Saturday, February 12, 2011

எழுதுவது எழுதுவதின் நிமித்தம்; படிப்பது படிப்பதின் நிமித்தம்.

எழுதுவது எழுதுவதின் நிமித்தம்; படிப்பது படிப்பதின் நிமித்தம்.
-------------------------------------------------------------------------------
          எதற்காக எழுதுகிறோம் என்ற ஒரு கேள்வி கேட்டிருந்தார் பூவனம் ஜீவி  அவர்கள் ஒரு பதிவிலே. எழுதுகோல் குறியீடு என்றும் சிந்தனைதான் மூலதனம் என்றும் கூறி, அவன் எழுத்தே அவனைப் பிரதிபலிப்பதாகவும் எழுதி இருந்தார். எண்ணத்தைக்  கடத்தத்தான்  எல்லாமே  என்றெல்லாம் எழுதியிருந்தார். யாராலும் மறுதளிக்கமுடியாது. எழுதுபவரின் எழுத்தை மேம்போக்காக மேய்ந்து விட்டு,அவருடைய உணர்வுகளைப் புரிந்து  கொள்ளாமல் போனால் எங்கோ தவறு நேருகிறது என்று  தோன்றுகிறது. படிப்பவரிடமா .. எழுதுபவரிடமா ....?

          எனக்குஒருநாளில் கணினி முன் செலவிட நேரம் போதவில்லை.நான் எழுதும்போது என் வலையின் முகப்பில் கூறியபடி, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால்  உயிரூட்டி  எழுதினால்  அது உண்மையில் ஜொலிக்கும் என்று நம்புகிறவன். மற்றவர்களின்  எழுத்துக்களைப்  படிக்கும்போது, இந்த என் எண்ணம் மேலும்  வலு  அடைகிறது. ஒவ்வொருவருடைய  எழுத்தையும் அவருடைய எண்ணங்களே  கடத்துகின்றன. இதனை நிரூபிக்க வேறெங்கும்  போகத்தேவை  இல்லை. வலையில்  எழுதும் நண்பர்களுடைய  எழுத்துகளே  அதற்கு  சாட்சி. எரிதழல்  வாசனின்  எழுத்துகள் கனன்று  கொதிக்கும் அவருடைய உள்ளத்தின்  வெளிப்பாடே. நெஞ்சு பொறுக்காமல்  எழுதிக் குவிக்கிறார். எல்லோருக்கும்  நடைமுறை  நிகழ்வுகள்  பாதிப்பு  கொடுத்தாலும் கொந்தளிப்பை அவர் கொட்டுவதில் அவர் காட்டும் வேகம், அவர்களின் வலையின்   முகப்பிலேயே  தெரியும். ஆக்க, அளிக்க, அழிக்க என்றே முழங்குகிறார்  வாசன். ஆனால்  சுந்தர்ஜி  அவர்களோ  முண்டாசுக்  கவியின் முழக்கத்தையே  முகப்பாகக்  கொண்டு  வேகம் கூடுகையில் கைகள்  அள்ளிய நீரால் சற்றே  சமனப் படுத்துகிறார் .ஒவ்வொரு பதிவையும்  புதுப்பொலிவோடு  வெளியிடுகிறார்.
இவர்  எழுத்துக்கு இருக்கும்  மவுசு  இவருக்கு வரும்  பின்னூட்டங்கள்  மூலம்  தெரியலாம். அவருடைய ஒவ்வொரு எழுத்திலும்  அவரைக்  காணலாம்.

           கதை கட்டுரை கவிதை என்ற பிரிவுகளில் எழுதுகிறார்கள். சாதாரணமாக   கதை படிப்பதில் வலையுலகில் ஆர்வம் குறைவு என்றே தோன்றுகிறது. மேலும் எழுதுபவனின் உணர்வுகளை கதாபாத்திரங்கள்  மூலம் வெளிப்படுத்த சற்றே அவகாசம் தேவைப்படும். அதனால் கதைகளின்  வடிவம்  நீண்டிருக்கும்.  இன்றைய  வேக  கலாச்சாரத்துக்கு கதை எழுதுபவர்கள்  ஈடு  கொடுக்க வேண்டும்  என்றால், தனித்திறமை  வேண்டும். என் பதிவுகளில்  நான்கைந்து  கதைகள்  எழுதியுள்ளேன். என் எழுத்துக்களில்  சிறந்ததாக  நான் கருதும் " வாழ்வின்  விளிம்பில் " என்ற சிறுகதை அநேகமாக  அதிகமானவர்களால்  படிக்கப்  படாமலேயே  போய்விட்டதாகத் தோன்றுகிறது. பெயர் பெற்ற எழுத்தாளர்களின்  கதைகளை  அனுபவித்து  விமரிசிக்கும்  ஜீவி  போன்றோர்  என் கதையை  விமரிசிக்க மாட்டார்களா  என்ற ஏக்கம் எனக்குண்டு.

