Saturday, September 15, 2012

வாழ்ந்தே தீருவேன்.... .( 2 )

                     
                                    வாழ்ந்தே தீருவேன்....( 2  )


A PLAY BY G.M. BALASUBRAMANIAM.

காட்சி- 3.
பாத்திரங்கள்.- ரங்கதுரை, ராஜு, மாலா, மோஹன்.
இடம்:- ரங்கதுரை பங்களா. 

( திரை உயரும்போது ரங்கதுரை செய்தித் தாள் படித்துக் கொண்டு இருக்கிறார். ராஜு ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறான். )

ராஜு:- அப்பா, எவ்வளவு அழகாய் எழுதி இருக்கிறார் தெரியுமா இந்த ஆசிரியர். சமுதாயம் மாறுவது தனி மனிதனின் முயற்சியாலா , அல்லது கூட்டுறவாலா என்று கேள்வி கேட்டு பதிலளிக்கிறார். படிக்கிறேன் .கேளுங்களேன். ( படிக்கிறான்.)கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது , தேடும் பாதையாகக் கூட்டுறவு உருவாகிறது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால் அது நன்மையாகத்தான் முடியும். ஆக இந்த உணர்வோடு செய்யப்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளர்கிறது. அல்லதுகூட்டுறவு  முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள், தங்களது பல தனிப்பட்ட கருத்துக்களை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழவைப்பதோடு தாங்களும் வாழவேண்டும் என்ற கொள்கையில் எழுவதால், சீர்கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும். பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும். கட்டுப்பாடு அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும். போட்டி பொறாமை குறையும். எல்லோருமொரு குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் கூட்டுறவில்தான் பொதுஜன சமதர்மம் சிறப்பாக நிலை பெறும்.

ரங்க :-இது என்ன ராஜு. ! ஒரே கேள்விக்கு இரண்டு DIAGONALLY  OPPOSITE  பதில்களா.?

ராஜு:- அவசரப் படாதீங்கப்பா. இரண்டிலும் தெரிந்து எடுத்த பதிலையும் கூறுகிறார் ஆசிரியர். “தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் ஒரே நிலைக்கு மேன்மையடைவது என்பது இயலாத காரியமாதலால் அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனிமனிதனின் கட்டுப்பட்ட வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்குமாதலால் கூட்டுறவே சிறந்தது.

ரங்க:- இவ்வளவு சிறப்பாக எழுதும் ஆசிரியர் யார் ராஜு.?

ராஜு:- அவர்தாம்ப்பா திரு. ஜி.எம்.பாலசுப்பிரமணியம் “ நினைவில் நீ “ என்ற நாவலில் எழுதி இருக்கிறார். ( மாலா வருகிறாள். )மாலா, நீ ஏன் இவ்வளவு லேட். ?

மாலா:- ( வந்து கொண்டே ) உஷ் ஷ்... ...வாங்க மோஹன்அப்பா....நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே என் நண்பர் என்று ... அவர்தாம்ப்பா இவர்.. Mr. Mohan… மோஹன் இவர்தான் என் தந்தை. இவர் என் அண்ணா ராஜு.

மோஹன்:- Pleased to meet you ,sir….!

ரங்க:- Please take your seat.

மாலா:- உட்கார்ந்து பேசிட்டிருங்க... நான் சாப்பாட்டிற்கு அரேஞ்ச்  செய்யறேன். ( போகிறாள். )

ரங்க:- மிஸ்டர்........ம்ம்   மோஹன் நீங்க இப்ப என்ன செய்திட்டு இருக்கீங்க.?

மோஹன்:- நான் ஒரு FREELANCE WRITER. கவிய்ஜைகளும் கதைகளும் எழுதுவேன்

ராஜு:- அதாவது நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத பிழைப்பு.  AND YOU WILL BE LIVING IN
  A WORLD OF IMAGINATION ALWAYS.

மோஹன்:- OH.! NO..! பிழைப்புக்காக நான் எழுதலியே. வெறும் பொழுது போக்குக்காகத்தான்....மேலும் நான் சம்பாதிச்சுத்தான் சாப்பிடணும்னு இல்லை. சொத்து இருக்கு... இருந்து சாப்பிட்டா இன்னும் இரண்டு தலைமுறைக்குத் தாங்கும்.

ரங்க:- இருந்தாலும் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்களே.

