Tuesday, July 21, 2015

நாயும் நிகழ்வுகளும்


                                   நாயும் நிகழ்வுகளும் 
                                  --------------------------------


என் மகன் வீட்டில் ஒரு நாய்க்குட்டி (கோல்டென் ரெட்ரிவர்) வாங்கி இருக்கிறான் என்று நான் முன்பே எழுதி இருக்கிறேன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் செல்ல நாய்களை வளர்ப்பதில் இருக்கும் சங்கடங்களை நாங்கள் சொல்லியும் தெரிந்தே வாங்கி வளர்க்கிறார்கள். மகன் வேலைக்குப் போய் விடுவான் மருமகள் ஆசிரியை. பேத்தி கல்லூரி மாணவி. பேரன் பள்ளி செல்பவன் செல்லங்களை வளர்ப்பது ஒரு கஷ்டமான காரியம் அதுவும் குட்டி வளர்ந்து பெரிதாகும் போது சிரமங்கள் அதிகம் என் மகன் வீட்டு நாய்க்குட்டிக்கு இப்போது நான்கு மாதங்கள் வயது. வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அதைப் பராமரிப்பதுபோல் இதையும் கவனிக்க வேண்டும் அது வளரும்போது செய்யும் சேட்டைகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு பல் துரு துருக்கும் எல்லா இடங்களையும் கடித்துப் பார்க்கும் கதவோரம் சோஃபா செட், மேசை ஓரம் வீட்டில் இருக்கும் காலணிகள் நடக்கும் போது புடவை ஓரம்  சில நேரங்களில் நம் கால்களையும் கடித்துப் பார்க்கும். மிகவும் சாக்கிரதையாகக் கையாள வேண்டும். செல்ல நாயைக் கட்டிப் போடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் அதிக சுதந்திரம் . சொல்லிச்சொல்லி இப்போது அதற்கு லீஷ் வாங்கி இருக்கிறார்கள் இப்போது அதை வெளியில் உலவக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். என் மகன் என் வீட்டுக்கு வருவதும் பிரச்சனையாக இருந்ததால் நான் அவர்கள் வரும்போது நாய்க் கூட்டியையும் அழைத்து வரச்சொல்லி இருக்கிறேன் ஒரு நாளைக்கு நாய்க்குட்டிக்காகச் செய்யும் செலவு மனிதருக்காவதை விட அதிகம். இதல்லாமல் தடுப்பூசி ரெகுலர் மருத்துவ செக் அப். வகையறா. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் ஆனால் நான் சொல்லப் போவது எதிர்பாரா ஒரு நிகழ்வு.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏழெட்டு அடுக்குகள் உண்டு. ஒவ்வொரு அடுக்கிலும் பத்து தளங்கள் ஒரு தளத்தில் நான்கு வீடுகள் என் மகன் ஏழாவது மாடியில் இருக்கிறான் இரண்டாம் தேதி என் பேத்தி நாயை வாக்கிங் கூட்டிப் போயிருக்கிறாள் அங்கிருந்த நீச்சல் குளம் அருகே யாரோ நீச்சல் தொப்பியை மடித்து வைத்துப் போய் இருக்கிறார்கள் வாக்கிங் போகும் போது இந்த நாய்க்குட்டி அந்த தொப்பியைக் கௌவி இருக்கிறது.பேத்தி அதைப்பிடுங்கும் முன் அதை முழுங்கி விட்டது. பேத்தி சற்றும் எதிர்பார்க்காதது. வீட்டில் வந்து சொல்லி அழுதிருக்கிறாள். விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார்கள். அவர் அதை பரிசோதித்து ஓரிரண்டு நாளில் மலத்துடன் வெளி வந்து விடும் என்றும் அது உண்பது, மலம் கழிப்பது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கும் படியும் கூறினார் அது உண்பதில் ஏதும் மாற்றம் இருக்கவில்லை. ஒழுங்காகவே மலமும் கழித்தது மூன்றாம் தேதி அனைவரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள், அன்று என் மனைவியின் பிறந்த நாள் மறுநாளும்  வெளியே வரவில்லை. அத்தனை பெரிய தொப்பி வயிற்றினுள்ளேயே இருந்தால் செல்லத்துக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்று எல்லோரும் பயந்திருக்கிறார்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தார்கள் வயிற்றில் அது இருப்பது தெரிந்தது. அடுத்த நாள் பேரியம் மீல் கொடுத்துப் பார்த்தார்கள். அந்த தொப்பி சற்றே இடம் மாறிய நிலையில் தெரிந்ததாம் அறுவைச் சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அபிப்பிராயப்பட்டார். என்னிடம் மகன் சொன்னபோது நான் வேண்டாம் இன்னும் ஓரிரு நாளில்  அது வெளியே வரலாம் என்று சொன்னேன் . நாய்க் குட்டியாய் இருந்தபோதிலிருந்து அதைக் கவனித்துக் கொண்ட மருத்துவரிடம் மீண்டும் காட்டி அவரது ஒபினியன் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒரு இஞ்செக்‌ஷன் போட்டுப்பார்ப்பதாகவும் அதனால் அது சற்றே மயக்கமாக இருக்கக் கூடும் என்றும் அந்த இஞ்செக்‌ஷன் வாந்தி எடுக்க வைக்கலாம் என்றும்  கூற அந்த இஞ்செக்‌ஷன் போடப் பட்டது. அங்கேயே அவர்கள் இருந்த அரைமணி நேரத்தில் நாய்க்குட்டி வாந்தி எடுக்க ஹுர்ராஹ் அந்த தொப்பி வெளியே வந்து விட்டது. இவர்கள் அனைவருக்கும்  மிகவும் மன ஆறுதல் கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா?
 ஐந்தாம் தேதி டாக்டர் கந்தசாமி ஐயாவும் அவரது துணைவியாரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது தொப்பி வெளியே வந்த விஷயம் எங்களுக்கும் தெரிவிக்கப் பட்டது ஆறாம் தேதி நாய்க்குட்டியைப் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் அதற்குள் ஆளுக்கு ஒரு வேண்டுதல் அவரவருக்கு இஷ்டப்பட்ட கோவிலுக்கு . இந்த நாய்க்குட்டியின் விளையாட்டால் ரூ மூவாயிரத்துக்கும் அதிகம் செலவாயிற்று, வேண்டுதலை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு செலவோ.? செலவைப் பற்றி என்னைத்தவிர யார் கவலைப்பட்டார்கள்?
நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது எடுத்த புகைப்படமும்  ஒரு காணொளியும் இத்துடன் 

 என் மகனும் நானும்  நாய்க்குட்டியுடன் 
                        என் மகன் வீட்டில் எடுத்த காணொளி


இது இன்னொரு நிகழ்வு. நாய் சம்பந்தப்பட்டதுதான் என் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு நாய் வளர்க்கிறார்கள் சைபீரியன் ஹஸ்கி வகையைச் சேர்ந்தது, அதை ஒரு நாள் மச்சினியின் பெண்வீட்டில் எதிரில் இருந்த காலி இடத்தில் யாருக்கோ சொந்தமானது .அங்கு நாயை உலவ விட அனுமதி கேட்டிருக்கிறாள் அவர்களும் சரியென்று சொல்ல நாயை விட்டிருக்கிறாள், சிறிது நேரத்டில் அந்த வீட்டின்  சொந்தக் காரரின் மாங்கிரல் நாய் ஒன்று இந்த நாயை அட்டாக் செய்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பெந்தன் நாயைக் காப்பாறப் போக இவளை அந்த நாய் கடித்து விட்டதாம் அந்த நாயின் சொந்தக்காரர்களிடம் நாய்க்குத் தடுப்பு ஊசி போடப்பட்டிருக்கிறதா என்று கேட்க அவர்கள் சரியாகப் பதில் சொல்லாமல் ஆறு மாதம் முன்பு போட்டதாகக்  கூறினார்களாம்  பின் என்ன இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூற ஐந்து ஊசி போட வேண்டுமாம். ஒன்றோ இரண்டோ முடிந்திருக்கிறது. 
ZUKO The Siberiyan  Hasky மச்சினியின் மகள் வீட்டு நாய்




நாய் வளர்ப்போர் ஜாக்கிரதை...!

. 


     

27 comments:

  1. அப்பாடா... என்றிருந்தது...! "கவனித்து" வளர்ப்பது சிரமம் தான்...

    ReplyDelete
  2. பிராணிகளிடம் அன்புடன் பழகி விட்டால் -

    அதற்கொரு கஷ்டம் என்றால் நம் மனமும் துன்பப்படுகின்றது - தெருவில் திரிவதாக இருந்தாலும்!..

    சம்பவத்தை சொல்லிச் சென்றவிதம் மனதைத் தொட்டது..

    ReplyDelete
  3. நாய்க்குட்டிகளும் குழந்தைகள் போலத்தான். என் அண்ணன் வீட்டில் அல்சேஷியன், பொமரேனியன், டாஷுண்ட் போன்ற நாய் வகைகள் இருந்தன. அவைகளை கவனித்துக்கொள்ளவே தனியே ஒருவர் வேண்டும். அவைகள் வயதாகி இறந்தபோது வீட்டில் ஏற்பட்ட சோகம் சொல்லி மாளாது. எனக்கும் ஒரு நாயை வீட்டில் வளர்க்க ஆசை இருந்தது. ஆனால் என் அண்ணன் வீட்டில் ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு அந்த ஆசையை விட்டுவிட்டேன்.

    காணொளியை இரசித்தென். ஒரு குழந்தையைபோல அது மடியில் ஏறி விளையாடும் அழகே அழகு.

    ReplyDelete
  4. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பணம் என்ன பணம்? விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள். அதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது.
    அடுக்குமாடி குடியிருப்பில் செல்ல நாய் வளர்ப்பது என்பது சிரமம்தான். நகரத்தில் தனி பங்களாவில், தனி வீடுகளில், கிராமங்களில் நாய் வளர்க்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.

    ReplyDelete
  5. சுவாரஸ்யங்களை விட சிரமம் அதிகம் என்பது என் அபிப்பிராயம். ஆளுக்கு ஆள் அபிப்பிராயம் மாறுபடலாம்!

    ReplyDelete

  6. @ திண்டுக்கல் தனபாலன்
    கவனிக்காமல் விட்டிருந்தால் நாய்க்குட்டி தொப்பியை விழுங்கியதே தெரிந்திருக்காது. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  7. @ கில்லர்ஜி
    ஆம் யாரும் எதிர் பார்க்காத அனுபவம் அருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  8. @ துரை செல்வராஜு
    நானும் நாய் வளர்த்து இருக்கிறேன் செல்லி என்ற பெயரில் எங்கள் உள்ளங்களில் என்றும் வசிப்பவள் அவள் பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  9. @ வே.நடன சபாபதி.
    நாய் வளர்த்த அனுபவம் எங்களுக்குண்டு. அதனால்தான் சிரமங்கள் தெரியும் . என் மனைவி சொல்வாள் மாமியார் இல்லாத குறையைச் செல்லி ( நாங்கள் வளர்த்த நாயின் பெயர்)போக்கிவிட்டாள் என்று. வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  10. எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் பூனைகளை வளர்க்கிறார். ஒரு சமயம் ஒரு பூனை கர்ப்பமாய் இருந்தது. பிரசவ நேரம் போல. அவர் வீட்டிலிருந்த பீரோவின் மேல் ஏறத் தாவி இருக்கிறது. ஆனால் அவர் அந்த பீரோவின் மேல் பேப்பரை ஒற்றையாக மடித்து வைத்திருந்திருக்கிறார். தாவிய பூனை பேப்பரில் கால் வைத்து கிரிப் கிடைக்காமல் அங்கிருந்து நழுவி கீழே விழுந்து சரியான அடி. ஏகத்துக்கும் ப்ளீட் ஆக ஆரம்பித்து விட்டது. உடனே வெட் டிடம் கொண்டு சென்றார்கள். பூனைக்கு சிசேரியன் பார்த்து அய்ந்து குட்டிகளை மீட்டு வந்தார். அந்தப் பூனையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
    மொத்தம் 30,000/- ஆயிற்றென்றார். ஆச்சரியப்பட்டேன்.

    பிராணிகளையும் பிள்ளைகளைப்போல் பார்த்துக் கொள்ளும் அன்புள்ளம் கொண்டவர்கள் இருப்பதால்தான் உலகத்தில் சமநிலை பேனப்படுகிறது என்றே தோன்றுகிறது.

    நல்ல அனுபவம்.

    God Bless You

    ReplyDelete

  11. @ தி தமிழ் இளங்கோ
    இங்கு நாங்கள் வசிக்கும் வீடு தனி வீடுதான் . என் மூத்தமகன் ஒரு முறை ஒரு அல்சேஷன் நாய்க் குட்டியை வாங்கி வந்து விட்டான் . நாங்கள் வளர்க்கும் சிரமம் கருது திருப்பிக் கொடுக்கச்சொன்னோம் . மேலும் இப்போது எங்களுக்கும் வயதாகி விட்டது அல்லவா. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  12. @ ஸ்ரீராம்
    சிரமங்கள் அதிகம்தான் ஸ்ரீ. ஆனால் அவற்றுடன் விளையாடும்போது சிரமம் மறக்கிறதும் உண்மை. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  13. @ நாய் வளர்ப்பது தெரியும் பூனை வளர்த்து அனுபவம் இல்லை. நாய்கள் வளர்ப்போருக்கு விசுவாசமாய் இருக்கும் என்று தெரியும் பூனைகள் இருப்பிடங்களையே விரும்பும் என்று சொல்லக் கேள்வி. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. கல்யாணம் ஆனதிலிருந்து 99 ஆம் வருடம் வரை நாய்களோடு அனுபவங்கள் நிறையவே உண்டு. அவற்றில் வீட்டில் வளர்த்தது மூன்றே நாய்கள் தாம். மற்றவை தெருநாய்கள்! அவைகளே சில, பல சமயங்களில் செல்லங்களை விடச் சுவாதீனமாகப் பழகும். பூனைக்குக் கேட்கவே வேண்டாம். எங்க வீட்டில் தான் குட்டி போடும். :) இதை எல்லாம் நானும் பதிவுகளாக்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  15. நல்லவேளை என்றிருந்தது. நாயாக இருந்தால் என்ன! அதுவும் ஒரு ஜீவன். அது படும் அவஸ்தையும் பரிதாபத்திற்குறியது. உங்கள் மகனுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் regards..

    ReplyDelete
  16. தூரத்தில் இருந்து பார்ப்பதோடு சரி. பக்கத்தில் என்றால் பயம். மற்றவர்கள் விளையாடுவதை கண்டு ரசிப்பேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி. அவைகளை பரிவோடு கவனித்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    சில நிகழ்வுகள் பகிரத் தோன்றியது. எங்களுக்கும் நாய் வளர்த்தானுபவம் உண்டு. பூனைகள் என்றாலேயே எனக்கு அலர்ஜி. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  18. @ ஷக்திபிரபா
    நாய் வாயில்லா ஜீவன். அதைப் பராமரிக்கும் பொறுப்பு வளர்ப்பவர்க்கே. வித்தியாசமான நிகழ்வு .அதனால் இந்தப் பகிர்வு. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  19. @ உமையாள் காயத்ரி
    எங்களுக்கும் நாங்கள் வளர்க்கும் நாயிடம் மட்டுமே பயமில்லா ஒட்டுதல். மற்றபடி நாங்களும் தூரத்தில் இருந்து ரசிப்பதோடு சரி.

    ReplyDelete
  20. நல்ல அனுபவம்...
    படமும் வீடியோவும் அருமை.

    ReplyDelete

  21. @ பரிவை.சே. குமார்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  22. நாயுடன் பழகிவிட்டால் ஒரு குழந்தையுடன் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்படும். அதனுடன் பழகும்போது கிடைக்கும் அன்னியோன்யத்தை அருமையாகப் பதிந்துள்ளீர்கள். அண்மைக்காலமாக நாயைப் பற்றி பல பதிவுகளை வலைப்பதிவர்கள் எழுதியுள்ளனர். நன்றியுடன் நாம் நாயை நினைத்துப்பார்ப்பது பொருத்தமே.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நான் பொதுவாக நாயைப் பற்றி எழுதவில்லை. வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டி பற்றிய ஒரு செய்தியைப் பகிரவே எழுதினேன் இது நாய் வளர்ப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்னும் எண்ணத்தால் எழுந்ததே வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  24. நாங்கள் நாய் வளர்த்த கதையை எழுதி இருக்கிறேன் ஐயா! நேரமிருப்பின் வந்து பாருங்கள்! நாய்வளர்ப்பு மட்டுமல்ல! எந்த பிராணியை வளர்ப்பது இன்றைய நிலையில் மிகவும் சிரமம்தான்!

    ReplyDelete
  25. கோல்டன் ரிற்றீவர் சாது வகை. ஜாலியான பிராணி. சாப்பிட்டதெல்லாவற்றையும் அனேகமாக வெளிக்கொண்டு வந்துவிடும். கடினமான பொருட்கள் ஏதேனும் சாப்பிட்டாலொழிய. என் நண்பர் வீட்டு ரிற்றீவர் மரத்தில் பூக்கும் பூக்களைத் தின்னும் - கிளைகளுடன் சேர்த்து. இதென்ன மாடாகவோ ஆடாகவோ இருந்திருக்குமோ அல்லது தன்னை மாடு/ஆடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்று வியப்பார் நண்பர். சாகும் வரை இலை தழை சாப்பிட்ட நாய். மருத்துவர்களும் நாயை அதன் போக்கில் விடச்சொன்னார்கள்.

    இந்தியாவில் வெப்பம் அதிகமான இடங்களில் சைபீரியன் ஹஸ்கி வளர்ப்பது நாய்க்கு இழைக்கும் கொடுமையாகும். இதை இந்திய spca அனுமதிக்கிறதா?







    ReplyDelete

  26. @ அப்பாதுரை
    இருந்தாலும் வளர்ப்பவர்கள் மனது சஞ்சலப்படுவது இயற்கைதானே. நல்ல வேளை நாய் விழுங்கிய தொப்பியை இரண்டு நாட்கள் கழித்துக் கக்கி விட்டது. உறவினர் வீட்டில் வளரும் சைபீரியன் ஹஸ்கி நன்றாகவே உள்ளது. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete