Thursday, May 7, 2015

நீதி கேட்கிறேன்


                           நீதி கேட்கிறேன்
                           ------------------------


ஒன்றென்று சொன்னால் நினைவுக்கு வருவது
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பகரப்படுவதே
ஆனால் அறிந்தும் உணர்ந்தோர் அவ்வொருவனுக்கு
ஆயிரம் நாமங்கள் உருவங்கள் கொடுத்து உள்ளம் மகிழ்தல்
பொறுக்கலாம் அவரவர் விருப்பம் ஆனால் அவன் படைப்பினிலே
ஆயிரம் உண்டுங்கு சாதி என ஓங்கி உரைத்தல் சரியோ
இது என்ன நீதி.?
சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்
மேதினியில் மேவு பொருள் அனைத்தும்
இரண்டிரண்டாய் இலங்குதல் காணீரோ
உண்மை பொய், ஆண்பெண், ஒளி இருட்டு
என்றெங்கும் எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று
ஊடே இருப்பினும் ஒன்றில் ஒன்றைப் பிரித்து
உணரும் நாம் நம் செயல்களில் நன்றெது என்றும்
தீதெது என்றும் உணராதிருத்தல் கண்டிங்கு ஏதும்
கேளாதது என்ன நீதி.?
அநீதி எதிர்க்க இரு கண்போதாதென்றோ
முக்காலம் முப்பரிமாணம் என்று எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மும்மூர்த்தியில்
ஒரு மூர்த்தி முக்கண் கொண்டு திரிபுரம் எரித்தான்
அவன் தவம் கலைத்த அனங்கவேளையும்  சுட்டெரித்தான்
அவன் படைத்த உலகில் அவலங்களுக்கெதிராய் ஒரு கண்ணும்
திறவாதது என்ன நீதி?
வாழும் நிலத்தை நால்வகைப் படுத்தினான்
வாழும் நெறி போதிக்க நான்மறை என்றான்
வர்ணங்கள் நான்கும் செய்தொழில் வகுக்க
இரு பிறப்பெடுத்தவன் உயர்ந்தவன் என்றான்
பிறப்பொக்கும் என்று உணர்ந்தும் வகுத்தது கொண்டு
பிரித்திடல் என்ன நீதி.?
புலன்கள் ஐந்து பஞ்ச பூதங்கள் ஐந்து என்று
பூவுலகில் பிறந்த அனைவருக்கும் பொது
என்று படைத்த  இறையா இயற்கையா
வாய்ப்பென்று வரும்போது வித்தியாசம் காட்டுதல்
பூர்வ ஜன்ம வாசனையின் பலன் என்று கூறல்
இப்பிறப்பில் இழைக்காத பிழைப்புக்கு  முற்பிறப்பைக்
காரணங் காட்டுதல், இது என்ன நீதி.?
பகிர்ந்துண்ணும் பறவையினங்கள் விலங்கினங்கள்
பசிக்கு உணவைத் தேடி அலையும் அவை அடுத்த வேளைக்கு
பதுக்கி வைக்காது. ஆவி பிரிந்தால் ஆறடி நிலமும் சொந்தமில்லை
என்றறிந்தவர் சேருமிடத்துக்குக் கொண்டா செல்ல முடியும்
தேவை போய் மீந்தவற்றை ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது எண்ணத்தில் ஓடியது
எண்ணில் எழுத்தில் இறை புகழ் பாட என்னால்
இயலவில்லை, கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவன் தானே தீயவை தலை தூக்க
தர்மம் நிலை நாட்ட யுகந்தோரும் மீண்டும் மீண்டும்
அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன் வருகை
நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி?


---

49 comments:

  1. ஔவையார் போல ஒன்று இரண்டு என்று பாடி விட்டீர்கள் போல!

    அவதாரம் நிகழும் என்று காத்திராமல் ஒவ்வொருவரும் அநீதிகளை தானே எதிர்த்துப் போராட வேண்டியதுதான். நமக்கு நாமே!

    ReplyDelete
  2. ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை ஐயா! அதோடு எல்லாக் குழந்தைகளும் ஏழைகளாகவும் பிறப்பதில்லை. இதிலிருந்தே இது எல்லாம் நடப்பதற்கு அனைத்துக்கும் மேலே ஒருவன் காரணம் என்று தெரிகிறது அல்லவா? தனிப்பட்ட முறையில் அநீதி நடந்தால் எதிர்த்துப் போராட வேன்டியது தான். பிறப்புக்கு என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  3. நிறம், உயரம், குணம், பாலினம் என அனைத்திலும் மாறுபட்டே குழந்தைகள் பிறக்கின்றன. இதை எல்லாம் மாத்த முடியுமா? நாம் நமக்குத் தெரிந்து யாருக்காவது அநீதி செய்யாமல் இருக்கலாம். அது ஒன்றே நமக்கு நிம்மதியைத் தரும். இம்மாதிரி ஒவ்வொருத்தரும் நினைத்துக் கொண்டால் அநீதிகள் குறையலாம்.

    ReplyDelete
  4. கீதா சாம்பசிவத்தின் கருத்துகளை வழி மொழிகின்றேன்.

    ReplyDelete
  5. #யுகந்தோரும் மீண்டும் மீண்டும்
    அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன் வருகை
    நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி?#
    நானும் அவனைத்தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் :)

    ReplyDelete
  6. உங்களது ஒன்றிலிருந்து ஆறு வரையான உரத்த சிந்தனையை படித்தவுடன் மனதில் தோன்றிய திரைப்படப் பாடல் “ஆறு மனமே ஆறு” – சிந்திப்பவர் கையில் நாடில்லை. உலகம் ... அப்படித்தான் என்று நகர வேண்டி உள்ளது. சுனாமி போல, குஜராத், நேபாள பூகம்பம் போல உலகம் முழுக்க ஒரு அழிவு நிகழும். நிகழ்ந்த பின் அவதாரம் ஒன்றிற்கு கதை எழுதப்படும்.

    ReplyDelete
  7. நீதி கிடைக்கிதோ இல்லையோ கேட்கலாம், சார், அதைக் கேட்பதே பெரிய விசயம்.

    எல்லாம் இறைவன் செயல்னு அமெரிக்காவில் அடிமையாக இருக்கும்போது ஆப்பிரக்கர்கள் நினைத்துவிட்டு பேசாமல் இருந்து இருந்தால் இன்றும் அடிமையாகத்தான் இருப்பாங்க. ஒபாமா எல்லாம் ப்ரசிடெண்ட் ஆகியிருக்க முடியாது. ஆனால் "பகவான் செயல்"னு பாதிக்கப் பட்டவங்க யாரும் விடுவதில்லை.

    ஈ வெ ரா வை படச்சதும் பகவான் தான். அவரை மட்டும் ஏன் இவர்கள் "பகவான் செயல்" னு விட்டுவிட்டுப் போகவில்லை? ஏன் என்றால் பாதிக்கப் பட்டவனுக்குத்ட்தான் தெரியும். அதான் இறைவன் படைப்பான ஈ வெ ரா வை மட்டும் வெறுக்கத் தவறுவதில்லை. விமர்சிக்கத் தவறுவதில்லை. சுயநலம்தான் எல்லாம். ஆனால் ஊருக்கு ஒரு பிரச்சினைனா .. அது பகவான் செயல், நம்ம என்ன செய்ய முட்டியும்? னு ஏற்றுக்கொள்ளச் சொல்வார்கள். இவர்கள்தான் மனிதர்கள்.

    * ஏற்ற தாழ்வுகள் எல்லாம் பகவான் செயல்தான், நான் என்ன செய்ய முடியும்?

