Monday, July 29, 2013

கனவுகள்.... எண்ணச் சிதறல்கள்.


     


            கனவுகள் எண்ணச் சிதறல்கள்.


நண்பர்:--. இப்போதெல்லாம் வலைப் பூ பதிவுகளில் பதிவாகிக் கொண்டிருக்கும் சுவாரசியமான விஷயங்கள் என்ன என்று கூற முடியுமா.?

நான்:-- இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் பலரது துவேஷங்களையும் நான் சம்பாதிக்க வேண்டி இருக்கும். .ஒவ்வொருவர் பதிவிடும்போதும் அது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைத்துத்தான் பதிவிடுகிறார்கள்.

நண்பர்:-- அது சரி. உனக்குப் பதிவிட ஒரு தலைப்பு சொல்லட்டுமா.?

நான்:- நான் பல தலைப்புகளில் எழுதி விட்டேன். நகைச்சுவை என்னும் பெயரில் பலர் எழுதுவதுதான் எனக்கு சீரணிப்பதில்லை.என் வசப்படுவதுமில்லை.

நண்பர்:- இதிலிருந்தே தெரியவில்லையா உனக்கு வயது அதிகமாகிவிட்டது என்று.?

நான்:-ஒப்புக் கொள்கிறேன். , அதுவும் திரைப் படங்களில் நகைச் சுவை என்று அவர்கள் அடிக்கும் கூத்து சகிக்க முடியவில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர் வாய்விட்டுச் சிரித்து நோய் அண்ட விடாமல் செய்கிறார்கள்.


நண்பர்:- ஒரு அந்தரங்கக் கேள்வி. கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே.

நான்:- அது கேள்வியைப் பொறுத்தது.

நண்பர்:- உனக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப் படும்.? உனக்கு வருமானம் எவ்வளவு.?

நான்:- இரண்டு கேள்விக்குமே பதில் கிடைக்காது. இருந்தாலும் எங்களுக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதே அபத்தமானது. எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது. ஆனால் கிடைக்கும் பணம் போதுமானது.

நண்பர்:- விதண்டா வாதமான பதில் . ஒரே கேள்விக்கு எப்படி இரண்டு முரணான பதில்கள் சரியாயிருக்கும்.?

நான்:- அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்..

நண்பர்;-சற்று விளக்கமாகப் பதில் தரலாமே.

நான்:- சரி. விளக்கமாகவே கூறுகிறேன்.இங்கிருந்து சென்னைக்குப்போக வேண்டும். எப்படியெல்லாம் பயணிக்கலாம்.? சாதாரண அரசு பஸ்ஸில் செல்லலாம். தொடர் வண்டியில் பயணிக்கலாம் இரண்டாம் வகுப்பில் போகலாம் ஸ்லீப்பரில் போகலாம், குளிர்சாதன வசதியுடன் a/c யில் பயணிக்கலாம். காரில் பயணம் மேற்கொள்ளலாம். விமானத்தில் பறக்கலாம். இவற்றில் எந்த விதப் பயணம் மேற்கொள்வோம் என்பது கையிருப்பைப் பொறுத்தும் நம் மன திருப்தியைப் பொறுத்தும் அமையும். அதிக செலவு அதிக வசதி. ஆனால் இலக்கு ஒன்றுதான் சென்னை செல்ல வேண்டும். ஒரு காலத்தில் முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு ரெயிலில் பயணித்து இருக்கிறேன். இப்போது வசதி (என் மக்கள் உபயம்) கூடி விட்டதால் அதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இன்றும் அநேக மக்கள் முன் பதிவு இல்லாமல் இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் அவர்களைவிட  நான் என்னை மாறுபட்டவனாக நினைப்பதில்லை. வசதி பெருக்கத்தால் நான் என்னை வித்தியாசப் படுத்திக் காண்பித்துக் கொள்வதில்லை.

நண்பர்:- இவ்வளவு விளக்கமும் எதற்காக.?

நான்:- இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்

நண்பர்:- நீதானே contentment  smothers improvement என்று சொல்வாய்.

நான்:- அந்த context- வேறு. அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஏற்ற தாழ்வுகள் மாற வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் எல்லாமே சரியென்று எண்ணத் துவங்கினால் முன்னேற்றம் இருக்காதுஆனால் ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும் போது இன்னும் இன்னும்  என்று தேவைகளை அதிகரித்துக் கொள்கிறோம் திருப்தி அடைந்தால் முன்னேற்றம் இல்லை.ஒரு புறம் முன்னேற்றம் கருதி திருப்தி கூடாது. இன்னொருபுறம் நிம்மதி வேண்டி திருப்தி தேவை. THAT IS THE PARADOX. இரண்டுக்கும் வரையறை  தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்:- அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.

நான்:-சில நாட்களுக்கு முன் எங்கே நிம்மதி என்று எழுதி இருந்தேன். அதில் வாழ்க்கையில் சில தேவைகள் சரியாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். அதில் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடும் தேவை என்று எழுதி இருந்தேன். நண்பர் ஜோசப் அவர்கள் அது குறித்துப் பின்னூட்டமிடும்போது நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையா? அப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையா, என்ற கேள்வியும் எழுகிறதே. அன்றைக்கு மட்டும் உழைத்து, ஈட்டியதையெல்லாம் அன்றே கரைத்துவிட்டு வெட்ட வெளியில் உறங்கி எழும் பலரும் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளை விடவும் நிம்மதியாய் உறங்கி எழுகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா? வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை இதைத் தான் நான் PARADOX என்று சொல்கிறேன். ஏழைகள் எல்லோருமே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்றால் நிம்மதி என்பதன் பொருளே விளங்காமல் போய் விடுகிறது. அவர்களது பிரதிதின வாழ்வே ஒரே போர்க்களமாகி விடுகிறது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழி வகுக்கவே அவர்கள் படாத பாடு படுகிறார்கள். இவை இருப்பவர்களுக்குப் புரிவது கஷ்டம்.

நண்பர்:- நீ அப்ஸ்ட்ராக்ட் ஆக ஏதோ எண்ணிக்கொண்டு பேசுகிறாய்.

நான்:- உனக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா.?பசிக்கும் நேரத்தில் உண்ண ஏதும் கிடைக்காமல் யாரிடமும் கேட்க வழியில்லாமல் அவதிப் படிட்டிருக்கிறாயா.? நேரம் தாழ்ந்தாவது உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லாமல் அரை வயிறோ கால் வயிறோ கஞ்சிக்கும் அல்லாடும் பலரது வாழ்வில் நிம்மதி எங்கிருந்து வரும்? முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும்.இருந்தால்தான் மனம் அமைதியில் இருக்கும். எனக்கென்னவோ இந்த உண்மையைப் புரிந்துகொண்டுதான் இலவசமாகத் தேவைகளைக் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.என்னதான் உழைத்து முன்னேற நினைத்தாலும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இருக்கும் DISPARITY மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

நண்பர்:- இதற்கு நீயும் நானும் என்ன செய்ய முடியும்.?அதது பூர்வ ஜென்ம பலன் படி நடக்கும்.

நான்:- நீயும் நானும் என்ன செய்ய முடியும் என்பதை விட என்ன செய்யாது இருக்க வேண்டும் என்பதே முதல் காரியம். அடுத்தவன் கஷ்டப் படும்போது , உன்னுடைய பகட்டை வெளிச்சம் போட்டுக் காட்டாதே. பெரிய பெரிய மால்களிலும் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்களிலும் அதிக செலவு செய்து பொருட்களை வாங்காதே. அடுத்து இருக்கும் நாடார் கடையிலோ அண்ணாச்சி கடையிலோ கிடைக்கும் பொருட்களுக்கு ஸ்டைலாகக் காரிலோ பைக்கிலோ போய்  பெரிய கடைகளில் வாங்கினால்தான் உன் மதிப்பு உயரும் என்று நினைக்காதே. பகட்டான கட்டிடத்துக்கும் குளிர்சாதன வசதிக்கும் அவர்கள் உன்னிடம்தான் பணம் வாங்குகிறார்கள். வீதியில் வண்டியில் வரும் காய்கறிகளை வாங்கினால் அந்த ஏழையின் வீட்டில் அடுப்பெரிய நீ வழி வகுப்பாய். தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கும் வாயும் வயிறும் இருக்கிறது

நண்பர்:- பேச விட்டால் பொதுவுடமைக் கொள்கைகளை பரப்பி விடுவாய் போலிருக்கிறதே.

