Sunday, February 1, 2015

விடுப்பில் அனுபவங்கள்


                  விடுப்பில் அனுபவங்கள்.
                  -------------------------------------


நல்ல வேளை என் மகன் வீட்டில் ஏ.சி. இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பயணம் செய்த களைப்பு. சென்னை வரும்போதே புத்தகக் கண்காட்சி பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். எனக்குத்தான் எங்கும் தனியே போக அனுமதி இல்லையே. . ஆகவே முதலிலேயே ஸ்ரீராமுக்குத் தெரியப் படுத்தி அவர் கூடச்செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவரால் வரமுடியாத சூழ்நிலை என்று மெயில் அனுப்பி இருந்தார்.முடிந்தால் சென்னையில் சந்திக்கிறேன் என்று கூறி இருந்தார்.  திரு. செல்லப்பாவும் முடிந்தால். வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு நண்பரை சந்திக்க ஆவலாய் இருந்து மெயில் அனுப்பி இருந்தேன். அவருடைய தொலை பேசி எண் என்னிடம் இல்லை.என் தொலை பேசி எண்ணைக் கொடுத்திருந்தேன். வருவது குறித்துக் கன்ஃபெர்ம் செய்கிறேன் என்று மெயில் அனுப்பி இருந்தார். மற்றவர்களுக்கு சென்னை சேர்ந்ததும் நான் வந்து விட்ட விஷயத்தைச் சொல்லலாம் என்றால் அடுத்த நாளிலிருந்து எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது.இதுவரை சந்திக்காத நண்பருக்காவது தெரிவிக்கலாம் என்றால் அவரது தொலைபேசி எண் என்னிடம் இல்லை.  ஒரு வேளை தமிழ்ப் பனியும்  தெலுங்குப் பனியும் எனக்கு மலையாளப் பனியைக் கொடுத்ததோ தெரியவில்லை.ஒரே இருமலும் ஜுரமுமாக இருந்தது. ஆக சென்னையில் நான் செய்ய நினைத்திருந்த எதுவும் செய்ய இயலவில்லை. பொழுது போக வேண்டுமே. கணினி என் வசம் இருக்கவில்லை
பொதுவாக விடிந்தால் சேவல் கூவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வேளச்சேரியில் என் மகன் இருக்கும் குடியிருப்பில் புறா கூவி(கத்தி)பொழுது விடிகிறது. புறாவின் கூவல் கேட்டிருக்கிறீர்களா. கர்ண கொடூரம்...!அதுமட்டுமல்ல. இனவிருத்திக்கு இடும் முட்டையை வீட்டில் பால்கனியில் இருந்த ஒரு தொட்டியில் இட்டிருந்தது. எனது மருமகள் அவற்றை அப்புறப் படுத்தி விட்டாள். இல்லாவிட்டால் இடத்தை நாசமாக்கிவிடும் என்பது அவள் கணிப்பு.
புறாமுட்டை சென்னை வீட்டு பால்கனித் தொட்டியில்
20-ம் தேதி மகன் டெல்லி ஜெய்ப்பூர் அஜ்மீர் என்று பல இடங்களுக்குப் பறந்து விட்டான்ஆக நாங்கள் அங்கே தனித்து விடப்பட்டோம். பெங்களூருவில் ஒரு கிரகப் பிரவேசம் 25-ம் தேதி --சென்னராயப் பட்னாவில் 26-ம் தேதி ( பெங்களூருவில் இருந்து சுமார் 150 கி.மீ.தூரம்) ஒரு திருமணம் என்று இருந்ததால் நாங்கள் 24-ம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு சதாப்தியில் தத்கலில் டிக்கட் பதிவு செய்து என் இரண்டாம் மகன் அனுப்பி இருந்தான். நான்கைந்து நாட்கள் உடல் நலம் இல்லாமலும் இருந்தது. என் மகன் வீட்டில் இருந்த சில கலெக்‌ஷன்கள் மனதைக் கவர்ந்தது. அவற்றில் சில புகைப்படங்களாகக் கீழே.

