வியாழன், 9 ஜூன், 2011

நான் போட்ட நாடகங்கள். ....

நான் போட்ட நாடகங்கள்.
-----------------------------------
      நான் அந்தக் காலத்திலேயே சுமாராக எழுதுபவன் என்று
எண்ணிக்கொண்டிருந்தவன். சிறுகதை, கவிதை, கட்டுரை
என்று எல்லாவற்றிலும்  முயற்சி செய்திருக்கிறேன். நான்
எழுதியது  எல்லாம்  என் ஆத்ம  திருப்திக்கு  மட்டுமே.
எழுதியவற்றை சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால்
நம்மை நாமே விமரிசிக்க முடியும். நாடகம் எழுதி, நடித்து,
அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. 1962-ம்
வருடக் கடைசி என்று நினைக்கிறேன்.மைசூர் இண்டஸ்டிரிஸ்
ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஒரு
நாடகப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.HAL AERO
ENGINES சார்பில் நான் ஒரு நாடகம் எழுதி போட்டியில் பங்கு
பெற அனுமதி பெற்றேன்.நாடகம் ஒன்றரை மணி நேரத்துக்குள்
இருக்க வேண்டும்.பல மொழிகளில் போட்டியில் பங்கு பெற
நாடகங்கள் வந்திருந்தன. என் நாடகம் தமிழில் “ வாழ்ந்தே
தீருவேன்” என்ற தலைப்பில் இருந்தது.

      நாடகம் போட ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா.?நடிக்க
ஏற்ற நண்பர்கள் கிடைக்க வேண்டும்;பெண் கதாபாத்திரத்தில்
நடிக்க, தொழில் முறை நடிகைகளை கொண்டு வர வேண்டும்.
கதை வசனம் ஆளுக்கொரு காப்பி கொடுக்க வேண்டும்.ரிகர்சல்
நடத்த வேண்டும். அதற்கு இடம் தேட வேண்டும். செலவுக்குப்
பணம் வேண்டும்.இவற்றை எல்லாம் சுமாராகப்  ப்ளான்  செய்து
நடிகர் தேர்வில் இறங்கினேன். ஒருவனுக்கு  நடிக்க வருமா
என்று எப்படி கணிப்பது.? வசனங்களை ஏற்ற  இறக்கத்துடன்
சரியான உச்சரிப்பில் பேசினாலேயே பாதி நடிப்பு வந்த மாதிரி.
இதை சோதிக்க நான் ஒரு உத்தி  வைத்திருந்தேன். கலைஞ்ர்
கருணாநிதியின்  “வீரத்தாய்” என்ற ஓரங்க நாடகம் எனக்குத்
தெரியும்.அதனை எழுதி, நடிக்க விருப்பம் உள்ளவர்களிடம்
படித்துக் காட்டச்சொல்லுவேன். நன்றாகப் படித்தவன் கதா
நாயகன் வேஷத்துக்கும், சுமாராகப் படித்தவர்கள் பிற பாத்திர  
வேஷங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரியாக படிக்க 
முடியாதவர்கள்  நிராகரிக்கப்பட்டனர். 
            நானே முதன்முதலில்  எழுதி நடித்து இயக்க இருந்தேன். 
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். 
தொழிற்சாலைகளுக்குள்ளான  போட்டி என்பதால்  முதலாளி, 
மேனேஜர், தொழிற்சங்கத்  தலைவன் , முதலாளி மகன், மகள் 
என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன்  கதை எழுதி இருந்தேன். 
எதிர்பாராத  திருப்பமுடன்  மேடைக்கதை  அமைத்திருந்தேன். 
எனக்கு நான் ஒரு பாலசந்தர் என்ற நினைப்பு. நடிக்க வந்தவர்
மனதில்  சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.தொழில்முறை  
நடிகை  இரண்டு மூன்று ரிகர்சலுக்குத்தான்  வருவார். அவர்
மனதில் சாவித்திரி ,பத்மினி என்ற எண்ணம்.அவர் இல்லாத
போது  டம்மி  கதாநாயகியாக  யாராவது இருக்கவேண்டும். 
எல்லோரும் தொழிற்சாலையில்  பணி புரிபவர்கள்.பணி 
முடிந்து வீட்டிற்கு திரும்பி  ரிகர்சலுக்கு குறித்த நேரத்தில் வர 
பல  தொந்தரவுகள் இருக்கும். எல்லாவற்றையும் மீறி நடிக்க 
வந்தபிறகுதான் வசன தாள்களையே பார்ப்பார்கள். அவற்றை 
மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு முன், சுற்றி இருந்துகொண்டு
நடிக்காமல் வசனங்களை வெறுமே படிக்க வேண்டும். ஒருவர்
முடித்து அடுத்தவர் வசனம் எங்கு துவங்குகிறது என்று புரிந்து
கொள்ள இந்த முறையைப் பயன்படுத்தினேன். எழுதும்போது 
நல்ல தமிழில் எழுதி இருந்தேன். பேசும்போது அப்படியே 
பேசினால் சமூக நாடகத்துக்கு ஒத்துவரவில்லை. பேச்சுத்
தமிழ் என்று கூறினால் மிகவும் கொச்சையாக வந்தது. 

