Wednesday, May 11, 2011

அனுபவங்கள் ---அரக்கோண நாட்கள்

அனுபவங்கள் --அரக்கோண நாட்கள்.  
----------------------------------------------------


             (நினைவலைகள் ....அனுபவங்கள்    என்ற தலைப்பில் நான் 
                    எழுதி வரும் என் சுய சரிதையிலிருந்து சில பக்கங்கள்.)

                    (சிறுகதை போல் படிக்கலாம் என்பதால் பதிவாக இடுகிறேன்.
                             புனைவேதும் இல்லை. )



   அரக்கோணத்துக்கு நாங்கள் வந்தபோது, எனக்கு வயது ஆறாக இருக்க வேண்டும்       . அரக்கோணத்தில் நாங்கள் நான்கு வருடங்கள் இருந்தோம். மொத்தமாக மூன்று வீடுகளில் இருந்திருக்கிறோம். தருமராஜா கோவில் அருகே ஒரு வீடு. எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு டூரிங் கொட்டகை இருந்தது. வீட்டில் இருந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாடல்களையும் கேட்கலாம். எங்கள் வீட்டருகிலேயே டவுன் ஹால் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீடும் இருந்ததாக நினைவு. இரவு நேரங்களில் அவர் வீட்டிலிருந்து அவர் குடித்து விட்டு வந்து போடும் சப்தங்கள் கேட்கும். எங்கள் தந்தையிடம் அவருக்கு மிகவும் மரியாதை கலந்த பயம் உண்டு.  .

       ட்வுன் ஹால் பள்ளியிலேதான் நான் முதன் முதலில் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கவேண்டும். எனக்கு முதல் இரண்டு வகுப்புகள் படிக்க பள்ளிக்கு சென்றதே நினைவில்லை. ஆறாம் வகுப்பில் படிக்கும்போது  எனக்கும் ராஜிக்கும் டைஃபாய்ட் வந்து  சென்னை ராயப்பேட்டா  ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். ஏற்கெனவே என் தாயாருக்கு டைஃபாய்ட் வந்து குணமாகிற நிலையில் எங்களுக்கும்  வந்ததால், நாங்கள் அங்கேயே இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் வர வாய்ப்பு இருந்ததால், அப்படி வந்தால் அது மிகவும் கவலைக்கிடம் தரும் என்பதால், எங்களை சென்னையில்  சேர்த்தார்கள். குணமாகி வந்த நிலையில், எங்கள் தந்தைக்கு அலுவலகத்தில் , பூனாவுக்கு  மாற்றினார்கள் .எங்கள் படிப்பு பாதிக்கப்பட்டு, நாங்கள் பாலக்காட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டோம். இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளின்  என் பிள்ளைப்பிராய  நினைவுகள் எல்லாம்  நினைவிலாடுகின்றன.

       நான் ஏற்கெனவே சொன்னபடி, வீட்டின் அருகே இருந்த டூரிங் கொட்டகையின் பின் புறம் அமர்ந்து, நிழலாகப் படங்களைப் பார்ப்போம். நன்றாகக் கேட்போம். அந்த கொட்டகையைச் சுற்றி காவலர்கள் நடந்து கொண்டிருப்பார்கள். யாரும் அத்து மீறி, டிக்கட் இல்லாமல், நுழையக்கூடாது என்பதற்காக. ஒரு நாள் என் தம்பி சோமா காவலாட்களுக்கு “டிமிக்கி”  கொடுத்து, உள்ளே நுழைந்து விட்டான். இரவு வீட்டில் அவனைத் தேட, அவன் டூரிங் கொட்டகைக்குள் நுழைந்திருக்கலாம் என்று தோன்றியது. படம் முடியாமல் வெளியே வர முடியாது. அவன் அங்குதான் இருக்கிறான் என்று நிச்சயமுமில்லை. அப்போது ஆச்சு அண்ணா உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினான். அவனும் கொட்டகைக்குள் புகுந்து படம் பார்க்க முயற்சி செய்வதாகக் கூறி அவனை உள்ளே அநுமதிக்க மறுத்துவிட்டார்கள் அப்போது அவனும் சிறிய பையன் தானே. ஆச்சு அண்ணா தன் தம்பியைத் தேடித்தான் போவதாகவும்  படம் பார்க்க அல்ல என்றும் வாதாடினார். அவர்கள் அப்போதும் விடவில்லை. அப்போது ஆச்சு அண்ணா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்து, பணயமாக வைத்துக் கொள்ளுமாறு  கூறி, உள்ளே சென்று  சோமாவுடன்  திரும்பி வந்து தன் சட்டையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அது அப்போது எனக்கு பெரிய  வீரச்செயலாகப்பட்டது. .       

