Friday, May 4, 2012

வேர் எங்கே....?


                                                     வேர் எங்கே.......?
                                                     ---------------------


அந்நிய  நாடுகளில் வசிப்பவர்களை ( அடிமைகளாக இழுத்துச் செல்லப் பட்டவர்கள், அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள், நாடு கடத்தப் பட்டவர்கள், மற்றும் தன்னிலை உயர்த்திக் கொள்ளத் தானாகச் சென்றவர்கள் ) எவ்வாறு அழைப்பது..? வேரற்றவர்கள் என்றா, வேரறுந்தவர்கள் என்றா, சுயம் இழந்தவர்கள் என்றா, சுறுசுறுப்பானவர்கள் என்றா,? ஏதோ ஒரு கட்டுக்குள் அடங்குகின்றனர். தங்களால் கட்டுப் படுத்த முடியாமல் கடல் கடந்து சென்றவர்களைப் பற்றி இப்போது விவாதிக்க வில்லை. தாய் நாட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றுக்காக, அயல் நாடுகளில் அடைக்கலம் நாடும் நம் நாட்டு மக்களைப் பற்றியே நினைத்து இதை எழுதுகிறேன்.

வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத போது,திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப, பொருள் சேர்க்க அயல் நாடுகளுக்குப் போகிறவர்களில் பலர், தங்கள் சுயத்தை இழந்து, அங்கேயே நிரந்தரக் குடிகளாக மாறுகின்றனரே, அவர்கள் நிலையிலிருந்து என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் அப்படிச் சென்ற சிலர்,இங்கு வரும்போது நடந்து கொள்ளும் விதம் பற்றி சில சாம்பிள்கள்,

தாய்நாட்டை தரிசனம் செய்ய வந்தவர் சிலரை சந்தித்திருக்கிறேன். அமேரிக்காவிலிருந்து வந்திருந்த ஒருவர், தன் வயதான தாயிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது..அம்மி, ( அம்மாவும் அல்ல, மம்மியும் அல்ல) எங்கள் சிறு வயதில் செய்வாயே ரைஸ் கேக்  அதை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதுஅந்தத் தாய்க்கு முதலில் விளங்காமல் போக  இவர் விளக்கிக் கூற “ அமெரிக்கா போனதும் இட்லி பெயர் கூட  ரைஸ் கேக்காக மாறிவிட்டதாஎன்று அம்மூதாட்டி வருத்தப் பட்டுக் கொண்டார்.

அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியா ஒரு பின் தங்கிய நாடு. பாம்புகளும் பாம்பாட்டிகளும் வித்தை செய்பவர்களும் நிறைந்த இடம் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து வரும்போது தங்கள் ஊரில் நல்ல சாலைகள் இல்லாதது குறித்தும் வெப்பத்தைக் குறித்தும் குறை படுவது காணும்போது, மிகையாகவே தோன்றுகிறது. திருமணத்தில் வீடியோ எடுத்து நேராகச் சின்னத்திரையில் ஒளிபரப் பாவது கண்டு “ இதெல்லாம் இங்கு வந்து விட்டதா “என்று அமெரிக்க ஸ்டைலில் ஆச்சரியப் படுகிறார்கள்.

இங்கிருந்து அங்கு சென்றவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அந்த தேசத்துக் குடி மக்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களா அமெரிக்கர்களா.? பார்ப்பதற்கு இந்தியர்கள். வாய் திறந்து பேசத் துவங்கினால் அமெரிக்கர்கள். ஒரு முறை என் நண்பனின் குடும்பத்தோடு தாஜ்மஹால் பார்க்கச் சென்றிருந்தோம்.. இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 25-/ (என்று நினைவு). வெளிநாட்டினருக்கு ரூபாய் 250-/நாங்கள் டிக்கட் எடுத்து உள்ளே செல்லும்போது, இவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட காவலாளி-கம்-டிக்கட் பரிசோதகர் அவர்கள் வெளிநாட்டினர்க்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி எங்களைத் தடுத்து நிறுத்தினார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் முரட்டுத்தனம்தான் அதிகரித்தது.அப்போது நண்பரின் மகன் ,அமெரிக்கக் குடிமகன். “ நான் ஒரு இந்தியன்;படிக்கச் சென்றிருக்கிறேன்என்று தமிழில் தட்டுத் தடுமாறி கூற, பரிசோதகர் அனுமதி அளித்தார். ஆனால் அந்தப் பையன் தன்னை ஒரு இந்தியன் என்று கூறியதற்கு மிகவும் வெட்கப் பட்டான்.

வெளிநாடுகளில் தங்கி இருக்கும் நம் நாட்டவர்கள் இங்கு வரும்போது, அரை நிஜார் போட்டுக் கொண்டும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டும் அலங்கோலமாக நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். என் நண்பரின் குடும்பம் திரும்பிச் செல்லும்போது, அவர்களுக்கு நல்ல வேட்டி, பைஜாமா, குருத்தா, போன்றவற்றை வாங்கிப் பரிசாகக் கொடுத்தேன். இதை அங்கே உடுத்திக் கொண்டால் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்றும், அநேகமாக உபயோகப் படுத்த முடியாது என்றும் கூறினர். அயல் நாட்டினர் இங்கு வந்து நம் உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். நம்மவர் நம் பாரம்பரிய உடைகளை அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்.

என்னுடைய இன்னொரு நண்பன் மிகச் சாதாரணமான நிலையில் இருந்தவன்,துபாய் சென்று படிப்படியாய் உயர்ந்து, ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக வளர்ந்தான். அவனுக்கு மணமாகி இரு மகன்கள். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படிக்க வைத்தான். சற்று வயதான பின் இந்தியா வந்து செட்டில் ஆனான். ஒரு முறை அவனது மக்களைப் பார்த்துப் பேசும் அனுபவம் ஏற்பட்டது. சிறிதேனும் அன்போ பாசமோ அவர்கள் பேச்சில் தெரியவில்லை. வயதான பெற்றோரை அருகில் வைத்துக் கொள்ளவோ அல்லது அவர்கள் இங்கு வருவதோ அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவரவர் செயலுக்கு அவரவரே முடிவெடுக்க வேண்டும் என்றும் , உடல் நலமில்லாவிட்டால் டாக்டரைத்தான் நாட வேண்டும் என்றும் அவர்களை அல்ல என்றும் கூறினார்கள். எதிர்பாராமல் தந்தை இறந்து விட்டால் , முடிந்தால் கிரியைகள் செய்ய வர முயற்சிப்பதாகக் கூறினர். இதை நான் கூற வருவதன் நோக்கமே வாழ்வின் மதிப்பீடுகள் VALUES- மறைந்து கொண்டே வருவது குறித்த எண்ணத்தில்தான்

இன்னொரு நண்பனின் மகன் இந்தியப் பெண்ணை மணம் செய்யவே பயமாக இருக்கிறது என்றான். காரணம் கேட்டபோது, அவன் தந்தை என்னுடைய “பெண்கள் முன்னேற்றம் “என்ற பதிவு பற்றிக் கூறி இருப்பது அறிந்தேன்.

நான் என் மகனுடன் துபாயில் சில நாட்கள் தங்கி இருந்தபோது, அங்கே அடிமட்டத்தில் வேலை செய்யும் பலரைக் கண்டேன். அங்கே கிட்டத்தட்ட அடிமை மாதிரிப் பணி செய்யும் பலரும் , இந்தியாவில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஈடுபாட்டுடன் இருப்பார்களா என்பதே சந்தேகம். வெளிநாடுகளில் இந்தியர்கள் அடங்கி ஒடுங்கி, எல்லா சட்டங்களுக்கும் கட்டுப் பட்டு வாழ்கிறார்கள். குப்பை போடுவதில்லை; எச்சில் துப்புவதில்லை. நான் துபாயிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இளைஞன் என்னருகில் அமர்ந்திருந்தான். நிறைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். அவன் ஊருக்கு அனுப்பியதுபோக சேமித்த பணத்தில் தங்கம் வாங்கிப் போவதாகக் கூறினான். கேட்க மகிழ்ச்சியாயிருந்தது. சென்னையில் விமானத்திலிருந்து வெளியே வரும்போது அவனால் இத்தனை நாள் கட்டுப் படுத்தப் பட்ட இயற்கை சுபாவம் பலமாக வெளிப்பட்டது. அவன் விமானத்திலிருந்து வெளியே வரும்போது காறி உமிழ்ந்து கொண்டே வந்தான்.
---------------------------------------------------
 .






  

14 comments:

  1. எந்த சூழலிலும் வெளி நாடு செல்வது தவறில்லை எனபது என் கருத்து. உள்ளூரில் அவர்கள் விட்டுச் செல்லும் வேலை வாய்ப்புக்கள்,ஈட்டித் தரும் அந்நியச் செலாவணி,கற்றுக் கொள்ளு கின்ற பரந்த அனுபவங்கள் எல்லாம் வரவேற்கக் கூடிய ஒன்றே.வேர்கள் இங்கிருக்க,விழுதுகளாய் உலெகெங்கும் எழுப்பியுள்ள கோவில்கள். கலாச்சாரத்தை தக்க வைக்க படும் பாடும் ..போற்றுதற்கு உரியது . வாய்ப்புக்கள் இருக்கும் இடத்தில வாழ்வதில் தவறில்லை முக்கியமான அடிமைத்தனம் பொருளின்மையே..Economy and Education are great leveling factors.. ஒரு சிலர் இருதலைக் கொள்ளியாய் .. வேர்களை மறந்தவர்களைப் பற்றிய தங்கள் அங்கலாய்ப்பு எனக்குப் புரிகிறது. காலத்தின் கட்டாயங்கள் இவை. சிந்தனையைத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு.வாழ்த்துக்கள் அன்புடன்

    ReplyDelete
  2. யோசிக்க வைக்கும் மனம் கனக்க வைத்த பதிவு.
    என் தந்தையார் சிங்கப்பூரில் 10 வயதிலிருந்து 57வயது வரை வேலை செய்தார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் வருவார். இறுதிவரை எங்களை அங்கு அழைத்துச் செல்லவில்லை. தாய்நாட்டு மோகத்துடனேயே இருந்து இறுதிக்காலத்தை ( 5வருடங்கள்) இங்கேயே கழித்தார்.
    ஆனால் என் அப்பாவுடன் சென்றவர்கள் அங்கேயே செட்டிலாகி விட்டார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். நாங்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் படி முன்னேறவில்லையே.

    ReplyDelete
  3. இக்கரைக்கு அக்கரை பச்சை. வெளிநாடு செல்லும் நம்மவர்கள் வேரைத்தொலைக்கிறார்கள். தொலைக்கட்டும். ஆனால் அவர்களைப் பெற்றவர்கள் படும் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது.

    எல்லாம் அவரவர்கள் தலையெழுத்து.

    ReplyDelete
  4. வேர்களைத் தாயகத்தில் ஊன்றி கிளைகளை அயலகத்தில் பரவவிட்டவர்கள் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்கள் தங்கள் அடையாளங்களை எந்தத் தருணத்திலும் இழக்கவிரும்புவதே இல்லை. வேறுவழியற்று வந்துவிட்டு தாய்நாட்டை விட்டுவந்த வேதனையை ஒவ்வொரு கணத்திலும் அனுபவிக்கும் பல உள்ளங்களை அறிவேன். ஆனால் அங்கேயே விழுதூன்றிவிட்ட அடுத்தத் தலைமுறை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அவர்களுக்கு வேரின் வலிகள் தெரியாது. தெரிந்தாலும் அதை பொருட்டாய் மதிப்பதில்லை.

    தாயகம் துறந்த, மறந்த மற்றும் மறுத்தவர்களால் தங்களுக்கு உண்டாகியிருக்கும் இதமில்லாத அனுபவங்களை எண்ணி வருத்தமே மிகுகிறது.

    ReplyDelete
  5. @ காளிதாஸ்,
    @ சிவகுமாரன்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ கீதமஞ்சரி
    பொருளீட்ட அயல் நாடு செல்வதை
    நான் குறைகூறவில்லை. பலருக்கு
    இங்கு கிடைக்காத வாய்ப்புகள் அங்கு
    கிடைக்கலாம்
    /அவர்களைப் பெற்றவர்கள் படும் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது/
    /தாயகம் துறந்த, மறந்த மற்றும் மறுத்தவர்களால் தங்களுக்கு உண்டாகியிருக்கும் இதமில்லாத அனுபவங்களை எண்ணி வருத்தமே மிகுகிறது/ இந்த இரு கருத்துக்களோடு
    நான் உடன்படுகிறேன்.அயல் நாடுகள்
    மட்டும்தான் ஒரு சம விளையாட்டுக் களத்தைத் தரும் என்பதில் கருத்து வேறு பாடு உண்டு. அயல் நாடுகளில் அடிமைகளாய் இருப்பது ( முக்கியமாக
    வளைகுடா நாடுகளில்) இங்கு ஏழையாய் இருப்பதைவிட மேல் என்னும் எண்ணம் மனசை நெருடுகிறது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. //சென்னையில் விமானத்திலிருந்து வெளியே வரும்போது அவனால் இத்தனை நாள் கட்டுப் படுத்தப் பட்ட இயற்கை சுபாவம் பலமாக வெளிப்பட்டது. அவன் விமானத்திலிருந்து வெளியே வரும்போது காறி உமிழ்ந்து கொண்டே வந்தான்.
    //

    இது தான் நம்ம வேரா?!?!

    என்ன சொல்வது! என்று தெரியவில்லை. ரத்தத்தில் சுற்றுப்புற சூழல் மெத்தனம் இந்தியர்களுக்கு ஊறிவிட்டது.

    ReplyDelete
  7. வாழ்வின் மதிப்பீடுகள் VALUES- மறைந்து கொண்டே வருவது குறித்த எண்ணத்தில்தான்..

    சிந்திக்க வைத்த பதிவு.

    ReplyDelete
  8. அயல் நாட்டினர் இங்கு வந்து நம் உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்..

    உண்மையாக கண்டு உணர்ந்து பெருமை கொண்டோம்..

    ReplyDelete
  9. சிங்கப்பூர் தூய்மைக்குப் பெயர் பெற்ற தேசத்தில் செராங்கூன் சாலையில் வார இறுதியில் இந்திய்ர்கள் குப்பை போட்டு கலாச்சாரத்தைப் பேணுவதாகக் கேள்விப்பட்டிருகிறோம்.

    ReplyDelete
  10. தஞ்சாவூரிலிருந்து சென்னை வந்து செட்டில் ஆனவர்கள் வேரறுத்தவர்களா? சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்றவர்கள் வேரறுத்தவர்களா? வேர் என்று எதுவும் இல்லை என்பது என் கருத்து.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நாம் சொன்னது தான்.

    ReplyDelete
  11. @ சக்தி பிரபா,
    @ ரிஷபன்,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ அப்பாதுரை.
    உங்களது வருகைக்கும் கருத்துக்கும்
    முதலில் என் நன்றி பகிர்ந்து கொண்ட
    ஆதங்கங்களில் இதுவும் ஒன்று.அயல்
    நாடுகளுக்குச் சென்றவர்கள் பலரும்
    தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்
    களோ,இல்லை எந்த மாற்றமும்
    இல்லாதுதான் இருக்கிறார்களோ
    தெரியவில்லை. இப்படியும் அப்படி
    யுமான எடுத்துக்காட்டுகளை குறிப்
    பிட்டிருக்கிறேன். திரு.அப்பாதுரை
    யின் கருத்தை நான் CONTEST
    செய்ய விரும்பவில்லை.

    ReplyDelete
  12. என் நண்பர் சொன்ன நிகழ்வு இது:

    கோடம்பாக்கத்தில் பேத்தி.

    அவளின் தாத்தா, பாட்டி தனிக்குடித்தனமாக மந்தைவெளியில்.

    பெரியவர்களின் பையன் எப்போதாவது மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க வருவான்.

    ஒருதடவை அப்படி வந்த பொழுது குழந்தை, "எங்க வீட்டுக்கு எப்போ வர்றே, தாத்தா?" என்று கேட்டது.
    (அந்த 'எங்க' ஒருவித அழுத்தத்துடன் படியுங்கள்)

    இதை அந்தப் பெரியவர் என் நண்பரிடம் சொன்ன போது, என் நண்பர், அந்தப் பெரியவரிடம் கேட்டாராம்: "நீங்கள் இருவரும் இந்த வயதில் ஏன் தனியாக, இப்படி?.."

    அதற்கு அந்தப் பெரியவர் சொன்னாராம்: "எதுக்கு அங்கே போய் அடைஞ்சிக்கணும்?.. நானாச்சு, இவளாச்சுன்னு தனியா நிம்மதியா இருக்கறது செளகரியமா இருக்கு. எந்த அநாவசிய தொந்தரவும் இல்லே. அவங்க வந்தாங்களா, நாங்க அங்கே போனாமான்னு இப்படி இருக்கறது தான் நிம்மதியா இருக்கு. நாங்களும் அங்கே போய் அடைஞ்சிண்டா இந்த நிம்மதி இருக்காது.."

    இது, எப்படி இருக்கு?..

    அப்பாஜி சொன்னது யதார்த்தம்.

    வெளிநாடு என்றில்லை; உள்நாடு, ஒரே ஊர் என்றாலும் இதுவே. மனிதர்களின் மனப்பாங்கு எப்படியோ அப்படியான வாழ்க்கை.

    இதில் சொல்வதற்கு எதுவுமில்லை தான்; இருந்தாலும், ஜிஎம்பீ சார்,
    இது குறித்து நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமானால் சொல்லுங்கள்..

    ReplyDelete
  13. அன்பின் ஜீவி, என் பல பதிவுகளும் இப்படித்தான் .நான் சொல்ல வருவதை சரியாகச் சொல்லவில்லையோ, அல்லது சொன்னது தவறாகக் கணிக்கப் படுகிறதோ தெரிய வில்லை. பல TANGENTIAL COMMENTS ( தமிழில் சரியான மொழிப்பிரயோகம் தெரியவில்லை.)கொண்டு சேர்க்கின்றன. எதற்கு உங்கள் நண்பர் சொன்ன நிகழ்வுக்குப் போக வேண்டும். இங்கு பெங்களூரில் நானே அப்படித்தானே இருக்கிறேன். இது ஒரு சுதந்திர உணர்வு. சுதந்திர உணர்வு இருந்தாலும் என் அடிப்படை மதிப்பிடுகள் ( VALUES IN LIFE ) மாறவில்லை. என் எண்ணம் குறித்து நீங்கள் கேட்டதால் எழுதினேன். வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  14. ஐயா,யோசிக்க வைக்கும் பதிவு.நாம் அன்னிய மோகத்தினால் நம் அடையாளங்களைத் தொலைத்து வருவது என்னமோ உறுதி.

    ReplyDelete