Monday, February 13, 2012

மீண்டும் கேள்வி....



                                 மீண்டும் கேள்வி.
                                 ------------------------
   ஆத்திகம் நாத்திகம் பற்றி பல பேர் பல பதிவுகள் எழுதி
விட்டார்கள். சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்கள் எழுதிய ஒரு
பதிவில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன.
இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஆனால்
அது பரவலாகப் படிக்கப் படவில்லை. ( இது மட்டும் படிக்கப்
படுமா என்ன.?) இருந்தாலும் அதை மீண்டும் பதிவிடுகிறேன்

.

நான் நாத்திகனா ஆத்திகனா..?

 நான் ஆத்திகனா, நாத்திகனா. ஒரு ஆய்வு.
(இங்கு நான் என்பது என்னைப்போல் பலரையும் குறிக்கும் என்று கொள்க.)

இந்தக்  கேள்விக்குப்  பதில்  தேடும்  முன்பு  ஆத்திகன்  என்பவன்  யார்  நாத்திகன்  என்பவன் யார் என்று தெரியவேண்டும். ஆண்டவன்  அல்லது  கடவுள்  இருக்கிறான்  என்று நம்புபவனை  ஆத்திகன் என்றும் ,கடவுள் இல்லை  என்று நம்புபவனை நாத்திகன் என்றும் சாதாரணமாகக்  கூறுகிறோம். ஆக, இரு சாராருக்கும்  அவர்கள்  கொண்டுள்ள எண்ணம் நம்பிக்கையின்பால்  அமைந்ததே. நம்பிக்கை  என்பது உணர்வு  பூர்வமானது. இதில் எது  சரி  எது தவறு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.

ஆண்டவன் இருக்கிறான், எல்லாம் அவன் திட்டமிட்டபடிதான் இயங்குகிறது, என்று நம்புகின்றவர்களை ஆத்திகர்கள் என்று சொல்கிறோம். எவரும் எதையும் திட்டமிட்டு
இயக்கவில்லை, ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது. ஆக, நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை இரு சாராரும்  உணருகிறார்கள். 

காண முடியாத சக்தியை சிலரால் உணர முடிகிறது. கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறை, கற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார் செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம். 

ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும், பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

இந்த நம்பிக்கைகளினால்   உந்தப்பட்டு, வாழ்க்கை   நடத்தும்  நாம் ஆத்திகர்களா.? ஆத்திகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படையிலான குணம்தான் என்ன.?கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ஆக, இந்த
புற வழிபாடு  செய்பவர்கள்  எல்லோரும்  ஆத்திகர்களா.?

காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால், செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  ஆத்திகனா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?

 நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மகள் தந்தையைப் பார்த்துக்  கேட்கும்  கேள்வி.   
" அப்பா,  நீங்கள் நல்லவரா ,கெட்டவரா" தந்தை  கூறுவார், " தெரியவில்லையே, அம்மா", என்று. நானும்  கேள்வி கேட்டு விட்டேன், இப்போது சொல்லுங்கள்,  நான்  ஆத்திகனா,  நாத்திகனா?
---------------------------------------------------------------------------------

                                 

19 comments:

  1. உருவமற்ற சக்தியை நம்புபவர்களும் ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்று பிரிக்கப்படாமல், உண்மையை உணர்பவர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுகிறார்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  2. மிகசிறந்த ஒரு விவாதம் இந்த விவாதத்தில் நீங்கள் வினாத்தொடுப்பவராக இருக்கிறேர்கள் எல்லா செய்திகளையும் துலாக் கோல்போல் ஆய்வு நோக்கில் கூறிவிட்டு நீங்கள் வெறும் பார்வையாளராக இருக்கிறீர்கள் ..



    இங்கு கடவுள் மறுதலிப்பா அல்லது கடவுட் கொள்கையா இதில் இறையிலிக் கொள்கைக்கே எமது வாக்கு .

    ReplyDelete
  3. என்ன சொல்வது
    ஐயா
    இல்லாத கடவுளை
    இருப்பை நம்புவது அவரவர் விருப்பம்

    தீவிர யோசனைகளின் கேள்விகள்
    பதிவாக ஆரோக்கியமான வரிகளும்
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. சரியான பதிலை கேட்டுச் சொல்லுங்கள்.எனக்கும் இந்த குழப்பம் வெகு நாளாய் ..

