Sunday, December 18, 2011

பயண அனுபவங்கள் ...

                                    பயண அனுபவங்கள்.
                                   ------------------------------

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


                  என் பள்ளி நினைவுகளை ஒரு தனிப் பதிவும் , பாலக்காட்டில் ஒரு வீட்டில் எரியும் நந்தா விளக்கு பற்றிய ஒரு இடுகையும் வெளியிடஎழுதியுள்ளேன்.
---------------------------------------------------------------------------        
    
    

         

18 comments:

  1. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.

    படிக்க சுவாரசியமாகவே இருக்கிறது.. தொடருங்கள்.

    ReplyDelete
  2. ஐயா பயண அனுபவங்கள் என்றுமே சுவாரசியம் மிக்கவைதான். நீங்க அதை நல்லா ரசனையுடன் சொல்லி இருக்கீங்க. தொடருங்க.

    ReplyDelete
  3. வெகு அருமையான எழுத்துக்கள்.

    அனுபவம் + பயணம் + பழைய இடங்கள் + புதிய மாற்றங்கள் + நாளை எப்படி இருக்குமோ என்ற ஆதங்கம்.

    தொடருங்கள், ஐயா.

    படிக்கக் காத்திருக்கிறோம்.
    vgk

    ReplyDelete
  4. //நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.//

    சிம்ஸ் பார்க் நேர் எதிரே தொலைபேசி இணைப்பகம் இருக்கிறதல்லவா?.. அங்கு தான் நான் சில காலம் பணியாற்றினேன்.

    இந்த புனித அந்தோணியார் உ.பள்ளி
    சிம்ஸ் பார்க் அருகே வண்டிச்சோலைக்குப் பிரியும் பாதையில் இருக்கிறதா?

    ReplyDelete
  5. அன்பின் ஜீவி, உங்கள் பதிவுக்கு கமெண்ட் போட க்ளிக் செய்தால் எதுவுமே வருவதில்லை. உங்கள் கதையில் புதிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் திருப்பம் நிகழப் போகிறது என்று புரிகிறது. மற்றபடி , சிம்ஸ் பார்க்கின் முன்னால் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட்டெலிபோன் ஆஃபீஸ் நோக்கி நின்றால் வலது பக்கம்கீழாகப் போகும் சாலையின் மேட்டில் செயிண்ட் ஆண்டனிஸ் ஹைஸ்கூல் வரும்.உங்கள் நினைவுகளையும் கிளறிவிட்டேனா. ?

    ReplyDelete
  6. உங்கள் பழைய நினைவுகள் எங்களையும் சந்தோஷப் படுத்தி சுவாரஸ்யம் கொடுக்கிறது.

    ReplyDelete
  7. உங்கள் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சற்று தாமதம்
    ஐயா படிக்க படிக்க ச்வரசியயம்
    நேரில் பயணித்ததை போல
    மிக நன்று

    ReplyDelete
  9. நினைவுகள் என்றுமே சுகமானதுதான்!

    ReplyDelete
  10. பயண அனுபவங்கள் சுவாரசியம்,,,

    ReplyDelete
  11. //நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன..... ஒரு திகிலான அனுபவம்தான் அது// படிக்கவே த்ரில்லாக இருந்தது.

    ReplyDelete
  12. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டவை. அவை சுவையானவை. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம். அனுபவங்கள் ஆயிரம புத்தகப் படிப்பிற்கு சமம். காரமடை கோயிலுக்கு நானும் சென்றிருக்கிறேன். மலைச்சரிவில் காட்டுயானை அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது பயமறியாத வயது. இண்டர்காலேஜியேட் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது. ஒரு வன அலுவலர் வந்து அதன் விபரிதத்தை சொன்னதும் உறைத்தது பயம். இருப்பினும் பிள்ளையார் யானை எனும் சூழல்களில் ரொம்பப் பிடிக்கும் யானைகளை.

    ReplyDelete
  13. மதுரை வருவது - என்னவாயிற்று.?

    பாலாஜி கோயில் என்று புனேக்கு அருகே இது போல் ஒரு கோயில் உள்ளது தனியார் நிர்வகிக்கிறார்கள். ரம்மியமான சூழலில்.

    பகிர்வுக்கு நன்றி அய்யா.

    மதுரைக்கு வரும்போது தெரிவியுங்கள்.

    ReplyDelete
  14. தங்கள் மலரும் நினைவுகள்.. படித்த பள்ளி போதித்த ஆசிரியர்,வாழ்ந்த இடத்தின் பசுமை என மனக் குகையின் கதவுகளை திறந்து விட்டீர்கள் அருமை ....

    ReplyDelete
  15. @ரிஷபன்,
    @லக்ஷ்மி,
    @வைகோ,
    @ஜீவி,
    @நண்டு@நொரண்டு,
    @டாக்டர்.கந்தசாமி,
    @ஸ்ரீராம்,
    @ரமணி,
    @சிவா,
    @தோழன்.மபா.
    @சமுத்ரா,
    @கே.பி.ஜனா,
    @ஹரணி,
    @சிவகுமாரன்,
    @காளிதாஸ்
    அனைவருக்கும் என் நன்றி. சிவகுமாரா, நானும் அந்த கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். புனேயிலிருந்து ஷிர்டி அருகிலிருக்கும் சனி பகவான் கோயில், இந்த பாலாஜி கோயில் என்று பல இடங்கள் போயிருந்தாலும் புனேயில் காந்திஜியை சிறை வைத்திருந்த ஆகாகான் மாளிகை சென்றதே மனம் நெகிழ வைத்தது. மதுரை வரவு நூலிழையில் தவறியது. வர வேண்டும் என்னும் ஆவல் கூடி இருக்கிறது. நிறைய வலை நண்பர்களைக் காணலாமே.

    ReplyDelete