Friday, May 27, 2022

நான் சந்தித்த உலக தலைவர்கள்

 

நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...

                            நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...
                            ------------------------------------------------


அந்தக் காலத்தில் உலகத் தலைவர்களை ரேடியோ மூலமாகவும் ,பத்திரிகை வாயிலாகவும்தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போதுபோல் தொலைக் காட்சியில் அவர்களைக் காண முடியாது.இந்த நிலையில் தலைவர்களை நேரில் சந்திப்பது என்பது அகஸ்மாத்தாகவும் எதிர்பாராததாகவும் அமைவதே. உலகம் போற்றும் உத்தமர் மஹாத்மா காந்தியை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.என் சம வயதுக்காரர்களுக்கோ இளையவர்களுக்கோஅந்த மாதிரி வாய்ப்பு அமைந்திருப்பது மிகவும் அரிதாகும்.

    
      நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்.எனக்கு எட்டு வயதிருக்கலாம் .1945-1946-ம் வருடம் என்று நினைக்கிறேன். காந்திஜி மதராஸ் வருவதாகவும் அவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றும் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, போகும்போது என்னையுமழைத்துக் கொண்டு போனார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் என்றே தோன்றுகிறது. மஹாத்மாவை சுமார் 20-30-அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.

     மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தா” என்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக் காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை” (விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.

  நான் கண்ட உலகத் தலைவர்களுள் மறைந்த சீனப் பிரதமர் சூ-என் -லாய் 
பிரத்தியேகமாய் நினைவுக்கு வருகிறார்.HAL-ல் பயிற்சியில் இருந்த சமயம்.
1956- 1957-ம் வருடம் என்று நினைவு.

மெயின் ஃபாக்டரியில் பயிற்சி என்பது, அங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஓரிடம் இரண்டு வாரம் என்பதுபோல் இருந்தது. மெஷின் ஷாப், ஷீட்மெடல் போன்ற இடங்களில் நிறைய பிரிவுகளில் பயிற்சி. பயிற்சி என்றால் நம்மை யாரும் வேலை செய்ய விடமாட்டார்கள். தொழிலாளிகள் செய்வதை நாம் அருகிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோ நாம் முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பணிக்கு ஏற்ற செட்டிங் ஏதாவது செய்யும்போது நம்மை ஏதாவது காரணம் சொல்லி அகற்றிவிடுவார்கள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அனுபவத்தில் கற்றதை, பயிற்சி என்ற பெயரில் சின்னப் பையன்கள் நாங்கள் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் அவர்களையே அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயமே அவர்களது செயல்களுக்குக் காரணம். அனுபவமிக்கத் தொழிலாளியிடம் நட்புடன் பழகி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்வது நம் சாமர்த்தியம். கூடியவரை அவர்கள் சொல் பேச்சுக் கேட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் எடுபிடி வேலையெல்லாம் பழகி கொஞ்சம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அங்கிருந்தவர்களில் வேலை அறிந்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள்.

           இந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது சீனப் பிரதமராயிருந்த சூ-என் லாய் இந்தியா வந்திருந்தார். அவர் எச்.ஏ.எல்.-க்கு வருகை தந்தார். அவரை மெஷின் ஷாப்புக்கு அழைத்து வரும்போது, வரும் வழியில் ஆட்டோமேடிக் லேத் மெஷின்களில் எனக்குப் பயிற்சி. அவர் உள்ளே வரும் வழியில் ஒரு புறத்தில் இந்த மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகே சீனியர் ஆப்பரேட்டருடன் நானும் நின்று கொண்டிருந்தேன். வரிசையாகப் பார்வை இட்டுக்கொண்டு வந்தவர் எங்கள் அருகே வந்து ஏதோ கேட்டார். எங்களை சுட்டிக் காட்டிக் கேட்க, பயிற்சி எடுக்கும் பையன் என்று சொல்லி இருக்க வேண்டும். என் அருகில் வந்தவர், செல்லமாக என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திச் சென்றார். உலகத் தலைவர்களில் ஒருவரின் செல்லத்தட்டு கிடைத்தது நினைத்து அன்றெல்லாம் மகிழ்ந்திருந்தேன்.

     
     HAL-ல் பயிற்சி எல்லாம் முடிந்து Aero Engine Division-ல் வேலையிலிருந்தோம். அந்த டிவிஷன் தொடக்கத்திலிருந்தே அங்கு பணியிலிருந்தோம். போர்விமானத்துக்கான ORPHEUS ENGINE தயாரிப்பில் BRISTOL  SIDDELY நிறுவனத்துடன் ஒப்பந்தம். தொழிற்சாலைக்குத் தேவையான மெஷின்கள் வந்து ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சில மெஷின்கள் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தன. அந்த சமயம் (1959 ம் வருடக் கடைசி என்று நினைவு. )இந்தியப் பிரதமர் ,மனிதருள் மாணிக்கம் ,தொழிற்சாலைகளே இந்தியக் குடியரசின் கோவில்கள் என்று நம்பியவர், திரு, ஜவஹர்லால் நேரு, விஜயம் செய்தார். என்னென்ன மெஷின்கள் எதற்காக என்பன போன்ற விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்திறங்கிய மெஷின்கள் ஒருங்கிணைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.ஃப்ரான்ஸிலிருந்து வந்த BERTHIEZ  என்ற வெர்டிகல் டரெட் மெஷினைப் பார்த்து எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருக்கும்போது அவரைப் பொல ஒரு சிறிய BUST உருவம் அலுமினியத்தில் HYDROTEL என்னும் மெஷினில் அவர் முன்னாலேயே பிரதியெடுத்துக் கொடுத்தோம். மிகவும் மகிழ்ந்தார். இதன் நடுவே ஒரு தொழிலாளி, அவரை மாதிரியே ஒரு படம் வரைந்து ஆட்டோகிராஃப் கேட்டான். இதற்குள் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகவும் அதனையும் மீறி அந்தப் படத்தில் கையெழுத்துப் பொட்டுக் கொடுத்தார்.

      மேற்குறிப்பிட்ட சந்திப்புகள்  க்ளோஸ் குவார்ட்டர்ஸ் என்றால், சற்றுத் தொலைவிலிருந்து ராணி எலிசபெத், ப்ரின்ஸ் ஃபிலிப், ரஷ்யத்தலைவர்கள்  புல்கானின், க்ருஷ்சேவ் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.

      1962-ம் வருடம் இந்திய சீன யுத்தம் வந்த போது, ஒரு சமயம் கோபத்தில் சூயென்லாய் தட்டிய என் கன்னத்தை நான் அடித்துக் கொண்டிருக்கிறேன்
                                           ----------------------------------------------------------------------.                             
















12 comments:

  1. சிறப்பு. ஏற்கெனவே படித்த நினைவும் இருக்கிறது.

    ReplyDelete
  2. அபூர்வ வாய்ப்புகள். காந்தியின் வீடு, அவரது சபர்மதி ஆசிரம்ம் சமீபத்தில் பார்த்த நினைவும், இந்திரா வீட்டைப் பார்த்த நினைவும் வருகிறது. அலகாபாத்தில் இந்திய அரசியலை முடிவு செய்த நேரு வீடு உட்பட

    ReplyDelete
    Replies
    1. ...
      -------------------------------
      --------அலஹாபாதில்-ஆநந்தபவன் நாட்டுக்கு நேரு குடும்பத்
      தால்-------------------------------------------------------------------தால் கொடுக்கப்ப்ட்டது------

      Delete
  3. சந்திப்பு சிறப்பு ஐயா...

    அவரை கொன்ற கூட்டம் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில்...

    ReplyDelete
    Replies
    1. சிலரும்ருக்கிறார்கள்

      Delete
  4. ஆஹா அன்று நான் இட்ட கருத்து போகவே இல்லை போல...நின்று கொண்டே இருந்தது போயிருக்கும் என்று நினைத்தேன்,...

    நல்ல சந்திப்பு + கிட்டத்தில் பார்க்கும் வாய்ப்புகள். ஏற்கனவே வாசித்த நினைவும் வருகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் அப்படிநேருவதுண்டு

      Delete
  5. தலைவர்கள் பலரையும் சந்தித்துள்ளீர்கள்.

    நேரு இந்திராகாந்தி இருக்கும் போட்டோ எங்கள் அப்பா கொழுவி வைத்திருந்தார் நேரு இறந்தசெய்தி வருவதற்கு சில மணி முன்பு போட்டோ நிலத்தில் விழுந்து கண்ணாடி உடைந்தது.

    ReplyDelete
    Replies
    1. கண்ண்ணாடி உடைந்தது ஏதாவதுஅறி குறியா

      Delete