நான்:-நமக்கு விருப்பமில்லாதவற்றை யாரும் நம் மேல் திணிக்க முடியாது. சூழ் நிலைக்கைதிகள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. எனக்கும் உனக்கும் நன்றாகவே தெரியும். எத்தனையோ நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தில் முழங்கையில் வழிவதே நமக்குக் கிடைக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்பதை அடையாளப் படுத்த குடும்ப அட்டைகள் வழங்கப் படுகின்றன. ஆனால் புழக்கத்தில் இருக்கும் அட்டைகளோ இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இரண்டு மடங்கு. இது எப்படி சாத்தியம். நலத் திட்டங்களின் பலன் அது தேவை இல்லாதவர்களால்பறிக்கப் படுகிறது

நண்பர்: இந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தால் அநேகமாக எல்லோரையும் குற்றவாளிகளாக்கி விடுவாய்.

நான்:- என் ஆதங்கமே நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லையே என்பது தான் மீண்டும் கூறுகிறேன். இருக்கும் நிலையை இருப்பதுபோல் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்குக் குறைவு. நான் அதிகமாகக் கனா காண்கிறேனோ.?                        



 







 

15 comments:

  1. மிகச் சிறப்பான பதிவு பாலு சார்.

    நீங்கள் கடைப்பிடித்து வரும் பல விஷயங்களையும், கடைப்பிடிக்க விரும்பி முடியாதவற்றையும் நான் கடைப்பிடிக்க முடிவதில் எனக்கு சந்தோஷம்.

    ReplyDelete
  2. வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை”

    எண்ணச்சிதறல்களை சிறப்பான ஆக்கமாக்கிக் கொடுத்த்மைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிகச்சிறப்பான ஆக்கம் இது.

    மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பது உண்மைதான்.

    ”பாலிருக்கும் பழமிருக்கும் ....
    பசி இருக்காது ....

    பஞ்சணையில் காற்று வரும் ....
    தூக்கம் வராது.”

    உண்மை, உண்மை, உண்மை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  4. அழகாகச் சொல்லி வந்த இந்தக் கேள்வி பதில் பகுதியை ஏதோ பாதியில் நிறுத்தி விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது ஐயா.

    எண்ணச்சிதறல்களை கனவுகளாக கண்டு வந்தபோது, நடுவில் கனவு கலைந்து விட்டதோ என்னவோ ?

    நான் காணும் பல இன்பக்கனாக்கள் + கற்பனைகள், பல்வேறு சமயங்களில் இதுபோலவே, இறுதி முடிவு தெரியாமலேயே போய் விடுவது உண்டு. ;(((((

    ReplyDelete
  5. /// முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்தால் தான் மனம் அமைதியில் இருக்கும்... ///

    உண்மை... நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லை என்பதும்...

    எண்ணச் சிதறல்கள் மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No Peace of Mind!..- (கண்ணதாசன்)இது சரியாக இருக்குமா?..
    ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை!..(வாலி)இது சரியாக இருக்குமா?..
    நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி!..

    ReplyDelete
  7. நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லை என்பது உண்மையே அய்யா. தங்களின் எண்ணச் சிதறல்கள் தொடரட்டும். நன்றி அய்யா

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வ்ஹட்டேன்னவோ வாஸ்தவம் தான் . எவ்வளவு இருந்தாலும் நமக்குப் பற்றாக் குறை தான். எப்பவுமே deficit budget தான்.

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து . கடைபிடித்தால் நலமே!

    ReplyDelete
  9. // அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்.. //

    இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. திருச்சி பொன்மலை சந்தையில் மீன் வாங்க முதல்வாரம் (சம்பள தேதி) இருக்கும் கும்பல், மூன்றாவது, நான்காவது வாரங்களில் (மாதக் கடைசியில்) இருப்பதில்லை.

    ReplyDelete
  10. பகட்டு வாழ்க்கையைப் பறைசாற்றுவதற்காகவே ஒரு பொருளை அதன் மதிப்பிற்குக் கூடுதலாய்க் கொடுத்து, கொள்ளும் மனோபாவம் நம்மிடையே மாறவேண்டும் என்ற தங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப்போகிறேன். சூப்பர் மார்க்கெட்டில் நிர்ணயித்த விலையை வாயை மூடிக்கொண்டு வாங்கும் நாம்தான் பாரத்தைத் தலையில் சுமந்துகொண்டு தெருத்தெருவாய் வரும் சிறுவியாபாரிகளிடம் பேரம் பேசி வாதாடுவோம். ஆதங்கம் எழுப்பிய எண்ணங்களின் பகிர்வு அனைவரும் சிந்திக்கவேண்டிய அத்தியாவசியப் பகிர்வே. நன்றி ஐயா.

    ReplyDelete

  11. @ சுந்தர்ஜி
    நான் கடைப்பிடிக்க விரும்பி கடைப்பிடிக்க முடியாதவற்றை நீங்கள் கடைப் பிடிக்க முடிவதில் எனக்கும் சந்தோஷமே. என்னைமிகவும் குழம்பச் செய்த வரிகள். சுந்தர்ஜியின் டச்...!
    @ இராஜராஜேஸ்வரி
    /வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை”/ பாராட்டுக்கு நன்றி
    @ கோபு சார்
    பதிவை ரசித்துப் படித்து பாராட்டியதற்கு நன்றி.எழுதத் துவங்கும் முன் எழுத வேண்டியதை ஒரு முறை மனதில் ஓட்டிப் பார்ப்பேன். எழுதும் போது மனம் சொல்வதை தட்டச்சு செய்து கொண்டு போவேன். சில நேரங்களில் எண்ண ஓட்டம் தடை பெறும். அப்போது நிறுத்தி விடுவேன். அதனால்தானோ கனவு கலைந்து விட்டது போல் தோன்றுகிறது. உள்ளதை உணர்ந்தபடி சொன்னதற்கு மீண்டும் நன்றி கோபுசார்.
    @ டாக்டர் கந்தசாமி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
    @துரை செல்வராஜு
    /நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி!../ஐயா, அவரவர் செயலுக்கு அவரவரே பொறுப்பு என்று எண்ணுபவன் நான். ஆண்டவன் உறைவது அவரவர் நெஞ்சிலே. கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
    @ தி தமிழ் .இளங்கோ
    உதாரணத்துடன் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
    @ கீத மஞ்சரி.
    உற்சாகமூட்டும் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.



    ReplyDelete
  12. உங்களுடைய பதிவுகளில் ஒன்றில் நான் இட்ட கருத்தை வைத்தே ஒரு அழகான, அருமையான கட்டுரையை அளித்துள்ளீர்கள். வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா

    எண்ணச் சிதறல்கள் என்ற தலைப்பில் நல்ல நல்ல கேள்விகளை தொடுத்து சிதற வைத்து விட்டிங்கள் ஐயா சிதறல் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அருமையான எண்ணச் சிதறல்கள்....

    //பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும்.//

    உண்மை.....

    ReplyDelete
  15. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்//

    உண்மைதான். தேவைகள் அதிகமாக ,அதிகமாக வாழ்வில் திருப்தி என்பதே இல்லாமல் போய்விடும். எனக்கும் நீங்கள் சொல்வது போல் தான். அதிக தேவைகள் இல்லை. தேவைகள் குறைந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.
    உங்கள் எண்ணச்சிதறல்கள் எல்லோருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.

    ReplyDelete