       அருகே இருக்கும் தர்மராஜா கோயிலில் ஒவ்வொரு வருஷமும் திருவிழா நடக்கும். பத்து நாட்கள் மஹாபாரதக்கதை தெருக்கூத்து முறையில் நடத்தப்படும். கடைசி நாளன்று துரியோதனனை பீமன் கொல்வது நடத்திக்காட்டப்படும்.. துரியோதனனின் உருவம் மண்ணால் சிலைபோல் தரையில் வடிவமைக் கப்பட்டிருக்கும். அதன் தொடையினுள்ளே ஒரு மண் குடத்தில், சென்னீர் வைத்து மூடப்பட்டிருக்கும்.. பீமன் வேடமணிந்தவன், வசனம் பேசிப், பாடிக்கொண்டே வந்து iகிருஷ்ணனின் சைகைக்குப் பிறகு, தன்னுடைய கதையால் துரியோதனனின் தொடையில் அடிக்க, ரத்தம் பீறிடுவது  போலவும், திரௌபதி அதனை எடுத்துத் தன் கூந்தலில் தடவி, தன் தலை முடியைக் கட்டுவது  காணும்போது, பிரமிப்பாக இருக்கும்.. நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்துகளை கண்டு களித்த அநுபவம், நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.

       அதன் பிற்கு தீ மிதி நடைபெறும். நிறைய கரி விறகுகள் முதலியவற்றால் சுமார் நாற்பது, ஐம்பது அடி நீளமும், இருபது முப்பது அடி அகலமுமாக உள்ள பெரிய நெருப்புப் படுக்கை உருவாக்கப்படும். அதைச் சுற்றி சவுக்குமரக் கட்டைகளைக் கொண்டு வேலி அமைக்கப்படும். தீ மிதி நேரத்தில் எல்லோரும் சுற்றியிருந்து  பார்ப்பதற்காகவும் விபத்து நேராமல் இருக்கவும் இந்த ஏற்பாடு. ஒரு சிறிய பையனாக இதனைக் காணும் ஆர்வத்தில், அந்த சவுக்கு வேலிக்கு  அருகிலேயே இடம் பிடித்து  காத்திருப்போம். ஒரு முறை கூட்டம் நெருக்கியடித்து, முன் தள்ளி, சவுக்குக் கட்டையின் ஒரு கூரான பகுதி என் தொடையின் பின் புறத்தில் நன்றாகக் குத்தி விட காயம் அதிகமாகி ரத்தம் பீரிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் , அடியும் கிடைக்கலாம். ஆழமான காயத்துக்குள் தெருவில் இருந்த சில காகிதங்களைக் கிழித்து, எச்சிலால் ஈரப்படுத்தி, அதற்குள் அமுக்கி விட்டேன். வலி அதிகமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இரண்டு நாள் கழித்து விட்டேன். மூன்றாம் நாள் என்னைக் குளிப்பாட்ட வந்த என் தாய்க்குத் தெரிந்து திட்டு வாங்கியது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தக் காயத்தின் வடுதான், என் பள்ளி இறுதிச் சான்றிதழில் என்னுடைய அடையாளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.               ..   
             இப்போதைய என் சம வயதுக்காரர்களில் மஹாத்மா காந்தியடிகளை நேரில்  பார்த்தவர்கள் நான் அறிந்த வரையில் சொற்பமே. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. மெட்ராசுக்கு மஹாத்மா காந்தி வருகை தருவது தெரிந்ததும் அப்பாவுக்கு அவரைப் பார்க்க ஆவல். அதற்காகவே அரக்கோணத்திலிருந்து மெட்ராஸ் சென்றார். அப்போது அவர் என்னையும் கூட்டிக் கொண்டு செல்ல வாழ்க்கையின் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மஹாத்மாவை சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடம் கூட்டத்தில் இருந்த யாரோ என்னவோ கேட்க, “சும்மா உக்காரப்பாஎன்று காந்திஜி தமிழில் கூறியது நன்றாக நினைவில் உள்ளது. இப்போதும் அந்த நிகழ்ச்சியை விபு, டாலியிடம் கூறிப் பெருமையடைவதுண்டு.

      மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது.நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தாஎன்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது தாசில்தார் தெருவில் இருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளி இருந்த வீடு ஒரு சினிமா கொட்டகைக் காரருடையது. அவர் வீட்டில் இருந்த ரேடியோவிலிருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இறந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப்படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ்நிலை நிலவியது. அப்பா அழுததும்,வீட்டில் அம்மாவின் சித்தி “மேமை”,(வீட்டில் உதவியாக இருந்தவர்) மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் பெருமையும் எப்படி மிகச்சாதாரணமான மக்களையும் வெகுவாக பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் வாழ்க்கையின் பாதிப்பு அந்தக் காலத்தில் இல்லாதவர்கள் இருந்திருப்பது  மிகவும் குறைவாக இருக்கும்.

      அடுத்த வீட்டு டூரிங் டாக்கீஸ்காரர் ஒரு முறை எங்களைப் படம் பார்க்கக் கூப்பிட்டு (சிறுவர்களை) அனுப்பினார். எங்களுக்கு சேரில்  இருக்க அநுமதி இருந்தாலும் நாங்கள் தரையில் அமர்ந்து பார்த்ததாகத்தான் நினைவு. அப்போதே எது நமக்கு நிலையாகக் கிடைக்குமோ அதுவே போதும் என்ற எண்ணம் வந்திருக்குமோ என்னவோ..!அவர் வீட்டுக்கு காந்தி குல்லாய் அணிந்தவர்கள் நிறைய பேர் வருவார்கள் அவர்களில் பிற்பாடு பிரபலமாக அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒருவர், என்று என் மனதில் எங்கோ தோன்றுகிறது.

     அரக்கோணத்தில் இருந்தபோது பள்ளிக்குப் புத்தகம் இல்லாமல் போய் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டதும், அங்குள்ள ஆசிரிய ஆசிரியர்கள் “துரை வீட்டுப் பிள்ளைகளே “ இப்படிச் செய்யலாமா, என்று குறை கூறியதும் நினைவை விட்டு நீங்கவில்லை. அப்பா அலுவலகத்தில் படிப்படியாக முன்னேறி லோயர் டிவிஷன் கிளார்க், அப்பர் டிவிஷன் கிளார்க், ஹெட் கிளார்க், சப் டிவிஷனல் ஆஃபீசர் என்று பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்த காலத்தில் இருந்த நிலையில் அவருடைய பதவிகள் அவரை “ துரைகளுக்கு “ சமமாக மதிக்க வைத்தது. அப்படி இருந்தவர், சப் டிவிஷன் ஆஃபீசரிலிருந்து, லோயர் டிவிஷன் கிளார்க்காக பதவி இறக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டது அவரை மிகவும் பாதித்து விட்டது. 

  அம்மாவின் ஒரு ஒன்ருவிட்ட மாமன் சேது என்று பெயர்.அப்பாவின் 
சிபாரிசால் அப்பாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்.அவர் மேல
ஏதோ பழி ஏற்படுத்தப்பட்டு அவருக்கு உதவியாக மனு எழுதுவதிலும் ,மேல் 
முறையீடு செய்வதிலும் அப்பா உதவி இருக்கிறார்.அது அப்பாவின் மேல்
அதிகாரிக்கு பாதிப்பாக முடியலாம் என்ற நிலையில் ,அவர் சேதுவின் மேல்
இருந்த பழியில் அப்பாவுக்கும் பங்குண்டு என்று நடவடிக்கை எடுத்ததால் 
வேலையில் பதவி இறக்கம் அடைந்தார். தகாத நடவடிக்கைகளில் அவர் 
சம்பாதிக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அப்படி 
இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையின் நிலைமை அவ்வளவு சரிந்திருக்கத் 
தேவையில்லை. ஒரு முறை நான் பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது 
அவர் மேல் எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார். எனக்கு நன்றாக 
விவரம் தெரிந்து நிலைமையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் முன் 
அவர் அவர் போய்ச்சேர்ந்து விட்டார். அவர் மீது பழி இல்லை என்றும் 
குற்றமற்றவர் என்றும் வாதாடி நிரூபிக்க போதிய பணமில்லாமையேஅவர்
குற்றமற்றவர் என்று எங்களுக்குப் புரிய வைத்தது. இருந்தாலும் ஆறாத 
மனப்புண்ணும் வீண் பழியும் சேர்ந்து அவருடைய வாழ்வுக்கே ஊறு 
விளைந்தது அரக்கோண வாழ்க்கையில்தான். 

    அரக்கோணத்தில் இருந்தபோது,அப்பாவின் தம்பி ராமச்சந்திரன் வேலை 
தேடி அங்கு வந்தார். அவருக்குக் கண் பார்வை குறைவாக இருந்ததால் 
பெரிய தடிமனான கண்ணாடி அணிந்திருப்பார். லிப்டன் டீ கம்பனியில் டீ 
போட்டுக் காண்பிக்கும் டெமான்ஸ்ட்ரேட்டர் ஆக தெருத்தெருவாய்ப்  போய் 
வீடுகளில் டீ போடும் முறையை விளக்கிக் காண்பிக்கவேண்டும்.ஒருஸ்டவ் 
கெட்டில் போன்றசாதனங்களுடன் திரிய வேண்டும் பாவம், கண் பார்வை 
சரியாக இல்லாததால் ஒரு முறை கையில் சுடுநீர் பட்டு வெந்து வேதனைப் 
பட்டார்.அத்துடன் அந்த வேலையையும் விட்டார். பிற்காலத்தில் ஒரு 
மருந்துக் கம்பனி ஏஜென்ஸி எடுத்து நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் 
வாழ்ந்தார். அவரை என் பேரன் விபுவுடைய சோறூட்டுக்கு குருவாயூர்
சென்றபோது அவர் வீட்டில் சந்தித்தோம். கண்பார்வை முழுவதுமாக 
இழந்திருந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தை என் மனசை நெகிழச்செய்தது. 
கண்பார்வை முற்றிலும் போன பிறகு திருமகளின் கடாட்சம் அவர் மீது 
பட்டதாகக் கூறினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை அவரை 
பெங்களூரில் என் அத்தை மகளின் பெண் கலியாணத்தில் பார்த்தேன். 
உறவுகளை அடிக்கடி சந்திக்கவோ, பேசி மகிழவோ முடியாத ஒரு சூழ்லில் 
வாழ்ந்துவிட்டோம். அரக்கோண நினைவுக்ள் தடம்புரண்டு வேறெங்கோ 
கொண்டு வந்து விட்டது. 