          படிப்பவர்களை வசீகரிக்க கவிதைகள் பலன் தரலாம். ஆனால் கவிதைகள் மொக்கையாக இருக்கும் பட்சத்தில் சீந்துவாரற்றுப் போய்விடும். நரம்புகளின்   முருக்கேற்றம் நடத்துகிற போராட்டம் வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின்   அரங்கேற்றமாக படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் திறன் கொண்ட சிவகுமாரன்  போன்றோர் கவிதை நடையில் அட்டகாசமாக வெளிப்படுகின்றனர்.  தமிழ் அவர்களது எழுத்துக்களில் நடனமாடுகிறது. நானெல்லாம் எழுத முற்படும்போது  வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. ஆனால் சிவகுமாரனுக்கோ வார்த்தைகள் "என்னை எடுத்த்தாள் என்னை எடுத்த்தாள் " என்று ஏங்கும்  போலுள்ளது.  மரபுக்  கவிதையா புதுக் கவிதையா எது வேண்டுமானாலும் " இந்தா பிடியுங்கள் " என்று படைப்பதில்  சிறந்திருக்கிறார்.  ஒருமுறை  என்  பின்னூட்டத்துக்கு  மறு மொழியாக, " என்னிடம்  இருப்பது  தமிழ், AK 47, அல்ல" என்று மிரட்டி இருக்கிறார். அவர் எழுத்து  எனக்கு  மிகவும்  பிடிக்கும்.

          கவிதைகளில்  அசத்துபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் கலாநேசனும்  ஒருவர். அவருடைய எழுத்துக்களுக்கு  உத்தரவாதம் கொடுக்கும் முகமாக, அமைந்திருக்கிறது அவருடைய வலையின் முகப்பு வரிகள். கட்டையிலே  போகும்போது சோதித்தாலும் அவர் கண்களில் கவிதை ஜோதியாகக் கனலும்  என்கிறார். வேறொருவர் தமிழைக் கரைத்துக் குழைத்து அட்டகாசமாக  கையாளுகிறார்.  ஆனால் ஒரு குறை. அவர் எழுதுவது  பல நேரங்களில்  ஒன்றுமே  புரிவதில்லை. பாவம் என்னைப் போன்ற படிப்பவர்கள்..!

          சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிது நேரம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகளே நாமும் நம்   வாழ்வின்  ஒவ்வொரு  கணமும் என்று சாசுவதமற்ற  வாழ்வை தெளிவாக்கி  ,நம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க  வைக்கும் பதிவுகளை  படைக்கும் ஷக்திபிரபாவும், கிட்டவேதோன்றும்  என்றும்  எட்டவே  முடியாத  தொடுவானம் தொட்டு விடுவோம் என்ற நம்பிக்கை நட்ச்சத்திரமாக திரு. காளிதாஸ்,  கல்விக்காகவே சிறப்பு  வலை அமைத்து  அதற்கேற்ப  பதிவுகள்  இடும்  சரவணன், கடிக்கும் எறும்பையும் காதலிப்பேன் , அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன் என்று  அன்பின்  அடையாளமாய்  பதிவிடும் நாகசுப்பிரமணியம். தன் எழுத்தையே பொது சொத்தாக்கி மன அலைகளில் மனம்  தெளிந்து  பதிவிடும் டாக்டர்  ஐயா  போன்றவர்கள்  எழுத்தை  உடனே  படித்து  விடுவேன்.