யானைக்குள் யானை
.இந்த மாதிரி மூன்று சைசில் வைத்திருக்கிறான். மார்பிள் கல்லில் செதுக்கியது. கல்லிலே கலை வண்ணம் என்பது இதுதானோ. உள்ளிருக்கும் யானையை எப்படி செதுக்கி இருக்கமுடியும் ? புரியாத புதிர்.
பலவகையான , பல சைசுகளில் கிரிஸ்டல் கற்கள். இயற்கையின் ஆச்சரிய சங்கதி. பெரும் பாலும் அஜந்தா எல்லோரா குகைகளுக்கருகே இருக்கிறதாம்

கிரிஸ்டல் கல் -1
கிரிஸ்டல்கல்-2
கிரிஸ்டல் கல்-3
கிரிஸ்டல் கல் இன்னொரு வகை
கத்தி போன்றஒரு கிரிஸ்டல் கல்.

ஃப்லோரசெண்ட் பிள்ளையார்.
இது மீனா.. பறவையா
கல்லுக்குள் மலேஷிய இரட்டைக் கோபுரம்
உட்ல  நலக் குறைவால் ஏதும் செய்ய இயலாத நிலையில் கிறிஸ்டல் கற்களையும் மீன் தொட்டியையும் பார்த்துக் கொண்டு நாட்களைக் கடத்தினேன் எத்தனை பதிவர்கள்சென்னையில். ஒருவரையும் பார்க்க இயலவில்லை. 23-ம் தேதி இரவு என் மகன் வந்தான் . புத்தகக் கண்காட்சி இன்னும் இருக்கிறதா என்று கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான். மறு நாள் எங்களை ரயில் ஏற்றிவிட வந்தான் . பலமுறை சொல்லி இருக்கிறேன் அடைத்து வைத்தால் போல் இருக்கும் இந்த சதாப்தி பயணம் எனக்கு பிடிக்கவில்லை. என்று. இருந்தாலும் அவ்வாறே என்னைப் பயணிக்கச்  செய்கின்றனர்.
இனி சதாப்தி பயணம் பற்றி.
எங்கள் இருவருக்கு தத்கலில் சதாப்தி பயணத்துக்காகசென்னை டு பெங்களூரு ரூ.1900-க்கும் மேலே. சீனியர் சிடிசன் சலுகை இல்லை. உணவுக்காக ரூ. 390- (என்று நினைக்கிறேன்)வசூல் செய்கிறார்கள். இது டிக்கெட்டில் அடக்கம். இருக்கைகளில் அமர்ந்த சில நிமிடங்களுக்குள் ஆளுக்கு ஒரு லிட்டர் ரேல் நீர் வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஒரு இனிப்பும் சமோசாவும்  டொமேடொசாசுடன் சிறிது மிக்சரும் வைக்கிறார்கள்காப்பியும் அடுத்து. நான் அவற்றைப் புகைப்படம் எடுப்பது என் மனைவிக்கு உடன் பாடில்லை. எனக்கு சமோசா பிடிக்காது. இனிப்பில்பாதுஷா பிடிக்காது. அவை இரண்டும் மெனுவில் இருந்தது

சதாப்தியில் டிஃப்ஃபின்
 சிறிது நேரத்துக்குப்பின் தக்காளி சூப், பெப்பர் சால்டுடன் நியூட்ட்ரலைட் வெண்ணையும் கூடவே இரு குச்சி போன்ற பிஸ்கட்டும் தருகிறார்கள். என்ன காம்பினேஷனோ தெரியவில்லை. சிலர் வெண்ணையை சூப்பில் கலந்து  அந்த குச்சி பிஸ்கட்டை அதில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. பிறகு டின்னர். மூன்று சப்பாத்தி  பன்னீர் குருமா, தால், சாதம் ஒரு கப், தயிர் என்று வழங்கப் பட்டது. என்னைப் போல் மிதமாக உண்பவர்களுக்கு அது போதுமானதைவிட அதிகமாகவே இருந்தது. உணவு சுவை குறை சொல்ல முடியாத்ததாக இருந்தது. நான் சாதத்தை எடுக்கவில்லை. எனக்கு சாதம் நன்றாக வெந்து  குழைவாய் இருக்க வேண்டும். அங்கே அது முளை முளையாய் இருந்தது. ரயிலில் பயணம் செய்வோர் அநேகமாக சீரியசாகவே இருந்தனர். சிலர் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ விளையாடிக்கொண்டோ இருக்கிறார்கள்.யாரும் யாரையும் பார்த்து முறுவலிப்பதே இல்லை. சீரியசாக மேல்மட்ட வாசிகளாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் மட்டும் குறைந்தவனா. நானும் சீரியசாகவே பயணித்தேன். இரவு பத்தேகால் மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் எங்கள் இளைய மகன் எங்களை அழைத்துப்போக வந்திருந்தான்.
மறுநாள் என் மனைவியின் தங்கை மகள் வீட்டு கிருகப் பிரவேசம். காலையில் கணபதி ஹோமம். பிறகு சத்திய நாராயணா பூஜை. நாங்கள் மதியம் உணவுக்குப் போனோம். நல்ல ஒன்னாங் கிளாஸ்  நாடன் சாப்பாடு. என் மனைவியின் எதிர்ப்பையும் மீறி புகைப் படம் எடுத்தேன்.

