Wednesday, April 29, 2020

மானேஜ்மெண்ட் கேம்ஸ்



                                   மானேஜ்மெண்ட் கேம்ஸ்
                                   -------------------------------------------

 பதிவுலகில் வளைய வருபவர்  பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவரே  ஓரளவு பொசிஷனில் இருப்பவர்  இவர்களுக்கு இந்த விளையாட்டு உதவலாம்


     ஒரு நிர்வாகத்தில் பல அடுக்குகளில் பணி புரிபவர் இருக்கிறார்கள்..ஒவ்வொரு நிலையில் இருக்கும் பணியாளருக்கும் ஒரு மேலதிகாரி இருப்பார். இப்படி பல அடுக்குகளிலும் பணி புரிபவர்கள் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் பணி புரிய வேண்டியது அவசியம். இதை விளக்கும் முகமாக இந்த விளையாட்டுப் பயிற்சி.

இந்த விளையாட்டை விளையாட குறைந்தது மூன்று குழுக்கள். வேண்டும்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருக்க வேண்டும். 1.மேலதிகாரி 2. மேற்பார்வையாளர். 3. தொழிலாளி. மேலதிகாரி குறியீடுகளை நிர்ணயம் செய்து, மேற்பார்வையாளர் வழிமுறைகளை வகுக்க தொழிலாளி அதை செய்து முடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் குறியீடு TARGET  என்பது எத்தனை கன சதுரங்களை (CUBES) ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும் என்பதே. மேலதிகாரி குறிப்பிடும் இலக்கை அடைய மேற்பார்வையாளர் தன் கீழ் பணியெடுக்கும் தொழிலாளிக்கு தன் கைப்பட செய்வது தவிர எல்லா உதவிகளையும் செய்யலாம். தொழிலாளியின் கண்கள் கட்டப் பட்டிருக்கும். அது தொழிலாளிக்குள்ள CONSTRAINT ஐ குறிப்பிடுவதாகும்.

இப்போது விளையாட்டைத் துவக்க ஒரு மேசை வேண்டும். தேவையான அளவு கனசதுரங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு ஒரு குழுவின் டார்கெட் மற்ற குழுவுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். மேலதிகாரி குறிப்பிடும் இலக்கு தொழிலாளிக்குத் தெரியக் கூடாது. மேற்பார்வையாளர் தொழிலாளிக்கு நிர்ணயிக்கும் இலக்கு மேலதிகாரிக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மூன்று கற்பனைக் குழுக்கள் விளையாடுவதைக் காணலாம்.

முதல் குழுவின் மேலதிகாரி-- மேற்பார்வையாளரிடம், “ இன்னும் அரை மணிநேரத்தில் 25-/ க்யூப்ஸ் அடுக்கப் பட்டிருக்க வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது I WANT THE RESULTS.  இலக்கு அடையப் படாவிட்டால் நிலைமை உங்களுக்கு எதிராக இருக்கும். YOU KNOW THAT I AM VERY STRICT. சொன்னது ந்டக்காவிட்டால் ...........

இரண்டாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம். “ உங்களுக்கு நாம் இலக்கை அடைய வேண்டிய அவசியத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நாம் எவ்வளவு க்யூப்ஸ் அடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.? நீங்கள் எதையாவது செய்து 25-/ அடுக்கிவிட்டால் எல்லோருக்கும் நல்லது. 23-ஆவது நிச்சயம் அடுக்க வேண்டும். இல்லையென்றால் முதலாளிக்கு பதில் சொல்வது கஷ்டமாகிவிடும்.

மூன்றாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம் “ கடந்த முறை
23-/ க்யூப்ஸ் இலக்கு அடைந்திருக்கிறோம். இதில் உங்கள் அனுபவமும் பங்கும் நான் சொல்லத் தேவை இல்லை.. தொழிலாளியின் திறமையும் தேவையும் உங்களுக்குத் தெரியும். 23-/ க்யூப்ஸ் அடுக்கியவர் இன்னும் சற்று முயன்றால் உங்கள் ஒத்துழைப்புடன் 25-/ அடுக்குவது முடியாததல்ல. 25-/க்கு மேல் செய்வதெல்லாம் கூடுதல் போனஸ் பெற வழிவகுக்கும். ALL THE BEST. !”

 இதை ஊன்றி கவனித்தால் நிர்வாகத்தின் மூன்று வித்தியாசமான அணுகு முறைகளைக் காணலாம்

இனி மேற்பார்வையாளர்கள் இதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

முதற்குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக மிரட்டப் பட்டிருக்கிறார், விரட்டப் பட்டிருக்கிறார். மேலதிகாரியின் இலக்கை 27-/ ஆக மாற்றினால்தான் 25-/ ஆவது செய்ய முடியும், விரட்டாவிட்டால் வேலை நடக்காது. மிரட்டி உருட்டிஎப்படியாவது இலக்கை அடைய வேண்டும் நம் இலக்கை அடையாவிட்டாலும் மேலதிகாரியின் இலக்காவது எட்டலாம்  என்று எண்ணிக் கொண்டு களத்துக்கு வருகிறார்.

இரண்டாம் குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக யோசிக்கிறார். 25-/ தான் இலக்கு என்றாலும் 23-/  அல்லது 24-/ ஆவது செய்ய வேண்டும். 22-/ ஆனாலும் எதாவது சமாதானம் சொல்லி சமாளிக்கலாம்  என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் இருக்கிறது.

மூன்றாவது குழுவின் மேற்பார்வையாளர், எந்த வழிமுறையைக் கையாளலாம் என்று யோசிக்கிறார். அவரது அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் ஒருங்கே உபயோகிக்க வேண்டும். தொழிலாளிக்கு அவரது திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். எங்கே சமயம் விரய மாகிறதோ அதை நீக்க வேண்டும். தொழிலாளியை ஊக்கப் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டும் இருக்கும் நிலையை அவருக்கும் சொன்னால் புரிந்து கொண்டு முழுத் திறமையையும் காண்பிப்பார். முதலில் ரிலாக்ஸாக  இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டு தயாரகிறார்.

எந்த மாதிரி நிலையில் மேற்பார்வையாளர்களின் செயல் பாடுகள் உருவாக்கப் படுகின்றன என்பது தெரிய வருகிறது

இனி திட்டங்களும் அணுகுமுறைகளும் என்ன பலன் தருகிறது என்று பார்க்கலாம்
முன்பே கூறியபடி தொழிலாளியின் கண்கள் கட்டப் படுகின்றன முதல் குழு தொழிலாளியிடம் கண்கள் கட்டப் படும் முன்பே தேவைகளும் இலக்குகளும் விளக்கப் படவில்லை.இலக்கு 27-/ க்யூப்ஸ் அடுக்கப் பட வேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கலாம் என்று பயமுறுத்தப் படுகிறார். ( விளையாட்டில் கண்களைக் கட்டுவது நடைமுறை குறைபாடுகளை குறிக்கவே என்று கூறி இருந்தேன். மேற்பார்வையாளரின் கைகளும் கட்டப் படும். அவர் தொழிலாளியை வேலை வாங்க வேண்டும். அவரும் சேர்ந்து செய்யக் கூடாது என்பதுதான் காரணம்.) முதல் குழுவில் அடுக்குதல் துவங்கு முன்பே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை இருக்கும். இந்தச் சூழலில் அவரது கண்கள் இன்னும் இருக்கமாகக் கட்டப் பட்டுவிடும். ( SHOWS MORE CONSTRANTS ) மேசையில் க்யூப்ஸ் ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது. இலக்கைச் சொல்லி விட்ட மேற்பார்வையாளர் தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்று கவனிக்காமல் அதை முடிக்க வேண்டியது அவன் பொறுப்பு எனும் பாவத்தில் இருப்பார் .நடுநடுவே வந்து முடிந்து விட்டதா என்று கேட்பார்.

இரண்டாவது குழுவில் மேற்பார்வையாளர் தொழிலாளியிடம் கெஞ்சாத குறையாக இலக்கினை அடைய வேண்டிய காரணத்தைக் கூறுகிறார். அடையாவிட்டால் தானும் சேர்ந்து தண்டிக்கப் படுவொம் என்று கூறுகிறார். எப்படியாவது கடந்த இலக்கான 23-/வது அடுக்க வேண்டும். ஓவர்டைம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மேசையில் எவ்வளவு க்யூப்ஸ்கள் இருக்கிறது என்று கவனிக்கவில்லை.

மூன்றாவது குழுவில் மேற்பார்வையாளரும் தொழிலாளியும் எப்படி இலக்கை அடையலாம் என்று சேர்ந்து சிந்திக்கிறார்கள். க்யூப்ஸ் அடுக்க வேண்டிய மேசை ஆடாமல் இருக்கிறதா என்று சோதிக்கப் படுகிறது. அடுக்கப் படவேண்டிய க்யூப்ஸ் தேவையான எண்ணிக்கையில் இருக்கிறதா என்று பார்க்கப் படுகிறது. கூடிய மட்டும் ஒரு ரிலாக்ஸான சூழல் கொண்டு வரப் படுகிறது. வேலை துவங்குமுன் தொழிலாளியும் மேற்பார்வையாளரும் கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

விளையாட்டு முடிந்து மூன்று குழுக்களும் அடைந்த இலக்கை கவனிக்கலாம்.
முதல் குழு 20-/ க்யூப்ஸ் அடுக்கியிருந்தது. இரண்டாவது குழு 24-/ க்யூப்ஸ் அடுக்கி யிருந்தது. மூன்றாவது குழு 27-/ க்யூப்ஸ் அடுக்கி இருந்தது.


ஒவ்வொரு குழுவையும் விசாரிக்கும்போது


குழு 1-/ன் மேலதிகாரி:-தொழில் தெரியாத தொழிலாளியும் உருப்படாத மேற்பார்வையாளரும் இருந்தால்  எப்படி இலக்கை அடைய முடியும்.?

குழு 1-/ன் மேற்பார்வையாளர் இலக்கு நிர்ணயித்து விட்டால் போதுமா.? இந்தமாதிரியான தொழிலாளியை வைத்துக் கொண்டு இதைச் செய்ததே அதிகம்.வெறுமே மிரட்டினால் வேலை நடக்குமா.?

குழு 1-/ன் தொழிலாளி. அங்கிருந்த க்யூப்ஸ்களை அடுக்கினதே என் சாமர்த்தியம். தேவையான க்யூப்ஸ்களே இல்லாதிருக்கும்போது இலக்கு மட்டும் நிர்ணயித்து எந்தக் கவலையும் இல்லாமல் குறை சொல்லும் அதிகாரிகளிடம் வேலை செய்வதே என் தலை எழுத்து.

குழு 2-/ன் மேலதிகாரி.. கடந்த முறையை விட இந்தமுறை அதிக இலக்கை அடைந்து விட்டோம் என்ன.... ஒரு குறை என்னவென்றால் இலக்கை அடைய செலவு கூடிவிட்டது

குழு 2-/ன் மேற்பார்வையாளர்.. தொழிலாளி அடுக்கும்போது கூடவே இருந்து அவரை உற்சாகப் படுத்திக் கெஞ்சிக் கூத்தாடி ஓவர்டைம் எல்லாம் கொடுத்து அப்பப்பா என் தாவு தீர்ந்து விட்டது. நானும் சேர்ந்து செய்திருந்தால் என் கை கட்டில்லாமல் இருந்திருந்தால். 30-/ க்யூப்ஸ் கூட வைத்திருக்கலாம்.

குழு 2-/ன் தொழிலாளி. ஓவர்டைம் இல்லாமல் இவர்கள் சொல்வதை செய்தால் நம் மேல் குதிரை ஏறிவிடுவார்கள். இலக்கு நிர்ணயிக்கிறார்களே , இவர்களால் இதை செய்ய முடியுமா. நம் பாடு இவர்களுக்கு எங்கே தெரிகிறது.

குழு 3-/ன் மேலதிகாரி.. ஊக்கப்படுத்தி வசதிகள் செய்து கொடுத்தால் இலக்கை அடைய முடியும். என் குழுவில் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. நான் ஒரு ஊக்குவிப்பானாக செயல்படவே விரும்புவேன்.


குழு 3-/ன் மேற்பார்வையாளர். என் மேலதிகாரிக்கு என் மேல் நம்பிக்கை. எனக்கு என்னோடு பணி செய்யும் தொழிலாளியிடம் நம்பிக்கை. திறமை இருக்கும் இடத்தில் தட்டிக் கொடுத்தால் இலக்கை அடைய முடியும்.

குழு 3-/ன் தொழிலாளி. எனக்கு வேலை செய்ய பூரண சுதந்திரம் உண்டு, என் தேவைகளை உணர்ந்து வேண்டிய சமயத்தில் உதவும் மேற்பார்வையாளர். க்யூப்ஸ் அடுக்கும்போது பக்கத்தில் இருந்து கோணலாகப் போகாமல் நேராக வர அவ்வப்போது எனக்கு உதவியது மட்டுமல்ல, மேசை ஆடாமல் இருக்கவும் கைக்கெட்டியவாறு க்யூப்ஸிருக்கும்படியும் பார்த்துக்கொண்டு ஊக்கப் படுத்தும் மேற்பார்வையாளருக்கும் இதில் பெரும் பங்குண்டு.

MANAGEMENT  என்பதில் MAN-MANAGEMENT பெரும் பங்கு வகிக்கிறது. நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து பலதரப் பட்ட அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் தொழிலாளிகள் என்று பார்த்து விட்டேன். தொழிலாளிகளை அவர்களின் திறன் அறிந்து அவர்களுடைய முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவது மேலதிகாரிகளின் கையில் இருக்கிறது. என் பழைய பதிவு ”எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் “ நான் அந்தக் காலத்தில் எழுதியது. அதில் ஓரளவுக்கு ஒரு தொழிலாளியின் மன நிலையைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறேன்.

எந்த ஒரு தொழிலாளியும் தான் வேலைவாங்கப் படுவதாக எண்ண விரும்புவதில்லை..வேலை வாங்கும்போது அது அவர்களாக விரும்பிச் செய்வதாக இருக்க வேண்டும்.அதிகாரிகள் தொழிலில் நெளிவு சுளிவுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.வேலை தெரிந்த அதிகாரிகளுக்கு தொழிலாளர் மத்தியில் என்றும் மதிப்பு உண்டு..
---------------------------------------------------------------              .         . 











13 comments:

  1. ஐயா  தவறாக எண்ண வேண்டாம்.  இவை என்னுடைய கருத்துக்கள். 

    மேற்பார்வையாளர் என்பவர் இருக்கும் வரை விரும்பி வேலை செய்பவர்கள் மிகச் சிலரே என்பது எனது கருத்து. முழுவதும் விரும்பிச் செய்யப்படுவது சுய தொழில் என்பது மட்டுமே. பொதுவாக வேலையாள் கிடைக்கும் சம்பளத்திற்கு உழைத்தால் போதுமானது என்றே நினைக்கிறார்கள். சம்பளம் சரியில்லை எனில் அவர்கள் செய்யும் வேலையும் குறையும். 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை பதிவிடுகிறீர்கள் இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது வேளையாள் சூப்பர்வைசர் அதிகாரி என்னும் செட் அப்பில் எப்படி குறி யீட்டை எட்டுவது என்பதே ஒரு விளையட்டாக கூறப்பட்டது

      Delete
  2. இது எனக்கொன்றும் விளங்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் புரிகிறது

      Delete
  3. கொஞ்சம் கஷ்டமான விளையாட்டாய் இருக்கும் போல!

    ReplyDelete
    Replies
    1. man managementபற்றியது ஒரு விளையாட்டாக கூறப்பட்டது

      Delete
  4. முடிவில் ஒரு பத்தி உள்ளதே...

    அதே போல் அடியேனும் :-

    சென்னை பின்னி மில்லில் ஒரு அதிகாரி எனும் தொழிலாளியாக இருந்தபோது...

    ReplyDelete
  5. அதிகாரிகள் தொழிலில் நெளிவு சுளிவுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

    உண்மை

    ReplyDelete
  6. இந்த ஆட்டத்துக்குச் சம்மதிக்கும் குழு இப்பெல்லாம் எங்கே இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. குழுக்கள் வேண்டும் என்றில்லை இதன் மூலம் MAN MANAGEMENT பற்றி தெளிவு கிடைக்கலாம்

      Delete
  7. முன்பு இப்படிப்பட்ட குழுக்கள் இருந்தன. இலக்கை ஏதோ ஒரு வகையில் எட்ட வேண்டும் என்கிற துடிப்போடு.
    இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு சிலரும் பங்களிப்பே இல்லாத சிலரும்.

    கால மாற்றங்கள்

    ReplyDelete
  8. MAN MANAGEMENT பற்றிய தெளிவு கிடைப்பதை ஒர்விளையாட்டு மூலம் சொன்னது

    ReplyDelete