Tuesday, July 10, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்..


                                       ஆலய தரிசனம்  அனுபவங்கள்.
                                       ---------------------------------------------


ஒவ்வொரு வருடமும் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் அவசியமாக திருச்சி ,வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று க்ஷேத்ராடனம் செல்லும் வழக்கம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. சிதம்பரம் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் ஏதாவது ஒரு நாளில் அங்கிருப்போம். இந்த முறை திருவிழா சீக்கிரமே வந்ததால் பார்க்க முடியவில்லை.எப்படி இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)

இந்த வருடம் ஜுலை இரண்டாம் நாள் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஜூலை மூன்றாம் நாள்,சிற்றஞ் சிறுகாலையில் ( திருமதி ஷைலஜா எழுதியபடி ) திருச்சி வந்து சேர்ந்தோம். புறப்படும் முன்பே என் மனைவி என்னிடம் போதிய அளவு பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளச் சொன்னாள். இந்தக் காலச் செலவு பற்றிய என் ஞானம் குறித்து அவளுக்கு எப்போதுமே சந்தேகம்தான். தேவையான பணம் இருக்கிறது . இல்லாவிட்டால்தான் என்ன. ? டெபிட் கார்ட் இருக்கிறது தேவைப்பட்டால் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டேன். எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம், இம்முறை அடிவாங்கியது. ரயிலில் ஏறிய பிறகு பார்த்தால் பர்ஸில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த பணம் இருக்கவில்லை. திருச்சியில் தங்குவதற்கு அறையும் சுற்றுவதற்கு காரும் என் மகன் ஏற்பாடு செய்து இருந்தான்.



எதிர்பார்த்தபடி கோயில் தரிசனங்கள் முடிந்தது. மதியம் SBI – ATM –ல் பணம் எடுக்கக் கார்டை நுழைத்தால் SORRY என்று பதில் வந்தது. என்னுடைய கார்டின் EXPIRY DATE முடிந்திருந்தது. நான் கவனித்திருக்கவில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்று சந்தடி சாக்கில் என்னை என் மனைவி வாரினாள். நல்ல வேளை. என் மகன் எங்களுக்குத் தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்து எங்களை நிம்மதி அடையச் செய்தான்.

இரண்டாம் முறையாக என் கணிப்பு தவறானது, எனக்கு ஜனங்களை எடை போடத் தெரியும் என்ற எண்ணத்தில், திருச்சியில் பதிவுலக நண்பர்கள் பலர் இருப்பது தெரியும். முகம் பார்த்த அறிமுகம் இல்லாதவர்கள். ஒருவரையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பி ஒருவருக்கு அவரது தொலை பேசி எண் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். மூன்று நாட்களுக்கும் மேலாக காலை மதியம் இரவு என்று பதிலுக்காகக் காத்திருந்தேன். பதில் வரவில்லை. நான் அவரைத் தேர்ந்தெடுத்தது இருவருக்கும் அதிக பிரச்சனை இல்லாமல் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில்தான். என்னை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி பதிலாவது எழுதி இருக்கலாம். SIMPLE COURTESY  மனம் வருந்தியது நிஜம். ஊரெல்லாம் போய் வந்த பிறகு வை. கோபால கிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக வாழ்த்து அனுப்பி இருந்தேன். நாங்கள் வருவது தெரிவித்திருந்தால் அவரே எங்களை பார்க்க வந்திருப்பேன் என்று எழுதி இருந்தார். என்னிடம் பலரது தொலைபேசி எண்கள் இல்லாததுனாலும் வேண்டிக் கேட்டவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததாலும் பலருக்கும் நான் அஞ்சல் அனுப்பி இருக்க வில்லை. அனுபவங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் வயதாகி விடுவதாலேயே எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை. I HAVE STILL TO LEARN A LOT. கணினியில் வலைப்பூக்களில் எல்லாப் பதிவர்களின் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை அறிந்து கொள்ளும் நுட்பம் இருக்கிறதா என்ன.?சிலரது மின் அஞ்சல் முகவரிகள் தெரியும். ஒரு முறை ஒரு சக பதிவர் என் பதிவை தெரியாமல் தமிழ் மணத்தில் இணைத்து விட்டதாகக் கூறி இருந்தார். நான் தமிழ் மணத்தில் இணைக்க என் மின் அஞ்சல் முகவரியுடன் பாஸ் வேர்டும் அல்லவாதர வேண்டி உள்ளது. எப்படி அவரால் இணைக்க முடிந்தது என்னும் கேள்வி இன்னும் என் மனதில் குடைகிறது.

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் மாறாதது. அடிக்கடி கேள்விப் படும் சொற்றொடர், இம்முறை நிதர்சனமாகக் கண்டோம். 25-/ வருடங்களுக்கும் மேலாக திருச்சியில் இருந்தவன் நான். ஒவ்வொரு முறை செல்லும்போதும் நிறைய மாற்றங்களைப் பார்க்கிறேன். பல இடங்களும் அடையாளம் தெரியாதபடி மாறி இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் நிறையவே மாற்றம் கொண்டிருக்கிறது. இப்போதும் ஏதோ கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
திருச்சி இப்போது மிகவும் காஸ்ட்லியாக உணருகிறேன். மிகவும் சாதாரணமான ஓட்டலில் அறை வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு நபர் ஒரு நாள் வெளியில் உணவு சிற்றுண்டிக்காக குறைந்தது ரூ. 250-/ ஆவது செலவு செய்ய வேண்டி உள்ளது. திருச்சி ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ரூ.8-/ க்கு அருமையான சுவையான ஃபில்டர் காஃபி விற்கிறார்கள். இந்த மாற்றம்தான் என்னை மகிழ வைத்த மாற்றம்.

மெயின் பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணத்துக்கு ஜூலை நான்காம் தேதி காலையில் பஸ்ஸில் புறப்பட்டோம்.ஒலி பெருக்கிகளில் வந்த அறிவிப்புகள் கவனத்தைக் கவர்ந்தன.அறிவிப்புகள் பேரூந்து ஓட்டுநர்களை கவனமாக வண்டி ஒட்டும்படியும், சரியான நிறுத்தத்தில் நிற்க வேண்டியும் இருந்தது அறிவிப்புகளைவிட அதை சொன்ன விதம் கவனத்தை ஈர்த்தது. ‘ஓட்டுனர்களே நீங்கள் திறமைசாலிகள்.நல்லவர்கள். அதிகம் வேகம் வேண்டாமே. திடீரென்று ப்ரேக் போட்டு பயணிகளை பயமுறுத்தாதீர்கள். வளைவுகளில் வேகம் வேண்டாம். முந்த வேண்டாம்அறிவிப்புகள் பாராட்டும்படி இருந்தன. அரசு வண்டிகளில் ட்ரைவரின் நேர் எதிரே “ அப்பா, ப்ளீஸ், வேகமாப் போகாதிங்க “என்னும் அறிவிப்பு ஓட்டுனருக்கும் ஒரு குடும்பம் அவரை நம்பி இருக்கிறது என்று அறிவுறுத்துவதாய் இருந்தது திருச்சியில் புறப்படும்போதே கும்பகோணம் வரை டிக்கட் எடுத்துப் போகாதீர்கள். தஞாவூரில் பஸ்ஸை 15 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி விடுவார்கள்.. கால தாமதம் ஆகும். தஞ்சை வரை டிக்கெட் எடுத்து அங்கிருந்து பஸ் மாறிப்போனால் கால விரயத்தைத் தவிர்க்கலாம் என்றார்கள். லக்கேஜுடன் ஏறி இறங்குவதைத் தவிர்க்க நேராகக் கும்பகோணத்துக்கே  டிக்கெட் வாங்கி விட்டோம். எதிர்பார்த்ததைப் போல் தஞ்சையில் 20- நிமிடம் போட்டு விட்டார்கள். ஒன்பதரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்தோம். தஞ்சையைத் தாண்டி கரந்தை வரும்போது திரு.ஹரணியின் இருப்பிடம் இது என்று என் மனைவியிடம் கூறினேன். அவருக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று சின்ன கோபம். காரணங்கள் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் ஹரணி ஐயா ஊர் பழக்கப் படாதவர்கள் பாடு மிகவும் அதிகம் அங்கே. காலையிலேயே சுட்டெரிக்கும் வெயில். பத்தடி போகவென்றாலும் ரூ.40-/ ஆட்டோ ரிக்‌ஷாவுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு வழியாக என் மகன் சொல்லியிருந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு முறை வரும்போதும் அதுவரை காணாத ஆலயத்துக்கு செல்வது வழக்கம் இந்த முறை நாங்கள் சென்றது ........அடுத்த பதிவில் பார்ப்போமே.        

     
         






6 comments:

  1. அனுபவங்கள் தான் நமக்கு எவ்வளவு பாடங்களை க்கற்றுத்தருகின்றன?

    ReplyDelete
  2. மனதில் இருப்பதைக் கொட்டுவதைப் போன்றதான Narration அற்புதம்.

    எனக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதால் அவற்றை ஓர் அன்னியோன்யத்துடன் அனுபவித்து வாசிக்க முடிகிறது. இது தான் வாசிப்பில் கிடைக்கிற இன்பம்.
    இப்பொழுது இப்படியான அனுபவம் என்றால் இன்னொரு தடவை இன்னொரு விதமான அனுபவம்.
    இது தான் நிகழ்வுகளில் இருக்கின்ற உண்மையின் ஸ்பரிசம். 'பார்வை' தொடர்கதையில் இதைத் தான் விவரமாக விரித்துரைக்க இருக்கிறேன்.

    இப்பொழுது சொல்லுங்கள்,
    படித்ததைப் பகிர்வதை விட நாமே எதிர்கொண்டவைகளைப் பகிர்தலில்
    எவ்வளவு நெருக்கத்தை உணர்கிறோம் பாருங்கள்!

    ReplyDelete
  3. @ லக்ஷ்மி,
    @ ஜீவி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    என் அனுபவங்களை நிறையவே
    எழுதி இருக்கிறேன். இளவயது
    அனுபவங்கள், பள்ளிக் கால
    அனுபவங்கள், வேலை தேடிய
    வேலையில் நேர்ந்த என்று வித
    விதமான அனுபவங்களைப்
    பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
    ஆனால் பதிவர்களின் வாசிப்
    பானுபவம்தான் பிடிபடவில்லை.
    OWN EXPERIENCES ARE TRUER
    THAN IMAGINARY ONES.AND
    THAT PERHAPS APPEALS TO
    YOU. நான் வெகு சுமார்
    என்று நினைத்தவை
    அதிகமாக வாசிக்கப்
    படுகின்றன. நன்றாக வந்துள்ளது என்று எண்ணியவை சில நேரங்களில் சீண்டப் படாமலேயே இருக்கிறது. அந்த அனுபவமும் உங்களுக்கும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  4. இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)//

    உங்கள் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சனத்திற்கு வருவீர்களா?
    நாங்கள் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு முன்பு அடிக்கடி ஆனி திருமஞ்சனம் பார்த்து இருக்கிறோம். இப்போது அந்த நேரத்தில் போக முடியவில்லை.

    ReplyDelete
  5. //ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)//

    அவர்களுக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    எங்களுக்கும் இந்த ஜூலை மூன்றாம் தேதியை மறக்கவே முடியாது, சார்.
    அது எங்களின் திருமண நாள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  6. //நான் வெகு சுமார் என்று நினைத்தவை அதிகமாக வாசிக்கப் படுகின்றன. நன்றாக வந்துள்ளது என்று எண்ணியவை சில நேரங்களில் சீண்டப் படாமலேயே இருக்கிறது.//

    வேடிக்கையான முரண்பாடாகத் தெரிகிறது. அவ்வளவு தான்.

    உங்கள் எழுத்துக்கு நீங்கள் தான் முதல் ரசிகர். அதே போல உங்கள் எழுத்துக்கு நீங்கள் தான் ஆத்மார்த்தசொந்தக்காரர். அதனால் எழுத்தும் ரசனையும் உங்கள் அளவிலேயே அமைந்து விடுகிறது. நீங்கள் எழுதியதை திருப்பித் திருப்பி நீங்களே படித்து, நன்றாக வந்திருக்கிறதே என்று மகிழ்ந்தால் போதும். அந்த உணர்தல் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எல்லையில் சிறைப்பட்டு, 'இந்த நன்றாக வந்திருக்கிறதே' மகிழ்ச்சி லேசில் பிடிபடாது. என்னதான் எழுதினாலும் ஏதோ குறை இருக்கிற மாதிரியே தோன்றும். எதை எழுதினாலும், நம்மளவுக்குத் தான் அதுவே தவிர, அதுவே முடிவான முடிவு அல்ல என்கிற உண்மை இன்னொரு பக்கம்.

    அமரர் 'கல்கி' தான் எழுதியதை அச்சுக்குப் போவதற்கு முன்பு, ப்ரூப்பாய் இருக்கிற நிலையில், மீண்டும் மறு ப்ரூப், அடுத்த ப்ரூப் என்று திருத்தித் திருத்தி.. லேசில் அந்த திருப்தி அவருக்கு வராதாம். இதனாலேயே சலிக்காமல் தன் எழுத்தை அச்சுக் கோர்த்த கோவிந்தனை, அவருக்கு மிகவும் பிடித்துப் போய், அந்த கோவிந்தனும் எழுத்தாளர் விந்தனாய் 'கல்கி' அலுவலகத்தில் உதவியாசிரியராகி, அவர் எழுத்தை கல்கி படித்து ரசித்தது தனிக் கதை. தன் எழுத்தாயினும் எழுதும் திறமை கூடக் கூட இந்த திருப்தியின்மை இருந்து கொண்டே இருக்கும் என்பது உண்மை.

    வாசிப்பனுபவமும் இதே மாதிரி தான்.
    எழுதுபவன் வேறு வாசிப்பவர் வேறு அல்ல. வாசிக்காமல் எழுதுகிற காரியத்தை மட்டும் செய்து கொண்டிருக்க முடியாது.
    எழுதுபவரும், கடைசிவரை வாசிப்பவராகவே இருப்பதினால் இரண்டும் ஒன்றரக் கலந்து எழுதுகிறவர் தன் எழுத்துத் திறமையை
    வாசிப்பனுபவத்தோடு மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

    அதனால் தான் எழுத்துவதின் ஈடுபாடும், வாசிப்பு ரசனையும் முடிவிலா நீட்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

    ReplyDelete