Wednesday, June 13, 2012

ஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION


                              ஹிந்தி எதிர்ப்பு-AN INTROSPECTION.
                              -----------------------------------------------


மாதங்கி மாலி எழுதி இருக்கும் ‘ அரக்கி ‘ எனும் பதிவில் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிட்டிருக்கிறார். பதிவு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கருத்துப் பறிமாறல்.ஆகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற பாரதியார் பிற மொழிகளையும் கற்றிருக்கிறார், போற்றியுமிருக்கிறார். மொழி உணர்வு என்பது இன்றியமையாதது. மொழி வெறி தேவை இல்லாதது. ஹிந்திமொழி திணித்தலே எதிர்க்கப்பட்டது. ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிரான குரல் ,1939-ல் ராஜாஜி ஹிந்தி கற்பித்தலை கொண்டு வந்தபோதே துவங்கி விட்டது.அப்போதே மொழி உணர்வின் வெளிப்பாடாக உயிர் நீத்தவர்களும் இருந்தார்கள்.

மொழி திணிக்கப்படும் பொது ஆதிக்கமும் திணிக்கப் படுகிறது. கல்வி அறிவே குறைந்திருக்கும் சமுதாயத்தில் , அதன் காரணமாக ஆண்டை அடிமை என்று ஏற்கனவே ஒடுக்கப் பட்டிருக்கும் சமுதாயத்தில் இன்னுமொரு ஆதிக்கமாக ஹிந்தி மொழி திணிக்கப் படுவதை எதிர்த்து குரல் கொடுத்ததும் அதற்கு இளைஞர்கள் துணை போனதும் மிகவும் சரியே.

ஆங்கிலேயன் இந்தியா வந்து அப்போது இருந்த கற்றவர்களால் அடிவருடப் பட்டு இங்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபிக்க முடிந்தது என்றால் அவனது மொழியைக் கற்றவர்கள் ,அப்போதைய உயர் வகுப்பினர் அவனது மொழியில் தேர்ச்சி பெற்று அதையே தங்களது மேன்மைக்குப் பயன் படுத்தியதுதான். சாதாரண மக்களுக்கு கல்வியே மறுக்கப் பட்டு அப்போதைய மேல்வகுப்பினர் முக்கிய பதவிகளில் இருந்து பிறரை முன்னேற விடாமல் செய்தது ஆங்கில மொழி கற்றதனாலும் அவனுக்கு அடிவருடி தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாலும் மட்டும்தான். இதனை உணரத் துவங்கிய மக்கள் இன்னொரு ஆதிக்கம் ஹிந்தி மொழியால் வரக் கூடும் என்றுணர்ந்து அதனை எதிர்த்துப் போராடியது இப்போது சரித்திர நிகழ்வாகி விட்டது.

நாடு இனம் மொழி  மதம் என்பவை எல்லாம் உணர்வுகள் சம்பந்தப் பட்டது. சரி தவறு என்று கூற அளவுகோல் ஏதுமில்லை. போராட்டம் ஒரு ஆதிக்கம் திணிக்கப் படக்கூடாது என்பதற்குத்தான்.. ஆனால் அதையே மொழிக்கு எதிராக என்று கற்பித்து இன வேறுபாடுகளில் குளிர் காய்பவர்களை அடையாள்ம் கண்டு கொள்ள வேண்டும்.மொழிக்கு எதிராக இங்கே போராடினார்கள் என்றால், ஒதுக்கீட்டிற்கு எதிராக அங்கே போராடினார்கள். ஆனால் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நிகழ்வுகளை அணுகினோம் என்றால் நிறைய பார்வைகளின் வெளிப்பாடு தெரியும்.

ஒரு முறை நான் வடக்கில் பயணத்தில் இருந்தபோது என் சக பயணி ( ஹிந்தி பேசுபவர், வடக்கத்திக்காரர் )சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்
‘ மதராசிகள் ஹிந்தியை எதிர்ப்பார்கள், கூடவே அந்த மொழியையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுவார்கள் ‘ ஹிந்து தினசரியில் வெளியான கேலிச் சித்திரம் கூறியது போல் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தையும் கற்றுத் தேற வில்லை. தமிழையாவது ஒழுங்காகப் பேசவோ எழுதவோ செய்கிறார்களா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. “ மைத்துளிகள்”-ல் கண்ட நகைச்சுவை விடியோ உண்மையை கூறுகிறது 

ஹிந்திப் போராட்டக் காலத்தில் நான் HAL-ல் வேலையிலிருந்தேன். சென்னையில் பாடியில் இயங்கும் லூகாஸ் டீவீஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர ஒரு நேர்காணலுக்காக பெங்களூரில் இருக்கும் உட்லண்ட்ஸ்  ஹோட்டலில் லூகாஸின் பெர்சொனல் மானேஜரை சந்தித்தேன். நேர்காணலில் அவர் என்னிடம் ஏதேதோ கேள்விகள் தமிழில் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்தேன். எனக்குத் தமிழ் தெரியாது என்று எண்ணிய அவர் தமிழ் தெரியாமல் அப்போதிருக்கும் நிலையில் மதராசில் குப்பை கொட்ட முடியாது என்று கூறினார். பின் என் தமிழ் உரையாடல் கேட்டு எனக்கு அங்கு வேலை கிடைத்தது சரித்திரமாகி விட்டது. எங்களுக்கு பள்ளி இறுதித் தேர்வில் ஹிந்தி அவசியம் பரீட்சசைக்கு உண்டு .ஆனால் தேர்ச்சி பெறும் கட்டாயம் இருக்க வில்லை.  நானும் ஹிந்தியை  “ மானே ஹம்கோ ஜன்ம் தியா ஹை. உஸிகா தோத் பீகர் ஹம் படே ஹுவே ஹைந் “என்ற அளவில் படித்து தேர்வு எழுதினேன்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் பலன்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வெறியாகி மற்ற மாநிலத்தவர் வேற்றாட்களாக எண்ணப் படுகின்றனர். நான் முன்பே கூறியுள்ளது போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.       .               .                                  .                                    
            




7 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete
  2. ஹிந்தியை படிக்கவிடாமல் செய்த அயோக்கியர்களை நினைத்தால் இன்றும் வயிறு எரிகிறது.

    ReplyDelete
  3. It's nice to see this post... I have always liked to read posts that are kind of a documentation of the past...

    that is why I have been pestering my dad to write some of his experiences.. but he always seems to be busy whenever i talk to him about this!

    anyway- it is good that he shared this story with me so that i could post it on my blog!

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா..

    உங்கள் கட்டுரையை அப்படியே வழிமொழிகிறேன். உண்மையில் இரு தேர்வுகள் உறிந்தியில் பயிற்சி பெற்றவன். எனவே இப்போது தொடர்பு இல்லை. ஐயா பழனி கந்தசாமி சொன்னதுபோல உறிந்தியைப் படிக்காததது வருத்தமாக உள்ளது. மறுபடியும் கற்றுக்கொள்ளும் தீவிரத்தில் உள்ளேன். உறிந்தி எதிர்ப்புக் காட்டியவர்கள் எல்லாம் நடிப்புக்காரர்கள். தங்கள் சந்ததிகளை நன்றாக உருவாக்கிவிட்டு நம்பியவ்ர்களை புதைகுழிகளில் புதைத்தவர்கள்.

    ReplyDelete
  5. இந்த பகல்வேஷகாரர்கள் ஆட்சியை பிடித்தபிறகு இந்தி ஒழிந்ததோ என்னவோ தமிழ் ஒழிந்துவிட்டது. எங்கெங்கு காணினும் ஆங்கில வழி பள்ளிகள்.தாங்கள் வெள்ளைக்காரனின் அடிமைகள் என்பதை மறுபடியும் நிருபித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  6. தாங்கள் சொல்வது போல் மொழித்திணிப்பின் மீதான எதிர்ப்பு, மொழியின் மீதான எதிர்ப்பாய் மாறியது துரதிஷ்டவசமானது.

    தமிழின்பால் தீவிரப் பற்று இருந்தாலும் இந்தியைத் தனியாகக் கற்றுக்கொண்டேன். எட்டு வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தும் எங்கும் பேச வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் அப்போது தூர்தர்ஷனில் வரும் இந்தி நாடகங்களுக்கு மொழிபெயர்ப்பாளியாய் வீட்டில் செயல்பட உதவியது.

    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. @ ரத்னவேல் நடராஜன்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ வலைஞன்,
    @ விஜி,
    @ மாதங்கி,
    @ ஹரணி,
    @ கீதமஞ்சரி
    உங்கள் வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. என் நினைவலைகளைக் கிளறி விட்ட மாதங்கிக்கு ஸ்பெஷல் நன்றி. கீதமஞ்சரி மிக சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.ஹிந்தி மட்டுமல்ல பிற மொழிகளையும் கற்பதே உசிதம். இங்கு பெங்களூரில் கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாததால் சில நேரங்களில் படிப்பறிவில்லாதவன் போல் உணர்கிறேன்,.நல்ல காலம் தென் இந்திய மொழிகள் பேசினால் புரியும். ஓரளவுக்குப் பேசவும் முடியும். மொழிப் பற்று வேறு, மொழிவெறி வேறு.

    ReplyDelete