       எப்படியோ ஓரளவு தயாரான நிலையில் கதாநாயகியுடன் 
சேர்ந்த ரிகர்சல். அப்போதுதான் பின்னணி இசை இல்லாமல் 
என்ன நாடகம் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒரு 
ஆர்கெஸ்ட்ரா குழுவுடன்  விவாதித்தோம். அவர்கள்  ஒரு 
வேளை ரிகர்சலுக்கு டிபன் காப்பி  செலவுடன் ரூபாய் 80/-
கேட்டார்கள்.நாடகத்தன்று ரூபாய் 100/- தர வேண்டும்  என்றும் 
கூறினார்கள்.வேறு வழியில்லாமல்  ஒப்புக்கொண்டு  
சிசுவேஷனை அவர்களுக்கு விளக்கினோம். என் வீட்டில்தான் 
எல்லா ரிகர்சலும். இசையுடன் கூடிய ரிகர்சலிலேயே ஒரு 
நாடகம் பார்க்க வரும் கூட்டமிருந்தது. 

       நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போது நான் பட்ட கஷ்டம் 
அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். வசனம் முடிந்தவுடன் 
எந்த ஒரு முகபாவமும் இல்லாமல் கட்டைபோல் நின்று 
விடுவார்கள். கைகால்கள் இயல்பாக இயங்காது. எல்லோரும் 
ஆர்வத்தில் நடிக்க வந்தவர்கள்  நாட்பட  நாட்பட கொஞசம்
கொஞ்சமாக மெருகேற்றி வந்தோம்.

       செலவு கைக்கு மீறிப் போகவே, நாடகம் பார்க்க வரும்படி
அழைப்புக்  கொடுக்கும்போதே, அறிந்தவர்கள் எல்லோரிடமும்
நன்கொடையாக ரூ.1/-, ரூ.2/-, ரூ. 5/- என்று  பெற்றுக்கொண்டோம்.
      ஒரு வழியாக 1963-ம் வருடம் பெப்ரவரி மாதம் 13-ம் நாள் 
என்று நினைக்கிறேன். பெங்களூர் டவுன் ஹாலில் அடி
யேனின் நாடகம் அரங்கேறியது. போட்டியில் பங்கெடுத்தும் 
பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள் 
வந்தன. நான் எழுதியிருந்த ஒரு வசனம் சிறப்பாகப் பேசப் 
பட்டது.அதில் நான்  “ ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின் அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும் ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் 
நான்கு சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது. 
இதுவரை. இப்போது, இது, எங்கள் காலம், ஏழைத்தொழிலாளரின் 
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி 
அடிக்கும் எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி 
வரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் 
கொடுப்பவன் நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE HAS 
TO GIVE FIRST TO TAKE.!" என்று எழுதியிருந்தேன். 

      அதற்குப் பிறகு அலசூரில் முத்தமிழ் மன்ற சார்பாக பெங்களூர்
குப்பி தியேட்டரில்  முரசொலி சொர்ணத்தின்,”விடை கொடு 
தாயே” ,என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதன் பிறகு 
கண்ணன் எழுதிய “முப்பது நாள் “ என்ற நாடகத்தையும் 
அரங்கேற்றினேன். நீளமான வசனங்களை எங்களுக்கு ஏற்ற
படி மாற்றிக்கொண்டோம். விடை கொடு தாயே நாடகம் 
அந்நாள்  கர்னாடக கல்வி அமைச்சர்  திருமதி.கிரேஸ்  டக்கர் 
தலைமையில் நடந்தது.

    நாட்கள் பல சென்றபிறகு, நான் பி.எச்.இ..எல் --ல் பணி
யாற்றிக் கொண்டிருந்தபோது, “வாழ்ந்தே தீருவேன் “
நாடகத்தை மறுமுறை  கம்யூனிடி செண்டரில் 1971-ல்
நாடகப் போட்டியில் நடத்தி  இரண்டாம் பரிசாக ஒரு
ஷீல்ட் வாங்கினேன். குடியிருப்பில் இயங்கி வந்த  கிருஷ்ண
கான  சபாவுக்காக, “ஆராமுது அசடா” என்ற நாடகத்தை  இயக்கி
நடித்துக் கொடுத்தேன். அவர்களுக்காக அதையே ஸ்ரீ ரங்கத்திலும்
நடத்திக் கொடுத்தேன். பிறகு “ மனசாட்சி” என்ற நாடகம் சில
புது உத்திகளுடன் கம்யூனிடி செண்டரில் அரங்கேற்றப் பட்டது.
அந்த நாடகத்தின்  கரு கொண்ட ஒரு சிறுகதையை  என்
வலைப்பூவில் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.

  ஒவ்வொரு நாடகம் போடும்போதும் நடந்த நிகழ்ச்சிகளை
நினைத்து அசை போடுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நல்ல் வேளை நான் சினிமாப் பக்கம் போகவில்லை. போய்
இருந்தால் போட்டி தாங்காமல் பலரும் ஓடிப்போயிருப்பார்கள
===============================================
             (  "உலகமே  நாடக  மேடை  என்றால் 
                        ஒப்பனை அறை  எங்குள்ளது ?" )

 



 

 









 
 



















.








திங்கள், 6 ஜூன், 2011

அவதாரக் கதை...பாகம் ....5.....வாமனனாக...

அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.
-----------------------------------------------------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற, 
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி, 
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு, 
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
           அசுவமேத  யாகம் நடத்தி, யார்
           எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
           என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
           அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
           அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
           வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
           வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
           அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
           குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

            கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
            அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
            துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
            அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
           சொன்ன சொல் தவற மாட்டேன்
           தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
           வைக்க , யான் பெருமை கொள்வேன்
           என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
           பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           =================================
   ( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம் 
        அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது 
      கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து 
       இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும், 
       இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப 
       முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் 
       பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான 
       அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக 
       பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த 
       உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது. 
       இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .          








 

வியாழன், 2 ஜூன், 2011

கவிச்சோலைக் கவிதைப் போட்டி.

கவிச்சோலைக் கவிதைப் போட்டி
-----------------------------------------------
          வலைப் பூ கவிச்சோலையில், நண்பர் எல். கே.
அவர்கள்  ஒரு கவிதைப் போட்டி அறிவித்திருக்கிறார்.
முத்தொள்ளாயிரத்து  பாடல்  ஒன்றை புதுக்கவிதை
வடிவில் எழுத வேண்டும். என் ஆத்ம திருப்திக்காக
எழுதுகிறேன்.
       
                          
                             பாடல்

                            -----------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.

                 என் கவிதை.
                  ----------------

சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================

            இது  சும்மா டமாசுக்கு.  எப்பூடி கீது.?
                                 ----------------------

      சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
      கெலிக்க  லாம்னு  தேரோட வர
      சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
      சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
      சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
      தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
      அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.
 
 

 


                    



    
 


செவ்வாய், 31 மே, 2011

அறியாமை ..இருள்.

அறியாமை  இருள்.

              என்னுடைய விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்ற
பதிவில்,விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும், விளங்கா நிலையில்,
என்றோ, எவனோ, வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின்
தொடக்கப் புள்ளி தேடி,நாம் ஏன் சோர்வுற வேண்டும்,
அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருந்தேன்..
அண்ட  வெளியின்  இருட்டின் வியாபிப்பும், அதில் ஒளி தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு என்றும், அறியாமையும் ,அவலங்களுமாய்
இருண்டிருக்கும் வாழ்வியலில், நம்பிக்கையே ஞாயிறின்  ஒளி
என்றும், அந்த ஞாயிறின் விடியலுக்காகக்  காத்திருக்கிறேன்
என்று ம் எழுதியிருந்தேன்.

           அப்படியே நான் எழுதி விட்டாலும், நம்பிக்கை என்று வரும்
போது, அது அறிவு சார்ந்த்ததாக இருக்க வேண்டும் என்பதில்
குறியாய் இருக்கிறேன்..அணு, அண்டம் அறிவியல் என்று ஒரு
பக்கம் எழுதியதைப் படிக்கும்போதும், ஒரு பக்கம் உருவமே
இல்லாத ஒன்றுக்கு ஆயிரம் உருவங்களும் ,நாமங்களும்
கொடுத்து, “ ஐயனே ,உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்து
இருப்பதும் நான் எப்போ.?”என்று  உள்ளத்தாலும், உதடுகளாலும்,
எழுத்துக்களாலும், ஏங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது,
இரண்டுக்கும்  பாலமாகப் பதிலாக, சாதாரணன் பகுத்தறிவின்படி,
ஒப்புக்கொள்ளும் படியான விளக்கங்கள் கிடைப்பதில்லை.
இல்லையென்றால் கிடைத்தவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு
இருப்பதில்லை. நான் என்னைக் குறித்தே குறைபடுகிறேன்.

          அறியாத ஒன்றைப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம், அதே சமயம் எல்லாம் அறிந்துவிட்டதாகச் சிலர்
நம்பி உண்மையில் அந்த அறிவைத்தேடி, விளக்கில் மாயும்
விட்டில் பூச்சிகள் போல், ஏதும் அறியாமல் புரியாமல் சாதிக்காமல்
செத்து மடிவதைக் காணும்போது மனம் ஆயாசப்படுகிறது

            யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் புகழ்
பாடு, என்று அறியாத ஒருவனுக்குள்ள ஆயிரம் நாமங்களில்,
சிலவற்றைப் பாடி, அவனுக்காக கற்பிக்கப்பட்ட ஆயிரம் கதை
களையும் அப்படியே உண்மை என்று நம்பி, நான் முன்பு கூறியபடி
அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதே சுகம் என்று காலம் கடத்த
வேண்டும்..ஆனால் என் செய்ய.? என் பாழும் மனம் ஒப்புவதில்லை.

           நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.கடவுள்களும்
அவர்களுக்கான உருவங்களும், கதைகளும் ,ஏதோ ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புனைவுகள் இந்தியத் துணை
கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உலவுவதுதான்.ஆதியிலிருந்தே மனிதன், தன்னைக் காத்துக்
கொள்ள, தன்னிலும் மேலான சக்தியிடம், தன்னை ஒப்படைத்து
இனி அவன் பாடு, என்று பொறுப்பை, விட்டுக்கொடுத்துவிட்டான்.
தன்னில் அடங்காத, தன் சக்திக்கும் மேலான, அதே சமயம் தன்
வாழ்வுக்கு இன்றியமையாத, பொருள்களுக்கு உருவகம் கொடுத்து,
அதையே வழிபட்டு நம்பிக்கையை வளர்த்து வருகிறான்.நீர், நிலம்
நெருப்பு, அண்டம் ,காற்று, என்பவற்றைக் கடவுளாக பாவிக்கத்
தொடங்கினான். விஞ்ஞானம் வளர வளர, அவையே மனிதனின்
உடலில் இருப்பவை என்று உணரத்துவங்கி, அதையே கடவுள்
உன்னில் உள்ளான் என்று மெய்ஞ்ஞானம்கூறுவதாக
எண்ணினால், ஏதோ புரிகிறது போல் தெரிகிறது.

        இதையே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள்கூறியது ,நான் படித்துப்
புரிந்து கொண்டபடிஆத்ம விடுதலைக்காக ஆண்டவனை                                            வேண்டும ஒருவன், அவனையே ஆராதிக்கலாம்  என்றும், ஒரு                 கடவுள்  சிலையோ ,ஆண்டவன் உருவப்படமோ உண்மையில்        அவனுடைய பிரதிபலிப்பே என்றும், நிலைககண்ணாடி முன்                         நின்று, அவனையே அர்ச்சித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும்                தேடுப வனும், தேடப்படுபவனும், ஒன்றாகிறான் என்றும்,         வேண்டுபவனும்  வேண்டப்படுபனும் ஐக்கிய
மாக வேண்டும் என்றும்  கூறுவார்.இதையே “அஹம்
ப்ரம்ஹாஸ்மி”என்று கூறுகிறார்கள் போலும்.

             ஆனால் இப்படி வழிபடுவது சாதாரணனுக்கு சாத்தியம்
இல்லையே. அவனுக்கு உருவம் வேண்டும், உருவகம்
வேண்டும், கதை வேண்டும் ,அதில் ஒன்றிக் கலக்க வேண்டும்.
ஆனால் கடைசி வரையில் பெரும்பாலும் உண்மை உணரப்
படாமலேயே போய் விடுகிறது.
        
              நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்ற  கதைகள்
பொய்யா.?கதையை நடந்தவையாகப் பாவித்தால்தான்
நம்பிக்கை வரலாம். கதைகளின் நிகழ்ச்சிகளால் மனிதனின்,
வாழ்வியலுக்குத் தேவையான அனேக விஷயங்கள்
அறிவுறுத்தப் படுகின்றன.ஆனால் உண்மை நிலை என்ன.?
நாம் அந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திடம் மயங்கி, அதனால்
சொல்லப்படும் கருத்துகளை மறந்து விடுகிறோம்.நமது
பதிவர்களின் ஒரு பதிவில், கதைகளின் கருத்தை மறந்து,
கருத்து சொல்பவர்களைப் பற்றிய கருத்துகளையே  உலாவ
விடுகிறார்கள் என்று படித்த நினைவு.
              என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இ ல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுத ற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று

நம்பிக்கையோடு காத்திருக்க  வேண்டுமா.?

            எப்போதும்போல் என் சந்தேகங்கள் சில. 1). விலங்கு
களிலும், பறவைகளிலும் ஏழை பணக்காரன், படித்தவன்
படிக்காதவன், சாதி வேறு பாடுகள் இல்லையே.மனிதனுக்குள்
ஏன்.? 2).மனிதனுக்கு மட்டும்தான் பூர்வ ஜென்ம பலா பலனா.?

            தலைவிதி , பூர்வ ஜென்ம  பலன் இன்ன பிற போன்ற
விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. மறுபடியும்
தோன்றுகிறது.அறியாமை இருளில் இருப்பதே சுகமோ.?
================================================                                                                                                                                                              







    .



 


 





சில குறைபாடுகள்....

சில குறைபாடுகள்
---------------------------
            எழுதுபவனுக்குத் தன் எழுத்தை மற்றவர்கள் படிக்கிறார்கள்,
என்று அறிந்தால் மகிழ்ச்சி. எழுதியவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்
கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. இவன் எழுதுவதை 
யார் யார்  தொடர்கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. 
இவற்றுக்கு வாய்ப்பில்லாமல் கணினி கோளாறினாலோ, சேவை 
குறைபாடுகளாலோ, க்ருத்துரை இட முடியாத, பெறமுடியாத ஒரு 
சூழ்நிலை,பல பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் ஏற்பட்டு
இருந்தது.அதில் என் வலைத்தளத்தில் கருத்துரை பெட்டி திறக்கா
ததால், பின்னூட்டங்கள் பெற முடியாதபடி இருந்தது.அது இப்போது 
சரியாகிவிட்டது. இதற்காக நான் வை. கோபாலகிருஷ்ணனுக்கும், 
திரு. எல். கே. அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.


           என் பதிவுகளை தொடர்ந்து ,படிக்க சில வாசகர்கள் பதிவு செய்து
இருப்பதை அறிகிறேன்.ஆனால் அவர்களை பற்றிய த்கவல்களை 
கணினி காட்டுவதில்லை.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற, கணினி 
துறையில் வித்தகர்கள் மனமுவந்து உதவினால் நன்றியோடிருப்பேன்.

சனி, 28 மே, 2011

இப்பூவுலகே எனக்கன்றோ....

இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------

               பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன். 
               பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
               என்ன  அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல், 
               எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
               நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
               தடுமாறி கீழே விழப் போனவளைக் 
               கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
               புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில் 
               கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில் 
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள். 

              மென்று சுவைக்க மிட்டாய் வாங்க 
              பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
              மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
              பேசிச்செல்ல மனம் மிக  விழைந்தது.
              தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
              காசு கொடுத்துப் போகையிலே, அதனைத் 
              தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்; 
              கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு. 
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.

             தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
             சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
             நிற்கும் நானறிந்த சிறுவனிடம்  அவன் ஏன் 
            ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
            மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
            கேளாது என்பதனை  மறந்து விட்ட நான். 
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள். 



            எ ங்கும்  என்னை நடத்திச் செல்ல நல்ல 

            இரு கால்களும்,
           அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
            இரு கண்களும்,
            என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல 
            இரு காதுகளும்
            இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
            இந்த உலகையே ரசிக்க வைக்க, 
           எல்லாப் புலன்களும் எனக்கிருக்க 
            இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
 


    

           
 




 




      

வியாழன், 26 மே, 2011

அவதாரக் கதை...பாகம் 4----நரசிம்மமாக.....

அவதாரக் கதை ...பாகம் 4..நரசிம்மமாக.
-------------------------------------------------------
(இந்த முறை அவதாரக் கதை சொல்லும் பாணியை மாற்றி
எழுதுகிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு கதை சொல்லும்போது
அவர்கள் அதில் ஒன்றிப் போய் லயிக்க வேண்டும். அதற்கு 
நான் கதை சொல்லும்போது,அவர்களையே கதாபாத்திரங்களாக
நினைத்துக்கொள்ளச் சொல்லி, நடித்துக்காட்டியும், நடிக்க வைத்தும்
கதை சொல்லுவேன். எழுதும்போது நடித்துக்காட்ட முடியாது. ஆகவே
முடிந்தவரை எந்த இடங்களில் நடிக்கலாம்  நடிக்க வைக்கலாம் 
என்று முடிந்தவரை சுட்டிக் காட்டுகிறேன்.அதன் பின் அவரவர் 
சாமர்த்தியம்.)


               அந்தக் காலத்தில் இரணியகசிபு -ன்னு ஒரு ராஜா இருந்தானாம்.
அவன் ரொம்ப புத்திசாலி, பலசாலி. அவருக்கு ஒரு ஆசை. தனக்கு சாவே
வரக்கூடாதுன்னு. அதுக்கு வேண்டி அவர் ரொம்ப சிரத்தையோட தபசு 
செய்தார்.எப்படின்னா, நேரா ஒரு கால்ல நின்னு,ரெண்டு கையையும் 
மேலே தூக்கிகை கூப்பி கண்ணு ரெண்டையும் மூடி, “ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ”-ன்னுஜெபித்துக் கொண்டே இருந்தார்.(நடித்துக்
காட்டலாம், நடிக்க வைக்கலாம்)


                சோறு தண்ணி இல்லாம தபசு செய்யறதப் பார்த்த சிவபெருமான்
திடீர்ன்னு அவர் முன்னே வந்து ,”பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். 
உனக்கு என்ன வரம் வேண்டும்-ன்னு கேட்டார்.( சிவபெருமானாக நடித்துக் 
காட்டலாம், நடிக்க வைக்கலாம். ) 


               “ஆண்டவனே,எனக்கு சாவே வரக்கூடாது-ங்ர வரம் வேண்டும “ன்ன
இரணியகசிபு கேட்டார்
சிவபெருமான் “அது முடியாது பிறப்புன்னு இருந்தா இறப்பும் இருக்கும் 
வேறு வரம் கேள் “என்றார்.இரண்யகசிபு புத்திசாலி அல்லவா.சாகாத வரம்
எப்படியாவது வாங்கிடணும்னு யோசிச்சு ஒரு வரம் கேட்டான். அதன்படி 
அவனுக்கு காலையிலோ, மாலையிலோ, இரவிலோ சாவு வரக்கூடாது.
மனுஷனாலயோ,தேவர்களாலயோ, விலங்குகளாலோ, பறவைகளாலோ
சாவு வரக்கூடாது, கத்தி ,அம்பு,கதை போன்ற எந்த ஆயுதத்தாலயும் சாவு கூடாது, வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியேயோ,சாவு வரக்கூடாது,
தண்ணிலயும், நிலத்துலயும் ,வானத்துலயும் சாவு வரக்கூடாதுன்னு ஒரு
பட்டியலே போட்டு வரம் கேட்டான். 

           “நீ கேட்ட மாதிரி வரம் தந்தேன்” னு சிவபெருமான் சொல்லிட்டு 
மறஞ்சார்.சிவனையே ஏமாற்றி வரம் வாங்கிட்டோம்னு அவனுக்கு ஒரே 
குஷி. எப்படியும் தனக்கு சாவு இல்லைன்னு நெனச்சு அவனுக்கு ஆணவம்
அதிகரிச்சது. அவனுடய சக்திய வெளிப்படுத்த எல்லோரையும் துன்புறுத்த 
தொடங்கினான். அவனுக்கு அவனே கடவுள், எல்லோரும் அவனையே 
தொழணும் ன்னுஅகங்காரம் வந்தது. அதன்பிறகு எல்லோரும் தொழும்
போது “ஓம் இரணியகசிபு நமஹ”என்றேசொல்லணும்; மீறினா கடுந் தண்டனைன்னு அறிவிச்சான். எல்லோரும் அப்படியே செய்யத் தொடங்கினார்கள்.

        இந்த சமயத்துல இரணியகசிபுவின் ராணி லீலாவதி கர்ப்பமாயிருந்தாள்.
“ஓம் நமோநாராயணாய நமஹ, ஓம் நமோ நாராயணாயநமஹ” ன்னு
சொல்லிக் கொண்டே வந்த நாரதர் ராணிகிட்ட திருமாலின் பெருமை 
எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இது இரணிய கசிபுவுக்குத் தெரியாது. 
நாரதர் சொன்னத எல்லாம் கருவிலிருந்த குழந்தை கேட்டு  கிரகித்துக் 
கொண்டது.

         ஒரு நாள் ராணி லீலாவதிக்கும் இரணியகசிபுவுக்கும் ஒரு அழகான 
ஆண் குழந்தை பிறந்தது( இந்த சமயத்தில் கதை கேட்பது ஆண் குழந்தை
யாக இருந்தால், நான் அவனை மாதிரி அழகான, சமத்தான குழந்தை என்று
சொல்லிக் குஷிப்படுத்துவேன்.)குழந்தைக்கு அஞ்சு வயசாகும்போது  குரு
சுக்கிராச்சாரியாரிடம் பாடம் படிக்க அனுப்பினர். பிரகலாதன் னு பேர்வெச்ச 
அந்தக் குழந்தைக்கு மொதல்ல “ ஓம் இரணியகசிபு நமஹ”னுபாடம்      
சொல்லி சுக்கிராச்சாரியார் தொடங்கினார்.ஆனா பிரஹலாதனோ “ஓம் 
நமோ நாராயணாய நமஹ”ன்னுசொன்னான். ( இந்த இடத்தில் குழந்தைகள்
புரிந்து கொள்ள சுக்கிராச்சாரியாரை  ஹெட் மாஸ்டராக்கி, வேறு இரண்டு
ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் சொல்லச்சொல்ல எப்படி பிரஹலாதன் 
மறுபடியும்  மறுபடியும் “ ஓம் நமோ நாராயணாய நமஹ”ன்னுசொல்வதை 
வேடிக்கையாக நடித்துக்காட்டி நடிக்க வைத்து குழந்தகள் அநுபவித்து 
மகிழ்வது கண்டு நாமும் மகிழலாம்)

         வேற வழியில்லாம இரணியகசிபுவிடம் பிரஹலாதன் சொன்ன பேச்ச 
கேக்கிறதில்லைன்னு புகார் பண்ணினார்கள்  ராஜாவும் பிரகலாதன்கிட்ட 
“ஓம் இரணியகசிபு நமஹ” ன்னு சொல்லச்சொன்னார்.பிரஹலாதனோ 
“ஓம் நமோ நாராயணாய நமஹ” என்றே சொன்னான். ராஜாவுக்குக் கோபம் வந்தது. ( ராஜா கொடுக்கும் பல தண்டனைகளை சுவாரசியமாகக் கூறி, 
எப்படி ஒவ்வொரு முறையும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை
தப்பித்து வந்தான் என்று கூறலாம்)
“யாரங்கே, இவன் ஓம் இரணியகசிபு நமஹ என்று சொல்லாவிட்டால் 
சவுக்கால் அடியுங்கள்” (சவுக்கடி கொடுத்தவர்களுக்கே அடி விழுந்தது
என்றும்) “ மலை மேலிருந்து உருட்டி விடுங்கள் “ (உருட்டிய பின்னும் 
எந்த காயமும் இல்லாமல் வந்தான் என்றும்)”கடலின் நடுவே தள்ளுங்கள்”
(நீரில் மூழ்காமல் நடந்து வந்தான் என்றும்)”பட்டத்து யானையின் காலால்
இரட விடுங்கள்” (யானை கடைசி நேரத்தில் அவனுக்கு மாலை இட்டு 
மரியாதை செய்தது என்றும்) தாய் லீலாவதியைக் கட்டாயப் படுத்தி 
அவனுக்கு நஞ்சு கொடுத்தும், ஏதுமாகாமல் பிரஹலாதன்   மறுபடியும்
மறுபடியும்  ஓம் நமோ நாராயணாய நமஹ, என்றே கூறியதையும் 
சுவாரசியமாக நடித்துக் காட்டியும், நடிக்க வைத்தும்  குழந்தைகளை 
கதையில் ஒன்ற வைக்கலாம்.

“டேய், பிரஹலாதா, உனக்கு உதவி செய்யும் அந்த நாராயணன் எங்கே
இருக்கிறான் .?”

“அப்பா அங்கே இங்கே என்றில்லாமல் எங்கேயும் இருப்பார்  நாராயணன்”

“இந்தத் தூணில் இருக்கானா.?”

“இந்தத் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்.”

இரணியகசிபுவுக்குக் கோபம் வந்து தன் காலால் அந்தத் தூணை எட்டி 
உதைத்தான்.”டமால்” ன்னு வெடிசத்தத்தோட அந்தத் தூண் பிளந்து அங்க
பார்த்தாகோரமான, கோபமான சிங்க முகத்தோட மனுஷ உடம்போட 
பயங்கரமான ஒரு உருவம் , ஆக்ரோஷமா வாய் பிளந்து சத்தம் போட்டு 
இரணியகசிபுவை  வாரித் தூக்கி வாசப்படில , மடில வெச்சு, கை நகத்தால் 
வயித்தக் கீறி வந்த ரத்தத்த குடிச்சு, அப்புறம் என்னாச்சு.? இரணியகசிபு 
செத்துப்போனான்..

       அவனுக்கு கெடச்ச வரமும் பொய்யாகலை.  வீட்டிலும் வெளியிலும் 
இல்லாம வாசப்படிலும், தண்ணிலயும் இல்லை வானத்திலும் இல்லை;
நரசிம்மத்தோட மடிலயும்,தேவர்களோ, மனுஷாளோ, மிருகமோ, பறவையோ இல்லாம, சிங்கமுகங்கொண்ட மனுஷ உடம்போட உள்ளதாலும், 
ஆயுதங்களில்லாம கை நகங்களாலயும், பகலோ இரவோ இல்லாத 
சந்தியா காலத்தில் இரணியகசிபு  மாண்டான். 

        பின்ன என்ன? நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால் ,பிரஹலாதனுக்கு
ஆசிர்வாதம் செய்து வைகுண்டம் போனார்.
 =================================================


      (இந்தக் கதையை பலமுறை சொல்லக் கேட்டு மகிழ்வார்கள் எங்கள்
வீட்டுக் குழந்தைகள். ஒரு முறை உறவுக்கார சிறுவன் லீவு நாட்களில் 
நாக்பூர் சென்றிருக்கிறான். அங்கிருந்த அவனிலும் ஆறேழு வயது 
மூத்த சிறுவனிடம் இந்தக் கதையை சொல்லி இருக்கிறான். அந்த 
சிறுவனுக்கு இரணிய கசிபுவின் பெயரை இரண்ய காஷ்யப் என்று 
சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  என் தாத்தா இரணியகசிபு 
என்றுதான்  சொல்லுவார் அதுதான் சரி என்று சண்டைக்கே போய் 
விட்டானாம்.! இன்னுமொரு குறிப்பு. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்
போது எப்போதும் ஒரே மாதிரியாய்த்தான் சொல்ல வேண்டும்.எந்த
சந்தேகமும் வராமல் இருக்க நான் டேப் எடுத்து சொன்னமாதிரியே 
சப்தங்களும் ஏற்ற  இறக்கங்களும்  இருக்கும்.)