மோஹன்:- YES…!  I AGREE WITH YOU. . . ! என் தகுதிக்கு ஏற்றபடி ஏதாவது உத்தியோகம் கிடச்சா நான் ஏத்துக்கத் தயார்.

மாலா:- ( வந்து கொண்டே ) டாடி.., நம்ம கம்பனியிலேயே மிஸ்டர். மோஹனுக்கு அவர் தகுதிக்கு ஏற்றபடி உத்தியோகம் கொடுத்தால் அவர் ஆட்சேபிக்கவா போகிறார். என்ன மோஹன்  நான் சொல்றது சரிதானே.

ராஜு: - ஆனால்...மாலா...

மாலா:- நீங்க சும்மா இருங்கண்ணா....மோஹனைப் போல ஆற்றலுள்ளவர்கள் உங்களுக்கு எங்கே கிடைப்பாங்க.?

ராஜு:- MR. MOHAN, WHAT IS YOUR QUALIFICATION ?


மோஹன்:- I AM A GRADUATE…. ARTS


ராஜு:- YOU ARE NOT AN ENGINEER.?

மோஹன்:- நோ...! ஸோ வாட்...?

ரங்க:- அது சரி... மிஸ்டர் மோஹன் உங்களுக்கு இந்த மாதிரி தொழிற்சாலைகளில் வேலை பார்த்த அனுபவம் ஏதாவது உண்டா.?


மோஹன்:- தொழிற்சாலை அனுபவம் என்ன சார் பிரமாதம். மனிதர்களைப் புரிந்துகொண்டு கவிதைகள் புனையறவன் நான். மனிதன் என்னும் பாட புத்தகத்தில் எனக்கு மிகுந்த அனுபவம் உண்டு.

ரங்க:- தென் யூ ஷுட் பீ ஐடியல் ஃபர் அவர் பர்சனல் செக்‌ஷன். உங்களை எங்கள் நிறுவனத்தின் பர்சனல் மேனேஜராகப் போடுகிறேன். நாலையிலிருந்தே வேலைக்கு வந்து விடுங்கள்.

ராஜு.:-அப்பா.... ! யூ டோல்ட் மீ.. ஐ ஆம் த பாஸ்.  !

ரங்க:- இருந்தாலும் என்ன.... நான் சொல்லி நீ மறுக்கவா போகிறாய். ?

மாலா:- தாங்க் யூ டாடி.!

மோஹன்:- தாங்க் யூ சார். அப்பொ நான் வரட்டுமா...!

மாலா:- அதுக்குள்ளாகவா... டின்னர் ஏற்பாடு செய்திருக்கேன். யாருக்காகவாம். (உள்ளே போகிறாள். )

ராஜு:- ஓ... எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்கிறதா... நடக்கட்டும்.. நடக்கட்டும்.
..

                                                          ( திரை ).. 




காட்சி.._ 4.



இடம்:- ஆஃபீஸ்  அறை.

பாத்திரங்கள்.:- ரங்கதுரை, ராஜு, மோஹன், சேகர், ஆஃபீஸ் பாய், ,மற்றும் சிலர்.


ரங்க:- THIS IS YOUR MANAGER’S SEAT Mr. MOHAN. நம்ம தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் வேலை பாக்கிறாங்க. இன்னிக்கி நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கேன்னா அதுக்கு இந்தப் பாட்டாளிப் பெருமக்களின் பேருழைப்புதான் காரணம். அவங்களை நாம் சகோதரர் போல பாவிச்சு நடத்தணும். அவங்களுடைய கஷ்டங்களை தொடச்சு , அவங்களை ஊக்குவிச்சு ஆதரிச்சா நாம உயருவோம். இந்தத் தொழிற்சாலை வளரும், அவங்களும் வளம் பெறுவாங்க. உற்பத்தித் துறையை ராஜு நிர்வகிக்கட்டும். தொழிற்சாலையின் மனித வளப் பிரிவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராஜு:- மோஹன் தொழிலாளர்களிடம் நம் மதிப்பை உணர்த்த, அவன் அன்பை நாம் பெற, அவனை நம்முள் ஒருவனாகக் கருத வேண்டும். அவனை மனிதனாக மதிக்க வேண்டும். எந்திரமாக எண்ணக் கூடாது.

மோஹன்:- அவனும் தன்னை தொழிலாளி என்ற முறையில்தான் எண்ணவேண்டும். சுருங்கச் சொன்னால் அவனுக்கு அவனுடைய இடத்தை அவன் உணரச்செய்ய வேண்டும்.

ரங்க:-  IN A WAY , YES..!அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அந்த உணர்ச்சி ஆக்க பூர்வமான வழிக்கு அடிகோலும் வகையில் உணர்த்தப் பட வேண்டும்.

ராஜு:- THAT IS.. .. YOU MUST HAVE A POSITIVE APPROACH TO PROBLEMS. பெரும்பாலான இடங்களில் நிகழும் சங்கடங்கள். தொழிலாளர்களின் குறைகள் குறைக்கப் படாமல் இருப்பதால் ஏற்படுவது ஆகும்.

மோஹன்:- நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. தொழிலாளி என்றால் கூடவே அவனுக்குப் பிரச்சனையும் இருக்கும். அவையெல்லாம் நாம் நிவர்த்தி செய்ய நினைத்தால் தொழிற்சாலையையே இழுத்து மூட வேண்டி வரும்.

ரங்க: -NO.. அப்படி நினைப்பது பெஸிமிஸ்டிக் வியூ. பரஸ்பர நம்பிக்கை இல்லாமையால் ஏற்படுவது.
ஆஃபீஸ் பையன்.:- சார் உங்களைக் காண தொழிலாளர் சிலர் வந்திருக்காங்க.

ரங்க: வரச் சொல். ( சேகரும் இன்னும் சிலரும் வருகின்றனர்.)

சேகர்:- வணக்கம் சார். !

ரங்க: - வணக்கம். என்னப்பா சேகர், என்ன சமாச்சாரம்.?

சேகர்: நாங்க பிறகு வரோம் சார். நீங்க ஏதோ முக்கிய பிரச்சனையில் இருக்கீங்க போலிருக்கு.

ரங்க:- OH.! NO..! இருப்பா சேகர். இவர்தான் நன் தொழிற்சாலையின் புதிய பெர்சனல் மேனேஜர். மிஸ்டர்.மோஹன். .. மோஹன் இவர்தான் சேகர் நம்முடைய தொழிற்சாலைத் தொழிலாளிகளின் தேர்ந்தெடுக்கப் படாமல் ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன்.

ராஜு:- வேலையில் நிபுணன்.

மோஹன்:- ஓ ..! அப்படியா....!

தொழி-!:- தேர்ந்தெடுக்கப்படாத தலைவன் என்ற முறையை மாற்றி, திரு. சேகரைத் தேர்ந்தெடுத்துத் தலைவனாக ஆக்கியிருக்கிறோம்.

தொழி.2:- ஆமாம் சார்.... தொழிலாளர் யூனியன் ஸ்தாபித்து அதற்கு சேகரைத் தலைவராக்கி உங்களிடம் அங்கீகாரம் பெறவும் வந்திருக்கிறோம்.

ராஜு:- கங்கிராஜுலேஷன்ஸ்  அண்ட் பெஸ்ட் ஆஃப் லக் சேகர்

சேகர்.:- தாங்க் யூ சார். !

மோஹன்.:- சற்று முன்புதான் பேசிக் கொண்டிருந்தோம். தொழிலாளி என்றால் சங்கம் குறை இவைகள் கூடவே வரும் என்று. இவற்றை எல்லாம் நாம் ஆதரிக்கக் கூடாது சார்.

ரங்க: என் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களைப் பற்றி எனக்குத் தெரியும் மிஸ்டர் மோஹன். பெயரில்லாமல் ஏற்கனவே இயங்கி வந்திருக்குமொரு அமைப்பை சரியான பாதையில் கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் எந்த ஒரு விவகாரத்தையும் தனிப்பட்ட நபர்களிடம் பேசித் தீர்ப்பதை விட , ஒரு அமைப்பிடம் வைத்துக் கொள்வது இரு சாராருக்கும் நல்லதுதானே. கவலைப் படாதே சேகர். உங்கள் யூனியனுக்கு என் மனப் பூர்வமான அங்கீகாரம் ஆதரவு எல்லாம் உண்டு. போய் வாருங்கள்.

சேகர்:- ரொம்ப நன்றி சார். உங்களுக்கு எங்களிடம் இருக்கும் இந்த நம்பிக்கைக்கு, எந்தவித குந்தகமும் நேராமல் நடந்து கொள்வோம். வணக்கம் சார் . வருகிறோம். (போகிறார்கள் )

ராஜு :- அப்பாடா...! எங்கே நீங்கள் மறுத்து விடுவீர்களோன்னு பயந்து கொண்டிருந்தேன். தற்போது அவர்களுக்குக் குறைகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும்... யார் கண்டது ... நாளைக்கே வரலாமில்லையா... ஏதோ ஒரு இண்ட்யூஷன்  ஒரு சக்திதான் அவர்களை இயக்கி இருக்க வேண்டும்.

மோஹன்:- IT IS NOT BY INTUITION BUT BY INSTIGATION , THEY ACT.  எந்த சக்தியாலும் இயக்கப் படவில்லை. வேண்டுமென்றே யாராலோ தூண்டி விடப் பட்டிருக்கிறார்கள்.
( ராஜுவை முறைக்கிறான் )

                                                                          ( திரை ).  :-






  





























7 comments:

  1. இவ்வளவு சிறப்பாக எழுதும் ஆசிரியர் திரு. ஜி.எம்.பாலசுப்பிரமணியம் – “ நினைவில் நீ “ என்ற நாவலில் எழுதி இருக்கிறார்.

    நிறைவான பாராட்டுக்கள் ஐயா...

    ReplyDelete
  2. மோகனுக்கு இத்தனை எளிதில் நிறுவனத்தில் பொறுப்பு அளித்திருப்பதற்கு ஏதேனும் பின்னணி இருக்குமா? மனங்களைப் படித்த மோகனுக்கும் மனிதர்களைப் படித்த ரங்கதுரைக்கும் இடையில் இனி என்ன பிரச்சனைகள் எழப்போகின்றனவோ? அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  3. காட்சி - 3

    ஆரம்பமே ரொம்ப அருமையாக ரசிக்கும் வண்ணம் ஒரு அசத்தலான மெசெஜ் இந்த பகுதி 3 ல பாலு சார்.... மிக அற்புதமான ஆராய்ச்சி... சமுதாயம் சீர் பெறுவது தனிமனிதனின் முயற்சியாலா அல்லது கூட்டுறவின் முயற்சியாலா... இரண்டு பக்கமுமே அருமையான பதில்களோடு ஆரம்பிக்கிறது கதை... கரெக்ட் ஒவ்வொரு வரியும் நச் நச்.... ஒவ்வொரு வார்த்தையும் சிந்தித்து அதன்படி செயல்பட்டு தெளிந்து பார்த்தால் முடியாதது என்று எதுவுமில்லை... எதுவும் நம்மில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்ற அருமையான ஒரு கருத்து.....

    ரோட்ல நடக்கும்போது குப்பை போடாதீங்க, சிகரெட்டை அணைத்துவிட்டு போடுங்க... பான் மென்றுவிட்டு துப்பாதீங்க அப்டின்னு காட்டுக்கத்தல் கத்தினாலும் பயனில்லை... நோட்டீசு ஒட்டினாலும் அதையும் காணாதது போல் நடந்துக்கொள்வார்கள்.... ஏய்யா இப்படி துப்புறே.... ஒரு ஓரமா துப்பக்கூடாதான்னு கேட்டுட்டா போச்சு அவ்ளோ தான்.... ஊரில் இருக்கும் அத்தனை அநியாயங்களையும் அடுக்கிவிட்டு போய்யா என்று போய்க்கொண்டே இருப்பார்கள்..... சினிமா தியேட்டருக்கு சென்றால் சீட்டை கிழிப்பது கோபத்தில்... பஸ்ஸில் ஏறினால் பொதுச்சொத்தை நாசம் செய்வதை ஒரு முழுநேர வேலையாக அலைபவரும் உண்டு.... அதெல்லாம் செய்வதை நாம் நம்மில் இருந்து தொடங்கச்சொல்லி வலியுறுத்தும் அழுத்தமான கருத்து..... அவன் செய்யல இவன் செய்யல என்று குறைகள் சொல்லிக்கொண்டே போனால் அப்படியே போய்க்கொண்டே தான் இருக்கும்.... அதைவிட..... ஒரு நிமிடம் நின்று சிந்திக்கச்சொல்லி சொல்கிறார் கதையாசிரியர்... அவன் செய்ல இவன் செய்ல என்று சொல்வதை விட நாம் ஏன் செய்யக்கூடாது என்று சிந்தித்தால் தவறுகள் திருத்திக்கொள்வது நம்மில் இருந்து தொடங்கும்... தான் தன் வேலைகளை தவறில்லாமல் செய்தாலே நல்லது என்பது தானாவே நடக்குமே என்று எத்தனை நம்பிக்கையுடன் சொல்கிறார் கதையாசிரியர் பாலுசார்.... அப்டின்னா சமுதாயம் திருந்தலை, மனுஷா இன்னும் அப்டியே தான் இருக்கா அப்டின்னு கதை சொல்லும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்றும்...


    ஒவ்வொரு தனிமனிதனும் விட்டுக்கொடுத்து செயல்களில் நேர்மையை கொண்டு வந்து... அட லஞ்சம் வாங்குவதில் இருந்து இதை ஆரம்பிக்கலாமே.. லஞ்சம் வாங்கமாட்டேன் என்ற வைராக்கியம் ஒவ்வொருவரின் மனதிலும் வந்தால் ஆஹா ஆஹா லஞ்சம் வாங்காமல் நம்ம வேலைகளை முடித்து கொடுக்கிறார்ப்பா அப்டின்னு வாழ்த்துவாங்க.. எத்தனையோ தியாகிகள் பென்ஷன். முதியோர்கள் பென்ஷன் எல்லாமே லஞ்சம் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை... எது செய் எது எடு எது தொடங்கு லஞ்சத்தில் தான் தொடங்குகிறது.... எல்லாத்துக்குமே ஒரு விடிவு கிடைத்துவிடும்....

    தனிமனிதனின் ஒழுக்கத்தில் நேர்மையில் தொடங்கும் நல்ல காரியங்கள் கூட்டுறவாகும் என்று முடிப்பதும்... அதே கூட்டுறவு என்பதே ஒவ்வொரு தனிமனிதனின் ஒழுக்கமும் நல்லச்செயலும் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் விதமாகட்டும்.. ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள் பாலுசார்...

    மோஹனின் தன்மானம், மாலாவுக்கு மோஹன் மீதான நேசம், ராஜுவின் கடுப்பு, ரங்கதுரையின் பரிவு எல்லாமே மிக அருமையாக நடத்திச்செல்கிறது கதையை.....கவிதைகள் கதைகள் எழுதுவது எல்லோருக்குமே வந்துவிடாது.... எல்லோருமே யூனிக். எல்லோருக்குமே தனித்திறமைகள் இருக்கும். ராஜு எஞ்ஜினியரிங்ல அசத்துகிறான் என்றால் மோஹன் கதை கவிதைகளில். அதை ராஜூ இத்தனை இடக்காக சொல்லி மனம் வருந்த வைத்திருக்கவேண்டாம்... நல்லவேளை ரங்கதுரை அனுபவப்பட்டவர்.... அருமையாக விஷயத்தை டீல் செய்வதிலும் சரி.. இருவரின் மனசும் வருத்தப்படாதமாதிரி அவர் பேச்சுக்கள் அமைந்தது போல கதை அமைத்தது சிறப்பு...

    நாடகம் அசத்தலாக போய்க்கொண்டு இருக்கிறது....

    அடுத்த காட்சி -4 படித்துவிட்டு கருத்து எழுதுகிறேன் பாலு சார்.. இதுவரை ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.... நினைவில் நீ நாவலில் எழுதிய அருமையான கருத்து எங்களுக்கும் லட்டு போல கிடைத்தது. அன்பு வாழ்த்துகள் பாலுசார்.

    ReplyDelete
  4. மாலாவின் ரெக்கமண்டேஷனாலும் ரங்கதுரையின் பெருந்தன்மையாலும் மோஹனுக்கு ஆஹா அருமையான வேலை கிடைத்துவிட்டதே... அதுவும் மேனேஜ்மெண்ட்ல.. கல்வி தகுதியை விட மாலாவின் நண்பர் என்ற அதிகப்படியான தகுதியால் தான் இந்த வேலை மோஹனுக்கு கிடைத்திருக்கிறது என்பது ஊர்ஜிதம்...

    இப்படி ஒரு தொழிலதிபரா.... இங்கே ரங்கதுரையை மதிப்புடன் பார்க்க வைத்திருக்கிறது அவர் சொன்ன கருத்துகளை படிக்கும்போது. தொழிலாளர்களும் மனிதர்கள் தான் நம்மைப்போல... அதனால் அவர்களை அவர்களின் வேலைத்திறனை என்கரேஜ் செய்து அதோடு அவர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் உடனுக்குடன் உதவவேண்டும் என்றும். தொழிலாளர்கள் என்று கூட சொல்லாமல் பாட்டாளி பெருமக்களின் பேருழைப்பு என்று சொல்லும் விதத்திலேயே ரங்கதுரையின் மேன்மையான குணத்தை அறியமுடிகிறது... தந்தைக்கு தப்பாத பிள்ளை.. இந்த காட்சி நான்கில் ராஜூவும் ரங்கதுரையும் ஒரே போல் சிந்திப்பது மனதுக்கு நிறைவை தருகிறது....

    கவிதைகளும் கதைகளும் எழுதும் கவிஞர்களின் கலைஞர்களின் மனம் மிக மென்மையானதாக இருக்கும் என்று நினைத்தது மாறுபடுகிறது மோஹனின் பேச்சினால்.... ஒரு கம்பனியில் தொழிலாளர் நலன் யூனியன் அமைப்பதற்கு காரணமே தொழிலாளர்களில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனை என்றால் அதை மேனேஜ்மெண்ட்டுக்கு உடனடியாக தெரிவிக்க ஒரு அமைப்பு இருந்தால் அது இலகுவாகும்.. ஆனால் அதை தவறாக பிரயோகிப்போரால் தான் பிரச்சனைகள் வழி வகுப்பது...

    ஆனால் இந்த கதையை பொறுத்தவரை அப்படி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை... ஏனெனில் சேகரும் சரி மற்ற தொழிலாளர்களும் சரி ரங்கதுரையிடமும் ராஜுவிடமும் மிக மதிப்பும் அன்பும் வைத்திருக்கின்றனர்.. எந்த முதலாளி சொல்வார் தொழிலாளர் யூனியன் ஆரம்பிங்கோ என்று.. ரங்கதுரை சொல்றார்னா அப்ப அவர் சொல்லும்படி தொழிலாளர்கள் எத்தனை நல்லமுறையில் நடந்திருப்பாங்க....அதை பாராட்டியே தீரவேண்டும்... அதுமட்டுமில்லாமல் தொழிலாளர்களின் ப்ரச்சனைகளை சுமுகமாக்கவும் எதையும் நல்ல நோக்கத்தோடு பார்க்கச்சொல்லி சொல்லும் ராஜுவின் வார்த்தைகள் மிகவும் பிடித்தது....

    மோஹனின் கேரக்டர் இந்த காட்சி நான்கு படித்ததும் என்னவோ தெரியவில்லை... ஏதேனும் மோஹனால் வம்புகள் வருமோ என்ற பயத்தை வரவைக்கிறது.... கதை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது....

    இனி அடுத்தடுத்து என்னென்ன ஆகுமோ.. இதுவரை நல்லமுறையில் இயங்கிவந்த தொழிற்சாலை மோஹனின் வரவால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறதோ தெரியவில்லை... அந்த மாற்றங்கள் நல்லதற்கு வழி வகுக்குமா அல்லது குடும்பத்தில் ஒருவருக்கொருவரிடையில் குழப்பத்தை உண்டு பண்ணுமா அதுவும் தெரியவில்லை... இனி தொழிலாளர்கள் பாடு திண்டாட்டம் தான் என்று இப்பவே தெரிந்துவிட்டது....

    கதாசிரியர் நாடகாசிரியர் மிக அருமையாக கதையின் போக்கை கொண்டு போய் காட்சி நான்கில் ஒரு ட்விஸ்ட் வைத்தது தெரிந்து விட்டது....

    அடுத்து என்னாகும் பாலுசார்???

    ReplyDelete
  5. கூட்டுறவு முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள், தங்களது பல தனிப்பட்ட கருத்துக்களை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழவைப்பதோடு தாங்களும் வாழவேண்டும் என்ற கொள்கையில் எழுவதால், சீர்கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும். பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும்.

    அருமையான கருத்துக்களை அழகாக சொல்லிப் போகிறீர்கள். சுவாரசியமாய் இருக்கிறது படிக்க

    ReplyDelete
  6. விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும். போட்டி பொறாமை குறையும். எல்லோருமொரு குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் கூட்டுறவில்தான் பொதுஜன சமதர்மம் சிறப்பாக நிலை பெறும்.//

    விட்டுக் கொடுத்தல் தான் வாழ்க்கைக்கு முதல்படி அதை மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
    விட்டுக் கொடுக்கும் யாரும் கெட்டு போவதில்லை என்ற பழமொழி உண்டு.

    ReplyDelete
  7. புத்தம் புது முயற்சி. வாழ்த்துகள் சார்!

    ReplyDelete