நாடன் சத்தி
26-ம் தேதி சென்னராயப்பட்னாவில் எங்களுக்கு உதவியாய் இருக்கும் பெண்மணியின் மகன் திருமணம் அவர்கள் கௌடா பிரிவினராம். இதுவே நான் ஒரு கன்னட கௌடா திருமணத்துக்குச் செல்லும் முதன் முறை.சென்ன ராயப் ப்ட்னா பழையபேரூந்து நிலையம் அருகில் கணேஷ் பண்டா வில் திருமணம் என்று கூறி இருந்தார்கள். நாங்கள் சென்றபோது அருகருகே இரண்டு திருமணங்கள் என்பதை தெரிந்து கொண்டோம்தொலை பேசியில்தொடர்பு கொண்டு கேட்டபோது மண மக்களின் பெயரைப் பார்த்து உள்ளே வாருங்கள் என்றார்கள். அப்போது படிப்பறிவில்லாத தற்குறி போல் உணர்ந்தோம். எல்லாமே கன்னடத்தில் இருந்தது. ஒரு வழியாய்க் கேட்டுக்கொண்டு உள்ளே போனோம். எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டார்கள், அவர்கள் வழக்கப் படி மணமகன் மணமகள் கையைப் பிடித்துக் கொண்டிருக்க அதன் மேல் பால் விடுவது ஒரு முக்கிய சடங்காம். நாங்களும் செய்தோம். பின் உணவு முடிந்து வீடு திரும்பும்போது மணி மாலை நான்காகி இருந்தது. நாங்கள் அந்தத் திருமணத்துக்குச் செல்ல உறுதுணையாய் கார் ஓட்டிவந்து எல்லோரும் மகிழக் காரணமாயிருந்த என் இளைய மகனுக்கு நன்றி. திருமணத்துக்கு நாங்கள் சென்று அவர்களை கௌரவித்ததற்காக மணமகன் பெண்ணுடன் மறு நாள் 27-ம் தேதி என் வீட்டுக்கு வந்திருந்தான்

சென்னராயப் பட்னா திருமணத்தில்

என் மனைவியுடன் ( நடுவே) மணமகளும், மணமகனின் அக்காவும்  (பதிவு நீண்டுவிட்டது.இத்துடன் நிறைவு செய்கிறேன்)
  

27 comments:


  1. பயணக்குறிப்பும் விபரங்களும் டைரி எழுதுவதுபோல் எழுதி விட்டீர்கள் அருமைஐயா மணமக்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete

  2. யானைக்குள் யானை எப்படி ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது சிற்பியின் கைவண்ணம்

    ReplyDelete
  3. நல்ல பிரயாணக் கதை. மனது இளமையாக இருந்தால் மட்டும் போதாதென்று உடல் அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. இனி அது சொன்னமாதிரித்தான் நாம் நடந்துகொள்ளவேண்டும். உடல் நலம் பூரணமாகத் தேற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  4. சென்னைக்குச் சென்றும் பதிவர்களை சந்திக்க இயலவில்லையே
    உடல் நிலையினைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete
  5. எந்தப் பதிவரையும் சந்திக்க வாய்ப்பில்லாதது வருத்தம் தான்... பிள்ளையாரும், பறவையும் அழகோ அழகு...

    ReplyDelete
  6. ****ரயிலில் பயணம் செய்வோர் அநேகமாக சீரியசாகவே இருந்தனர். சிலர் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ விளையாடிக்கொண்டோ இருக்கிறார்கள்.யாரும் யாரையும் பார்த்து முறுவலிப்பதே இல்லை. சீரியசாக மேல்மட்ட வாசிகளாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் மட்டும் குறைந்தவனா. நானும் சீரியசாகவே பயணித்தேன்.****

    எதிரே உள்ளவர்களை புறக்கணித்துவிட்டு முகநூலில் உள்ள முகம் தெரியாத "தோழி/தோழருடன்" ஏதாவது புகைப்படம் பகிர்ந்துகொண்டு, எத்தனை பேர் லைக் பண்ணிறாங்கனு எண்ணிக்கொண்டு இருந்து இருப்பார்கள்! :))))

    ReplyDelete
  7. பல இடங்களுக்கும் சென்று ரசித்து நீங்களிட்ட பதிவும் ரசிக்கும் படி இருக்கிறது :)

    ReplyDelete
  8. புத்தகக் காட்சிக்கு வரமுடியாவிட்டாலும், உங்களை வந்து சந்திக்கும் எண்ணம் இருந்தது. அதுவும் நிறைவேறாமல் போனது. இப்போது உங்கள் உடல்நிலை தேவலாமா?

    நட்போ, சௌஜன்யமோ இல்லாமல் செயற்கையாகத்தான் அமைந்து விடுகின்றன பயணங்கள்.

    உணவைப் புகைப்படம் எடுக்க உங்கள் மனைவி எதிர்ப்பது ஏன்?

    ReplyDelete
  9. அருமையான பயணப் பதிவு!

    சீரியசாக மேல்மட்ட வாசிகளாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் மட்டும் குறைந்தவனா. நானும் சீரியசாகவே பயணித்தேன்// ஹஹஹ் ஒரு சிறிய மறைவான ஹாஸ்ய உணர்வு இழையோடுகின்றது ஒரு சிறு குழந்தை சொல்லுவது போல்...வயதானால் குழந்தை தானே..(நானுன் உன்னோடு கா என்று சொல்லுவது போல்...மிகவும் ரசித்தோம் இதை...) உடல நலம் தேறியதா சார்? Take care of your health sir.

    இது கீதாவிடமிருந்து : சார் என்ன சார் சென்னைக்கு வந்து விட்டு என்னை மறந்து போனீர்களா...நான் சென்னையில் தான் இருக்கின்றேன் என்பது தங்களுக்குத் தெரியாது என்று நினைக்கின்றேன்...னீங்கள் வேளச்சேரியில்தான் இருந்திருக்கின்றீர்கள். நான் தரமணி ஐஐடி சுவரை ஒட்டி அசெண்டாஸ் அருகில். சாரி நீங்கள் இருப்பது தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாக வந்து தங்களைச் சந்தித்திருந்திருப்பேன் தங்கள் வீட்டிலேயே. சந்திக்க முடியோயாமல் போனதே என்று வருத்தம். இனி நீங்கள் சென்னை வரும் போது எங்களுக்கு மெயில் கொடுங்கள் சார். நீங்கள் உங்கள் சௌகர்யம் சொன்னால் சந்திக்கலாம் சார்.


    ReplyDelete
  10. நானும் வெளியூரில் உறவினர்கள் சூழ இருக்கிறேன்.

    அவர்களுடன் உறவாடிக் கொண்டு இருக்கும் போது இணையம் பக்கம் வர முடியவில்லை.
    இடை இடையே நேரம் கிடைக்கும் போது, இணைப்பு கிடைக்கும் போது வந்து வலைத்தளங்களை பார்வையிடுகிறேன்.

    உங்கள் பயண அனுபவங்கள் அருமை.படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    புதுமனை புகு விழா, திருமணவிழா என்று பகிர்வு அருமை.
    உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. தமிழ்ப் பனியும் தெலுங்குப் பனியும் தங்களுக்குக் கொடுத்த மலையாளப் பனியைப் பணியைத் தாங்கள் எதிர்கொண்டவிதம் நன்று. உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளவேண்டுகிறேன். புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete

  12. @ கில்லர்ஜி
    எழுத எழுத எண்ணங்கள் கோர்வையாக வந்தால் எழுத்து சிறக்கும் என் புரிதல். வருகைக்கு நன்றிஜி.

    ReplyDelete

  13. @ கில்லர்ஜி
    நம் உர்ரில் சில கோவில்களில் ஒரு யாளியின் வாய்க்குள் உருளும்பந்து செதுக்கி இருப்பார்கள். அதுவும் ஒரு உயரமன இடத்தில் எல்லாம் கை வண்ணம்தானோ வருகைக்கு நன்றி ஜீ.

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    சில நேரங்களில் நம் உடலை நாம் சொல்வதைக் கேட்கப் பழக்கவேண்டும். வருகைக்கும்கரிசனத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    சென்னையில் பல பதிவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் சந்திக்க முடியவில்லை. முதல் காரணம் நான் சென்று சந்திப்பது அரிதாகிறது. மற்றபடி பிறரை வற்புறுத்தவும் முடியாது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ திண்டுக்கல் தனபாலன். கரந்தயாருக்குக் கொடுத்த மறு மொழியே மீண்டும். படங்களை ரசித்ததற்கு நன்றி டிடி.

    ReplyDelete

  17. @ வருண்
    சதாப்தி மாதிரி ரயிலில் பயணிப்பவர்கள் எந்த குறுக்கீடுமிருப்பதை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete


  18. @ பகவான் ஜி
    இந்தமுறை நான் எங்கும் செல்லவில்லையே,என் மகன் வீடு தவிர. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  19. @ ஸ்ரீராம்
    அடுத்தமுறை என்று இருக்கிறதே என்றுதான் சமாதானப் படுத்திக் கொள்கிறேன். நானாகப் போய் ர்யாரையும் சந்திக்காதபோது எப்படி குறைபட்டுக் கொள்ள முடியும்.அம்மாதிரி புகைப்படம் எடுப்பதில் என் மனைவி feels odd. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  20. @ தில்லையகத்து துளசிதரன்
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார். கீதாவின் கனிவான வார்த்தைகள் தெம்பு தருகிறது. அடுத்தமுறை நிச்சயம் சந்திக்க முயல்வேன். நன்றி.

    ReplyDelete

  21. @ கோமடி அரசு
    மும்முரமான நேரத்திலும் இடைவெளி கிடைக்கும் போது வருகை தந்து கருத்திடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி மேடம்.

    ReplyDelete

  22. @ சோழநாட்டில் பௌத்தம்
    இப்போது உடல் நலன் சரியாய் இருக்கிறது ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  23. பதிவு அருமை, உடல்நலம் தேறி விட்டதா ஐயா?

    ReplyDelete

  24. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    உடல் இப்போதுநலனே. கனிவான விசாரிப்புக்கு நன்றி உமேஷ்.

    ReplyDelete
  25. கிரிஸ்டல் கற்கள் அனைத்தும் அழகு..... அதிலும் அந்த கத்தி போன்றது!

    மார்பிள்களில் இப்படி யானைக்குள் யானை போன்று பல பொம்மைகள் கிடைக்கிறது. அவர்களின் கலைத்திறன் வியக்க வைக்கிறது!

    சதாப்தி/ராஜ்தானி பயணங்கள் - ரொம்பவும் பிசி மாதிரி காண்பித்துக் கொள்ள பழகி விட்டார்கள்!

    ReplyDelete
  26. பயணத்தொடரை இரசித்தேன். சென்னையில் சந்திக்க இருந்தேன். ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் முடியவில்லை. அடுத்தமுறை சந்திக்கிறேன்.

    ReplyDelete
  27. @ தில்லையகத்து துளசிதரன்
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார். கீதாவின் கனிவான வார்த்தைகள் தெம்பு தருகிறது. அடுத்தமுறை நிச்சயம் சந்திக்க முயல்வேன். நன்றி.//

    மிக்க நன்றி சார்! நிச்சயமாகச் சந்திப்போம் சார்!

    ReplyDelete