    அரக்கோணத்தில் இருந்தபோது, அம்மாவின் சித்தி எங்களுடன்
இருந்தார். கூடவே வேலைக்கு ஒரு பெண்ணும் இருந்தாள்.மேமைக்கு 
சோமாவின்மேல் பிரியம் அதிகம்.அவனும் அவர்களை நேசித்தான். 
அவர்கள்தான் எங்களுக்கு நம்முடைய இதிகாசங்களை அறிமுகம் 
செய்தவர். அவர் சொல்லக்கேட்டுதான் ராமாயணம் மஹாபாரதம் 
போன்ற கதைகளின் சாரம் புரிய ஆரம்பித்தது. 

அந்த மேமையை அம்மா எங்கள் வீட்டில் வேலை செய்பவர் என்று 
எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார் நாயராகப் பிறந்த அவர் 
ஒரு பிராமணனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிராமணப்பெண் போலவே 
அடையாளப் படுத்திக்கொண்டு வாழ்ந்தார். அவர்கள் தாய் மொழி 
மலயாளம். எங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம். அம்மா 
உலகிற்கு தன்னை ஒரு பிராமணப் பெண்ணாகவே காட்டிக்கொண்டார். 
அப்பாவும் அவரை ராஜம் என்று பெயரிட்டுக் கூப்பிடுவார். என்ன 
இருந்தாலும் இப்போது நினைக்கும்போது அம்மா நடந்து கொண்ட 
முறை,தன் சொந்த சித்தியை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி 
வாழ்ந்தது நிரடுகிறது.இடம் பொருள் அந்தஸ்து மக்களை எந்த 
அளவுக்கு மாற்றும் என்பதை பிற்காலத்தில் உணர வைத்த அநுபவங்கள் 
அவை.அப்பா இறந்தபோது மறுபடியும் அதே சித்தியுடன் அவர்கள் 
நிழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.மேலும் அம்மாவுக்கு 
உறவு என்று சொல்லிக் கொள்ளவோ, சென்று வரவோ வேறு போக்கிடமே 
இல்லை என்பதும் நிதர்சனம். அந்தக் கால சூழலில் அப்பாவின் மறுமணம் 
அவர்களை அப்படி வாழ வைத்ததோ தெரியவில்லை. 

அரக்கோணத்தில் நாங்கள் இருந்தது சுமார் நான்கு வருடங்கள்.வாழ்வின் 
சுமைகளோ அர்த்தங்களோ தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கை.ஆனால் 
அந்த நாட்களை நான் உலகத்தை மெள்ள கற்க ஆரம்பித்த காலமாகவே 
கருதுகிறேன்.சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பும் சுதந்திரம் கிடைதத பிறகும்
ஆன காலமது.கடைக்குப் போவது, பள்ளிக்குப் போவது விளையாடுவது 
என்றே கழிந்த காலம். சுதந்திர உணர்வோடு, பள்ளிகளில் காந்தியின் நூல் 
நூற்பு, மற்றும் சிறிய கைத்தொழில் செய்ய முனைப்பு போன்ற திட்டங்கள் 
அமலில் இருந்தன. தக்ளியில் நூல் நூற்கும் வகுப்பு இருந்தது.பனைஓலை 
கொண்டு பாய் முடைதல் கற்றுக்கொடுக்கப்பட்டது. என் தாயாரின் ஒரு 
பிரசவத்தின்போது அவர்கள் அங்கு வலியில் இருக்க நான் வீட்டில் பாய் 
முடைவதில் இருந்தபோது கண்டிக்கப் பட்டிருக்கிறேன். சாயங்காலம் 
முழுவதும் விளையாட்டுதான்.சடுகுடு விளையாட்டு நினைவாகவே 
உறங்குவேன். யாராவது எழுப்பினால் “பலீஞ்சடுகுடு” என்று விளையாட 
ஆரம்பித்து விடுவேன். இதன் கூடவே கோலி, பம்பரம் பேந்தா, போன்ற
விளையாட்டுகளும் உண்டு,அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் 
பணியில் இருந்த ஒருவர், தொழிற்சாலையில் இருந்து நல்ல மரத்தில் 
பம்பரம் கடைந்து தருவார். தாசில்தார் தெருவில் இருந்தபோது, அருகே 
ரயில் தண்டவாளங்கள் இருக்கும். அதன்மெல் ரயில் வரும் முன் சோடா 
மூடியை வைத்து தட்டையாக்கி, அதில் இரு துளைகள் செய்து, நூல் 
கோர்த்து இழுத்துப்பிடித்து சுற்றி விஷ்ணுவின் சக்கரம் என்று நினைத்து 
விளையாடுவோம். காற்றாடி செய்வதும் விடுவதும் கற்றோம். ஆனால் 
மாஞசா தேய்க்க மட்டும் பயம் .இவற்றையெல்லாம் நினைவு கூறும்போது,
தற்காலக் குழந்தைகள் இந்த நாட்டு விளையாட்டுகளைக் கற்கவோ,
அனுபவிக்கவோ முடியாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் 
கூடுகிறது. கில்லி தாண்டு, பச்சைக் குதிரை ஏற்றம்,கிளிதட்டு, அப்பப்பா..
அந்தகால விளையாட்டுகளே சுவாரசியம். முக்கியமாக ஒரு செலவும் 
இல்லாத ஆரோக்கியமான விளையாட்டுகள். 

  உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்துஎல்லாப் பொருட்களையும் 
ரேஷனில்தான் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. விலைவாசி 
ஒரேயடியாக திடீரென்று அதிகரித்தது. அரிசி ஒரு படி ஒரு ரூபாய் என்று 
(ஒரு படி சுமார் இரண்டு கிலோ இருக்கலாம்.)விற்றபோது எல்லோரும் 
கவலைப்பட்டு விவாதித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. சினிமாப் 
படங்கள் வர ஆரம்பித்து பெரிய பொழுது போக்காக மாற அர்ம்பித்திருந்தது.
சிவகவி,காத்தவராயன்,ஆர்யமாலா, ஸ்ரீவள்ளி,நாம் இருவர்,ஹரிதாஸ்,போன்ற
ஏராளமான படங்கள்பார்த்திருக்கிறோம்,கேட்டிருக்கிறோம்.தியாகராஜ பாகவதர், 
ஹொன்னப்பா பாகவதர், பி.யு.சின்னப்பா, என்.எஸ் கிருஷ்ணன்.டி.ஏ.மதுரம். 
டி.ஆர்.மஹாலிங்கம்.போன்றோர், எங்கள் சிறுவயதிலேயே,பிரபலமானவர்கள். 
தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும், லக்‌ஷ்மிகாந்தன் கொலை 
வழக்கில் சிக்கிக் கொள்ள அந்த வழக்கு விசாரணையை பார்ப்பதற்கு, ஒரு 
முறை அப்பா, அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்கு சென்றதும் நினைவில் 
வருகிறது. அப்பாவுடைய ஆசைகள், எண்ணங்கள்என்னவெல்லாம் 
இருந்திருக்கும், என்று இப்போது யூகிக்க முடிவதில்லை. ஒரு கதாநாயகனாக, 
வில்லனாக, வெறும் சாதாரணமனிதனாக என்று பல முகங்கள் இருந்தருக்க
வேண்டும். பலப்பல நிகழ்ச்சிகள்,பலப்பல விதமாக அவரை சித்தரிககின்றன.
அரக்கோணத்தில் ஒரு வீட்டில் முருங்கை மரம் இருந்தது. அதில் காய்கள் 
காய்த்துத் தொங்கும். ஒரு முறை அதன் காய்களைப் பறிக்க ஒருவன் 
முயன்றிருக்கிறான். அப்பா அவனைத் தடுத்திருக்கிறார். அவன் வீட்டு உரிமை
யாளரின் உறவுக்காரன் என்று சொல்லி, விடாமுயற்சியாக காய்களைப் 
பறிக்க முயல, அப்பாவுக்கும் அவனுக்கும் கைகலப்பு முற்றி அவனை கீழே
தள்ளி ஓடவைத்தாஎ. அப்பா எனக்கு ,ஒரு சிறுவனுக்கு , ஒரு கதாநாயகன் 
போல் காட்சி அளித்தார். உறவுகளை எதிர்த்து மறுமணம் புரிந்த அவர் என் 
தாய்க்கு, ஹீரோவாகவும், உறவுகளுக்கு வில்லனாகவும் தோன்றி இருக்கலாம்.
நான் சற்றே வளரும் நிலையில் எனக்கு ஒரு நண்பன் போல் தோன்றத்,
துவங்கிய நாட்கள் அதிகமில்லாமல். அவர் அகால மரணமடந்தது, அவரை 
பற்றி பூர்ணமாக அறியும் சந்தர்ப்பங்களை இழக்க வைத்தது. ஒருசாதாரண
மனிதனின் வாழ்க்கையில் சுகம் துக்கம் என்று மாறி மாறி வருவது இயற்கை.
ஆனால் எனக்குத் தெரிந்தவரை, அவர் வாழ்க்கையில் சந்தோஷ்மாக இருந்த
நாட்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும்.

அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள் குறித்த நிகழ்வுகளெங்கள் வாழ்க்கையில் 
அவரால் பதிவு செய்யப்பட இல்லை..அவர் முதலில் மணந்த என் தாயுடனான 
வாழ்க்கை பற்றி என் தாய் மாமன் பிற்காலத்தில் சில நிகழ்ச்சிகளைக் 
கூறுவார். அவை அனைத்தும் அவரை ஒரு அசடனாகவே பிரதி பலிக்கும். 
முதல் மணவாழ்க்கையில் ஆறு பேரை பெற்றெடுத்த என் தாயுடன் வாழ்ந்த 
வாழ்க்கையில் அவர் என் தாய் வழி உறவினர்களால் என்றைக்கும் உதவப் 
பட்டு வந்தவர் என்றும்,தன்னால் எதுவும் சாதிக்கத் தெரியாதவர் என்றும் 
சித்தரிக்கப்பட்டு இருந்தார். எது எப்படி இருந்தாலும், தான் எண்ணியதை 
நடத்திக் காட்டும் திறமைசாலி என்பது அவர் என் அத்தையை என் மாமனுக்கு 
மணமுடித்ததிலும், என் அம்மாவை (சித்தி) மாமனார் மாமியார் மற்றும்
உள்ளவர் எண்ணங்களுக்குத் துணை போகாமல், மணந்ததிலும் காட்டி 
இருக்கிறார். 

     அரக்கோணத்தில் ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவரை எங்கள்
வீட்டிற்கு வரவழைத்து, அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். அந்த 
நண்பர் பாடிய அந்தப் பாட்டு “தாயே யசோதா “ என்பது இப்போதும் எனக்குப்
பசுமையாக நினைவில் வருகிறது. என். எஸ் கிருஷ்ணன் மேல் அவருக்கு 
தனி அபிமானம். யார் என்ன சொன்னாலும் ஜோக் ஆகாது. ஆனால் என். எஸ் 
கிருஷ்ண்ன் பேசினாலேயே ஜோக் தான் என்று சொல்லி மகிழ்வார். என்.எஸ்.கே
மேலிருந்த அபிமானம்தான் அவரை அரக்கோணத்திலிருந்து மெட்ராஸுக்குச் 
சென்று லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கை நேரில் காணுமளவுக்குத் தூண்டி 
இருக்கவேண்டும். 

        அரக்கோணத்தில் எனக்கு ஒரு கதாநாயகனாக காட்சி அளித்தவர் 
ஆச்சு அண்ணா வீட்டிற்கு வேண்டிய எல்லா வேலைகளையும் ஒரு பெரிய 
மனுஷ்னாக இருந்து கவனமுடன் செய்வார். அப்போது ரேஷன் முறை 
அமலில்இருந்தத.வேண்டிய பொருட்களை ரேஷனில்தான் வாஙக வேண்டும்
அரிசிக்குப் பதில் கோதுமை மக்காசோளம் உபயோகிக்க துவங்கிய காலம்அது.
\சோளத்தைஉடைத்து அரைத்து உப்புமா செய்வார்கள் நாங்கள்மாமி என்று
கூப்பிடும் மேமை. விரும்பி உண்ணுவோம். என்னைவிட ஐந்து வயது 
மூத்தவரான ஆச்சுஅண்ணா,சாமான் வாங்கி வருவார், என் தம்பி நடராஜனை
சுமந்து கொண்டுஆசுபத்ரிக்க செலவார். என் தாய்க்கு மிகவும் உதவியாக 
இருப்பார்.அவர் பேசும்போதும் சொல்லும் எல்லாமே நூறு சதவீதம் நம்பும்
படியாகக் கூறுவார்.அது அவருக்கு கை வந்தகலை.எல்லோரையும் வசிய
மாக்கும் குணம்.எது எப்படி இருந்தாலும் எல்லோரையும்நேசிக்கும் அன்பு                       குறிப்பாக குழந்தைகளிடம் காட்டும் அன்பு, சேட்டைஎல்லாம் எனக்கு 
அவரிடம் ஒரு மரியாதையை  கொடுக்கிறது.                      

அரக்கோணத்தில் என் தாய்க்கு டைபாய்ட் வந்து குணமாகும் நிலையில்
எனக்கும் ராஜிக்கும் டைபாய்ட் வந்தது. டாக்டரின் ஆலோசனை பேரில் 
நாங்கள் மெட்ராசில் ராயப்பேட்டா ஆசுபத்திரியில்அனுமதிக்கப் பட்டோம்.
அம்மாவின்பாரா டைபாய்ட் பக்கா டைபாய்ட் ஆக மாறினால் உயிருக்கே 
ஆபத்தாக முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.சுமார் இரண்டு வார காலம் 
நாங்கள் ஆசுபத்திரியில் தனியாக இருந்தோம். எங்களைக் காணவரும் 
உறவினர் எங்களின் நிலைக்குப் பரிதாபப்பட்டு, எங்கள் தாய்தந்தையை 
குறை கூறி சென்றனர்.அந்த வயதில் மற்றவர் நம்மிடம் காட்டும் 
பரிவும் மொழிகளும் நம்மையும் அறியாமல் நம்மிடம் பாதிப்பை 
ஏற்படுத்தி, நம் சிந்தனைகள் பகுத்தறிந்து பார்க்க விடாது செய்து விடும். 
பிற்காலத்தில் எங்களிடம் எங்கள் தாயார் பாரபட்சமாக நடந்ததற்கு
இந்த சம்பவம் மேற்கோளாகக் காட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் 
ஆசுபத்திரி வாழ்க்கை நன்றாகவே இருந்தது. தினமும் நர்ஸ் வந்து 
எங்களிடம் “உறங்கினீர்களா, கொல்லைக்குப் போச்சுதா” என்று கேட்பதும் 
அவர்கள் சென்றபிறகு நானும் ராஜியும் அதே மாதிரி பேசி மகிழ்ந்ததும் 
பசுமையாக நினைவில் வருகிறது. விரிப்பை மடிமேல் வைத்து சீப்பால் 
தலை வாரினால், நிறையப் பேன்கள் வந்து விழும். அவைகளை நசுக்கி 
கொல்வதிலும் ஆனந்தம் 

     அப்போது ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு (ஃபர்ஸ்ட் ஃபாம்)
போயிருந்த நேரம். உடல் நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லவில்லை. 
இதனிடைய்ல் அப்பாவுக்கு பூனாவுக்கு மாற்றல் உத்தரவும் வந்தது. என் 
தாய் அவள் குழந்தைகளையும் மேமை வீட்டிற்கும், ராஜி  ஆச்சு அண்ணா
பெஙகளூரில் என் தாய் வழி பாட்டி வீட்டிற்கும், நான், சோமா என் தந்தை 
வழி பாட்டி வீட்டிற்கு  பாலக்காடு  கோவிந்தராஜபுரத்துக்கும்  சென்றோம். 
சுமார் ஓராண்டு காலம் படிப்பில்லாமல் பள்ளி செல்லாமல்  கவலை 
இல்லாமல் திரிந்து காலங் கடத்தினோம். 
------------------------------------------------------------------------------------------------------------------










   

20 comments:

  1. அரக்கோண நாட்கள் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறுவயது சம்பவங்களை இன்னும் நினைவில் வைத்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. மஹாத்மா காந்தி போன்றவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகளுடன் கூடியதாக இருப்பதால் இது ஒரு சரித்திர முக்யத்துவம் வாய்ந்த பதிவும் கூட.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  2. உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு சல்யூட். என்னையும் உங்கள் காலத்துக்கு கைபிடித்து அழைத்து சென்று விட்டீர்கள். ரசித்தேன். தொடருங்கள் சார்!

    ReplyDelete
  3. அடேங்கப்பா... எத்தனை விஷயங்கள்.....!!! உங்கள் அப்பாவை பற்றி சொல்லிய செய்திகள், சுவாரசியமானவை. இந்த பதிவுகள் எல்லாம், பல சரித்திர பின்னணியிலும் அமைந்து இருப்பதால், உண்மையில் உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு பொக்கிஷமாகவே இருக்கும். தொடருங்கள்!

    ReplyDelete
  4. you have kindled my nostalgia!

    ReplyDelete
  5. ஏராளமான நினைவுகளின் தொகுப்பு. இதை சிறுசிறு பகுதிகளாக தொடருங்கள்.....

    ReplyDelete
  6. உங்களின் நியாபக சக்திக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை
    வயதும் இல்லை. உங்களின் எழுத்துக்கள் அதிகமான
    அருமையான பல விசியங்கள் கலந்து கலவையாக
    ஒரு சிறுகதை போல நன்றாக பகிர்ந்து இருக்கீங்க.

    சிறுவயது விளையாட்டுகள் தற்போது உள்ள சிறுவர்களுக்கு உண்மையாக கிடைக்க வில்லை என்ற ஆதங்கம் உண்மைதான் ஐயா எங்கும் வீடியோ கேம் என்று எங்கோ போய்கொண்டு இருக்கிறது ...

    மிக அருமையான ஒரு பகிர்வு

    நன்றி நன்றி

    ReplyDelete
  7. நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்துகளை கண்டு களித்த அநுபவம், நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.//
    பொக்கிஷமாக, அருமையான ஒரு பகிர்வு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  8. அருமையான நடை... சுய கதை என்னை அந்த கால கட்டங்களுக்கே அழைத்துச் செல்கிறது.காந்தி மீது வெகுஜனங்கள் வைத்துள்ள மதிப்பு மரியாதை அன்பு ஆகியவற்றை தங்களில் குடும்பத்தை வைத்தே சொல்லி அசத்தி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்கள் டைரியின் பக்கங்களில்தான் எத்தனை எத்தனை ரசமான நினைவுகள்? நன்கு எழுதக் கூடியவர்கள் நினைவாற்றலுடனும் இருப்பது அந்த சுயசரிதைக்குப் பெரிய பலம்.வாழ்வின் மேடு பள்ளங்களில் எங்களையும் இழுத்துச் செல்கிறது உங்களின் அரக்கோண நாட்கள். இது மால்குடி டேஸுக்குச் சற்றும் குறைந்ததல்ல.இதில் விடாமல் கவனம் செலுத்தி முடிந்தவரை எழுதுங்கள் பாலு சார்.

    ReplyDelete
  10. படித்துப் பகிர்ந்து கருத்து தெரிவித்த கோபு சார், மோகன் ஜி,சித்ரா, பந்து, கலாநேசன், சிவா, இராஜ இராஜேஸ்வரி, மதுரை சரவணன், சுந்தர்ஜி அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. உங்களின் ஞாபக சக்தி
    என்னை பிரமிக்க செய்கிறது ஐயா!
    உங்களின் வாழ்க்கை பதிவை
    இந்தனை சுவாரஸ்யமாக
    பதிந்ததர்க்கும் பகின்றதர்க்கும்
    பணிவான நன்றி

    ReplyDelete
  12. same blood!!!

    என்னைவிட சிறிதே மூத்தவர் நீங்கள். ஆனால் காந்தி பற்றி ஏதும் என் இளவயதில் தெரியாது. என்.எஸ்.கே. விஷயமும் பின்னால் தான் கேள்விப்பட்டேன். ‘பேந்தா’விலிருந்து எல்லா ‘ஆட்டமும்’ நானும் ஆடியிருக்கிறேன் என்பது ஒரு ஒற்றுமை.

    தாயை இழந்ததிலும் ஒற்றுமை உள்ளது.

    நிறைய ஒரே பதிவில் எழுதியதை இன்னும் பல பதிவுகளில் இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது.

    ReplyDelete
  13. சுவையான மலரும் நினைவுகள். ஆர்.கே.நாரயணனின் ' மால்குடி நாட்கள்'போன்று உங்களது 'அரக்கோணம் நாட்கள்'

    ReplyDelete
  14. @ திதமிழ் இளங்கோ
    வாழ்க்கை எட்டெட்டாகப் பதிவின் சுட்டிகள் மூலம் வந்ததற்கு நன்றி இஆ

    ReplyDelete
  15. தங்களது நினைவலைகளுக்கு ஒரு சல்யூட் ஐயா

    ReplyDelete
  16. @ கில்லர் ஜி
    சுட்டி பிடித்து வந்து பாராட்டுவதற்கு நன்றி ஜி

    ReplyDelete
  17. நாங்க அரக்கோணத்துக்கு பக்கத்துல முதூர்ன்னு ஒரு ஊர் இருக்கு, அங்க குடியிருந்தோம். அரக்கோணத்தில் தேவி தியேட்டர்ன்னு இருக்கும் அங்க படம் பார்த்திருக்கோம்,. மத்த தியேட்டர்லாம் நினவில் இல்ல

    ReplyDelete
    Replies
    1. எனது ஆறாம் வயதுமுதல் பத்தாம் வயது வரை இருந்த ஊர் இப்போது பார்த்தாலரக்கோணம் எப்பட் இருக்கும் என்பது தெரியவில்லை சுவால் பேட்டை கிரிகிரி பேட்டை தாசில்தார் தெரு டௌன் ஹால் எல்லாம் இப்போது வெறும் நினைவுகளே

      Delete
  18. சுவையான தகவல்களை எழுதியிருக்கிறீர்கள் . காந்தியை நானும் ஒருமுறை பார்த்திருக்கிறேன் .1944 ஆம் ஆண்டு . காரைக்காலில் படிப்பு முடித்து மேற்படிப்புக்காக நான் புதுச்சேரிக்குப்போய் அங்கு வாழ்ந்த்ஏன் , காந்தி தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணம் முடித்துச் சென்னைக்குத் திரும்புகையில் விழுப்புரத்தில் அவரைப் பார்க்கலாம் என்று தெரிந்து ஏராள மாணவர்கள் அங்கே சென்று காத்திருந்தோம் .அவர் பயணித்த தனி ரயில் வந்து நின்றபோது அவரையும் ராஜாஜியையும் கண்டு மகிழ்ந்தோம் .

    ReplyDelete