Saturday, March 30, 2013

மன சாட்சி ( நாடகம் )-6







                     மன சாட்சி ( நாடகம் )
      ----------------------

காட்சி.:-7    இடம்’- ஷீலா வீடு
பாத்திரங்கள்.:-ஷீலா, ரவி, வேலையாள் கணபதி.

( திரை உயரும்போது ஷீலா ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். சட்டென்று ஸ்டேஷனை மாற்ற அதில்)


பிணக்கோலம் காண்பதால் உலகில் மணக்கோலமே இல்லாமல் இருந்து விடுவதில்லையே....இறப்பவர் இறந்து கொண்டே இருக்க மணப்பவர்  மணந்து கொண்டே இருக்கின்றனர். வெட்ட வெட்டத் துளிர் விடும் செடியைப் போல மக்கள் இறக்க இறக்க மனித குலம் துளிர் விடுகிறது. அது இயற்கையின் நியதி. ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து இல்லறம் பேணுவதும், சேர்ந்து வாழ்வதன் மூலம் குழந்தைகளைப் பெறுவதும் இயற்கையின் நியதி. அதை மாற்றி மனித குலம் தழைப்பதை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதும் அதற்கென்று குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, தவறெனத் தோன்றினாலும்......
ஷீலா.:-( மனம் ) அடச் சட்.... எப்பப் பார்த்தாலும் நேரங்காலம் இல்லாம குடும்பக் கட்டுப்பாடு....குடும்பக்கட்டுப்பாடு.... இது தவிர வெறு விஷயமே இல்லையா.....?இங்கே என்னடான்னா குடும்பமே இல்லைன்னு தவித்துக் கொண்டு இருக்கு மனசு.......
“ ஆமா , தெரியாமத்தான் கேக்கறேன். ஏன் தவிக்கணும்.?
“நீயே சொல்லு....! ஒரு நாளாவது உன் கணவனுடன்நீ மனைவிங்கற முறையில தாம்பத்திய இன்பங்களை அனுபவித்திருக்கிறாயா.?
“ எங்கடீ அனுபவிக்கறது.? அவரைப் புரிஞ்சுக்கவே முடியலையே....!
“ எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு. ஆரம்பத்திலேருந்தே அவர் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கார்..எல்லா விஷ்யத்துலயும் உன் கூட இணையறவர் இதுக்கு மட்டும் ஏன் மறுக்கணும். .?
“ ஒரு சமயம் அப்படியும் இருக்குமோ.?
“ சேச்சே அப்படி இருக்காது. இருக்கவும் கூடாது.
கணபதி.:- அம்மா அம்மா......
ஷீலா.:-என்ன கணபதி.....!
கணபதி.:- அம்மா... எனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்மா....
ஷீலா.:- எதுக்கு கணபதி லீவு.?( ரவி வருகிறான்.)
கணபதி.:- எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாவுதம்மா...இன்னும் எம் பொண்டாட்டி வயத்துல ஒரு புழுவோ பூச்சியோ மலரலை. ராமேஸ்வரத்துக்குப் போய் பிள்ளை வரம் வேண்டிட்டு வரலாம்னுதான்.....
ரவி.:- சுத்த நான்சென்ஸ் .....! பிள்ளை பெற்றுத்தான் தீர வேண்டும்னு அப்படி என்னையா ஒரு கட்டாயம்..?அதற்கு ஆண்டவன் தரிசனமாம்.... ஆலய வழிபாடாம்.... ஸில்லி.
கணபதி.:- அதெப்படிங்க எசமான்.....குலந்தழைக்க ஒரு கொழந்தை வேண்டாமா....என் சம்சாரம் என்னமா வருத்தப் படுதுன்னு எனக்கில்ல தெரியும்...! ஏதோ ஒரு நப்பாசை....கோயில் குளம்னு போயிட்டு வந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதான்னு.....
ஷீலா.:- நீ போயிட்டு வா கணபதி... ரெண்டு நாளோ மூணு நாளோ.... நீபோயிட்டு வா

கணபதி.: -சரிங்கம்மா.... நீங்க நல்லா இருக்கணும்.... ( போகிறான் )
ரவி.:- ஷீலா நீ நடந்துக்கற விதம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை.....
ஷீலா.:-ஏனாம்...? ஏதோ ஆசைப்பட்டான்... அனுப்பறேன்.அவனோடு தாபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. நமக்கும் கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகப் போகுது.ஒரு நாளாவது என்னை நீங்க புரிஞ்சுகிட்டு இருப்பீங்களா.? எனக்கும் எவ்வளவு ஏக்கம் இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு....?
ரவி.:- அப்படி என்ன ஏக்கம் உனக்கு...?
ஷீலா.:- ஒரு பெண் வாய்விட்டு வெட்கமில்லாம பதில் சொல்லக் கூடுயதாய் இல்லையே உங்கள் கேள்வி.......
ரவி.:- ஓ...ஓ......ஒரு குழந்தை பெற்றால்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்கார்......இவரென்னடான்னா குழந்தைய ஏன் பெத்துக்கணும்னு கேட்கிறார்னு நினைக்கிறே நீ..............

ஷீலா.:- போதும் நிறுத்துங்க....சொத்தாவது மண்ணாங்கட்டியாவது....இவ்வளவு நாள் நான் உங்களோட வாழ்ந்து என்ன சுகம் கண்டேன்.ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கூடி பெருமையுடன் இல்லறம் பேணும்போது பெண்மையின் மலர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்க. கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது...வாழவும் தெரியணும். வாழவைக்கவும் தெரியணும். போங்க எங்கிட்ட எதுவும் பேசாதீங்க. நான் என்னையும் மீறி ஏதாவது சொல்லிடுவேன். .....போங்க.......
ரவி.:- ஷீலா..... ப்ளீஸ்.....நான் முன்னயே சொல்லியிருக்கேனே.......... மனசளவிலதான் நம்ம கலியாணம்னு....
ஷீலா.:- அதுதான் ஏன்னு கேட்கிறேன்...
ரவி.:- ஷீலா...உடலுறவு மனுஷனைக் கீழ் நிலைக்கு.....
ஷீலா.:- போதும் நிறுத்துங்க.......ஊருலகத்தில நடக்காததா என்ன....?இயற்கையின் நியதியை மாற்றலாம்னு நினைக்கிறீங்களா....என்னைப் பார்த்து யாராவது மலடின்னு சொன்னா..அது உண்மையாய் இருக்குங்களா...?
ரவி.:- ஷீலா டியர்..... ஐ அண்டர்ஸ்டாண்ட் யூ.....! நான் உன்னை எவ்வளவோ எச்சரிக்கை செய்தேன். ‘ இயற்கையின் நியதியை மாத்தலாம்னு நினைக்கிறீங்களான்னு ‘ கேட்டியே..ஷீலா... அந்த இயற்கை என்னைப் பொறுத்தவரை என்னை ஏமாத்திடுச்சே....ஷீலா....உனக்குத் தெரியுமா என் மனசு எப்படி அழுது வடியுதுன்னு...எனக்கு மட்டும் எல்லோரையும்போல் வாழணும்னு ஆசை இல்லையா...குழந்தைச் செல்வம் வேணும்னு விருப்பம் இல்லையா..... .இருக்கு ஷீலா....நிறைய இருக்கு. ..ஆனா....எப்படிச் சொல்லுவேன் ஷீலா......?எதையெல்லாமோ சொல்லி மூடி மறைக்கப் பார்த்தேனே....குழப்பம்தானே மிஞ்சியது........ ஷீலா.....நான் ஒரு ஆண்பிள்ளை....ஆனா...எப்படிச் சொல்லுவேன் ஷீலா......ஷீலா....என் மனசே வெடிச்சிடும் போலிருக்கே......கையாலாகாதவன் கதை அளக்கிறான்னு  என்னை வெறுக்கிறாயா ஷீலா.....?
ஷீலா.:- இப்ப வெறுத்து என்ன பயன்...?
ரவி.:- ஸோ...யூ ஹேட் மீ...?
ஷீலா.:- அதை சொல்லித்தான் தெரியணுமா....?என்ன இருந்தென்ன...? வாழ்க்கையை... அதை ரசிக்க முடியாம செய்த உங்களை.... எல்லாமெ வெறுத்துவிட்டது.....
ரவி.:- குழந்தை இல்லாத ஏக்கம் உன்னை வெகுவா பாதிச்சிடுத்து.என்ன பேசறோம்னே புரியாத அளவுக்கு உன் கண்ணையும் பகுத்தறிவையும் மறைக்குது....
ஷீலா.:- ஷட் அப்.....! குழந்தை இல்லாத ஏக்கமாம்...மண்ணாங்கட்டியாம்....! ஒரு உண்மையான ஆணோடு வாழ்ந்தால் குழந்தை ஏன் பிறக்காது..?ஏன் புருஷன் மனைவி உறவை வெறுக்கற மாதிரி நடந்துகிட்டு இருந்தீங்கன்னு இப்பல்ல..தெரியுது......YOU ARE IMPOTENT…!ஆண்மை இல்லாத உங்களை ஐ ஹேட் யூ....! உங்களை நான் வெறுக்கறேன்...இங்கேயிருந்து போயிடுங்க....கெட் அவே ஃப்ரம் ஹியர்.....ப்ப்ப்ப்ளீ....ஸ்....( மனம் வெடித்து விம்முகிறாள்... நடை தொய்ந்து ரவி தள்ளாடிச் செல்கிறான்.)
-------------------( திரை )----------------------
                                                    ( தொடரும் )                        

  
 

....
 






                    

5 comments:

  1. ஷீலா கோபத்துடன் சொல்வது உண்மை தானோ...? தொடருங்கள்...


    பிள்ளையை தத்து எடுத்துக் கொள்பவர்கள் பல பேர் உண்டு...(உண்மையான புரிதல் கொண்டவர்கள்...)

    ReplyDelete

  2. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கரந்தை ஜெயக்குமார்.
    வாழ்வின் கோபதாபங்களும் இயலாமைகளும் எதிர்பாராத தீர்வுகளும்.......தொடருங்கள். தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  3. வித்தியாசமான திருப்பம்.
    ஒரு ஆணுடைய fundamental and most coveted egoவைத் தட்டுவது dramatic.

    ReplyDelete
  4. இருவர் தரப்பிலுமே சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. திருமணத்துக்குப் பின் அவளாகவே நிலையைப் புரிந்துகொள்வாள் என்ற எதிர்பார்ப்பு ரவியினுள்ளும், என்றேனும் ஒருநாள் அவன் மனத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை ஷீலாவினுள்ளும் தைரியம் கொடுக்க எதிர்மறை முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எடுக்கப்பட்டுவிட்ட முடிவுக்காய் இப்போது வருந்தி என்ன பயன்? சுவைகுன்றாமல் தொடர்கிறீர்கள். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete