Wednesday, October 2, 2013

நினைவுகளால் உந்தப்பட்டு....


                     நினைவுகளால் உந்தப் பட்டு
                      --------------------------------------



சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்தியவரின் ஒரு பிரத்தியேக குணம். எனக்குத் தெரிந்து  கீழை நாட்டவர் சுயசரிதை எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதுபவர் மேலை நாட்டினரின் வழக்கங்களால் ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். நீ என்னதான் எழுதுவாய்.?இன்று நீ கடைப்பிடிக்கும் கொள்கைகளில் இருந்து நாளை மாறுபட்டாலோ அல்லது மாற்றினாலோ  உன்னை பின் பற்றும் மனிதன் உன் கொள்கை மாற்றத்தாலோ, மாறுபாட்டாலோ குழப்பமடைய மாட்டானா.?


இந்த மாதிரியான எண்ணம் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால் நான் எழுத் முற்பட்டது என் சுய சரிதை அல்ல..நான் என் வாழ்வில் மேற்கொண்டுள்ள சத்தியப் பரிசோதனைகளின் தொகுப்பாய்த்தான் அது இருக்கும். இந்த மாதிரியான சத்தியப் பரிசோதனைகள் வாழ்வு முழுவதும் , இருப்பதால் அதன் தொகுப்பே ஒரு சுய சரிதையாகிவிட வாய்ப்புள்ளது. அதுவே நான் எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் விரவி இருந்தாலும் நான் கவலைப் படமாட்டேன். இந்த சோதனைகளின் விவரங்கள் இதை வாசிப்பவருக்கு உதவாமல் போகாது என்று நினைப்பதில் பெருமைப் படுகிறேன்.அரசியல் துறையில் என் பரிசோதனைகள்  இந்தியாவில் மட்டுமல்ல நாகரீகநாடுகளிலும் ஓரளவுக்குத் தெரியப் பட்டதே.அதன் மதிப்பு பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.எனக்கு “மஹாத்மாஎன்ற பட்டம் பெற்றுத் தந்தது பற்றியும் நினைப்பதில்லை.ஆனால் சில சமயங்களில் வருத்தப் பட வைத்திருக்கிறது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த ஆன்மீகப் பரிசோதனைகளையும், அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் சக்தி எப்படி அரசியல் துறையிலும் உதவியாய் இருக்கிறது என்பது பற்றியும் எழுத விழைகிறேன். இம்மாதிரியான பரிசோதனைகள் உண்மையில் ஆன்மீகமாக இருந்தால் என்னை நானே புகழ்வது சரியாயிருக்காது. சிந்தித்துப் பார்க்கும் போது அது என் பணிவுக்குக்த்தான்  பலம் சேர்க்க வேண்டும்.கடந்து போன நிகழ்வுகளில் மனம் செல்லும்போது என் தகுதிகுறைபாடுகளே வெகுவாய்த் தெரிகிறது.
                      *************************
இப்போது நான் குறிப்பிடுவது என் பதினாறாம் பிராயத்து நிகழ்வுகள். என் தந்தை fistula எனும் நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருந்தார் என் தாயும், ஒரு வேலையாளும் நானும் என் தந்தையைக் கவனித்துக் கொள்ளும் முக்கிய நபர்கள். என் செவிலிப் பணியில் அவரது காயத்துக்கு மருந்திடுவதும் , வேளாவேளைக்கு மருந்து கொடுப்பதும் , வீட்டில் தயார் செய்யக் கூடிய மருந்துகளைத் தயார் செய்வதும் அடங்கும்.ஒவ்வொரு இரவும் அவரது கால்களைப் பிடித்து அமுக்கிக் கொடுப்பதும் வாடிக்கை. அவர் போதுமென்று சொன்னாலோ அவர் உறங்கினாலோ அல்லாமல் தொடர்ந்து செய்வேன். அதில் நான் தவறிய நினைவில்லை. அவருக்குச் செய்ய வேண்டிய சிசுருக்ஷைகளிலும் பள்ளிப் படிப்பிலும் என் நேரம் பங்கிடப் பட்டது.

இந்த காலகட்டத்தில் என் மனைவி கர்ப்பமாய் இருந்தாள்.-ஒரு கால கட்டம் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது நான் எப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தேன் என்று தெரியப் படுத்துகிறது..ஒன்று நான் அப்போது இன்னும் மாணவன்தான். இரண்டு என் காமவேகம் என் படிப்பை விடவும் என் பெற்றோருக்கான கடமைகளை விடவும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு இரவும் என் கைகள் தந்தையின் கால்களைப்பிடித்து விட்டுக் கொண்டிருக்கும்போது  மனம் ம்ட்டும் படுக்கை அறையைச் சுற்றி வரும்.பொது அறிவும் மருத்துவ தேவையும் மத உபதேசங்களும் அந்த நேரத்தில் உடல் புணர்ச்சிகளில் ஈடுபடுவது தவறு என்று தெரியப் படுத்தியும் என் சேவை முடிவுற்றதும் நேரே படுக்கை அறைக்குள் நுழைவேன்.
 இந்த இடைவெளியில் தந்தையார் நிலைமை சீர் குலையத் தொடங்கியது. ஆயுர்வேத மருத்துவர்களும் , ஹக்கீம்களும் பலவித சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆங்கில அறுவைச் சிகிச்சை மருத்துவரும் பார்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தபோது  மருத்துவர்  அவரது வயதைக் காரணங் காட்டி குறுக்கே நின்றார்,.அறுவைச் சிகிச்சை எண்ணம் கைவிடப் பட்டது. அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் குணமடைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இறப்பு என்பது உறுதியானபிறகு யார் என்ன செய்திருக்க முடியும்.
அவர் நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வந்தாலும் வைணவ முறையிலான சுத்தங்களைக் கடைப் பிடிப்பதில் குறியாய் இருந்தார். படுக்கையில் இருந்து எழுந்து வந்து அவர் கடன்களைச் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கும்.என் தந்தையின் சகோதரர் அவரது நிலையைக் கேள்விப்பட்டு ராஜ்கோட்டிலிருந்து வந்திருந்தார்..நாள்முழுவதும் என் தந்தையின் அருகிலேயே அமர்ந்திர்ப்பார்.
அன்று இரவு பத்தரை பதினொன்று மணி இருக்கும். தந்தையின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவின் சகோதரர் என்னை விடுவித்தார். நான் நேராகப் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள் . நான் அருகில் இருக்கும்போது அவள் எப்படித் தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்தாறு நிமிடங்களில் கதவு தட்டப் பட்டது. பணியாள் நின்றிருந்தார். நான் பயத்துடன் பார்த்தேன். அப்பா உடல் நிலை மோசம் என்றார்.எனக்கு அது தெரிந்ததுதானே என்ன விஷயம் சீக்கிரம் சொல் “ என்றேன்.அப்பா போய்விட்டார் என்றான்
                #######################

காலையில் எழுந்ததிலிருந்தே காந்தியின் நினைவாக இருந்தது. சிறு வயதில் காந்தியை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் நான். காந்தியின் பாதிப்பு இந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் உணரப் பட்டது. நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம். பிள்ளைகள் நாங்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தோம். தாசில்தார் தெரு என்று நினைவு. அடுத்த வீட்டுக்காரர் ஒரு திரை அரங்கின் சொந்தக் காரர். அவர் வீட்டில் ரேடியோ இருந்தது. பொதுவாகவே சத்தமாக வைப்பார்கள். அன்று 1948-ம் வருடம் ஜனவரி 30-ம் நாள் மாலை ரேடியோ செய்தி அலறியது. “ காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார்விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் நாங்கள் செய்தி கேட்டு ஓரளவு அதிர்ச்சி அடைந்தோம். தெரு முழுவதும் ஓடி காந்தியின் இறப்புச் செய்தியை அறிவித்தோம். பிறகென்ன .? ஊரே இழவுக் கோலம் பூண்டது. என் தந்தையார் துயரத்தில் விக்கி விக்கி அழுதார். எங்கள் வீட்டில் என் சிற்றன்னையின் உறவினர் ஒருத்தி இருந்தார். மொட்டை மாடிக்குச் சென்று கதறிக் கதறி அழுதார். அப்போது தெரிந்து கொண்டேன். காந்தியின் பாதிப்பு படிப்பறிவு இல்லாத ஒரு மூதாட்டியையே பாதித்த்து என்றால் அவரது கியாதி எவ்வளவு பரவலாய் இருந்திருக்க வேண்டும்.நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது.     




    
 
 



 

16 comments:

  1. "இந்தளவு யாராவது உண்மையாக எழுதி இருப்பார்களா...?" எனும் சிந்தனை வந்தது...

    ReplyDelete
  2. //நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது.//

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  3. காந்தி வாழ்ந்த காலத்தில் நீங்களும் வாழ்ந்தீர்கள் என்ற திருப்தியில் உங்களது காந்தி காலத்து நினைவுகள். எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சிறப்புப் பதிவினை மிக அருமையாக
    பதிவு செய்துள்ளீர்கள்
    அவருடைய மரணத்தின் பாதிப்பு எத்தனை
    அதிர்ச்சித் தரத்தக்கதாய் இருந்தது என
    நீங்கள் சொல்லிப்போனவிதம் அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு ஐயா. காந்தியின் பிறந்த நாளில் வெளியிட்டது அருமை. காந்தியினை நேரில் பார்த்த பெருமைக்கு உரியவர் ஐயா நீங்கள்.நன்றி ஐயா. காந்தியின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  6. “ காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார்” விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் நாங்கள் செய்தி கேட்டு ஓரளவு அதிர்ச்சி அடைந்தோம். தெரு முழுவதும் ஓடி காந்தியின் இறப்புச் செய்தியை அறிவித்தோம். பிறகென்ன .? ஊரே இழவுக் கோலம் பூண்டது. என் தந்தையார் துயரத்தில் விக்கி விக்கி அழுதார். எங்கள் வீட்டில் என் சிற்றன்னையின் உறவினர் ஒருத்தி இருந்தார். மொட்டை மாடிக்குச் சென்று கதறிக் கதறி அழுதார்//

    காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அந்த காலத்து பெரியவர், சிறியவர்களின் மனநிலையை சொல்லியது உங்கள் பதிவு.
    அந்தக் கால கட்டம் மிகவும் கொடியது அல்லவா!
    மகத்தான மனிதர் சுடபட்டது எவ்வளவு அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்பதை உணர முடிந்தது.

    காந்தியை நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?


    .

    ReplyDelete
  7. காந்தியின் சத்தியசோதனையை வாசிக்குந்தோறும் வியக்கும் விஷயம் . அவரது நேர்மை. உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் அவரது துணிவு. நம்மில் எத்தனைப் பேரால் நம் வாழ்நாளில் அறிந்தும் அறியாமலும் நாம் செய்த பிழைகளை அடுத்தவர் அறியத் தரும் மனத்துணிவு இருக்கும்? அதுவும் நாடே மகாத்மா என்று போற்றக்கூடிய நிலையில்?

    சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. அவரது மரணச் செய்தி கேட்டபோது தன் மனநிலையை என் பாட்டனாரும் உரைத்திருக்கிறார். அதை அவர் விவரிக்கும் கணத்தில் நம் கண்களும் கசிந்துவிடும்.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. காந்திஜி யின் நினைவலைகள்
    அவரது பிறந்த நாளின் போது பொருத்தமான பகிர்வுகள்..!

    ReplyDelete
  10. காந்தியை நீங்கள் பார்த்தது உண்மையிலேயே பெரிய பாக்கியமே. நேற்று தான் எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சர்ச்சிலுக்கு காந்தியை சுத்தமாக பிடிக்காதாம். அவன் கூறிய வார்த்தைகளை இங்கே அப்படியே பகிர்கிறேன்:

    "It is alarming and also nauseating to see Mr. Gandhi, a seditious middle temple lawyer, now posing as a fakir of a type well known in the east, striding half-naked up the steps of the viceregal palace, while he is still organizing and conducting a defiant campaign of civil disobedience, to parley on equal terms with the representative of the king-emperor."

    - Winston Churchill, 1930"

    இது போன்ற வெறியர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டி அடித்த பெருமை கண்டிப்பாக காந்தியை சேரும். அதற்கு இந்த நாடு என்றென்றும் கடமை பட்டிருக்கிறது.அவருடைய காலத்தில் நீங்களும் இருந்தீர்கள் என்பதை நினைக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  11. காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது. //

    இந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன்..

    அழகாய் தமிழில் வடித்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  12. @ திண்டுக்கல் தனபாலன்
    காந்திஜியின் பாதிப்பால் பொய் சொல்வது இல்லை என்று தீர்மானத்துடன் வாழ்ந்து வருகிறேன்.தவிர்க்க முடியாத நேரங்களில் பொய் பேசாமல் அதே நேரம் உண்மையையும் கூறாமல் இருந்ததுண்டு. காந்திஜி என்றும் ஆச்சரியப் படுத்துபவர். வருகைக்கு நன்றி.
    @ கோபு சார்
    வருகைக்கு நன்றி
    @ தி. தமிழ் இளங்கோ
    காந்திஜியால் ஈர்க்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் . காந்திஜியை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி.
    @ ரமணி
    பதிவைப் பாராட்டிச் சொன்னதற்கு நன்றி ரமணி சார்
    @ கரந்தை ஜெயக் குமார். காந்திஜியின் நினைவுகளால் உந்தப்பட்டு எழுதிய பதிவு இது என்பது நிஜம் வருகைக்கு நன்றி
    2 கோமதி அரசு
    காந்திஜியை நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது. நிச்சயமாக இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகு பதிவிடுவேன் என்று நினைக்கவில்லை. ஒன்பது வயதுக்குள் இருந்த எனக்கு என்ன பெரிய அனுபவம் இருக்கப் போகிறது.அந்தக் கூட்டமும் அதில் அவர் தமிழில் சொன்ன “ சும்மா உட்காருப்பா”என்னும் வார்த்தைகள் இன்னும் ரீங்கரிப்பதுபோல் இருக்கிறது. வருகைக்கு நன்றி.
    @ கீத மஞ்சரி
    அவருடைய சத்திய சோதனை அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ கீதா சாம்பசிவம்
    @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
    @ எக்ஸ்பாட்குரு
    சர்ச்சிலின் outburst அவரது இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காந்திஜியைக் கண்ட தருணங்களை பகிர்ந்ததில் பெருமை அடைகிறேன். வருகைக்கு நன்றி
    @ டி.பி ஆர் ஜோசப்
    ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகமது. பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  13. மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத்தக்க தகவல்கள் நிறைய உண்டு. பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது, இந்தப் பதிவிற்கான செய்தியும்.

    மதுரை சிம்மக்கல் பகுதியில் தேசப்பிதாவை ஊர்வலத்தில் பார்த்திருக்கிறேன். அவர் மேடையில் பேசியதை மதுரை தமுக்கம் மைதானத்தில் காட்சியாய் கண்டிருக்கிறேன். அப்பொழுது சிறுவன் என்றாலும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

    ReplyDelete
  14. மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத் தக்க தகவல்கள் நிறைய உண்டு. . பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது/இதுவரை சரி. இந்த பதிவிற்கான செய்தி நான் சில முறைகள் என் அனுபவமாகக் குறிப்பிட்டிருப்பது இவ்வளவு சீக்கிரத்தில் நைந்து போய் விட்டதா? மற்றபடி எழுதி இருப்பது அவரே எழுதியது. நான் தமிழாக்கம்தான் செய்திருக்கிறேன், அதில் காணும் செய்திகள் நைந்து விட்டன என்று எண்ணமுடியவில்லை.காந்திஜியை தரிசித்த இன்னுமொரு பதிவர் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. காந்தியைப் பார்த்த உங்களைப் பார்த்ததே போதும்.

    வெளிப்படையான கருத்துக்கள். உங்கள் தந்தை இறப்புக்கும் உங்கள் உணர்ச்சி வேகத்துக்கும் சம்பந்தமே இல்லை. குற்ற உணர்வு இல்லை என்று நினைக்கிரேன்.. இருந்தால் உடனே அகற்றி விடுங்கள். உங்கள் தந்தையும் அதையே செய்திருப்பார். உங்கள் மகனும் அதையே செய்வார்.
    Me too.

    ReplyDelete

  16. @ அப்பாதுரை
    / வெளிப்படையான கருத்துக்கள்/ ஐயோ அது என்னுடையதல்ல. காந்திஜியுடையது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete