்சரத்ன கீர்த்தனைகளில் எனக்குப் பிடித்த முதல் பாடல் ஆரபி, அப்புறம் நாட்டை. குறிப்பாக பாலமுரளி குரலில்.

    வராளியில் கா வா வா கந்தா வா வா மதுரை மணி குரலில் பிடிக்கும்!

    ReplyDelete
  2. //ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பற்றியும், திருவையாறு கிரிக்கெட் பற்றியும் படித்தேன். சுவாரஸ்யம்!//

    அப்படியா? கழுதைக்கு கற்பூர வாசனை எப்படித் தெரியும்?

    ReplyDelete
  3. கிரிக்கெட்டாரதனை சிறப்பா இருந்தது! நன்றி!

    ReplyDelete

  4. அதையும், இதையும் இணைத்தது மோதகமும், அதிரசமும் சாப்பிட்டது போலிருந்தது ஐயா.

    ReplyDelete
  5. இவ்வாறாக இணைத்து எழுத உங்களால்தான் முடியும். நன்கு ரசித்தோம்.

    ReplyDelete
  6. ஹஹஹ நல்ல சுவாரஸ்யம் சார்! இரண்டையும் இணைத்து எழுதிய விதம். நீங்கள் மிகவும் வித்தியாசமான எழுத்தாளர் என்பது நிரூபணம். பல கட்டுரைகள் அப்படியே. அதில் இது மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. மிகவும் ரசித்தோம்.

    ReplyDelete
  7. //மங்கல இசையா மங்கள இசையா//

    இந்த சந்தேகம் என் மனதிலும் பல காலமாக இருந்து வருகிறது.

    "மங்கலம் என்ப மனைமாட்சி" என்று வள்ளுவர் எங்கேயோ ஒரு குறளில் சொல்லியிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும்போது மங்கலம் என்பது சுபத்தைக் குறிக்கும் ஒரு சொல் என்று நினைக்கிறேன். நாதஸ்வரம் பொதுவாக சுப நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதால் அதை ஒரு மங்கல வாத்தியம் என்று சொல்லுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    மங்களம் என்ற சொல் ஒரு சுப நிகழ்ச்சியின் முடிவைக் குறிக்கிறது என்ற நினைக்கிறேன். இசைக் கச்சேரிகளின் முடிவில் மங்களம் பாடுவதென்பது மரபு. ஆகையால் நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்று சொல்வது தவறு என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாதஸ்வரம் சுப நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் இசைக்கப்படும் வாத்தியம் ஆகும்.

    மொழி வல்லுனர்கள்தான் இதில் முடிவான விளக்கத்தைக் கூற முடியும்.

    ReplyDelete
  8. ஒன்று நிச்சயம். நீங்கள் கழுதையல்ல. ஏனெனில் உங்களையும் நேரில் பார்த்திருக்கிறேன். கழுதையையும் நேரில் பார்த்திருக்கிறேன். ஆகையால் இந்தக் கூற்றை நான் 100 சதம் அடித்துக்கூற முடியும்.

    சங்கீதம் கற்பூரமா அல்லவா என்று எனக்கும் தெரியவில்லை.

    ReplyDelete
  9. இங்கிட்டு கொஞ்சம்... அங்கிட்டு கொஞ்சம்... எதுவும் ம்ஹீம்...

    ReplyDelete

  10. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  11. என் தம்பி வீட்டிலும் தம்பி பையர் இப்படித்தான் ஆராதனையையும், கிரிக்கெட் விளையாட்டையும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். கடைசிப் பாடல் மட்டும் கேட்க முடியவில்லை. :))))) மற்றபடி உங்கள் நேர்முக வர்ணனை நன்றாகவே இருந்தது.

    ReplyDelete

  12. ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்ற வழக்கு சொற்றொடர் என் வந்தது எனத் தெரியவில்லை. ஆனாலும் தங்களுக்கு கிரிக்கட்டிலும் ஆர்வம் உண்டு இசையிலும் ஆர்வம் உண்டு என்பதை உங்கள் பதிவு சொல்கிறது. பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    ஒருவித்தியாசமாக எழுதப்பட்ட பதிவுக்கு ஒரு வித்தியாசமான பின்னூட்டம் ரசித்தேன்.ராகங்களை அடையாளம் கண்டுகொண்டு ரசிக்கும்ஞானம் இல்லை. காதுக்கு இனிமையான எல்லா பாடல்களும் கேட்கப் பிடிக்கும்.வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    அதானே கழுதைக்கு எப்படித் தெரியும் கற்பூர வாசனை. சுவாரசியமாக ரசித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete

  15. @ தளிர் சுரேஷ்
    கிரிக்கெட் ஆராதனையை வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    அப்பொழுது பொங்கலுக்கு ஊருக்குப் போகவில்லை. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  17. @ சோழநாட்டில் பௌத்தம்
    பதிவைப் பாராட்டியதற்கு நன்றி சார்.

    ReplyDelete

  18. @ துளசிதரன்
    வித்தியாசமான முறையில் எழுத முயற்சிக்கிறேன் பாராட்டு பலனளிக்கிறதைக் காட்டுகிறது. நன்றி சார்.

    ReplyDelete

  19. @ டாக்டர் கந்தசாமி
    நீங்கள் சொல்லிம்போது சரியாய்த்தான் இருக்கும். பதிவர் ஞான சம்பந்தர் அவ்வப்போது இம்மாதி சந்தேகஙளைத் தீர்க்கிறார்
    மீள் வடுகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ டாக்டர் கந்தசாமி
    நான் கழுதை இல்லை என்று சான்று அளித்ததற்கு நன்றி. கழுதைக்கு கற்பூர வாசனை தவிர ம்ற்ற எல்லா வாசனையும் தெரியுமா.

    ReplyDelete

  21. @ யாதவன் நம்பி
    சிந்திக்கத் துவங்கியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ திண்டுக்கல் தனபாலன்
    /எதுவும் ம்ஹிம்/ புரியவில்லையே டிடி.

    ReplyDelete

  23. @ கீதா சாம்பசிவம்
    சில நேரங்களில் இப்படி இரட்டைக் குதிரை சவாரி செய்ய வேண்டி இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  24. @ வே நடன சபாபதி
    ஒருவேளை கழுதைக்கு எல்லா வாசமும் தெரிந்து கற்பூர வாசனை மட்டும் தெரியாதோ.? வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  25. நீங்கள் எழுதியதைப் பார்த்தால் இசை தெரியாதவரைப் போல் இல்லை.
    இரண்டையும் இணைத்து எழுதியது சுவாரசியம்

    ReplyDelete
  26. நீங்கள் எழுதியதைப் பார்த்தால் இசை தெரியாதவரைப் போல் இல்லை.
    இரண்டையும் இணைத்து எழுதியது சுவாரசியம்

    ReplyDelete

  27. @ டி.என்.முரளிதரன்
    “ நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” எனக்கு இசையை பற்றிய ஞானம் ஏதும் கிடையாது. காதுக்கு இனிமையான இசையை ரசிக்க முடியும் .கிரிக்கெட் இசை இரண்டையும் இணைத்து எழுதியதில் சுவாரசியம் கண்டது மகிழ்ச்சி முரளி.

    ReplyDelete
  28. எனக்கு கிரிக்கெட்டும் தெரியாது. சங்கீதமும் தெரியாது. ஆனாலும் தங்கள் பதிவை ரசிக்க எந்தத் தடையும் இருக்கவில்லை. எண்ணத்தின் ரசனை தங்கள் எழுத்தில்.. தங்கள் எழுத்தின் ரசனை பின்னூட்டங்களில்.. வெகு சுவாரசியம்.

    ReplyDelete
  29. இசையை ரசிக்க இசை ஞான்ம் வேண்டும் என்பது எல்லாம் இல்லை, காதுக்கு இனிமையாக இருந்தால் எந்த இசையையும் ரசிக்கலாம்.

    இசை, கிரிகெட் இரண்டையும் ரசித்தவிதம் அருமை.

    ReplyDelete