    ReplyDelete
  5. \\ஏதோ ஒரு நியதிப்படி இயங்குகிறது. அங்கு கடவுள் என்று சொல்லப் படுபவர் யாரும் இல்லை என்பதே சாதாரணமாக நாத்திகர்களின் வாதமாக இருக்கிறது.\\

    அப்படியா? ஏதோ ஒரு நியதிப்படி எல்லாம் இயங்குகின்றன என்று நாத்திகர்கள் ஒப்புக் கொள்கிறார்களா?

    ReplyDelete
  6. // வாழ்வின் உண்மை நிலைகளைப் புரிந்துகொண்டு வெறும் கதைகளையும் சடங்குகளையும் மறுதளிப்பவன் நாத்திகனா.?//
    ஆம் நான் நாத்திகன்

    ReplyDelete
  7. //ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை.//

    கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பல நேரங்களில் பகுத்துப் பார்க்கும் அறிவு
    பகுத்தறிவு) என்பது பார்த்துப் புலப்படுவதை விட சக்தி வாய்ந்ததாக தென்படுகிறது.

    ஒரு பகுத்தறிவு நிகழ்ச்சி, பாருங்கள்:

    நேற்று வாஷ்பேசினில் முகம் அலம்பிக் கொண்டிருந்தேன். பேசினின் மூலையில் குட்டியூண்டு கறுப்பு எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன போலும். மேலே சிந்தித் தெளித்த நீரின் வேகத்தோடு சேர்ந்து ஓரிரண்டு எறும்புகளும் அடித்துக் கொண்டு போனபோது 'ஐயோ' என்றிருந்தது. பார்க்காமல் செய்து விட்டோமே என்று மனம் பரிதவித்தது.

    கொஞ்ச நேரம் வாஷ் பேசின் அருகிலேயே நின்று கொண்டு அந்த எறும்புகளுக்கு என்னவாயிற்று என்று கவனித்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நிமிடங்களில் பைப் இடுக்கிலிருந்து ஒன்றிரண்டாக அவை வெளிவந்த பொழுது 'அம்மாடி' என்றிருந்தது.
    தன் சின்ன உடம்பைச் சுற்றிக் குளிப்பாட்டியிருந்த நீரின் பிடிப்பில் அசைந்து அசைந்து ஊர்ந்து மேலேறி மேலேறி அந்த நீர்த் தடங்கலைத் தட்டி விட்டு விறுவிறுவென்று மேலேறி தங்கள் கூட்டத்தோடு கலந்து கொண்ட அதன் அசைவோட்டத்தை--அதன் இயக்கத்தைப் பார்த்து-- மனசு சந்தோஷித்தது.

    எவ்வளவு குட்டி குட்டி கால்கள்?.. அதற்குள்ளும் அதை இயக்க உயிர் என்ற ஒன்று? அந்த ஒற்றை எறும்பு ஒன்றின் இயக்கம் இழந்தால், மனிதனால் அதன் காலை அசைத்து இயக்க வைக்க முடியுமா என்கிற ஞானோதயம் மனசை சுட்டது.
    அந்த இயக்கமே இறைவனாக என்னுள் பிர்மாண்டமாக எழுந்து நின்றான்.

    ஓ! 'பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா! நிந்தன் பச்சை நிறம் தோன்றுதையா, நந்தலாலா!'

    ReplyDelete
  8. 'நியதிப்படி இயங்குகிறது' என்பது நாத்திகர் வாதமல்ல; அது தவறானப் புரிதல். ஏதோ ஒரு சக்தி இயக்குவதாக நாத்திகம் நினைக்கிறது என்று நீங்கள் சொல்லியிருப்பதும் சரியல்ல என்று நினைக்கிறேன். 'சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால்' என்பதும் தவறான புரிதலென்று சொல்ல அனுமதியுங்கள். அண்டத்தில் நிறைய சூரியன்கள் உள்ளன. நம் கோளில் மட்டுமே நாமறிந்த வாழ்வு இதுவரை கண்டறியப்பட்டிருக்கிறது. சூரியன் ஆதாரமாக இருந்தால் பிற கோள்களிலும், குறைந்த பட்சம் நாமறிந்த வாழ்வாவது உண்டாகியிருக்கும்.

    'காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை' என்பதும் தவறான கருத்து. உலகம் இயங்குவதே கற்பனை வளத்தினால் தான். அனைவருக்கும் அந்தக் கற்பனைத் திறன் இருக்கிறது. நாம் இன்றைக்கு 'அறிந்த' சக்திகளான ஈர்ப்பு, மின்சாரம், ஒலியலை, ஒளியலை எல்லாமே யாரோ ஒருவர் கற்பனை செய்ததால் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கல்லை உருட்டிக் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கே கற்பனை அல்ல கருப்பொருள். கற்பனையின் அடிப்படையில் வகுப்படும் நியதிகள்.

    ஆத்திகம் புரிந்து கொள்ளப்பட்ட அளவுக்கு (!) நாத்திகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன். அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை என்று நினைக்கிறேன்.

    என் பதிவைக் குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி ஐயா. ஆத்திக நாத்திக விவாதத்தில் நான் இறங்க விரும்பவில்லை. நான் எழுதியிருப்பதும் எழுத நினைப்பதும் நாத்திகச் சிந்தனைகள். நாத்திகச் சிந்தனைகள் நாளைய உலகுக்கு அவசியம் என்று நினைக்கிறேன். மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல ஆத்திகமும் நாத்திகமும் அவரவர் தேர்ந்தெடுத்த கொள்கையென்றே அமைகிறேன்.

    ReplyDelete
  9. பிரமாதம் ஜீவி சார்! உங்கள் பின்னூட்டம் இன்னும் சிந்தனைகளைக் கிண்டி விட்டது.

    ReplyDelete
  10. பதில் தெரியாத பல கேள்விகளுக்கு பலரும் பலவிதமான பதில்கள் வைத்துள்ளார்கள். இது சரி இது தவறு என்று கூறுவது சரியாகாது. நான் புரிந்து கொண்டுள்ள விதம் தவறானால், இதே தவறை என்னஒப் போல் பலரும் செய்கிறார்கள்அண்டத்தில் ஆயிரம் சூரியன்கள் இருக்கலாம். ஆனால் நம்மை இயக்கும் சூரியனைப் பற்றியே நான் குறிப்பிட்டுள்ளேன். ஆத்திக நாத்திக கோட்பாடுகளுகப்பால் ஆன்மீகம் என்று ஒன்றும் இருக்கிறது.
    ஒருவர் கூறுவது சரியல்ல என்றால் உட்னே அதை எதிர்த்து வாதாடும் ஒரு டிஃபென்ஸிவ் மெகானிஸ்ம் நம்முள் இயங்கும். பதிவுகள் நல்ல ஆரோக்கியமான சிந்தனை வெளிப் பாடுகளுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையே என் பதிவுக்குக் காரணம். கருத்துக் கூறிய ஷக்திப்ரபா, மாலதி,சிவசங்கர்,காளிதாஸ் , கோபி ராமமூர்த்தி, வேர்கள்,ஜீவி, அப்பாதுரை அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  11. ஆத்திகமோ, நாத்திகமோ... அடுத்தவர் மனம் புண்படாமல் மனிதம் போற்றும் மனமே உயர்வென்று எண்ணுகிறேன். தங்கள் பதிவு நிறைய சிந்திக்கவைக்கிறது. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  12. //எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார் செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்.//

    ஆம், நீங்கள் சொல்வது உண்மை. சிறு வயது முதலே நாம் இப்படித்தான் வளர்க்க பட்டு இருக்கிறோம்.

    செயலுக்கு ஏத்தவிளைவாய் இறைவன் வருவான் என நம்ப வேண்டும்.
    சடங்குகள், கதைகள் ஏன் சொல்லப் பட்டன எதற்கு சொல்லப்பட்டன என்ற பகுத்தறிவு அவசியம். ஜீவி சார் சொல்வது போல்.

    கீதமஞ்சரி சொல்வது போல் மனம் புண்பாடாமல் அன்பு தான் கடவுள் என்று மனித நேயம் போற்றலாம்.

    ஆதிகாலத்திலிருந்து இருந்து வரக்கூடிய தீராத பிரச்சினைகள் இவை. நம்பிக்கைதான் இவற்றிற்கு அடிப்படை.

    ReplyDelete
  13. நன்றி, அப்பாத்துரை சார்!

    ரசனை ரசனை என்று ஓர் உலகம்.
    ரசிப்பவர்களே அந்த உலகின் பிரஜைகள். ஒவ்வொன்றின் மீதான அவர்களின் அந்த ரசனையே அடுத்தது அடுத்தது என்று விருப்பத்தைக் கூட்டி கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது தெரிகிறது. இந்த விருப்பம் மட்டும் இல்லையானில் எப்படிப்பட்ட இருட்டுலகில் ஆழ்ந்து போயிருப்போம் என்று பதைபதைக்க வைக்கிறது. இந்த உலகின் பிரஜையாக்கியமைக்கு யாருக்கேனும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அந்த நன்றியை யாருக்குக் காணிக்கையாக்குவது என்று தெரியவில்லை. தெரியாவிட்டாலும் அந்த 'யாரோ'வை யாரோ என்றானும் அழைத்து கண்ணீர் மல்க நின்று களிக்கத் தோன்றுகிறது. அந்த 'யாரோ'விற்கு தன்னை வெளிப்படுத்தும் விருப்பமே இல்லையோ என்று நினைத்துக் கலங்கும் பொழுதே, இன்னொருபுறம் மின்னல், மழை, முடிவிலா நீள் விசும்பு, அவற்றின் சலனங்கள், சீற்றங்கள், ஆசிர்வாதங்கள் என்று எல்லாவற்றிலும் அந்த யாரோ வெளிப்படும் அதிசயமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
    இத்தனைக்கும் நடுவே அந்த ஆரம்பப் படியான ரசனையின் மீதான காதல் மட்டும் இன்னும் இன்னும் சுவையூட்டி போதை கூட்டுவது தான் அதிசயமான அதிசயம்!

    ReplyDelete
  14. மனசால், வார்த்தையால், செயலால் நல்லதே நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து வாழ உதவுகின்றன கடவுள் கதைகளும் வழிபாட்டு முறைகளும்.

    அருமையான வழிமுறைகளை வகுத்த முன்னோர் வியந்து நோக்க வைக்கிறார்கள்..

    ReplyDelete
  15. //ஒருவர் கூறுவது சரியல்ல என்றால் உட்னே அதை எதிர்த்து வாதாடும் ஒரு டிஃபென்ஸிவ் மெகானிஸ்ம் நம்முள் இயங்கும்.

    :))

    ReplyDelete
  16. மறு பின்னூட்டமும் அருமை ஜீவி சார்.

    நன்றியை செலுத்தும் விதம் நமக்குப் பின்னால் வருவோர் நலத்தை எண்ணி நடப்பது என்று நினைக்கிறேன்.

    நன்றி சொல்லியே ஆகணும் என்றால் அந்த 'யாரோவு'க்கு பெயர் அம்மானு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  17. @அப்பாதுரை,
    //ஒருவர் சொல்வதில் அபிப்பிராயபேதம் ஏற்பட்டு கருத்து கூறினால் ஒரு டிஃபென்ஸிவ் மெகானிஸ்ம் இயங்கும்// இந்த பொருளில் முன்பு ஒரு முறை எனக்குக் கூறப் பட்டதை எழுதி இருந்தேன். அவ்வளவுதான்.

    “ அந்த யாரோ பெயர் அம்மான்னு நினைக்கிறேன்” இதைத்தான் கடவுள் எல்லோருக்கும் காட்சி தரவே அம்மாவைப் படைத்தான் என்பார்கள்.

    கருத்துப் பதிவுக்கு நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  18. சிந்திக்க வைக்கும் பதிவு. ஆனாலும் பல கேள்விகளும் கேள்விகளாகவே நிற்கின்றன. ஜீவி சாரின் விளக்கம் அருமை. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  19. மேலும் கடவுளை நம்பாதவர்களை நாத்திகர்கள் எனச் சொல்வதை விட இறை மறுப்பாளர்கள் எனலாமோ?

    ReplyDelete