Wednesday, June 22, 2011

உறவுகள்.

உறவுகள்   (தொடராக்கலாமே )
-------------

உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

உறவுகளில் தலையாயது, தாய்__மகன், மகள் உறவுதான். தொப்புள் 
கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 
சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 
வெளி வரும்போது, அதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 
வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 
என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 
கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க , 
மறுக்க முடியாத உண்மை.

 ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு 
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால் 
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் 
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை 
நான் விவாதிக்க வரவில்லை. 

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப் 
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே 
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை 
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள் 
இல்லாமல் குழந்தை இல்லை..ஆக, பிறந்த உடனே  சேய்,தன தாய் 
தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே 
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. 

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை 
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின் 
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு 
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும். 

ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து 
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால் 
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு 
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம் 
எடுபடுவதில்லை. 

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும், 
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள் 
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய 
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள். 
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும் 
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். உறவுகள் 
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன் 
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப் 
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு 
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி 
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய் 
விட்டதோ.?

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும் 
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து 
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு 
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும் 
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே 
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில் 
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட 
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல் தானாக வருவதனறோ.?

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 
மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )
என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 
அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 
மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டி, மீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள் 
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை 
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன் 
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு 
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில் 
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வது, மிகவும் 
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின் 
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது 
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை. 

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும் 
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் , வேறு 
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது 
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும் 
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப்  
பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா 
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல் 
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக 
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
"  அத்தை வீட்டு வாசலிலே, நித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால் 
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும் 
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன 
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன் 
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காக, பெற்றவரை 
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான். .

சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம் 
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து 
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 
அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 
விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 
கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 
அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 
காப்போம். 
------------------------------------------------------------------------------------------
.  .                   ( எனக்குத் தெரியும். இதற்கு எதிர்மறை கருத்துக்கள் 

                         நிறையவே இருக்கும். வழக்கம்போல் என் கருத்துக்கள் 
                 
                         அநேகம் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்  என்று 

                         நம்புகிறேன். இந்தத் தலைப்பில் இதை ஒரு தொடராக 

                          பலரும் எழுதினால் நலம் விளையும் என்று நம்புகிறேன். 

                          நானாக இன்னவர் எழுதலாம் என்று கூறுவதைவிட 

                          அவர்களாகவே பங்கு கொள்வது நன்றாயிருக்கும். 

                          ஆண்  பெண் இரு சாராரும் எழுதுவது பல கருத்துக்கள் 

                          வெளிவர உதவும். நன்றி. )
 


           





   












13 comments:

  1. நல்லதொரு பகிர்வு; அலசல்

    ReplyDelete
  2. சாதாரணமாக குழந்தைகளுக்கும் தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம்
    செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள் அவர்களாகவே வந்து
    அன்பு செலுத்தினாலும் வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன.


    முழு உண்மை ஐயா
    இன்றெல்லாம்
    நிர்பந்தங்களால்
    நிர்ணயம் செய்யபடுகின்றன
    உறவுகள் இங்கு
    உணர்வுகளுக்கு மதிப்பில்லை
    அன்பிற்கு அழைப்பில்லை

    ReplyDelete
  3. // நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம் இருவர் )என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே
    மனதில் பதிந்து விடுகிறது.//

    மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

    நல்லதொரு பதிவு. அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  5. சாதாரணமாக குழந்தைகளுக்கும் தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம்
    செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள் அவர்களாகவே வந்து
    அன்பு செலுத்தினாலும் வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன

    \\மிகவும் சரி // .

    ReplyDelete
  6. உறவுகள் குறித்த உங்கள் உரத்த சிந்தனை
    மிக மிக அருமை
    பணிச்சூழல் பண்டிகைகள் அல்லாத
    வேறு வகை கொண்டாட்டங்கள்
    உறவுகளின் அன்னியோன்யத்தை குறைக்கிறதோ என
    எண்ணத் தோன்றுகிறது
    விரிவான அலசலில் உங்கள்
    அனுபவம் பளிச்சிடுகிறது
    நல்ல பதிவு தொடர முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  7. சுவாரசியமான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. என் நண்பன் பிரசாத் நலமுடன் உள்ளானா ஐயா, நல்லவன் ஆனால் அப்பாவி.

    ReplyDelete
  9. //ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும் ஓரளவுக்குச் சரிதானோ... என்ன இருந்தாலும் கணவன் தேவை. அவன் உறவுகள் தேவையா,?தன உதிரம் சம்பந்தப்பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே..//

    அந்த நாற்றங்கால் உதாரணத்தின் தாத்பரியம் மிக உயர்ந்த ஒன்று.
    அதன் அருமை தெரிந்து புகுந்த வீட்டை பொலிவுடன் வைத்துக் கொள்கிற பெண், எல்லா நலங்களும் இயல்பாகவே பெற்றுத் திகழ்கிறாள். முக்கியமாக மன அளவில் அவள் கொள்ளும் வளர்ச்சி தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள உறவுகளையும் போஷிக்கிற உணர்வையும்,எதிர்கால ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கும் அடிகோலுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண்ணைப் பெற்றவர்களும் இதில் தான் பெருமை கொள்கிறார்கள். அவள் தாய், தான் கொண்டிருந்த சிறப்புகளையே தன் மகளும் கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்புவாள்.

    மேலோட்டப் பார்வைக்கு ஆணைச் சார்ந்தே எல்லாமே அமைகிறதோ என்கிற தோற்ற மயக்கம் கூடத் தோன்றுவது உண்டு.உண்மையில் அப்படியில்லை; கண்ணதாசன் சொன்ன மாதிரி, 'மகாராஜன் உலகையாளலாம்; அந்த மகாராணி அவனை ஆளலாம்' கதை இது. அவனை ஆள்வதின் மூலம் அவனைச் சார்ந்தோரையும் ஆளுகின்ற, அவள் ஆள்வதில் அவளைச் சார்ந்தோரும் பெருமை கொள்ளும் உண்மை இது.
    இப்படியும், அப்படியும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் பெண் தான் ஒரு குடும்பத் தேரின் அச்சாணி என்பது தெளிவாகத் தெரியும்.

    அதற்காக பிறந்த வீட்டை மறந்து விடவேண்டும் என்றில்லை. புகுந்த வீட்டார் அவளால் கொள்ளும் பெருமை, அவள் பிறந்த வீட்டாரை இவர்கள் போற்றக் காரணமாகிறது.
    அது அவள் பிறந்த வீட்டார், 'தன் மகளைச் சான்றோள் எனக் கேட்டத் தாயாக' முடியும்.

    மனைவி இல்லாதவன் சில சடங்குகளைச் செய்யவே அறுகதையற்றுப் போகிறான். பெற்ற மகளுக்குக் கூட இல்லாத சில உரிமைகளும், மரியாதைகளும் மருமகளுக்குப் புகுந்த வீட்டில் உண்டு. விவரமாக எழுதப்புகின், முடை நாற்றமடிக்கும் பழங்குப்பையாகத் தோன்றும். புரிந்து கொண்டால், அடுக்கடுக்காக நமது சமூக கட்டமைப்பு எவ்வளவு அழகாக நம் முன்னோர்களால் சமைக்கப் பட்டிருக்கிறது என்பது புரியும். அந்த கட்டமைப்பு சரிந்ததே, பல மன உளைச்சல்களுக்கு காரணமாயிற்று.

    இப்படியும் அப்படியும் பார்த்து, மற்றவர்களையும் யோசிக்கத் தூண்டும் உங்கள் பாணி போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  10. http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..

    ReplyDelete
  11. உறவுகள் குறித்த தங்களின் விளக்கங்களும் அதில் புதைந்துகிடக்கும் சிலபல உண்மைகளும் நிஜம். உறவுகளை பேணுவதில் எத்தனை கவனமாக இருந்தாலும் சிலநேரம் அது தவறியும்போய்விடுவது உண்மையே.

    இதனைப்பற்றி விபரமாக நேரம்கிடைக்கும்போது நிச்சயம் நானும் எழுதுகிறேன் அய்யா.

    தாங்கள் பெரியவர்கள் அனுபவத்தின் வாயிலாக அனைத்தையும் [உண்மையையும்]சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வது எப்படியிருக்குமோ. எனது வயதுக்கேற்க எனது அனுபவங்களுக்கேற்ப எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. அத்தியாவசியத் தேவைகளாக நியாயப்படுத்தப் படுபவை.

    1.ஒரு வீடு --சில பல லட்சங்கள் மதிப்பில்
    2.கொஞ்சம் இன்னும் இன்னும் கொஞ்சம் தங்கம்
    3.மகன் மகள் இஞ்ஜினியரிங்க் படிப்பு, MBA படிப்பு, மருத்துவக் கல்வி
    4.மகளின் திருமணம், அயல்நாட்டு மாப்பிள்ளை.
    5.மூர்ச்சையாக்கும் மருத்துவச் செலவு.
    இவை அத்தனைக்கும் பொருள் சேர்க்க வேண்டும். அதற்கு ஏற்றவாரு கலாச்சாரம் மாறிவருகிறது. இதில் எல்லாம் ஜெயிக்க ஓடும் மக்கள் மத்தியில் உறவுகளைப் பற்றி சிந்திப்பதற்குக் கூட நேரம் இல்லையோ?

    உங்கள் படைப்பு சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. பிரச்சனையை மட்டும் தான் சொல்ல முடியும். தீர்வுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

    உங்களின் பதிவுக்கு என் பாராட்டுக்கள். நிறைவான பதிவு.

    ReplyDelete
  13. பொதுவாக எந்தப் பெண்ணும் பொல்லாதவள் அல்ல. பிறந்த வீட்டுப்பாசம் இருந்தாலும் புகுந்த வீட்டையும் விட்டுக்கொடுக்காதவளாகவே இருப்பாள்; இருக்கிறாள். இன்றைய காலங்களில் கூட்டுக் குடும்பச் சூழ்நிலை இல்லை என்றாலும் புகுந்த வீட்டையோ, மாமனார், மாமியாரையோ அடியோடு ஒதுக்குவது இல்லை.

    என்றாலும் அது அந்த மாமியார், மாமனார் மருமகளை நடத்தும் முறையிலும் இருக்கிறது. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இருக்கும் பெண்களும் உண்டு. சண்டை போட்டுப் பிரிந்தாலும் பின்னர் சேர்ந்தவர்களும் உண்டு.

    துளசிச் செடியை நடும்போது நாள் பார்த்துத் தான் துளசிக் கன்றை எடுக்க வேண்டும். அந்த நல்ல நாளிலேயே கன்றை நட வேண்டும். நடும்போது வெறும் வேரோடு கூடிய செடியை மட்டும் வைக்கக் கூடாது. கூடவே துளசி பிறந்த இடத்து மண்ணும் இருக்கவேண்டும். மண்ணோடு இருக்கும்படி தான் துளசிச் செடியைப் பிடுங்குவார்கள்.

    ஆக ஒரு துளசிக்கே இப்படி எனில் இன்னொரு வீட்டில் பிறந்த பெண் புதியதாக ஒருத்தர் வீட்டில் வந்து குடித்தனம் செய்யப் பிடிமானம் வேண்டாமா? பிறந்த வீட்டை மறக்கத் தான் முடியுமா?

    ஆனால் எனக்குத் தெரிந்து இதெல்லாம் முதல் பத்து வருடங்களுக்குத் தான். அதன் பின்னர் அந்தப் பெண்கள் தங்கள் குடும்பச் சூழ்நிலையில் ஐக்கியமாகி விடுகின்றனர். பின்னர் ஒரு காலத்தில் அவர்கள் சுய நினைவுக்கு வந்து பார்த்தால் புகுந்த வீட்டில் எந்த அளவுக்கு ஐக்கியம் ஆகிவிட்டார்கள் என்பது தெரியும்.

    அத்தை குறித்த இந்தத் தாலாட்டுப் பாடல் முற்றிலும் புதியது. யாருமே பாடிக் கேட்டதில்லை. :)))))

    ReplyDelete