          பேராசிரியர் ஹரணி அவர்களின்  எழுத்துக்கள் எனக்கு டானிக் போல. எப்போதாவது  எழுதுவதில் சோர்வு  தோன்றுவது  போல்  தோன்றினால், அவருடைய   பின்னூட்டங்களை  ஒரு முறை  படித்துப் பார்ப்பேன். " பூஸ்ட்  இஸ் த சீக்ரெட்  ஆப  மை எனெர்ஜி " என்பது போல் உணர்வேன்.

            திடீர் திடீர் என்று பெரிய பெரிய விஷயங்களை மிகச் சாதாரணமாகக்  கூறி  என்னை வியக்க வைப்பவர் இளைய தலைமுறை  மாதங்கி. என்னுடைய  சந்தேகங்கள்  என்ற பதிவுக்கு அவருடைய பின்னூட்டத்தின்  கடைசி வரி " நச்"  மிகச் சாதாரண விஷயங்களுக்கு அதிகம் பில்ட்  அப்  கொடுத்தும்  அசத்துகிறார். நம் எல்லா  செயல்களுக்கும்  நாமே பொறுப்பு  என்பது என் கோட்பாடு. கிட்டத்தட்ட  அதே நிலையில்  ரமணியின்   தீதும் நன்றும் பிறர் தர  வாரா, இருப்பது மகிழ்ச்சி  தருகிறது.

               வெட்டிப்பேச்சு  என்று வலையின்  பெயராக இருந்தாலும் எழுதுவது ஏதும்  வெட்டியாக  இல்லை. அவருக்கே உரிய சரளமான  நடையில் அமெரிக்காவை   அறிமுகப் படுத்துகிறார் சித்ரா. அதுவும் இல்லாமல்  நிறைய வலைகளைப்  படித்து  விஷயங்களை உள்வாங்கி கொள்ளவும்  செய்கிறார். அவருடைய சுறுசுறுப்பு  என்னை அசத்துகிறது. வலையுலகில் சற்றே அதிகமாக அறியப்படும் வலை அதீதக் கனவுகள்.  அது கண்டு சில நாட்களாகி விட்டன.

            இதையெல்லாம்  எழுதினாலும் ஒன்று மட்டும் கூறாமல்  விட்டால் அது என்னை நானே  ஏமாற்றிக்கொள்வது  போலாகும். எழுதுபவன் விமரிசனங்களுக்கு  உட்பட்டவன். பெரும்பாலான  எழுத்தாளர்கள்  விரும்புவது, புகழுரையே. தன் கருத்துகளும் எழுத்துகளும் ஏற்கப்பட  வேண்டும் என்றே  எழுத்தாளன் விரும்புகிறான். மிகவும் பவ்வியமாக  வேறுபட்டாலும் தொட்டாச் சிணுங்கி  போல் சுருங்கி  விடக்கூடாது. சிலரது  பின்னூட்டங்கள் எழுதுபவரை  புண்படுத்தும்  நோக்கம்  இருக்குமோ என்று எண்ணும் வகையில் , சில பதிவுகளின்  நகல்களை  இணைக்கிறார்கள். முற்றிலும்  மாறுபட்ட  கருத்துகள்   இருநதால்  பேசாமல்  தாண்டிப்  போவதே மேல்.

           எனக்கு என் வலையுலகத்  தொடர்பினை  விரிவு  படுத்திக் கொள்வதில் உள்ள சிக்கலே நேரமின்மையும் என் நிதானமும்தான். எழுத  நினைப்பதை  முதலில்  வெற்றுத்  தாளில்  எழுதி, பின் கணினியில்  தட்ட வேண்டும். தட்டுத் தடுமாறி  ஒவ்வொரு  எழுத்தாக தட்டி  முடிக்கவே பிரமிப்பாக  இருக்கிறது. மற்றவர்  எழுத்துக்களை  படிப்பதற்கும்  கருத்துகளை  எழுதுவதற்கும்  அதிக நேரம்  தேவைப்  படுகிறது. இந்த நிலையில்  சிலரது  சுறுசுறுப்பும்  வேகமும், என்னை அவர்களுடன்  போட்டி போடத்  தூண்டுகிறது. வெற்றி கிட்டாவிட்டாலும், I ALSO RUN....
--------------------------------------------------------------------------------.





 



10 comments:

  1. என் கவிதைகளை ரசித்து உங்கள் பதிவிலும் அதைப் பற்றி சிலாகித்து எழுதும் தங்களை நன்றியுடன் வணங்குகிறேன் அய்யா.

    ReplyDelete
  2. //பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை அனுபவித்து விமரிசிக்கும் ஜீவி போன்றோர் என் கதையை விமரிசிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்குண்டு.//

    செய்கிறேன், ஐயா! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

    //வெற்றி கிட்டாவிட்டாலும், I ALSO RUN....//

    கூட ஓடுபவர்களையும் கணித்து அதற்கேற்பவான அத்தனை தயாரிப்பு வேலைகளிலும் தயார் நிலையில் இருப்பதிலிருப்பதிலேயே உங்கள் திறமை சுடர்விடுகிறது. இந்த வயதில் நீங்கள் காட்டும் உற்சாகம் அத்தனை பேருக்கும் தொற்றிக் கொள்கிறது என்பதே உண்மை!

    ReplyDelete
  3. என்னையும் பற்றி நீங்கள் எழுதியிருந்தது கூச்சமாக இருந்தது பாலு சார்.

    மூன்று நான்கு தடவை வந்து திரும்பிச் சென்றுவிட்டேன்.

    நீங்கள் எழுதியவற்றைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறேன்.

    அன்புக்கும் ரசனைக்கும் நன்றி பாலு சார்.

    ReplyDelete
  4. 'பெரிய‌ம‌னுஷன், பெரிய‌ ம‌னுஷந்தாய்யா' ப‌லமுறை இந்த‌ வார்த்தைக‌ளை கேட்டிருப்போம், ஏன் நாமே கூட‌ சிலமுறை சொல்லி இருக்க‌லாம். ஆனால் அந்த‌ வார்த்தையின் ஆழமும்,ப‌ர‌ப்பும், தாக்க‌மும், உங்க‌ளின் இந்த‌ க‌ட்டுரை ப‌திவை ப‌டித்த‌பின்பு தான் முழுமையாய் புரிகிறது. உங்க‌ளின் அவ‌தானிப்பின் விசால‌ம் 'ஆக்க‌, அளிக்க‌, அழிக்க‌வும், என இந்த‌ விலாச‌மில்லாத‌வ‌ன் த‌ள‌த்தின் அடித்த‌ள‌த்தையும் அளந்திருக்கிற‌து. வண‌ங்குகிறேன் ஐயா..'பெரிய‌ம‌னுஷன், பெரிய‌ ம‌னுஷந்தாய்யா'! (சுந்தர்ஜி, சிவ‌குமார‌ன், மாத‌ங்கி, சித்ரா,கலாநேசன், பேராசிரியர் ஹரணி, வெட்டிப்பேச்சு ஆகியோர் ப‌ற்றிய உங்க‌ள் க‌ணிப்புக் குறிப்புக‌ள் அவர்க‌ள‌து நாளைய‌ வெளியீடுக‌ளின் Pre face-ல் போடும‌ள‌வு அருமை)

    ReplyDelete
  5. First of all it requires a magnanimous heart to appreciate fellow bloggers..I feel greatly elated and increasingly bonded towards you.you analyse people with clinical precision,penning out the inner throngs,inexplicable thoughts dwelling deep within their minds..you are really galloping..Not running..we would like to catch you if we can..you make us think..thats what counts and matters..instead of being static..you inspire and propel us to be very mobile..thanks again..hats off..great regards

    ReplyDelete
  6. மனசில் பட்டதை மறைக்காமல் எழுதியதைப் பாராட்டும் சிவகுமாரன்,ஜீவி, சுந்தர்ஜி,வாசன், காளிதாஸ் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  7. i also run- தன்னடக்கம் நிறைந்த வார்த்தைகள்.. என்ன சொல்வது??

    i salute the way you inspire and appreciate others...

    ReplyDelete
  8. thanks a lot for u to share a few words about this small boy!
    And as osho said, "only words are mine, meanings are yours".
    These words will fit to readers also.

    ReplyDelete
  9. மிக்க மகிழ்ச்சி ஐயா. தமிழில் மீண்டும் ஒரு வலம் வருவோம்.

    ReplyDelete
  10. /வெற்றி கிட்டாவிட்டாலும், I ALSO RUN..../
    That's the spirit! Keep going!

    ReplyDelete