Thursday, February 14, 2019

காதலர் தின ஸ்பெஷல்



                 காதலர் தின ஸ்பெஷல்                                 
                 -------------------------------------------
 ஃபெப்ருவரி 14 ம் நாள்காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறதுகாதலர்தினத்துக்கு என்ன எழுதுவாயென்று என்மகன் கேட்டான்  காதல் என்ரத்தத்திலேயே ஊறியது அதற்காகதனிப்பதிவாக நான் முன்பேஎழுதி இருந்த எழுத நினைத்த காதல் கடிதம் என்னும்பதிவையே மீள் பதிவாக்குகிறேன் என்றேன் ஓல்ட் இஸ் கோல்ட்  என்றேன் அதுவே இங்கு
என் அன்பிற்குரியவளே,
பெயர் ஒன்றும் கூறி எழுதவில்லை. அதற்கு அவசியம் இல்லை. என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...! எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன் அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே என் மனதில் வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம் சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!
நீ அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை
இரட்டைக் குழலுடன் பூரித்தெழும் அழகுடன்
பாவாடை தாவ்ணியில் பதினாறு வயசுப் பாவை நீ
ஓரடி ஈரடி சீரடி வைத்தென்முன் நாலடி நடந்துவர,
நாலாறு வயது நிரம்பப் பெறாத என் மனசும்
அலைபாய, மெய் விதிர்க்க,வாய் உலரத் தட்டுத்
தடுமாறிய நெஞ்சமுடன்  கண்டதும் கொண்டேன்.காதல்..

காதல் உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?

உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்
ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல் கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல் தடுக்கவும் இயலுமோ.?

என் இனியவளே உன்னைக் கேசாதிபாதம் வருணித்து எழுதிய பாக்களில் ஒன்று இதோ.

வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
இதைப் படித்து நீ “ சீ ...போ” என்று செல்லமாகச் சிணுங்கியதும் என் மனக்கண்ணில் சித்திரமாய்த் தோன்றுதடி  
வாலிபத்தில்  எழுதியவற்றை அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

 எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

யாருனைக் காணினும் நிலம் நோக்கி
என் முன்னே மட்டும் என் கண் நோக்கி
என்னுள் பட்டாம்பூச்சி பறக்கச் செய்யும்
வித்தை அறிந்தவளே .உன் விழி பேசும்
மொழி அறிந்து உனைக் கண்ட நாளே
கணக்கிட்டு விட்டேன் என் கைத்தலம்
பற்றவென்றே பிறந்தவள் நீயென்று.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.

நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால்  ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

இப்படிக்கு என்றும் உன்............
புதிதாய்க் காதலர் தினத்துக்கு எழுது வதைவிட என்றும் பசுமையான எண்ணங்களைப்பகிர்வது நல்லதல்லவா







        

10 comments:

  1. தினத்துக்கு ஏற்ற பொருத்தமான பதிவு. கேமிரா பிலிம் நெகட்டிவ் போல - நல்ல உவமை.

    ரசனையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. கேசாதிபாதம் வருணித்து....ஐயா, மிகவும் ரசனையோடு கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முன்பே வருணித்து எழுதி இருக்கிறேன் மறந்துவிட்டிர்கள் போல

      Delete
  3. மிக அருமை. முன்னரும் படித்திருக்கிறேன். காதலர் தினம் எனத் தற்காலத்தில் சொல்லும் இந்த அன்பைக்காட்டும் தினத்துக்கு உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுத்த அரிய பரிசுக்கு வாழ்த்துகள். இதே போல் என்றும் இருக்க வேண்டும். நீடூழி வாழவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. எனக்கு என்றும் காதலர்தினம்தான்வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

    ReplyDelete
  5. நல்ல பதிவு சார். தினத்திற்கு ஏற்ற பதிவு. உவமையையும் ரசித்தோம் சார்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. எதிர்பார்த்தமாதிரியெ பின்னூட்டம் நன்றி

    ReplyDelete