Thursday, January 17, 2013

நினைவடுக்குகளிலிருந்து...


                                    நினைவடுக்குகளிலிருந்து.
                                    -------------------------------------



சீரியஸாக ஏதாவது எழுதுவதை விட எதையும் உள்வாங்கிக் கொள்ளத் தேவையில்லாத பதிவுகளே அதிகம் படிக்கப் படுவதாகத் தெரிகிறது. அதிலும் யாரையும் பாதிக்காத சில நிகழ்வுகளை அசை போடலாம் என்று தோன்றுகிறது. என் நினைவுகள் எல்லாம் மிகவும் பழைய நிகழ்வுகள். அதில் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் நினைவுகளில் இவை இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பே நான் நாடகங்கள் போட்டது பற்றி எழுதி இருந்தேன். அவற்றிலிருந்து சில நினைவுத் துளிகள்.


முரசொலி சொர்ணம் என்பவர் எழுதி இருந்த ‘விடை கொடு தாயேஎன்ற நாடகத்தை பெங்களூர் குப்பி தியேட்டரில் நடத்தினோம். ( 1960-களின் முற்பகுதியில்)நாடகம் நடத்துவதில் எங்களுக்கு அப்போது இருந்த பிரச்சனை பெண் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க நடிகைகள்தான். சில ப்ரொஃபெஷனல் நடிகைகள் இருந்தனர். பெங்களுரில் தமிழ் தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. பெரும்பாலும் நடிகைகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவொம். ஆனால் விடை கொடு தாயே நாங்கள் எழுதியது அல்ல. மூன்று நடிகைகள் தேவைப் பட்டனர். அவர்களை ரிகர்சலுக்கு ஒன்று சேர்ப்பதோ  அதிலும் ஒன்றாகச் சேர்ப்பதோ  மிக மிக கடினம். அவர்கள் தொழில் முறை நடிகைகள்,இரண்டு மூன்று ரிகர்சலுக்கு மேல் வர மாட்டார்கள். எல்லோரையும் ஒன்று சேர்த்து ரிகர்சல் நடத்துவது ஒரு திருவிழா நடத்துவது போல் இருக்கும். அவர்களுக்கு கதை சொல்லிப் புரிய வைத்து. அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதை செய்ய வைப்பது, இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. நாடகங்களில் பாட்டு நடனம் என்று எல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களில் சிலர் அபிப்பிராயப் பட்டனர்.கதாநாயகன் வேஷத்தில் நடிக்கப் பலருக்கும் ஆசை. ஆனால் வசனம் சொல்லும் போது ஏகப்பட்ட எக்ஸ்ப்ரெஷன்கள் கொடுக்கும் நடிகர்கள் மற்றவர் பேசும்போது சிலை மாதிரி நின்று விடுவார்கள். கை கால் உடல் எல்லாம் விறைப்பாக வைத்துக் கொள்வார்கள். முதலில் இவர்களை டென்ஷன் இல்லாமல் இருக்க வைப்பதே பெரிய பாடு. இருந்தாலும் கதாநாயகனாக நடித்தவனுக்கு ஒரு காதல் பாட்டுடன் நடனமும் வேண்டும் என்று ஆசை. அவனுக்காகவே “ அன்பே, அமுதே அணங்கே.! ஆறாத காதல் நான் கொண்டதாலே...என்று ஒரு பாட்டு எழுதி ம்யூசிக் அமைத்து என்னவெல்லாமோ செய்தும் திருப்தியாகாததால் அதைக் கைவிட்டோம்.
சில நல்ல வழக்கங்கள் வேண்டும் என்று கருதி, ரிகர்சலுக்கு வந்ததும் எல்லோருக்கும் வணக்கம் சொல்ல வேண்டும் முடிந்து போகும்போது எல்லோரிடமும் விடை பெற்றுப் போக வேண்டும் என்றும் சொல்லி
இருந்தோம். எல்லோரும் கடை பிடித்தனர். அதை கடைப் பிடிக்கும் நடிகை ஒருத்தி ( தமிழ் தெரியாதவள் ) போகும் போது எல்லோருக்கும் வரேங்க “ என்று சொன்னபோது ( அதன் உட்பொருள் விளங்கியதும்), எல்லோரும் சிரிக்க அந்த நிலைமையை சமாளிக்க மிகவும் பாடுபட்டேன் என்பது உண்மை. இன்னுமொரு முறை ஒரு நடிகை வேறு ஒரு நாடகத்தில் “உன்னைப் பதம் பார்க்காமல் விட மாட்டேன் என்று வில்லன் கூறுகிறான் , அதற்கு “அர்த்தம் என்னங்க “ என்று கேட்டபோது எனக்கு வியர்த்து விட்டது. அதில் ஒரு நடிகை. நிறம் குறைவு. கருப்பு என்று சொன்னால் வருத்தப் படுவாள். நாடகம் முடிந்து எல்லோரும் மேக் அப்பை கழுவி சாதாரணமாய் இருக்க . இவள் மட்டும் அப்படியே வீட்டுக்குப் போனாள்

நாடகம் நடத்த செலவுகளை சமாளிக்க , ஏதாவது தியேட்டரை ஒரு காட்சிக்கு வாடகைக்கு எடுத்து,ஒரு பழைய சினிமாவின் ஃபிலிமை வாடகைக்கு வாங்கி , அதைப் பார்க்க டிக்கெட் விற்றுப் பணம் தேற்றுவோம். விடை கொடு தாயே நாடகம் அப்போது கர்நாடகாவில் கல்வி அமைச்சராக இருந்த திருமதி .GRACE TUCKER தலைமையில் நடந்தது. நாடகத்தோடு வீரமணி என்பவரை அழைத்து அவர் உயிருடன் தவளை மீன் எல்லாம் உண்டு அவற்றை வெளியில் எடுக்கும் நிகழ்ச்சியையும் சேர்த்திருந்தோம். ஒரு wholesome entertainment.!

.திருச்சியில் நாடகம் போட்டபோது நடிகையை ரிகர்சலுக்குக் கூட்டிவர, விடியற்காலையில் அவள் வீட்டுக்குப் போய் காத்திருந்த கொடுமையை எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில் இதை எல்லாம் ஸ்போர்டிவ்-ஆக எடுத்துக் கொண்டோம். எல்லாம் நினைவலைகளின் இடுக்குகளிலிருந்து அவ்வப்போது தலை காட்டும்.

திருச்சியில் ‘ வாழ்ந்தே தீருவேன்நாடகம் ( இதைப் பதிவிட்டிருக்கிறேன் ) போட்டபோது அதில் கதாநாயகி கருவுற்றிருக்கிறாள் என்று கூற ஒரு டாக்டர் தேவைப்பட்டார்.அந்த ரோலில் என் மனைவியே வந்து பேஷியண்டை உள்ளே போய் சோதித்து கர்ப்பம் ஆகி இருப்பதாகக் கூறுவார். அதைச் செய்ய வைக்க நான் மிகவும் பிரயத்தனப் பட வேண்டி இருந்தது.
            ----------------------------

இது விஜயவாடாவில் நடந்தது. என் நண்பர் ( அவரும் ஒரு அதிகாரி ) ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை சினிமாவுக்குப் போகலாமா என்றார்.. சொந்த வேலை 
          
என்பதால் நிறுவனத்தின் காரை உபயோகப் படுத்த வேண்டாம் என்று கருதினோம். என் வீட்டிலிருந்து டாக்சியில் போய் மதியம் ஒரு பெரிய ஓட்டலில் உணவருந்தி பிறகு மாட்டினி ஷோவுக்குப் போவது என்று தீர்மானித்தோம். திட்டமிட்டபடி டாக்சி வந்தது. ஓட்டலில் உணவருந்தினோம். சினிமா தியேட்டருக்குப் போய் படம் பார்த்தோம். இடைவேளையின் போது சமோசா. பாப்கார்ன் கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் உட்கொண்டோம். மாலை வெளியில் வந்ததும் தியேட்டருக்கு முன்னால் பஸ் நிறுத்தத்துக்கு என் நண்பர் கூட்டிப் போனார் ‘ பாலு, இதுவரை எல்லாச் செலவுகளுக்கும் நீங்களே பணம் கொடுத்தீர்கள். இனி என் செலவு  என்று கூறி அங்கு வந்த பஸ்ஸில் ஏறி நாங்கள் போகும் இடத்துக்கு பஸ் டிக்கெட் வாங்கினார்.!
                   --------------
ஒரு முறை திருச்சியிலிருந்து விடுமுறை நாட்களில் பெங்களூர் வந்திருந்தேன். மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எங்களை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அவர் வீடு இருந்தது. பஸ் நிறுத்தம் அருகில் கிடையாது. குறைந்த தூரம் என்பதால் ஆட்டோகாரர்கள் வரவில்லை. அழைப்பை ஏற்று லொங்கு லொங்கென்று மதியம் அவர் வீட்டுக்கு நடந்தே சென்றோம். அங்கே போனால் ஏதோ நாங்கள் எதிர்பாராத வகையில் சென்று விட்டதைப் போன்ற பாவத்துடன் எங்களை வரவேற்றனர். மதிய உணவு பரிமாறும் எந்த ஆயத்தமும் இருக்கவில்லை. போதாததற்கு “மாமியார் வீட்டில் விசேஷ விருந்தா என்ற கேள்வி வேறு. சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு  ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். விருந்துக்குப் போகிறோம் என்று சொல்லி விட்டல்லவா வீட்டைவிட்டுக் கிளம்பி இருந்தோம்.!
                   ----------------------------
 
 


 


 



5 comments:

  1. எல்லா அனுபவங்களும் படு ஜோர்.

    ReplyDelete
  2. பழைய‌ நின‌வுக‌ளின் க‌சப்புக‌ள் கூட,‌ பின்பு அசை போடும் போது சுவாரஸ்ய‌மான‌தாகி விடுகிற‌து.
    'கால‌ம்' என்னென்வோ விந்தையான‌ அற்புத‌ங்க‌ளை செய்துவிடுகிற‌து. திரை உல‌க‌க் க‌னவு இருந்ததா/இருக்கிற‌தா பாலு சார்?

    ReplyDelete

  3. நினைவடுக்குகளிலிருந்து சுவாரஸ்யமான நினைவுகள்..

    ReplyDelete
  4. நினைவலைகள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete

  5. எழுத விஷயங்களுக்குத் தட்டுப்பாடு வரும்போது , நான் இருக்கிறேன் என்று நினைவுகள் கை கொடுக்கும். வாசன் சொல்வதுபோல் நடந்த நிகழ்வுகளை ஒரு அன்னியன் போல் இருந்து அசை போடும்போது காழ்ப்பான நிகழ்வுகளும் சுவாரசியமாக இருக்கும். வருகை தந்து கருத்திட்ட டாக்டர் கந்தசாமி, வாசன், இராஜராஜேஸ்வரி, மாதேவி அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete