ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

மறு பக்கம், இரு பக்கம்....


                                      மறு பக்கம், இரு பக்கம்.
                                      --------------------------------

சில நாட்களுக்கு முன் “ பேசாமல் பெண்ணாய்ப் பிற்ந்து
இருக்கலாம் “ என்று ஒரு பதிவு இட்டிருந்தேன். அதன்
மறு பக்கமாக ஆண்கள் பற்றியும்  பின் ஆண், பெண் இருவர்
பற்றியும் ஆங்காங்கே கேட்டது. படித்தது என சிலவற்றை
ஒருங்கிணைத்து பதிவாய் இடுகிறேன். இதில் எதுவுமே என்
கற்பனை அல்ல.

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.

                                                        இரு பக்கம்.
                                                        ----------------

ஆண்களும் பெண்களும்.
---------------------------------

ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,
சோப், டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.

பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

( ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ).  

.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஏழு )

                   நினைவில் நீ (நாவல் தொடராக )                                                                    
                   ----------------------------------------------
                                    -----  7  ------
         ( இது ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இளைஞனின் குடும்பக் கதை,மனித
                 மனங்களின் உணர்வுகள்,ஆசாபாசங்கள்,அபிலாக்ஷைகள்,அறியாமைகள்
         கோப தாபங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றைக் கதையின் போக்கிலேயே எழுதி
.                இருக்கிறேன் தொடர்ந்து படித்தால் தெளிவாகத் தெரியும்..இருந்தாலும் இதுவரை பதிவிட்ட ஆறு அத்தியாயங்களில் வந்த கதையின் ரத்தினச் சுருக்கம் இதோ.
         
           ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு மூத்த
                தாரத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டாம் தாரத்தால் 
                நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். முதல் இரு பிள்ளைகளும் பெண்ணும் 
               முதல் தார உறவினர்கள் பேச்சைக் கேட்டு அப்பாவுக்கு எதிராக இருக்கிறார்கள்.
               முதல்தாரத்தின் கடைசி பிள்ளை பாபுவிடம் அவருக்குப்பின் அவந்தான் 
                பொறுப்பேற்று  எல்லோரையும் கரையேற்றவேண்டும் என்று உறுதி
                பெறுகிறார். மூத்தவன் சுந்தரம் ஒரு மனஸ்தாபத்துக்குப் பிறகு எங்கோ
                சென்று விடுகிறான். இரண்டாம் மகன் கண்ணன்,வேலையிலிருக்கும்போது
                பாட்டி முதலான உறவினர் சொல் கேட்டு தந்தைக்கு எதிராக இருந்தவன்
                வேலை போன நிலையில். பாட்டியின் வீட்டை விட்டு அகற்றப்படுகிறான். 
                பெண் கமலம் மணம் புரிந்து குழந்தை குட்டிகளுடன் கஷ்ட ஜீவனம் 
                நடத்துகிறாள.


                தன் இறந்த மகளின் இடத்தில் இருக்கும் ஒரு மகளை ரங்கசாமிக்கு மணம்
                முடிக்க முயற்சித்து, அது நடக்காமல் போகவும், யாரும் எதிர்பாரா வகையில்
               ஒரு வேற்றுசாதிப் பெண்ணை மணந்தவரை மன்னிக்க முடியாமல்,அந்தக் 
                குடும்பத்தை எதிர்த்து நிற்பதில் எல்லா வழிகளையும் பாட்டி கையாண்டாள்
.
               பயிற்சி முடிந்து திரும்பி வரும் பாபு,பம்பாயில் எதேச்சையாக அறிமுகமான
               சியாமளாவை பெங்களூர் வீட்டில் சந்திக்கிறான்

               பம்பாயில் இருந்து திரும்பிய பாபு, முதல் வேலையாக, கண்ணன் இருக்கும்
               இடம் சென்று குடும்பம் ஒன்றாயிருக்க வேண்டுகிறான். அங்கு வந்திருந்த 
               பாட்டியின் பேச்சால் பாபுவை அவன் வீட்டில் சந்திக்க மாட்டேன் என்று 
               பாட்டியிடம் தெரிவிக்கிறான். .பாட்டி வேண்டியதும் அதுதானே.)                                     
                                   
                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                 -----------------------------------------------
                                    ------ 7 ------
 பாபு, இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான்வீட்டில் இருக்கும் அரிசி வரும்.உனக்குச் சம்பளம் வரவோ இன்னும் பத்து நாட்களுக்கும் மேலே இருக்கு.ஏதாவது வழி பண்ணணும்,என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் கல்யாணி அம்மா. காதில் விழுந்ததைக் கேட்காத மாதிரி வெளியில் புறப்பட ஆயத்தமானான் பாபு.
      “ விசுவுக்கும் உடம்பு சரியில்லை.சுரம் அடிக்கிறது.அவனானால் சட்டை செய்யாமல் இரண்டு நாட்களாக சுரத்துடன் ஸ்கூல் போய் வருகிறான் டாக்டரிடம் போகலாமென்றாலொ பணமும் இல்லை. அவனும் உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று படுத்துக் கொண்டிருக்கிறான்.

       “ என்னை என்னச் செய்யச் சொல்கிறாய்பாபு கோபம் மீறிக் கேட்டான்.
இப்படிக் கேட்டால் என்னடா பதில் சொல்வது.ஹூம் ! இதைச்செய் அதைச் செய் என்று சொல்லும் நிலையிலா என்னை விட்டுப் போனார் உங்கப்பா.?கல்யாணி அம்மாவுக்குக் கண்ணீர் வந்தது.அதைக் கண்டதும் பாபு, “அரிசி இல்லையென்றால் பட்டினி கிடவுங்கள் .உடம்பு சரியில்லை என்றால் செத்துத் தொலையுங்கள். என் உயிரை எடுப்பதால் அரிசி வருமா, டாக்டருக்குப் பணம் வருமா. ?இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்என்று வெடித்தான்.

           கல்யாணி அம்மாவுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.இருப்பது இல்லாதது அறிந்து கொண்டு தரும் வீட்டுக்குத் தலைவன் இல்லை.அந்த நிலையில் இருக்கும் தான், வளர்த்த பிள்ளையிடமே சுடு சொல் கேட்க வேண்டி இருக்கும் விதியின் கொடுமையினைக் கண்டு குமுறினாள்.கணவன் இருந்தவரை மட்டும் இல்லை என்றில்லாமல் இருந்ததில்லை உள்ளது இல்லாதது என்பவற்றை சம உரிமையுடன் தெரியப் படுத்திஅதற்கேற்ற முறையில் செயல் படுத்த இருவருமாக முடிவெடுக்கலாம்.இப்போது அந்த உரிமை போய் விட்டது யாசகம் கேட்கும் நிலையாகி விட்டது. பெற்ற பிள்ளையானால் பெறுவது உரிமை எனலாம்.என்னதான் இருந்தாலும் பாபு கல்யாணி அம்மா வயிற்றுப் பிள்ளை இல்லையே.உள்ள வேதனை நினைவுகளால் வெதும்பிற்று பாபுவுக்கும் என்னவோ போலிருந்தது. தனக்கு இப்படி அடிக்கடி ஆத்திரம் வருவது ஆக்க வேலை ஏதுமில்லாமல் இயந்திர கதியில் நாட்களைக் கடத்துவதால் தானென்று அவன் எண்ணினான் அன்று கண்ணனின் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை வீசி எறியாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்றும் அம்மாவிடம் கோபப் படாமல் இருந்திருந்தால்,அவருடைய துயர நினைவு இந்த நேரத்தில் எழாமல் தடுத்திருக்க முடியும். தான் இனிமேல் தன்னிலை தவறுவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டான்.

    அம்மா.. அம்மா. நான் இங்கு வந்து ஆறு மாதங்களாகிறது இல்லையா அம்மா. இந்த ஆறு மாத காலத்தில் உங்களை ஒரு நாளாவது பட்டினி என்று இருக்க விட்டிருக்கேனா. எனக்குத் தெரியாதா வீட்டு நிலை. விசுவுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துப் போடா என்றல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். என்னிடமோ பணம் இல்லை என்ற நிலை.அது சுட்டிக் காட்டப் படும்போது ஏற்படும் கோபத்தில் உங்கள் மனசை புண் படுத்தி விட்டேன்..என் அம்மா.! கொஞ்சம் சிரியுங்களேன்என்று கூறி முடிக்கையிலேயே பாபுவால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவனால் தாய்க்கு ஏற்பட்ட வேதனையின் வெம்மையை  கண்ணீரால் நனைத்துக் குளிர வைத்தான்.சிறிது நேரத்தில் தன் வசமானான்.

     “ விசு உடம்புக்கு எப்படி இருக்கிறது.?உன்னால் வரமுடியுமென்றால், பரவாயில்லை என்றால் என் கூட வா . உனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிக்கிறேன் “என்று புதிர் போட்டான். விசுவும் பெரும் உபாதையையும் சிறு தூசாக மதிக்கும் சிறுவன் அண்ணனைத் தொடர்ந்தான்.

    “ எங்கேடா இப்படி... காப்பி கூடக் குடிக்காமல்...கல்யாணி அம்மா முடிக்கும் முன்னே, “ ஆமாமாம். காப்பி. மறந்தே போய்விட்டேன்.என்று திரும்பி வந்து காப்பி அருந்தி புறப்படத் தயாரானான் பாபு.

     சற்று முன்னிருந்த நிலைக்கு இப்போது புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அந்த அமைதியில் அவரவர் எண்ணங்களை அசை போட்டவாறு சில நிமிஷங்களைக் கழித்தனர்.அந்த அமைதியைக் கலைக்காமலேயே சைகையால் தாயிடம் விடை பெற்றுச் சென்றனர் பாபுவும் விசுவும்.

    எனக்குத் தெரியாத ஒன்றை தெரிவிப்பதாகச் சொன்னீர்களே என்னண்ணா அதுவிசு கெட்டான்.
“சொன்னால் சுவை போகும் சங்கதியடா தம்பி .அதைக் கண்டு புரிது கொள்வதே நல்லதடா தம்பி.என்று நாடக பாணியில் கூறி சிரித்தான் பாபு.
    உண்டு உடுத்து உறங்குவதோடு தன் ஆக்க உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க விரும்பிய பாபு அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.கலை மன்றங்களை நாடினான் நாடியவனின் உண்மை உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட பலர் அவனுக்கு உற்சாகமூட்டி மதிப்பும் கொடுத்தனர். சொற்ப காலத்திலேயே பாபுவின் பேச்சென்றால் அதற்கு தனி மவுசு என்று பலர் கூறுமளவுக்கு அவன் புகழ் வளர ஆரம்பித்தது. தன்னுடைய வெளியுலக நடவடிக்கைகளை தன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமலேயே மறைத்து வைத்து இருந்தான் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்து தானே ஆகவேண்டும். தெரிவிக்கும் பணி விசுவுக்குக் கிடைத்தது.

    பாட்டுக்கு  ஒரு புலவன் பாரதிக்கு விழா எடுக்க விழைந்திருந்த தமிழ் கலை மன்றத்தினர் பாபுவையும் பேச அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டத்துக்கு விசுவையும் அழைத்துப் போனான் பாபு.பாரதியின் கண்ணோக்கு “என்ற தலைப்பில் பேச பாபு எழுந்தபோது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.பேச்சுத் துவங்கும் முன்னே இவ்வளவு வரவேற்பு என்றால் அண்ணா பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் விசு. “ இந்த மனிதரா பேசப் போகிறார் “ என்று ஆச்சரியத்தில் நிலை குத்தி நின்றாள் சியாமளா.. இவனென்ன பேசப் போகிறான் என்று அலட்சிய பாவத்தோடு இருந்தாலும் இவனுக்கு இவ்வளவு மதிப்பா என்று பொருமினாள் பாட்டி. இவனுடைய நாடகமெல்லாம் பள்ளியில்தான் செல்லுபடியாகும் என்றிருந்தேனே இங்கும் கூடவா.?இருந்தாலும் என் தம்பி அல்லவா என்று உள்ளத்துப் பொறுமலை உறவால் கட்டுப் படுத்த முயன்றான் கண்ணன்.

       இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் முகத்தில் அமைதி நிலவ, கண்களில் ஒளி படர கொண்ட எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க ஒரே மூச்சாக எழுந்து நின்ற பாபு, கம்பீரமான குரலில், “ பெரு மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, சகோதர சகொதரிகளேஎன்று ஆரம்பித்ததும் சியாமளாவுக்கு விவேகாநந்தரின் நினைவே யெழுந்தது. கூட்டத்தில் அமைதி நிலவியது.

     பாரதியின் கண்ணோக்கு என்ற தலைப்பில் பேச எழுந்துள்ள நான் ,பேசும் முன்பாக உங்கள் அனைவரையும் வேண்டுவது, அவர் விரும்பிய புதியதொரு சமுதாயத்தைத் தோற்றுவிக்க எழுப்பப்படும் அஸ்திவாரத்தின் ஒரு கல் இந்தக் கூட்டம் என்று எண்ணி ,எண்ணியதை எண்ணியதாங்கு செயல் படுத்தும் முயற்சியில் இகழ்ச்சி அடைய விடக் கூடாது என்பதுதான் “ என்று ஆரம்பித்தவன் பாரதியின் எண்ணத்தில் ஏற்பட்ட எழுச்சியை அவர் இயற்றிய பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கினான்.
“ மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதி தனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனித்ருணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப் படும் தன்மையுடைத்தாய்தான் இருக்கும் பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும். ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.


    விழா முடிந்து கூட்டம் கலைய ஆரம்பிக்க இரவு ஒன்பது மணியாகிவிட்டது. விசுவுக்கு கொஞ்சம் தெம்பு இருந்தது என்றால் அது பாபுவின் பேச்சைக் கேட்ட பெருமையால் வந்ததாகும். டௌன்ஹாலிலிருந்து அலசூர் செல்வது எப்படி என்ற எண்ணம் கூட்டம்கலைந்த பிறகு தான் பாபுவுக்கு எழுந்தது. நடந்து செல்வது என்றால் குறைந்தது நான்கு மைல்களாவது இருக்கும். தனக்காவது பரவாயில்லை.விசுவையும் நடத்திச் செல்வது என்பது முடியாத காரியம். பஸ்ஸில் செல்லலாம் என்றால் கையில் காசில்லை. எச்சரிக்கை இல்லாமல் விசுவைக் கூட்டி வந்த பாபுவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.எப்படியும் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் முன்பே யாரிடமாவது சொல்லி இருந்தால் அவர்களாவது ஏதாவது வழி செய்திருப்பார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே விசுவையும் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டியவன் சிறிது தூரம் சென்றதும் சம்பங்கி டாங்க் அருகில் பஸ்ஸுக்காக காத்திருந்த நண்பர்கள் சிலரையும் சியாமளாவையும் அவள் கூட வந்த பெண்மணியையும் ஒரு சமயம் சியாமளாவின் தாயாக இருக்கலாம்- கண்டான். பஸ்ஸுக்கு நிற்காமல் மேலே தொடர்ந்து சென்றவனை தடுத்து நிறுத்தி விளக்கம் கேட்டார்கள். நண்பர்கள். பிடி கொடுக்காமல் பேசிய பாபுவிடம் பர்ஸ் காலி என்பதையறிந்த அவனுடைய ஆருயிர் நண்பன் கான்விடாப்பிடியாக வற்புறுத்தி பாபுவுக்கும் விசுவுக்கும் சேர்த்தே டிக்கட் வாங்கினான்.கானுக்கு பாபுவை நன்றாகத் தெரியும். பாபுவின் உள்ளத்தில் எழும் எண்ணங்களை அவன் வெளியிடாமலேயே உண்ரும் அளவுக்குத் தெரியும். அவ்வளவு அத்தியந்த நண்பர்கள். பஸ்ஸிறங்கி வீடு செல்லும்போதுஅன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளை கான் துருவித் துருவிக் கேட்டு கிரகித்துக் கொண்டான். பாபுவுக்கு அதனால் அந்த பற்றாக்குறை நிலை சமாளிக்கும் பொறுப்பு சுலபமாகி விட்டது.யூ ஆர் எ ஃப்ரெண்ட் இன் டீட், அண்ட் ஸோ  இண்டீட்(You are a friend in  deed  and so indeed.) என்று கூறி கானிடம் விடை பெற்றான் பாபு.
  ---------------------------------------------------------------------
                                             (தொடரும்)    

            .  .                 ;            .  

     ..    
  
   











புதன், 8 பிப்ரவரி, 2012

விருதும் அங்கீகாரமும்.






   

                                        விருதும் அங்கீகாரமும்.
                                        ======================


           சகோதரி சக்திப் பிரபா எனக்கும் அன்பின் அங்கீகாரமாக
வெர்சடைல் ப்ளாகர் என்ற விருதினை வழங்கி இருக்கிறார்.
வலைப் பூவில் VERSATALITY  எனக்கு இருக்கிறதா என்பதே 
பெரிய கேள்விக் குறி. ஆனால் என் எழுத்துக்களில் அது 
இருப்பதாகக் கூறி இருக்கிறார். அதுவே அந்த விருதினை 
அங்கீகரிக்க வைக்கிறது. மேலும் அவரே கூறுவது போல 
அன்பின் அங்கீகாரம் என்றே கருதுகிறேன். மேலும் இந்த
விருது என் வலைப் பூவின் முகவரியையும் என் எழுத்தையும் 
இன்னும் பலரிடம் சேர்க்க உதவலாம் என்பதாலும் இதனை 
ஏற்கிறேன்.

           முன்பொரு முறை திரு. சுந்தர்ஜி அவர்களது “கைகள் 
அள்ளிய நீர் “வலையில் சில வலைப் பூக்களை குறிப்பிட்டு
இவை அவசியம் படிக்கப்பட வேண்டியவை என்று கூறி 
இருந்தார். அதில் என் வலைப் பூவும் அடங்கும். அது நான் 
வலை உலகத்துக்கு அறிமுகமான நேரம். அதையே வலையில் 
எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

         எனக்கு எழுதத் தெரியுமே தவிர கணினியின்/ல் சித்து 
வேலைகள் எதுவும் தெரியாது. ஏன், வலைப் பூவைத் திரட்டி
களில் இணைக்கக்கூடத் தெரியாது. நண்பர் ஒருவர் உதவியுடன்
தமிழ்மணத்திலும் , திரட்டியிலும் இணைத்ததோடு சரி. 

       அநேகமாக என் பதிவுகள் எல்லாவற்றிலும் ஏதாவது செய்தி 
சொல்ல வருவதாகவோ, என் ஆதங்கங்களின் வெளிப்பாடாகவோ
இல்லை இளவயதில் எழுதிய காதல்வரிகளாகவோ, கதைகளில் 
மனித மனங்களின் உளக் கூற்று வெளிப் பாடாகவோ இருக்கும். 

       இந்த விருது கொடுக்கப்படும் போது இரண்டு நிபந்தனைகள்.
விதிக்கப் படுகிறது..ஒன்று:- விருது பெறுபவர் அவருக்குப் பிடித்த
ஏழு விஷயங்கள் கூற வேண்டும். இரண்டு:- விருது பெறுபவர் 
அவர் வகையில் ஐந்து பதிவர்களுக்கு இந்த விருது வழங்க 
வேண்டும். 

       அதன்படி எனக்குப் பிடித்தவற்றை ஏழு விஷயங்களுக்குள் 
அடக்குவது சிரமம் என்றாலும்;
1. அன்பு செய்யப் பிடிக்கும். 
2  அறிவை வளர்க்கப் பிடிக்கும்
3  நல்லன பகிர்தல் பிடிக்கும்.
4 .படிக்கப் பிடிக்கும்.
5. எழுதப் பிடிக்கும்.
6. உறவு கொண்டாடப் பிடிக்கும். 
7.தஞ்சாவூர், கண்ணாடி ஓவியங்கள் வரையப் பிடிக்கும்

      நான் பரிந்துரைத்து விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் பதிவர்
கள் உண்மையிலேயே.பதிவுலக வித்தகர்கள்.இந்த விருதினை 
வழங்குவதில் அவர்கள் பெரும் பெயரை விட நான் அடையும் 
மகிழ்ச்சியே அதிகம். வெறுமே அவர்கள் வலை(முக )வரி
மட்டும் தருகிறேன். மற்றபடி அவர்கள் பதிவுகள் பேசும். இந்த 
விருது மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைவிட 
அவர்கள் மூலம் இந்த விருதின் மவுசு கூடும் என்பதே என் 
தாழ்மையான எண்ணம். 

1..கைகள் அள்ளிய நீர். 
    http://sundargprakash.blogspot.in

2.ஹரணி பக்கங்கள்.
   thanjavur-harani.blogspot.in

3.மதுரை சரவணன்.
   http:// veeluthukal.blogspot.in

4.சாமியின் மன அலைகள்.
   http://swamysmusings.blogspot.in

5.சமுத்ரா. வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு
   www.samudrasukhi.com

இந்த விருது சங்கிலியைத் துவக்கி தொடர வைத்த.
நித்திய கல்யாணி, உஷா ஸ்ரீகுமார், வை. கோபாலகிருஷ்ணன்,
ஷக்திப்பிரபா ஆகியோருக்கு என் நன்றி. 
------------------------------------------------------------------------------- 
.                                                                                                   

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பணம் என்ன செய்தது.?


                                   பணம் என்ன செய்தது.?
                                   --------------------------------

ஒரு சிற்றூரில் தங்குமிடம் தேடி வந்தான் ஒருவன்.
தங்கும் விடுதி ஒன்றில் ஒரு நூறு ரூபாய் தாளெடுத்து
கல்லாக் காரனிடம் அச்சாரமாய்க் கொடுத்து--இடம்
பார்த்துப் பிடித்தால் தங்குகிறேன் என்றான்.

மேசையில் நோட்டைக் கண்டதும் கல்லாக்காரன்
எடுத்து, அதை அடுத்துள்ள கடையில் பலசரக்குப்
பாக்கிக்கு என கொடுத்து விட்டான்.

பலசரக்குக் காரன் கூட்டுறவுக் கடைக்கு
அதைக் கொண்டு அவன் கடனை அடைத்தான்.

கூட்டுறவுக்காரன் அவன் கூத்தாளுக்கு அதைக்
கொடுத்து அவள் பாக்கியை நீக்கினான்

அவளதை விடுதியின் வாடகை பாக்கியெனக் கொடுத்தாள்.

அங்கிங்கு அலைந்த அந்தப் பணம் மீண்டும்
கல்லாக்காரன் மேசைமேல் வந்தது.

அறை தேடிச் சென்றவன் திரும்பி வந்து
இருக்க இடம் திருப்தி தரவில்லை என்று,
கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றான்.

கதை படித்த காசினியோரே
கவனமாய் கருத்தில் கொள்ளுங்கள்.
பணம் என்ன செய்தது.?

உற்பத்திக்கு உதவியதா...
யாராவது அதை சம்பாதித்து ஈட்டினரா.......
ஆனால் பலரது கடன் அடை பட்டது
சம்பந்தப் பட்டவர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இலவசமாய் வந்தடையும் பணமும்
இதைத்தான் செய்கிறதோ..
இப்படித்தான் இல்லாத ஒனறு
ஊக்குவிக்க உதவுகிறதோ.
--------------------------------------------

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் ஆறு )

                     
                         நினைவில் நீ ( நாவல் தொடராக )
                         ----------------------------------------------
                                          (---6---)

               கண்ணன் அருள் வீட்டில் தங்க ஆரம்பித்ததில் முதலில் அருளுக்கு ஆட்சேபமிருக்கவில்லை. என்றாலும் கண்ணனின் பர்ஸ் காலி என்று தெரிந்ததும் ஓரளவு மனத்தாங்கல் ஏற்படத்தான் செய்தது. என்னதான் நண்பன் என்றாலும் காலம் இருக்கிற நிலையில் ,விலைவாசிகள் ராக்கெட் போல் மேலேறும் காரணத்தால் கண்ணன் ஒரு பாரமாகத்தான் இருந்தான்.அருளுக்கு மெல்லவும் முழுங்கவும் முடியாத நிலை. அடித்துப் பேசி கண்ணனை விரட்டியிருக்கலாம். ஆனால் அருளிடம் இருந்த ஒரு நல்ல குணம், எவ்வளவு கெட்ட குணங்களிருந்தாலும் ,நன்றி மறவாத தன்மை ஒன்றுதான். எவ்வளவு நாட்கள் கண்ணன் அருளைப் பராமரித்திருப்பான்.! தன் சகோதரர்கள் மேலுள்ள பாசத்தை ஒரு வீம்புக்காக உதறியெறிந்திருந்தவன், அவர்கள் ஞாபகம் வரும்போதெல்லாம், அருளையும் மற்ற நண்பர்களையும் சகோதரர்களைப் போல் பாவித்து, அவர்களுக்கு உதவுவதை தன் தம்பிகளுக்கு உதவுவதுபோல் எண்ணி சமாதானம் அடைவான். அது அருளுக்குத் தெரியுமோ என்னவோ, கண்ணன் உதவி இருந்ததை மட்டும் அவன் மறக்கவில்லை. அதற்காக கண்ணனை என்றைக்கும் பராமரிக்கும் நிலையிலும் இருக்கவில்லை. மெல்ல பிட்டுப் பிட்டு விஷயத்தை விளக்கினான்.விளக்கியவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது என்றாலும் விளக்கப் பட்டவனுக்கு விரக்தியே மேலிட்டது. விளங்கியதைப் பட்டவர்த் தனமாக ஒப்புக்கொண்டான். முடிவில் அவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் விளைவிக்கும் முறையில், ஒரு ஆட்டோ கராஜில் மெகானிக்காக சேர்ந்தான். இந்த வரைக்குமாவது நிலைமை சமாளிக்கப் பட்டு விட்டதில் அருளுக்கு சந்தோஷம்தான்.



அருளுக்கும் கண்ணனுக்கும் இருந்த பல குணாதிசய வேறு பாடுகளுள் முக்கியமானது, அருளின் நிதானமும் கண்ணனின் படபடப்பும்தான். எந்த நிலையிலும் தன்னிலை மறவாத அருள் பல தடவை அதை மறந்த கண்ணனை சுய நிலைக்குக் கொண்டு வந்தவன். கண்ணனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படச் செய்தால், அவனைப் போல் ஒரு நல்லவனைப் பெறுதல் மிகவும் கஷ்டம். கண்ணன் அன்புக்காக ஏங்கினான். ஏக்கத்தில் எடுப்பார் கைப் பிள்ளையானான். ஏமாளியானான். சுற்றியிருந்தவர்கள் சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப் பட்ட சுரங்கம் என்ற நிலையில் அவனை மதிப்பதாகக் கணக்கும் போட்டான். அவனிடம் எதையும் பொருளாக ஏற்காத பாட்டியையும்  மாமாக்களையும் தெய்வமெனக் கருதினான். ஆனால் பொருளுக்காக மட்டும்தானா உறவு கொண்டாடுகிறார்கள்.?ஒருவனுடைய சன்னமான உணர்வுகளால் அவனை கருவியாக்கி விளையாடுபவர்கள் எத்தனை பேர்கள்தான் இல்லை.?இதைக் கண்ணன் உணர வில்லை. உணர்ந்திருந்தால் அவனுடைய வாழ்க்கையே மாறுபட்டிருந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ கண்ணன் தந்தையைப் பழித்துக் கொண்டான்.அவர் இறந்த பிறகு, அவர் இருக்கும்போது தான் உதவ வில்லையே என்ற உணர்வால் உருக்கப் பட்டான். இருந்தாலும் தன் தவறை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு வீம்பு ,தான் செய்ததுதான் சரி என்று அவனைப் பேச வைத்தது. நாவிலிருந்து வெளிவருவது அவன் நினைப்புதான் என்றறிந்தவர்கள்தானே ஏராளம். ஆக அன்றிருந்த கண்ணந்தான் என்றும் என்று எல்லோரும் நம்பினார்கள்.

 இந்த நிலையில்தான் பாபு பெங்களூர் வந்ததை கண்ணன் அறிந்தான்..அறிவித்ததோ அவன் பாட்டி. பாட்டிக்கு ஒரு பயம். தன் செல்வாக்குக்குக் கட்டுப்பட மறுத்த பாபு, எங்கே மற்றவர்களையும் அதிலிருந்து பிரித்து விடுவானோ என்ற திகில். பாட்டி உலகையறிந்தவள். மனிதர்களை நன்கு படித்தறிந்தவள். எந்த இடத்தில் எந்த சொல்லைச் சொன்னால் அதற்கு மிக அதிகம் சக்தி இருக்கும் என்ற வித்தை தெரிந்தவள். சுருங்கச் சொன்னால் , வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர்களிடம் தன் கருத்தை பதிய வைப்பவள். பாபு வந்து விட்டான். கண்ணனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதால் நொந்திருப்பான்.இந்த நேரத்தில் பாபுவின் பேச்சு கண்ணனுக்குப் புரியும். ஆனால் புரிய வைக்க விடக் கூடாது. அப்படியானால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். சேச்சே ! அது நடக்கவே கூடாது.!

ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யும் செயல்கள்தான் சரி என்ற எண்ணம். அதன்படி செய்யப்படும் செயல்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்க வேண்டும்; இருந்திருக்கும், சரியானதெது, தவறானதெது என்பதை அளக்கும் அளவுகோல் இருந்திருந்தால்.ஒருவருக்குச் சரியானது மற்றவருக்குத் தவறான தாகிறது.இதற்கு ஒரே காரணம் அவரவர்கள் இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையும், வளரும் சமுதாய சட்ட திட்டக் கட்டுப் பாடுகளும்தான். மாறுபட்ட சந்ததியினர் வளர்ந்து வருவது, மாறாமல் வளர்ந்த சந்ததியினரின் செல்வாக்குக்கு இழுக்கு, அவர்களது அட்சியின் பிடிப்புக்குஒரு வழுக்கு.

பாட்டிக்கு ரங்கசாமியின் மீது ஒரு தனி மதிப்பு இருந்தது. ,அவர் பாட்டியின் மகளுக்குக் கணவன் என்றிருந்த வரையில்..மகளோ நான்கு மக்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு தொடங்கு முன்பாகவே சுமங்கலியாகச் சென்று விட்டாள். சென்றவளுடைய இடம் நிரப்பப் பட்டது. ஆனால் நிரப்பப்பட்ட விதம்தான் பாட்டிக்குப் பிடிக்கவில்லை. மகளே சென்ற பிறகு மாப்பிள்ளையிடம் பற்றுதல் குறைந்திருந்தாலும் பேரப் பிள்ளைகளிடம் அன்பு வளர்ந்திருக்கலாம். வளர்ந்துமிருக்கும் என்றுதான் பாட்டி நம்பினாள்.,ரங்கசாமி மட்டும் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கா விட்டால்.

       என்னமாக ஏமாற்றி விட்டார். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எரிச்சலே பாட்டியின் புகைச்சலுக்கு மூலக் காரணம். சென்ற மகளின் இடத்தை இருக்கும் இன்னொரு மகள் நிரப்பட்டுமே என்று பாட்டி விரும்பினாள். விரும்பியதை வெளியிடவும் செய்தா.ள். ஆனால் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் சுபகாரியம் அல்லவா. ! கேவலம் மனிதனின் ஆசாபாசங்களுக்குக் கட்டுப் பட வைக்க முடியுமா.?

ரங்கசாமியாவது வேண்டாம் இல்லை என்று மறுத்திருக்கலாம்.ஆனால் மழுப்பி மறுத்தவர், அதோடு நிற்காமல் வேற்று ஜாதிப் பெண்ணையுமல்லவா இரண்டாம் தாரமாக மணந்தார்.! அதனால் பாட்டியின் மதிப்பும் கௌரவமும் எவ்வளவு குறைந்து விட்டது. ரங்கசாமி செய்த தவறுக்கு அவர் தண்டனை பெற வேண்டும்.எப்படி தண்டிப்பது.? ஏன், அவர் பெற்றெடுத்த செல்வங்கள்தான் இருக்கின்றனவே. அவர்களாலேயே அவரது செய்கை தவறு என்று உணர்த்துவதுதான் சரியான தண்டனை. பாட்டி எந்த அளவுக்கு ரஙகசாமியின் தவறை உணர்த்த நினைத்தாரோ, அந்த அளவுக்கு அவருக்கு அவருடைய செய்கையின் சரித்தன்மை உணர்த்தப் பட்டது. ரங்கசாமி வேண்டுமென்றே  ஒரு வேற்று ஜாதிப் பெண்ணை மண்ந்தாரா.? மனம் லயித்தவர் மணத்தில் முடித்தாரே. ,அதுவே ஒரு பண்பல்லவா. இருந்தாலும் நிகழ்ந்தது நடந்திருக்கக் கூடாது. நடந்ததால் ரங்கசாமி அதன் பலனை அனுபவிக்க வேண்டும். பாட்டியின் கணக்கும் தீர்ப்பும் ரங்கசாமி இருந்தவரை அவரை சஞ்சலப் படுத்தியதைவிட அவர் இறந்த பிறகு கல்யாணி அம்மாவை அதிகமாகத் தாக்கவேண்டும் என்பதே. அதையும் தூள் தூளாக்க முயல்கிறான் நேற்று முளைத்த இந்த பாபு.

அதற்காகத்தான் விரட்டியடித்த கருவியான கண்ணனிடம் பாட்டி செய்தி தெரிவிக்க வந்தாள். அவள் போதாத காலம் அவள் அங்கு இருக்கும்போதேபாபுவும் கண்ணனைக் காண வந்திருந்தான்.
“ வாடா ,பாபு, ரொம்பப் பெரியவனாயிட்டே.பம்பாயிலிருந்து வரதக் கூடத் தெரியப் படுத்தக் கூடாதா.”.என்று கண்ணன் கேட்டான்.

“நான் கடிதம் போட்டிருந்தேன் அண்ணா.ஆனால் நீதான் விலாசமிட்ட இடத்தில வாங்கக் கூட இருக்கலை போலிருக்கு. வந்தவுடன் விஷயம் தெரிந்ததும் உன்னைப் பார்க்க  நேரிலே வந்துட்டேன்.வந்த இரண்டு நிமிடங்களிலேயே பாபு தன்னை உதாசீனப் படுத்தி விட்டான். உதாசீனப் படுத்தப் பட்டதாக கண்ணன் நினைக்கக் கூடாது என்று துரிதமாகக் கணக்குப் போட்ட பாட்டி,நீ கண்ணனுக்கு எழுதிய கடுதாசி இன்னக்கிதான் கிடச்சுது.உடனே சேதி சொல்ல வந்தேன்.சௌக்கியமா இருக்கியா பாபு.என்று துணிந்து பொய் சொல்லிக் கேட்டாள் பாட்டி.

வலுவிலே வந்து பேசுபவரை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு பாபுவுக்கு யாரிடமும் வெறுப்பு கிடையாது.மனிதர்களை அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக வெறுக்கும் குணத்தை விட அவர்கள் மீது பச்சாதாபமே மேலிடும் வர்க்கத்தவன் ஆதலால் அவனும் பாட்டி கேட்ட கேள்விக்கு “சௌக்கியம் “ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.

     கண்ணனின் க்ஷேமலாபங்களை விசாரித்தான்.கண்ணனும் விட்டுக் கொடுக்காமல் பேசினான்.அண்ணா ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.சிதறி இருக்கும் நம் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். என்ற ஆசையால் உந்தப்பட்டு ஓடோடி வந்திருக்கிறேன். “

      “    “என்னவோப்பா, நீ இந்த மாதிரிஒரு பாசத்தோட பேசறதக் காணக் குடுத்து வைக்காத உன் அம்மா போயிட்டா. உங்களையெல்லாம் பெரியவாளாப் பார்க்கும்போது என் பாழும் மனசு உங்க அம்மாவை நெனச்சுப் புலம்பறது. ஏனோ தானோன்னு வளர்த்தின உங்க அப்பாவும் போயிட்டான் இனிமேயாவது உங்களுக்கு நல்ல காலம் வரட்டும்.கிடைக்கிற சம்பளத்தை செட்டு சிக்கனமாச் செலவு செய்து,மிச்சமிருக்கிறத அழகாச் சேத்து வெச்சுகூடிய சீக்கிரத்திலேயே குடியும் குடித்தனமுமா நீங்க வாழறத என்னக்கித்தான் பார்ப்போமொன்னு இருக்கு. “

     பாட்டி உண்மையாகவும் போலியாகவும் பேசியதிலும் உள்ளர்த்தம் இருப்பது பாபுவுக்குப் புரிந்தது.முகம் கடுமையாக மாறியது.. கண்ணனுக்குப் புரியவில்லை. கலங்கி விட்டான்.

      “ஆமாண்டா பாபு, இப்பத்தான் என் மனசு ஏதோ நிம்மதி அடைந்த மாதிரி இருக்கு.பாட்டி சொல்றது எவ்வளவு உண்மை. “என்றும் கூறினான்

அண்ணா, நிம்மதி அடைந்த மாதிரி தோன்றுவது தப்பில்லெ. உண்மையாகவே நிம்மதி அடைய முடியும். போயிட்ட அம்மாவப் பத்தி பாட்டி புலம்பறா.அது அவங்களுக்குப் பொருந்தும். ஆனா, நினைவு தெரியறதுக்கு முன்னாடி போன அம்மாவை நினைத்துப் புலம்பறத விட நம்மை வளர்த்து ஆளாக்கின ,இருக்கிற அம்மாவப் பத்தி எண்ணறதும் அதிலே நிம்மதி அடையறதும்தான் நமக்குப் பொருந்தும். அப்பா இருக்கிற போதில்லாத நல்ல காலம் அவர் பொன பிறகாவது நமக்கு வேணும்னா, அவர் விட்டுப் போயிருக்கிற கடமைகளை தொடர்ந்து செய்யறதுலதானே வரும். அதுக்குத்தான் நானும் துடிச்சுக் கிட்டு இருக்கேன்.பழசை எல்லாம் மறந்து என் கூட வா அண்ணா.வாழவும் விடாம சிந்திக்கவும் விடாமபிரிச்சுப் பார்க்கற இந்தப் பாழும் சொந்தங்களை நம்பாதே.அண்ணா! நம்பி இதுவரை வாழ்ந்ததுல உனக்கு உண்மையா மனத்திருப்தி ஏற்பட்டிருக்கா? சொல்லு அண்ணா.!கண்களில் நீர் மல்கக் கெஞ்சினான் பாபு.

  
      “அப்பவே நான் சொல்லலயா கண்ணா..நீ ஏமாளி, நீ இப்பொ சுதந்திரமா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கிறது, அந்த நீச சாதிப் பொம்மனாட்டிக்குப் பிடிக்கலை. உன்னைச் சுரண்ட பாபுவை அனுப்பி இருக்கிறாள் பாபுவும் பாவம்..ஏதோநல்லது செய்யறதா தவறா எண்ணிட்டு பாம்புக்குப் பால் ஊத்தறான்.அது போறாது அதுக்கு மேல தன்னால முடியாதுன்னு தெரிஞ்சு, அவ பேச்சைக் கேட்டு உன்னையும் அந்தச் செயலை செய்யக் கூப்பிடறான்.நீ போவியோ என்னவோ அது உன் இஷ்டம்.ஆனா நீ ஒரு ஏமாளி உன்னை இப்படி எல்லாரும் படுத்தறத நெனச்சுதான் எனக்குப் பாவமா இருக்கு. “ பாட்டியும் விட்டுக் கொடுக்காமல் முந்தானையால் கண்ணைத் துடைத்து ,மூக்கை சிந்தி புலம்பினாள். கண்ணனுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. மதில் மேல் பூனையை ஒத்ததாய் இருந்தது அவன் நிலை. இல்லை இப்படியும் சொல்லலாம். ஓட்டுக் கேட்க வந்த இரண்டு வேட்பாளர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற புரியாத நிலை படைத்த பாமரனாய் நின்றான்.

இல்லை அண்ணா இல்லை. உன்னை ஏமாளி என்று அறிந்தவர்கள் இவர்கள்தான்.அதனால் நீதான் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறாய்.உன்னை இதுவரை சுரண்டியது யாரண்ணா.? என்றைக்கு நீ படிக்கும்போது லீவில் இவர்கள் வீட்டுக்கு வந்து போனாயோ அன்றையிலிருந்துதானே அண்ணா உனக்கு அம்மா மேல் கோபம். அதுவரைக்கும் என்னைவிட நீயும் அவர்கள்மேல் அன்பு செலுத்த வில்லையா...அவர்களைப் பராமரிக்க முடியாம உன்னை உதவிக்கு அழைக்கிறதா யாராவது சொன்னா அதைப் பொல ஒரு அபாண்டம் வேற இருக்காது. உனக்கு வேலை போன பிறகு எவ்வளவு நாள் உன் பாட்டி வீட்டில் இருந்தாய் அண்ணா... உனக்கு புத்தி சொல்ல எனக்கு வயசாகலை. நம் குடும்பம் இப்படி சின்னாபின்னமாக இருக்கிறத எண்ணி நொந்துபோய் உன்னைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் பார்க்க விரும்பாதவங்களையும் பார்த்தேன். என் வாதம் உனக்குப் புரியுமா புரியாதா என்பது எனக்கு நாளைக்குத் தெரியும்..புரிஞ்சிருந்தா நாளைக்கு நீ நம் வீட்டுக்கு வருவாய். இல்லையென்றால் புரிந்தபிறகு கட்டாயம் வருவாய். பாட்டி.. இப்படி உங்களைக் கூப்பிடவே வெட்கமா இருக்கு.சொந்தத்துக்காக அல்ல. உங்க வயச நெனச்சு கூப்பிடுகிறேன் அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். உங்களுடைய தீவினைகளுக்கு நன்றாக தெய்வம் பதில் சொல்லும். சாகிற சமயத்திலாவது உங்கள் தவறு உங்களுக்கு புரியணும்.ஆண்டவன் அதைப் புரியவும் வைப்பான். உங்க பெண் விட்டுப் போன இடத்திலே இருக்கிற பெண்ணை உங்க பெண் மாதிரி நீங்க நினைத்திருக்க வேண்டியதுதான் முறை. அதைச் செய்யாத நீங்கள் ....எனக்கு எப்படி சொல்வதுன்னே தெரியலே. அண்ணா நான் வரேன் “...ஆத்திரம் கோபம் வெறி மேலிட வார்த்தைகளை வீசி எறிந்துவிட்டுச் சென்றான் பாபு.

 பார்த்தியாடா, பார்த்தியாடா.. அந்தப் பிள்ளை எப்படி எல்லாம் பேசிட்டுப் போறதை

      “இது ஒண்ணும் பிரமாதம் இல்லை பாட்டி. இதை விடக் கேவலமா எங்கப்பாவை நான் பேசி இருக்கேன் இதுக்கே நீ இப்படி எண்ணினா, எங்கப்பா எப்படி வருத்தப் பட்டிருக்கணும்.ஹூம்.!எனக்கு எதுவுமே புரியலை. பாபு பெசியதை கேட்டு என் மனசு ரொம்பவே குழம்பிக் கிடக்கு. “ என்றான் கண்ணன்.
.
       “ நீ பாவம்டா கண்ணா....உன்னை யாருக்கும் தெரியாது. எனக்கு நன்னாத் தெரியும். நீ சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு. ஏதாவது மனசுக்கு கஷ்டம் வந்தா என்னை நெனச்சுக்கோ.எல்லாம் சரியாயிடும்.பரிவுடன் கண்ணன் தலையைக் கோதியபடி ஆதரவளித்தாள் பாட்டி.. பாட்டிக்குத்தான் கை வந்த வேலையாயிற்றே அது..!போலி அன்பில் கட்டுப்பட்டு கண்ணன் பாட்டியைப் போலொருவர் வேறில்லை என்று நினைத்தான்.


கண்ணனுக்கு பாட்டி தன்னை மறைமுகமாக வீட்டை விட்டுப் போ என்று சொன்னது கூட தன் நலனில் அக்கறை கொண்டு சொன்னதாகத்தான் இப்போது எண்ண முடிந்தது. இல்லையென்றால் தன் இடம் தேடி பாட்டி வர வெண்டிய அவசியம் இருந்திருக்காதே. பாபுவோ பாவம் ஏமாளி.. என்னைப்போய் ஏமாளி என்கிறானே. பாட்டி அப்படிச் சொல்வது நான் ஏமாந்து விடுவேனோ என்ற பயத்தால்தான்.பாட்டியை ஏமாற்றக் கூடாது. பாபு மேடையில் உணர்ச்சி வசப் பட்டுப் பேசுவது போல் பேசுகிறான். அவன் ஒருமேடை நடிகன்தானே. எத்தனையோ நாடகங்கள் நடத்தி இருக்கிறான். இப்போது உணாமையாகவே நாடகமாடுகிறான். இவன் நடிப்பில் ஏமாந்து நாளை நான் அவள் வீட்டுக்கு அதை நம் வீடு என்கிறானே.போக வேண்டுமாம். நானா போவேன்? எனக்கா தெரியாது.?பாட்டி சொல்லும் முன்பாகவே கண்ணன் முடிவெடுத்து விடுகிறான். எடுத்த முடிவைப் பாட்டியிடம் தெரியப் படுத்தவும் செய்தான். புன்னகைப் பொலிவுற பாட்டியும் விடை பெற்றாள்..
------------------------------------------------------------------------------------------------------------ ( தொடரும் )- , 





























































 


வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

எனக்கென்ன செய்தாய் நீ.? .

               
                                 எனக்கென்ன செய்தாய் நீ.?
                                 -----------------------------------


          நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா, எனக்கொரு ஐயம்எனக்குனைப்
    பிடிக்கும் ,உனக்கெனைப் பிடிக்குமா.?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்ற்வருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    கந்தா.! உன் புராணம் பாட வந்த
    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு
    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி
   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டு மனம் பிதற்றும்
    எனக்கென்ன செய்தாய் நீ .?

   முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த
   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்
   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை
   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்
   எனக் கேட்பதைப் பொறுத்தருள்வாயே. ! 
-------------  -----------------------------------------------------


( 2011-ம் வருடம் மார்ச் மாதம் எழுதிய பதிவு
 “முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் “),


(” ஐயோ” என்பது எமனின் மனைவி பெயர்) 







புதன், 1 பிப்ரவரி, 2012

நினைவில் நீ ..( அத்தியாயம் ஐந்து )


                                   நினைவில் நீ..( நாவல் தொடராக )
                                    ---------------------------------------------

                                                     ----- 5 ------

        

   அம்மா அண்ணா வர நேரமாயிடுத்து. நான் ஸ்டேஷனுக்குப் போய் கூட்டி வருகிறேன் “ என்றான் ராஜு.
 “அம்மா, அண்ணா கார்ல வருவானா,நடந்து வருவானா. என்று கேட்டான் சந்துரு.
 “ போடா,அண்ணா கார்லதான் வருவான் இல்லியா விசு. “என்றான் ரவி.
 “ ஏண்டா பறக்கறே.அண்ணா ஆட்டோல வந்தாலும் வரலாம்என்றான் விசு, எதையும் தீர யோசித்துப் பேசுபவன் போல.
கல்யாணி அம்மாவுக்கு கை ஓடவில்லை, கால் ஒடவில்லை. இயந்திர கதியில் வேலை செய்து கொண்டிருந்தவள் ஓரோர் சமயம் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆறப் போட்ட காயத்தை ஆற்றும் பணியைக் காலம் செய்து கொண்டிருந்தது .பூராவும் ஆற முடியாத காயம். ஆறினாலும் அதன் வடு அதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அதனுடே சில பசுமையான எண்ணங்களும் தோன்றத்தான் செய்யும். இந்தப் பசுமை நினைவுகள்தான் காயத்தையும் வடுவையும் மறக்கச் செய்கிறது.

     டேய் ராஜு ,சீக்கிரம் போடா நீ போறதுக்குள்ள வண்டி வந்துடப் போறது,என்று கூறியவளை , :என்ன மாமி வீடே அமர்க்களப்படறது. யார் வரா.?என்ற குரல் திரும்ப வைத்தது. திரும்பியவளின் பார்வையில் என்றுமில்லாத தீட்சண்யத்தை உணர்ந்தாள் சியாமளா.

      “ என்ன மாமி ,அப்படிப் பார்க்கறேள். நாந்தான் சியாமளி. “
“இல்லையடி, சியாமளி. உன்னை எவ்வளவோ தடவைப் பார்த்திருந்தாலும், இன்னிக்கிப் பார்க்கறப்போ ஏதோ ஒரு கணக்குப் போட்டது என் மனசு.அது சரி என்ன இன்னிக்கிக் கார்த்தாலயே வந்துட்டியே

       எப்பவும்போல பள்ளிக்கூடம் முடிஞ்சு போரப்போதான் உங்களப் பார்க்கணுமா.?என்னவோ இன்னக்கி காலையிலேயே உங்களைப் பார்க்கணும்போல இருந்தது.வந்துட்டேன். ஆமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலியே. இன்றைக்கு யார் வரா... என்ன டிபன்...அடடா, பூப்போல இட்லியா...யாருக்கு என்ன சமச்சாரம். ?

      இன்னும் கொஞ்ச நேரத்தில் பாபு வந்துடுவன்.அவனுக்காக ஸ்பெஷலா இட்லி பண்றேன். நீயும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல். நல்லாயிருக்கா.?

      “ என்னவொ காந்தி ,நேருன்னு சொல்ற மாதிரி மொட்டையா பாபுன்னா யாருக்குத் தெரியும்.? நீங்க பாபுன்னதும் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வந்தது.அவர் பம்பாயில இருக்காராம். இந்தப் பக்கத்து ஆள்தான் போலிருக்கு. “

     இந்த பாபு என் பிள்ளை.,உனக்குத் தெரியாது. நீ பார்த்ததில்லை. நீ சொல்ற பாபு யாரோ எனக்குத் தெரியாது.

      “உங்க பிள்ளையா....அப்படின்னா ராஜுவுக்கு மேலயா...எனக்குச் சொல்லவே இல்லையே.

          எல்லாத்தையும் சமயம் வரும்போதானேம்மா சொல்லலாம்.உனக்குத் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம். பாபு என் மூத்த பிள்ளை .இப்போதைக்கு இது போதும் பின்னே சொல்றேன்.:சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு சொல்லிக் கொள்ளாமலேயே கண்களில் நீர் வந்து விட்டது. துடைத்துவிட முயன்றவள் துடைக்கத் துடைக்க ஆறாகப் பெருகியது கண்ணீர். சியாமளாவுக்கு எதுவும் விளங்க வில்லை. கேட்கக் கூடாத ஏதோ ஒன்றைக் கேட்டு கல்யாணி அம்மாவைக் கலங்க வைத்துவிட்டோமோ என்று சஞ்சலம். பதட்டத்துடன் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
 
          “ ஆமாம் சியாமளி..என் பிள்ளை. என் மூத்த பிள்ளை பாபு. அவன் வருவதைக் காணக் கொடுத்து வைக்காமல் அவர் போயிட்டார். இந்த நிலையிலே பாபு வரதப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையிருந்தது. அவரும் இருந்திருந்தா.....

     பேச்சை மாற்ற விரும்பிய சியாமளா, “ அப்போ இன்னிக்கு சந்துருவும் ரவியும் ஸ்கூலுக்கு மட்டமா.?என்றாள்.

      மட்டமில்லை டீச்சர் .இன்னிக்கு லீவு..அண்ணாவே லீவ் லெட்டர் எழுதித் தருவார் என்ற சந்துரு தொடர்ந்தான்.அம்மா முகம் கழுவிக்கட்டுமா.? புதுச் சொக்காய் தரியாம்மா

     “ புதுத் துணி போட்டு எங்கே போறீங்க.

     “ எங்கயும் போகலை டீச்சர். அண்ணா வரும்போது அழகா இருக்க வேண்டாமா... அதுக்குத்தான்.

     சியாமளா சந்துருவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றாள். அவள் வாசலில் இறங்குவதற்கும் பாபுவும் ராஜுவும் ஆட்டோவிலிருந்து இறங்கவும் சரியாயிருந்தது. பாபுவைப் பார்த்த சியாமளா ஒரு கணம் திகைத்து விட்டாள். பாபுவும் சியாமளாவைப் பார்த்து ஒரு கணம் தயங்கினான். வெளியே போகக் கிளம்பிய சியாமளாவை ஏதோ ஒரு எண்ணம் பின் தங்கச் செய்தது. சிறிது நேரம் பிரிந்தவர் கூடிய களிப்பு நிலவியது. பம்பாயிலிருந்து அல்வா வாங்கி வந்திருந்தான் பாபு. அதை எல்லோருக்கும் கொடுத்தவன் சியாமளாவை கவனித்துஇவர்களை உனக்குத் தெரியுமா அம்மா “ என்று கேட்டான்.

      “ தெரியுமாவாவது... இவள் தான் சியாமளா. சந்துரு ரவியோட டீச்சர். இதாம்மா என் மூத்த பிள்ளை.

      “ நான்சொன்னவரும் இவர்தான் மாமி “ என்றாள் சியாமளா.

      “ உங்களுக்கு ஒருவரை ஒருவர் முன்னமே தெரியுமா ?

      “ தெரியும்னு சொல்றத விட ,பார்த்திருக்கோம் என்பதுதான் சரியம்மாஎன்றான் பாபு.

     அவனுக்கு ஏனோ சியாமளாவை முன்பே தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் அவ்வளவு விருப்பமிருக்கவில்லை. சியாமளாவும் அதை அவ்வளவாக விரும்பி இருக்க மாட்டாள் .காலம் செல்லும் கோலத்தில் ஒருஆணும் பெண்ணும் பார்த்துப் பேசினாலே கதைகள் பல கட்டிவிடும் உலகில் அதை நன்கு புரிந்து கொண்டிருந்தன இரண்டு ஜீவன்கள் .ஆனால் பாபு சொல்லாததும் சியாமளா விரும்பாமலிருப்பதும் அவர்கள் அத்தனை அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் என்ற காரணத்தால் அல்ல. ஆனால் சமயங்களில் சரியாக நடப்பிக்கும் ஒரு உள்ளுணர்வுக்குக் கட்டுப் பட்டவர்கள். அப்போது நடந்த சிறிய அறிமுகப் படலமும் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தைகளும் இதையே காட்டின. சிறிது நேரத்தில் சியாமளா விடை பெற்றுச் சென்றாள்.

        பாபு எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வளர்ந்திருக்கவில்லை.ஆனால் அதே சமயம் யாரும் அதிக கஷ்டத்துக்கு உள்ளானவர்கள்போல் தோன்றவில்லை.ஒரு அதீதமான திருப்தி ,சோபை, இவை உள்ளத்திலிருந்து எழும்புகிறது. அதனை முகம் காட்டுகிறது. கல்யாணி அம்மாவும் பிள்ளைகளும் இருந்திருக்க வேண்டிய பயங்கர நிலையைவிட, இருக்கும் ஓரளவு சாதாரண நிலையில் திருப்தி அடைந்தனர். ஒன்றுமே இல்லாதவனுக்கு ஒரு வேளைச் சோறு பெரிதல்லவா.? இந்த நிலைக்காவது தன்னை விட்டுச் சென்ற கணவனை எண்ணி விம்மியது அவள் உள்ளம். ஆனால் இதே நிலை நீடிக்க வேண்டுமானால், இனி அதை நீடிக்கச் செய்வது பாபுவின் கையில் தான் இருக்கிறது. அதையேதான் ரங்கசாமியும் அறிந்திருந்தார். ஆனால் உலகில் ஒருவரையே நம்பி ஒருவரை ஆண்டவன் இருக்க விடுவதில்லை. நிலைமை அப்படியிருக்குமானால் எண்ணற்ற குடும்பங்கள் வேரோடு சாய்ந்திருக்கும்.

    கஷ்டமும் நஷ்டமும் வாழ்வின் சோதனைகள். மலைபோல் நம்பி இருக்கப் படுபவர்கள் பொசுக் என்று போய் விடுவதால், நம்பி இருக்கிறவர்கள் வாழாமல் போய் விடுவார்களா என்ன.? இந்த எண்ணம் உதவுபவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். ஆள்வதும் அனுபவிப்பதும் நம் செயல்கள் அல்ல. ஆனால் பகுத்தறிவு கொண்ட நாம் அதனை பரிபூரணமாக உபயோகித்தால் குடும்பங்கள் செழிக்கும் சமுதாயம் சீர்திருந்தும், நாடு வளரும்.

      பாபு கல்யாணி அம்மாவையும் அவன் தம்பிகளையும் ஆதரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான் என்றால், அது அவன் பகுத்தறிவை சுயமாக உபயோகித்தறிந்த முடிவின் பலனாகும்.இப்படி ஒரெயடியாகக் கூறுவதும் பாபுவின் குணத்துக்கு அவதூறு விளைப்பது ஆகும். தாய் தம்பிகள் என்ற பாசம், தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி மேலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் சம நோக்குடன் ஆராயும் குணம் ஆகியவற்றின்  கூட்டு பலன் , அன்று முதல் கல்யணி அம்மாவின் மன சஞ்சலத்தை ஓரளவு போக்க உதவியது.அதாவது பற்றுகோல் ஒன்று கிடைத்தது.

       பாபுவுக்கு எண்ணற்ற ஆசைகள். சிதறிய குடும்பத்தை ஒட்டுவிப்பதே தன் முதல் கடமை என்று கருதினான். தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தொழிற்சாலைக்கு மாடாக உழைக்க எண்ணினான். பம்பாயில் குடியரசு தின விழாவில் ஏற்பட்ட சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்க விரும்பினான்.

      உயர்ந்த எண்ணங்களும் பரந்த உள்ளமும் களங்க மற்ற உள்ளுணர்வுமே பாபுவிடம் இருந்த கருவிகள். அவன் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததோ.........உறவின் பூசலும்  ஏசலும் , உண்மை உழைப்பை ஏமாளித்தனமாகக் கருதி நசுக்கும் நய வஞ்சக சமுதாயம், ஜாதி மதப் போர்வைக்குள் புகுந்து வெளிப்படும் உலுத்தர்கள் கூட்டம்......அம்மம்மா......ஏராளம், ஏராளம்..!
----------------------------------------------------------------------        
                                                                                                        ( தொடரும் )