    * என் தலையெழுத்து நான் "உயர்வா" அல்லது "தாழ்வா" பொறந்துட்டேன். பகவான் என்ன செய்தாலும் அதில் காரணம் ஒண்ணு இருக்கும் அது எனக்குப் புரியலை. அதனால பகவானை குறை சொல்லக்கூடாது என்னையே குறை சொல்லிக்க வேண்டியதுதான்..

    இதுபோல் சிந்தனைகள் மனிதகுலத்தை ஒட்டு மொத்தமாக புதைகுழியில்தான் தள்ளும்..

    ReplyDelete
  8. "அனைத்தும் நம்மாலே..." பிறகு எங்கு வந்தது நீதி...?

    ReplyDelete

  9. கடவுள் வந்து களைவார் என்றிருக்காமல் கண்முன்னே விரியும் அவலங்களை களைவதற்கு நாமே முயற்சி செய்தால் நீதி கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை.

    ReplyDelete
  10. மனிதம் தோன்ற வேண்டும்
    மனிதம் தழைக்க வேண்டும்
    ஐயா

    ReplyDelete

  11. @ ஸ்ரீ ராம்
    அப்படி எழுதியதும் சற்று வித்தியாசமாகத்தானே இருக்கு. தனிப்பட்ட அநீதிகளை அவரவர்தான் போராடி எதிர்க்க வேண்டும் ஆனால் சமூக அவலங்களை....?

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    /பிறப்புக்கு என்ன செய்ய முடியும்?/ பிறப்பவனின் தவறா?பிறந்தபிறகாவது பிறப்பொக்கும் என்று எண்ணலாமே... ஏழை பணக்காரன் பிறப்பு பற்றியல்லநீதி கேட்டது.ஏழை பணக்காரன் ஆகலாம் .பணக்காரன் ஏழையாகலாம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு பற்றியதுதான் என்று உங்களுக்கும் தெரியும் படிப்பவர்க்கும் புரியும்.எல்லாம் மேலிருப்பவன் செயல் என்று கூறலே சரியில்லாமல்தான் நீதி கேட்கிறேன் . பதிவை நன்கு படித்துப் பாருங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  13. @ கீதா சாம்பசிவம்
    நம்மால் மாற்றக் கூடியது அநேகம் அதைச் செய்யலாம் என்று கருத்திட்டதே மாற்றத்துக்கு முன்னோடி. வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    திருமதி கீதா சாம்பசிவத்துக்கு எழுதிய மறு மொழியே உங்களுக்கும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ பகவான் ஜி
    முன்னொரு பதிவின் பின்னோட்டத்தில் கலி யுகம் முடியும் போது பகவான் அவதரிப்பார் , அதற்கு இன்னும் ஆண்டுகள் பல இருக்கிறது என்னும் விதத்தில் கருத்து இருந்தது. காத்திருப்போம் .......!

    ReplyDelete

  16. @ வருண்
    /* என் தலையெழுத்து நான் "உயர்வா" அல்லது "தாழ்வா" பொறந்துட்டேன். பகவான் என்ன செய்தாலும் அதில் காரணம் ஒண்ணு இருக்கும் அது எனக்குப் புரியலை. அதனால பகவானை குறை சொல்லக்கூடாது என்னையே குறை சொல்லிக்க வேண்டியதுதான்..

    இதுபோல் சிந்தனைகள் மனிதகுலத்தை ஒட்டு மொத்தமாக புதைகுழியில்தான் தள்ளும்../இந்த மாதிரி சிந்தனைக்கு எதிராகத்தானே ஒரு புனித வேள்வி போல் எழுதி வருகிறேன் crusade என்றால் இன்னும் சரியாக இருக்குமோ?.

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    அனைத்தும் நம்மாலே என்றால் நீதி கேட்கக் கூடாதா. உங்கள் மொழியில் மனசாட்சியைக் கேட்பதாக இருக்கட்டுமே. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  18. @ வே.நடன சபாபதி
    அப்படி எல்லாம் நடக்காததால்தானே நீதி கேட்க வேண்டி இருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ கரந்தை ஜெயக் குமார்
    மனிதம் தொன்றாவிட்டால் தோற்றுவிக்க வேண்டும் . தழைக்காவிட்டால் எரு போட்டு வளர்க்க வேண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ தி. தமிழ் இளங்கோ
    எல்லாம் அழிந்த பின்னால் மாற்றம் நிகழ்வதால் யாருக்குப் பிரயோசனம் ஐயா. ...!சிந்தனைகளில் மாற்றம் தோற்றுவிக்கவே என் எழுத்தால் முயல்கிறேன் உங்கள் பின்னூட்டம் படித்ததும் எனக்கு மனோகரா திரைப்பட வசனம் நினைவுக்கு வந்தது ”பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு “ வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  21. அருமை ஐயா வரிசைப்படி அழகாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  22. நீதி கேட்கிறேன் என்கிறீர்
    ஏற்றுக்கொள்கிறேன்
    நீதி தேவதையின்
    கண்ணைக் கட்டி வைத்துக்கொண்டு
    கேட்பது சரியா?

    ReplyDelete
  23. அவன் வருவான் என்பது முட நம்பிக்கை ! நாம்தான் மாற்ற வென்டூம் ! மாற்றுவோம் ! ---காஸ்யபன்.

    ReplyDelete
  24. என்னோட கருத்தை நீங்க சரியாப்புரிஞ்சுக்கலை அல்லது என்னால் சரியாகச் சொல்ல முடியலைனு நினைக்கிறேன். என்ன தான் முயன்றாலும் மனித முயற்சிகள் மற்றவரைக் கைதூக்கி விட நினைத்து முயற்சிகள் வெற்றி பெற்றாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நிச்சயம் கிடைக்காது.

    ReplyDelete
  25. //இந்த மாதிரி சிந்தனைக்கு எதிராகத்தானே ஒரு புனித வேள்வி போல் எழுதி வருகிறேன் crusade என்றால் இன்னும் சரியாக இருக்குமோ?.//

    உங்களையும் அறியாமல் ஆழ்மனதிலுள்ள நம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. வேள்வியைப் புனிதமாகக் கருதுகிறீர்களே! அதற்கு என் நன்றி. :)

    ReplyDelete

  26. @ கில்லர்ஜி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி

    ReplyDelete

  27. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    நீதி தேவதையின் கண்களைக் கட்டி விட்டிருக்கிறார்கள் கண்களைத் திறக்க வைப்போம். நீதி தேவதையின் கண்களைக்கட்டி விட்டிருப்பது விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்கவே என்றே நினைக்கிறேன்

    ReplyDelete

  28. @ காஸ்யபன்
    அந்த நம்பிக்கையிலேயே எழுதி வருகிறேன் கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  29. @ கீதா சாம்பசிவம்
    பலன்களைப் பற்றி நான் பேசவில்லைமுயற்சிக்கவே வாய்ப்புகள் மறுக்கப் படுவதுதான் ஆதங்கம் மீள் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  30. @ கீதா சாம்பசிவம்
    வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. மூட நம்பிக்கைகள்தான் இல்லை/ வார்த்தைகளில் விளையாடுவது எனக்குப் பிடிக்காது. அம்மாதிரி அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே crusade என்று எழுதினேன் எல்லோரையும் நேசிக்கும் நான் ஆழ்மனதிலும் நல்லவன் என்றே நம்புகிறேன் உறுதியோடு செய்யும் செயலையே நான் வேள்வி என்றேன் செய்யும் எந்தச் செயலையும் புனிதமாகக் கருதுகிறேன் நீங்கள் நினைக்கும் அர்த்தத்தில் அல்ல. என்னை எப்படிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி நினைப்பதில் எனக்கு வருத்தமோ ஆட்சேபணையோ இல்லை.தொடர் கருத்துகளுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  31. பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை என்பதே மேலே ஒருவன் இருப்பதற்கான அத்தாட்சியா? முடிச்சு புரிகிறது. ஒன்று முழங்கால் என்பதும்.

    ReplyDelete
  32. ஒன்று இரண்டு வரிசை நயமாக இருக்கிறது.
    உண்மை பொய் ஒளி இருள் இதோடு ஆண் பெண் இருமை சேருமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆண் உண்மை பெண் பொய்யா அல்லது மாற்றா? 😊

    ReplyDelete
  33. எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிருந்தால் தானே இப்போ பிறந்து நிலைனாட்ட? யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? யாரோ சொன்னதாக யாரோ கட்டிய கதையெல்லாம் நம்பி உங்களை நீதி கேட்க வைக்கிறதே அதான் வருத்தம்.

    ReplyDelete
  34. நீதி கேட்க ஆரம்பித்து, அனைத்து அநீதிகளையும் கண்டு கோபப்பட்டுள்ளதைத் தங்களின் பதிவு உணர்த்துகிறது. ஆங்காங்கே முடிந்தவரை நல்லன செய்ய முயற்சிப்போம். அந்நிலையில் எதிர்மறை நிகழ்வுகள் தானாகக் குறைய ஆரம்பிக்கும்.

    ReplyDelete

  35. @ A.Durai
    உங்களுக்குப் புரிகிறது. பலருக்கும் புரிகிறது.வாழ்ந்து கொண்டிருக்கும் விதம் சிலருக்கு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது

    ReplyDelete

  36. @ A.Durai
    ஒன்று இரண்டு வரிசையைப் பாராட்டியதற்கு நன்றி. உண்மை பொய், ஒளி இருள், என்பதோடு ஆண் பெண் இருமையைக் குறிக்கச் சொன்னதே தவிர குணங்களின் வேறுபாடுகளைக் குறிக்க அல்ல என்பது உங்க்ளுக்கும் தெரியும் என்பதும் எனக்கும் தெரியும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  37. @ A.Durai
    எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிருந்தால் தானே இப்போ பிறந்து நிலைனாட்ட? யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? யாரோ சொன்னதாக யாரோ கட்டிய கதையெல்லாம் நம்பி உங்களை நீதி கேட்க வைக்கிறதே அதான் வருத்தம்./ அதையே சொல்லி வரும் சிலரது நம்பிக்கைகளை கொஞ்சம் உரசிப் பார்க்கவே அப்படி எழுதினேன்

    ReplyDelete

  38. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நீதி கேட்பதன் மூலம் சிந்திக்க வைப்பதும் ஒரு நோக்கம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  39. ஐயா வணக்கம்.
    தாமத வருகைக்குப் பொறுத்தாற்றுங்கள்.
    கவிதை நடையில் ஒரு பதிவு.
    ஏனென்றால் முதல்வாசிப்பில் என்னால் பொருள்விளங்கக் கூடவில்லை.
    எண்ணலங்காரமா என்றால் அதுவும் இல்லை.
    இறையியலா என்றால் அதுவும் இல்லை.
    இவற்றை எலலாம் செய்தவன் மனிதன்தானே....!
    கடவுளின் பெயரால்........!
    ஆனால் இக்குரல், உங்களின் குரல் இன்றொலிக்கப்பட்டதன்று.
    பலநூற்றாண்டுப் பாரம்பரியம் இக்குரலினுக்கு உண்டு.
    பதிவின் டிராஃபிடில் இடுவதா வேண்டாமா என இருமனநிலையின இடையில் தூங்கும் நான்கைந்து பதிவுகளில் இதன் கதையும் இருக்கிறது.

    தங்களின் பதிவு அதைப் பதியத் தூண்டுகிறது.

    கூறியது கூறலாக இருப்பினும்........
    பார்ப்போம்!

    நன்றி.

    ReplyDelete
  40. சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டதற்கு ஒரு சபாஷ். :-)

    ReplyDelete
  41. நீதி கேட்பது அருமையாக இருக்கு! ஆனால் யார்தான் நீதி சொல்வது மனுநீதியே தவறவில்லை அன்று ஆனால் இன்று ஆட்சியினரே நீதியைக்கொல்லும் போது!

    ReplyDelete

  42. @ ஊமைக் கனவுகள்
    லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வருவதற்கு நன்றி. முதல் வாசிப்பில் பொருள் விளங்கவில்லை என்பதே ஆச்சரியம் ஒரு மூறைக்கு மேல் வாசித்திருப்பீர்கள் என்றால் அதற்கும் நன்றி. எண்ணலங்காரம் இறையியல் ஏதும் நானறியேன் . நான் நினைத்துப் பார்க்காத ஒன்றைதேட முயன்றதாலொரு வேளை பொருள் விளங்காமல் போயிருக்கலாம் பாரம்பரியமாக என் குரல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அவலங்கள் தொடர்வது துரதிர்ஷ்டமே/ இன்னும் சிந்திக்க வேண்டியது. எழுதுங்கள் உங்களை எழுதத் தூண்டி இருந்தால் நான் கொடுத்து வைத்தவன். வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  43. @ A.Durai
    சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டேனா.... நானா... எப்படி என்று புரியலியே. மீள் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  44. @ தனிமரம்
    மனுநீதியே தவறவில்லை அன்று. யோசிக்க வைக்கிறது. அன்றிலிருந்து தொடர்வதுதானே இந்த அநீதிகள் வருகைக்கு நன்றி ஐயா. ,

    ReplyDelete
  45. அறிவீனத்தால் விளைந்த அநீதிகளோ?உச்சநீதிமன்றம் கூட உடன் நீதி வழங்குவதில்லையே!

    ReplyDelete

  46. @ ஷக்திப்ரபா
    நீங்கள் சொல்வது சட்ட ரீதியிலான அநீதிகளுக்கு உச்ச நீதி மன்றம் உடன் நீதி வழங்காமல் இருக்கலாம். ஆனால் நான் கேட்பது சமீக ரீதியிலான அநீதிகளுக்கு. நீண்ட இடைவெளிக்குப்பின் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  47. அருமையான கேள்விகள்.

    நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதில் நம்பிக்கை உண்டு. இயற்கையை நம்மால் எதிர்க்க முடியாதுதானே!

    ஆனால் அந்த சக்திக்கும் இங்கு நடக்கும் மனித அவலங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எல்லாம் நம்மால்தான். அதை நிவர்த்தி செய்வதும் நமது கையில் தானே தவிர அதை எல்லாம் அந்த சக்தி பார்த்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாதுதான். கொலை செய்வதற்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் கூட அப்ப்போ இறைவன் பொறுப்பாவானா? ஒரு வேளை அதனால் தான் இறை தத்துவம் பேசும் நம் சாமியார்கள் செய்கின்றார்களோ? புரியவில்லை....

    மனதில் எழும் கேள்விகளையும் நீதி என்ன என்பதையும் நீங்கள் கேட்டுவிட்டீர்கள். எனக்கும் இது மனதை அரிக்கும் ஒன்றுதான்...ஆனால் விடைதான் கிடைக்கவில்லை

    கீதா

    ReplyDelete

  48. @ துளசிதரன் வி. தில்லையகத்து
    கீதாவின் கருத்து என்று தெரிகிறது. நான் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் பதில்காண விழையும் போது தெளிவு பிறக்கும் பலரும் சிந்திக்கலாம் .நான் உரக்க சிந்திக்கிறேன் எனக்கு இந்த மதங்களால் ஏற்படும் பிரிவினைகளைப் பொறுக்க முடிவதில்லை. தாமதமாக வந்தாலும் வருகைக்கு நன்றிமேம்

    ReplyDelete
  49. மீண்டும் படித்தேன் ஐயா

    ReplyDelete