Wednesday, February 6, 2013

அதிர்ஷ்டசாலிகள். !


                                        அதிர்ஷ்டசாலிகள்
                                         -------------------------
( பொதுவாக சில முதியவர்களின் அங்கலாய்ப்புகளில் இருந்து கிடைத்த கரு)


நாங்கள் என்று சொல்லும்போது ( 1960-க்கு முன் பிறந்தவர்கள் ) அதில் நீங்களும் ஒருவேளை அடங்கலாம். நம்மைப் பற்றி இன்றைய தலைமுறையினர் என்ன நினைத்தாலும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். WE WERE AWESOME. !



நாங்கள் தனிப் படுக்கையில் தனி அறையில் உறங்கியதில்லை. தாய் தந்தையுடன் அவர்கள் படுக்கையில் அவர்களின் கத கதப்பின் சுகம் உணர்ந்து உறங்கியவர்கள்.எந்த உணவும் எங்களுக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. எந்த உணவுக்கும் ‘தடாஇருந்ததில்லை. புத்தகங்களைச் சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை. சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து ஓட்டி விளையாடியது இல்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் விளையாட எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. எங்கள் விளையாட்டெல்லாம் திறந்தவெளியில் நிஜ நண்பர்களுடன்தான் இருந்தது. விளையாட்டுக்கள் எல்லாம் வியர்வை சிந்த வைப்பது. ஆரோக்கியமானது. கண் காணாத நண்பர்களோடோ, முகம் காணாமல் கணினி முன் அமர்ந்து இல்லாத எதிரிகளோடு சண்டையிட்டோ கழிந்ததில்லை. தாகம் எடுத்தால் தெருக்குழாய்களில் தண்ணீர் குடிப்போம். மினெரல் வாட்டர் அல்ல. ஒரே குப்பி ஜூசை நான்கு நண்பர்கள் சேர்ந்து குடித்தாலும் நோய் நொடி எங்களை அண்டியதில்லை. விரும்பிய இனிப்புகளை உண்டாலும் குண்டாகத் தெரிந்ததில்லை. காலுக்குச் செறுப்பு அணியாவிட்டாலும் எந்த பாதிப்பும் வந்ததில்லை. காடா விளக்கு வெளிச்சத்தில் படித்தாலும் கண்ணாடி அணியத் தேவை இருக்கவில்லை. ஊட்ட பானங்கள் தேவை இருக்கவில்லை. பழையதில் நீர் ஊற்றி உண்டே உடல் வலிமையுடன் இருந்தோம். எங்கள் பெற்றோர்கள் பணம் கொடுத்து எங்களைக் கெடுக்கவில்லை. அன்பை ஊட்டியே அவர்கள் அன்பை தெரியப் படுத்தினார்கள்.எங்களுக்கு உடல் நலம் சரியிருக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஓட வேண்டி இருக்கவில்லை. மருத்துவர் எங்கள் இருப்பிடம் வருவார். எங்கள் உணர்வுகளை குறுஞ்செய்திகளாகவோ போலியான முகம் காணாக் குரலினாலோ தெரிவிக்கவில்லை. உணர்வுகளை எழுத்தில் கொட்டி கடிதங்கள் மூலம் உறவாடுவோம். எங்களிடம் செல் போன், வீடியோ கேம், ப்ளே ஸ்டேஷன், கணினி.நெட் சாட் நண்பர்கள் போன்றவை இருக்கவில்லை.நிஜமான நண்பர்கள் இருந்தார்கள். நினைத்த்போது நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். டெலிபோனில் முன் அனுமதி தேவை இருக்கவில்லை. எங்கள் காலத்தில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். தங்கள் செல்வங்களை சமூகத்துக்காக செலவிட்டனர்.

சமூக செல்வங்களை அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. எங்கள் புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும்  அதில் இருந்தவர் வண்ண மயமான நல்ல எண்ணங்களோடு இருந்தனர். நாங்கள் இலவசம் பெறும் பிச்சைக் காரர்களாக இருந்ததில்லை.

இப்போது சொல்லுங்கள் WERE WE NOT AWESOME AND LUCKY.?  

( இந்தப் பெரிசுகளோட பீத்தல்கள் தாங்கலைடா சாமி “ என்றும் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது.)       .              





12 comments:

  1. //இந்தப் பெரிசுகளோட பீத்தல்கள்//

    இதையெல்லாம் யார் இப்போ காது கொடுத்து கேப்பாங்க?

    ReplyDelete
  2. பொற்காலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா...

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இக்காலக் குழந்தைகள் நீங்கள் சொன்ன அனைத்தையும் மிஸ் செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. சொல்லியவிதம் nice.

    ReplyDelete
  5. அய்யா நானும் உங்கள் கட்சிதான்! 1955 – இல் பிறந்தவன். உங்கள் பதிவு, ஆசையே அலைபோலே என்று தொடங்கும் திரைப்படப் பாடலில் வரும் “ இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா? “ என்ற வரிகளை எனக்குள் கேட்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்போதைய காலகட்டத்தில் அவரவர் குடும்ப நிலைமை அவரவர்களுக்கு புரிந்து இருந்தது.

    ReplyDelete
  6. பீற்றல்கள் அல்ல ஐயா, யாவும் பழம்பெருமையின் தீற்றல்கள்! கேட்கக் கேட்க மனதுக்குள் மெலிதாய் பொறாமை எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.... அதே சமயம், அடுத்த தலைமுறையோடு ஒப்பிடுகையில் அல்பமாய் சிறு மனச்சாந்தி கிடைத்துவிடுகிறது.

    பகிர்ந்த யாவற்றையும் இடைப்பட்ட தலைமுறையினர் உணரத்தலைப்படுவர். இளைய தலைமுறையினரோ கேலி பேசி நம்மைப் பச்சாதாபப்படுத்திவிடுவார்கள்.

    ReplyDelete

  7. @ டாக்டர் கந்தசாமி யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பீற்றல்கள் தொடரத்தானே செய்கின்றன.

    @ திண்டுக்கல் தனபாலன். - நல்லவை என்று தோன்றியவை கூறப் பட்டிருக்கின்றன.
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்- அவர்கள் பலவற்றையும் மிஸ் செய்கிறார்கள். மிஸ் செய்யாமல் கூடியவரை பார்த்துக் கொள்ளலாமே.
    @ ஜீவி. காம்ப்ளிமெண்டுக்கு நன்றி.
    @ தி. தமிழ் இளங்கோ. இளமை மீண்டு வருமா? முடுமையே சுகமா.? என நீங்கள் எழுதியதை படிக்கும் போது முதுமையின் சில எண்ணங்களை நான் பதிவிட்டது நினைவுக்கு வருகிறது. முதுமை செய்யாத குற்றத்துக்கு தண்டனையா என்று எழுதியவன் பின் ஒரு சமயம் முதுமை ஒரு வரம் என்றும் எழுதியிருக்கிறேன். சுட்டி கொடுத்தால் உங்களை படிக்கக் கட்டாயப் படுத்துவது போல் இருக்கும். என் இடுகைகளைப் பார்த்தால் கிடைத்துவிடும்
    @ கீதமஞ்சரி. போற்றுபவர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். பகிர்தல் என் உணர்வு. பல நாட்களுக்குப் பின் உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வது உண்மதான் சார், ஆனால் இப்போது பழைய ஆட்களுக்கும் புதிய சாதனங்கள் அவசிய தேவை ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
    நம்மை போல் நம் குழந்தைகள் விளையாட வில்லை என்று சொல்கிறோம், ஆனால் என் குழந்தைகள், என் பேரன் பேத்திகள் எல்லோரும் விளையாடுகிறார்கள். நேரம் ஓவ்வொன்றுக்கும் ஒதுக்கிக் கொண்டு.
    சில குடும்பங்களில் தான் குழந்தைகளை விளையாட விட மாட்டேன் என்கிறார்கள்.

    ReplyDelete
  9. எங்கள் புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் இருந்தவர் வண்ண மயமான நல்ல எண்ணங்களோடு இருந்தனர் ..

    வண்ணமயமான மலரும் நினைவுகள்...பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  10. நானும் இதெல்லாம் அனுபவித்துள்ளேன் நீங்கள் சொல்லிய சில ஆண்டுகள் கழித்தும் ..

    ReplyDelete

  11. @ssk- நீங்களும் அதிர்ஷ்டசாலி (may be exceptionally.)

    ReplyDelete
  12. எழுபதுகளில் பிறந்த எங்கள் வரை நீட்டிக்கிறது ஐயா தங்கள் விவரணை. வளரும் சந்ததிகள் பெற்றதும் இழந்ததும் முற்றிலும் தனிப் பட்டியல். இயந்திர மயமாக்கப்பட்ட உலகில் உணர்வுகளுக்கு ஏது மதிப்பு?! பணத்தை துரத்தும் வாழ்வு.

    ReplyDelete