Tuesday, May 25, 2021

ஒரு சிறுகதை மீள் பதிவாக

 

ஒரு சிறு க்தை  மீள்பதிவாக

 
ஒரு சிறு கதை

 

“ஹல்லோ

யாரை யார் கூப்பிடுகிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் பொன்னம்மாள்.

“ ஹல்லோ, உன்னைத்தான் கூப்பிடுகிறேன் பொன்னம்மா.

 

தன் மகனே தன்னைப் பெயர் சொல்லி ஹல்லோ என்று கூப்பிடுகிறானே. ஒன்றும் விளங்காமல் அவனைப் பார்த்தாள்.

 

“ உன்னால் என் வேலைக்கு உலை. அதை நீதான் சரிசெய்யணும்” கடுப்பாகச் சொன்ன மகன் அங்கிருந்து போய்விட்டான்

பொன்னம்மாளுக்கு அழுகையாய் வந்தது நாலு இடங்களில் வேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்து வயதாகும் காலத்தில் உடம்புக்கு முடியாமல் தான் வேலைக்குப் போகும் இடங்களுக்கு இனி வர முடியாது என்று தன் மூத்தமகன் மூலம் தெரிவித்தாள். இவள் வேலைக்குப் போகும் இடத்தின் சிபாரிசால் இளைய மகனுக்கு வேலை கிடைத்திருந்தது. தான் வேலைக்குப் போக முடியாது என்று தெரிவித்தவுடன் சினமடைந்த சின்ன மகனின் கோபத்தின் வெளிப்பாடே மேலே சொன்ன ‘ஹல்லோவும் தொடர் பேச்சும்

 

பொன்னம்மாள் தான் கடந்து வந்த பாதையை அசை போட்டாள். எல்லோரைப் போலவும் அவளுக்கும் திருமணம் நடந்தபோது கனவுகள் பல இருந்தது இரண்டு ஆண்மக்களைப் பெற்றவள் எதிர்காலம் குறித்துகனவுகள் காணத் தொடங்கியபோது , முறையான விவாக ரத்து இல்லாமலேயே கணவன் இவளைத் துரத்திவிட்டு வேறொரு பெண் பின்னால் போனான் பொன்னம்மாள் படித்தவளல்ல இருந்த சொந்தபந்தங்களும் வசதி படைத்தவர்கள் அல்ல. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனம் ஒடிந்து போனாள். நல்ல வேளை . உலகில் நல்லவர்கள் சிலரும் இருக்கிறார்கள். இவளுக்கு அடைக்கலம் கொடுத்து தைரியமும் சொல்லி ஆதரவும் கொடுத்தார்கள்..தனி ஒருத்தியாக நாலு இடங்களில் வேலை செய்து குழந்தைகளுக்கும் கூழோ கஞ்சியோ கொடுத்து வளர்த்தாள். அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவும் வைத்தாள். பிள்ளைகளும் பொறுப்போடு வளர்ந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் இரு வேறு துருவங்கள். இருந்தாலும் அன்னையை ஆராதிப்பவர்கள்  தந்தையின் பெயர் சொன்னாலேயே  வெறுப்பவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஏதோ கைவேலையும் கற்றுக் கொண்டார்கள் ஏதாவது சிறு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் சிறு மளிகைக் கடை வைத்து நொடித்துப் போனார்கள். கைபேசியின் வேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு ஒரு சிறு கடை வைத்தார்கள். அண்ணனும் தம்பியும் அணுகு முறையில் வேறுபாடு கொண்டவர்கள். அந்தக் கடையும் நஷ்டத்தில் இயங்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு வேட்டு வைத்தது பொன்னம்மாள் காலையில் இருந்து இரவு பத்துமணிவரை வெவ்வேறு இடங்களில் பத்துப்பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கிக் கூட்டி, துணி துவைத்து  பிள்ளைகள் சிரமம் அனுபவிக்காமல் இருக்க வேலை செய்து ஓடாய்ப் போனாள்.

 

தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலரது தயவால் மூத்தவன் வளைகுடாப் பகுதிக்கு பணி செய்யச் சென்றான். இளையவன் பொன்னம்மாள் வேலை செய்யும் ஒருவர் சிபாரிசால் ஒரு இடத்தில் பணிக்கு அமர்ந்தான்.

 

உடம்புக்கு முடியாவிட்டாலும் பொன்னம்மாள் ஐந்தாறு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல வீடுகளுக்கும் நடந்தே போய் வேலை செய்து வருவாள்.வீட்டில் கஞ்சியோ கூழோ குடித்துப் புறப்பட்டால் வேலை செய்யும் வீடுகளில் கொடுப்பதைக் கொண்டு தன் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொள்வாள். இப்படியெல்லாம் உழைத்து கிடைத்த சம்பாத்த்யத்தில் அரசு  மானியமாகக் கொடுத்த இடத்தில் ஒரு வீடும் கட்டினாள். மூத்தவனுக்குத் திருமணம் செய்ய ஆசைப் பட்டு அவனை வரவழைத்தாள். வந்தவன் தாய்படும் துயரத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டி அவளை வேலைக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளச் சொன்னான் இவளுக்கோ பயம் வேலை செய்து வரும் வருமானம் நின்றுவிட்டால் , ஒருவேளை பிள்ளைகள் உதாசீனப் படுத்திவிட்டால்....இளையவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர்கள்தான் இவளை சக்கையாய்ப் பிழிந்தார்கள் அந்த வீட்டு வேலையை இவளும் விட நிறையவே யோசனை செய்தாள். விடாப்பிடியாக அங்கு இவள் தொடர்ந்து வேலை செய்வதைக் கண்டவர்கள் இவள் அவர்களிடம் பெரிய கடன்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் வேலையை விட முடிவதில்லை என்றும் சொல்லக் கேட்டவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து  தான் யாரிடமும் கடன் பெறவில்லை என்று  நிரூபிக்க வேலையை விட்டாள். அப்போதுதான் கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட மகனின் உரையாடல் நிகழ்ந்தது நல்ல வேளை இளையவன் பயந்த்ததுபோல் அவனது வேலைக்கு பங்கம் வரவில்லை.கிடைப்பதை வைத்து குடும்பம் நடத்துகிறாள். பிள்ளைகளும் தாயை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதுவரை சரி. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையுடன் கூடவே அதற்குப் பின் தன் வாழ்க்கை எப்படியாகுமோ என்னும் கவலையும் கூடவே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் நிதரிசன உண்மையா.?

 ( எந்த ஜோடனையும் இல்லாமல் ஒரு சிறுகதை எழுத நினைத்தேன் சிலரது வாழ்வில் காணும் நிகழ்வுகள் கதையாகிவிட்டது.).

 

 


3 comments:

  1. வாசித்த ஞாபகம் உள்ளது...

    ReplyDelete
  2. கதை யதார்த்தம் நன்றாக இருக்கிறது சார்

    துளசிதரன்

    எப்படியோ பிள்ளைகள் அம்மாவை இதுவரை பார்த்துக் கொள்கிறார்களே. அம்மாவும் தன் காலில் நிற்பதை விரும்புகிறவளாக...திருமணத்திற்குப் பிறகும் பிள்ளைகள் அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கதை நன்றாக இருக்கு சார்.

    கீதா

    ReplyDelete
  3. ஆம்.  மகன்களுக்கு திருமணம் செய்வித்தால் அதன்பின் நிலை வேறுதான்!

    ReplyDelete