Sunday, February 14, 2021

வாலன் டைன் தினம்

 


காதல்ர் தின ஸ்பெஷல்

அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று  வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...?இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக் காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.

 

அநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள்.? எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. ?. ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா ? இந்தமாதிரியான எண்ணங்களே, கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது. அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.

 

ஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர் கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “  BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “  என்பார்கள். அது போகட்டும். எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின் கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் ,  உன் கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ?” நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ? கணினியில் உபயோகிக்கப் படும்  SMILEY  போல் இருக்கும். ..!ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்...! இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில் கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும்  நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.

கண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான் ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A PERFECT PERSONALITY  என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும் ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.

 

காதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும். காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும் நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. ? முடியும். ஆனால் மூடியாது. .! எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம் என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும் நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும் ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.

பொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம். காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம்  எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக் கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த சூழலை  எல்லாம் மறந்து விட்டு கணவன் , மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள்  பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

அன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி இருக்க  கண்வன் மனைவி பங்களிப்பு மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம் வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.

 

என்னடா இது  காதல் கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை உரையாடி இருப்போம். SWEET NOTHINGS  தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும் அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறக்கும்

 

 

 

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான் வேண்டுவதெல்லாம்  நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “

அப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். . வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும் பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும் உன் நினைவுடன்........ உன் அன்பன்.

    

  .

 

  

 


15 comments:

  1. ..கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். //

    Tikhalal mirch powder தூவி அனுப்பிவிட்டீர்களோ..

    ReplyDelete
    Replies
    1. இதுதான் க்சலாய்ப்போ

      Delete
  2. கடைசியாக சொல்ல விரும்புவது என்ற அடிகளை அதிகம் ரசித்தேன் ஐயா.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்

      Delete
  3. அம்மாடி..   எவ்வளவு பெரிய காதல் கடிதம்?  இப்பவே இப்படீன்னா ஐம்பது வருஷஷங்களுக்குமுன் எவ்வளவு பெரிய கடிதம் எழுதப்பட்டிருக்கும்!!

    ReplyDelete
    Replies

    1. இப்போதுதான் சுருக்கமாக சொல்ல முடியவில்லை

      Delete
  4. ம்..ம்..ம்..... ரொம்ப அட்வைஸ் நெடியாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வய்தானல் சின்னவர்கச்ளுக்கு சொல்ல அட்வைஸ் ஒன்று தான் தேறு கிறது

      Delete
  5. காதலர் தினமான இன்று இன்றைய காதல் ஜோடிகள் படித்து அறிய வேண்டிய அறிவுரை அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகில் காதல்ஜோடிகள் இருக்கிறார்களா

      Delete
  6. அருமையான அழகான எண்ணங்கள் ஐயா... சிறப்பு...

    ReplyDelete
  7. பராட்டுகளுக்கு நன்றி சார்

    ReplyDelete