Thursday, September 5, 2013

சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்


                          சீச்சீ.... இந்தப் பழம் புளிக்கும்
                           ---------------------------------------



பதிவர் திருவிழா இனிதே நடந்து முடிந்ததாகச் சில பதிவுகள் பார்க்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒருவரது எழுத்துக்கள் குறிப்பிட்ட சிலரால் படிக்கப் படுகிறது, அல்லது விரும்பப் படுகிறது. இதைப் பதிவுகளைப் படிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம். முகந்தெரியாத பதிவர்கள் என்று குறிப்பிடும்போது நாம் விரும்பிப் படிக்கும் பதிவர்களின் முகம் என்றே தோன்றுகிறது. சிலரது நட்பை நாமே நாடிப் போயிருப்போம்.  நாடிப்போன இடத்தில் நன்றாகவே கவனிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் எனக்கு அவை அதன் பின்னால் தொடர்புகள் வேறூன்றுவதாகக் காணோம். ஒரு வேளை அது வயதின் காரணமாகக் கூட இருக்கலாம்
.
 நான் அறிந்து கொள்ள விரும்பியதெல்லாம், சென்னையிலேயே இருக்கும் பதிவர்கள் ஒரு சிலரைத் தவிர நேரடி நட்பு வளர்த்திருக்கிறார்களா. ஏனென்றால் பெங்களூரிலேயே எத்தனைத் தமிழ் பதிவர்கள் இருக்கிறார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு பதிவர் சந்திப்பும், அதன் விளைவாக ஏற்படும் நட்பும் நான்  எதையுமே இழக்கவில்லையோ  என்று சிந்திக்கவும் வைக்கிறது


பதிவர் சந்திப்பு விழா பற்றி சிலர் எழுதிய சில பதிவுகளைப் படித்தேன். பெரும்பாலானவை வழக்கம் போல் எப்படி பதிவர்கள் எதையும் குறையோடோ, நிறையோடோ  இல்லாமல் விமரிசிப்பது போல்தான் எழுதி இருக்கிறார்கள். இருந்தாலும் சிலரது பதிவுகள் பதிவர் விழா எதிர்பார்க்கப்பட்ட நிறைவினைத் தரவில்லை என்றே கோடி காட்டுகின்றன.திரு.வெங்கட் நாகராஜின் புகைப் படப் பதிவு நிறைவை தருகிறது.சிறப்பான படப் பிடிப்பு.  இம்மாதிரி சந்திப்புகள் பல நேரங்களில் எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிட்டு ஏமாற்றும் திரைப் படங்கள் போல் ஆகிவிடும் வாய்ப்புகள் அதிகம்..


ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நாங்கள் பயிற்சியில் இருந்தபோது ( சுமார் 500 பேர் ஒரே வளாகத்தில் ) எல்லோரையும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒன்று சேர்ந்து வசித்திருந்தவர்கள் உலகின் பல கோடிகளில் வாழ்பவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஒரு சிலருக்கு ஏற்பட்டு முகவரிகள் திரட்ட ஆரம்பித்தனர். என் முகவரியும் அதில் அடங்கி இருக்க அழைப்பு கொடுக்கப் பட்டது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது அந்த சந்திப்பு. அன்று இளைஞர்களாக இருந்த அனைவரும் இன்று கிழடுகள். பலரும் மனைவியரோடு வந்திருந்தனர். தொடர்பில் இல்லாதிருந்ததால் யார் யாரென்றே தெரியவில்லை. அதையும் ஈடுகட்ட அடையாள அட்டைகள் வழங்கப் பட்டன. அதில் அவரது பெயர் அவர் எந்த பிரிவின் கீழ் பயிற்சியிலிருந்தவர் என்பனபோன்ற விவரங்கள் இருந்தது. இந்த விவரங்களையும் அவர்கள் வந்து ரெஜிஸ்டெர் செய்தபோது பெறப் பட்டது. ஒருவர் தென்படும்போது , அவர் முகத்தை பார்க்கும்முன் அவர் கழுத்தில் தொங்கிய அட்டையைக் கவனித்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு கை குலுக்கி மகிழ்ந்தோம் ஒரு சில நிமிடங்களில் சம்பாஷணை தொடர வாய்ப்பில்லாமல் அடுத்தவ்ரை நாடிக் கைகுலுக்கி  இப்போது நினைத்தாலும், அதை விட வேறெதுவும் செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது இத்தனைக்கும் அதே பயிற்சிகூடத்தில் பயிற்சி பெற்றிருந்த முதல் பேட்ச்சை சேர்ந்திருந்தவர்கள் தனியாக அடையாளம் காட்டப் பட்டனர்.அதில் ஒருவர் அதே பயிற்சிக்கூடத்தின் வைஸ் ப்ரின்சிபாலாக பணியில் உயர்வு பெற்றவர்.


அந்தக் கூட்டத்தில் ஒருவர் பெயரைப் படித்ததும் எனக்கு அவர் நான் பயிற்சியில் இருக்கும்போது நடந்த டேபிள் டென்னிஸ் டபிள்ஸ் போட்டியில் என் பார்ட்னராக இருந்து இறுதிப் போட்டிவரை வந்ததும் நினைவுக்கு வந்தது. அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு நாங்கள் விளையாட்டில் பார்ட்னராக இருந்ததை நினைவு படுத்தினேன். அவர் ஒரு முறை என்னைப் பார்த்து அவருக்கு எதுவும் நினைவிலில்லை என்றாரே , அப்போது எனக்கு மிகவும் அவமானமாய் இருந்தது. அற்ப புழு போல் உணர்ந்தேன். அன்று ஒரு உறுதி எடுத்தேன். என்னை அடையாளம் தெரியாதவரை எனக்கும் இனி தெரியாது. என்று.

இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நானாகப் போய் என்னை அறிமுகப் படுத்தியும் இந்த வேளையில் யாராவது உதாசீனப் படுத்தினால் .....? ஒரு வேளை அம்மாதிரி நிகழ்வதைத் தடுக்கத்தான் என்னால் போக முடியவில்லையோ.? யாருக்காவது “ சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் “ எனும் கதை நினைவுக்கு வருகிறதா.?
   .
 

32 comments:

  1. என்னைப் பொருத்தவரை உலகில் எல்லாம் இருக்கிறது
    நமக்கானதை நாம் எடுத்துக் கொள்கிறவர்களாக
    இருந்தால் எப்போதும் மகிழ்ச்சிதான்
    கொடுத்துப் பெறுவோம் என இருந்தால்
    எதையும் ரசிக்கவோ பெறவோ முடியாது
    எனத்தான் நினைக்கிறேன்
    இது கூட என் கருத்து மட்டுமே
    எதையும் பொதுமைப்படுத்துவதில் எனக்கும்
    உங்களைப்போலவே உடன்பாடில்லை
    தெளிவான கருத்துடன் கூடிய பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு நாங்கள் விளையாட்டில் பார்ட்னராக இருந்ததை நினைவு படுத்தினேன். //

    சிலருக்கு நினைவாற்றல் இருக்காது, அது போல அவர் உண்மையாகவே மறந்து இருக்கலாம்.
    சிலர் பழையவைகளை நினைத்துப் பார்க்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டுமே, எங்கோ ஓரிடத்தில் கும்பலாகக்கூடி விடுவதாலும், ஒருவரையொருவர் சந்திப்பதாலும் மட்டுமே பிரமாதமாக நட்பினை புதுப்பித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் கிடையாது.

    நேரில் சந்திக்காமலேயே வலையுலகின் மூலம் எவ்வளவோ பேர்களுடன், அன்புடன், பாசத்துடன், பிரியத்துடன், நட்புடன் ஆரோக்யமாகப் பழகிட முடிகிறது.

    அதில் தான் நேரில் சந்திப்பதைவிட அதிகமான த்ரில்லும் இருந்து வருகிறது.

    இவரை நேரில் சந்தித்தால் நிறைய விஷயங்கள் பேச வேண்டும் என நாம் மனதில் அடிக்கடி நினைப்போம்.

    ஆனால் அவரை நாம் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எதுவுமே நமக்குப் பேசத்தோன்றாது.

    என்னைப்பொறுத்தவரை என் தொடர்பு எல்லைக்குள் இருந்து, என்னுடன் பாசமாகப் பழகிவருவோரைப்பற்றி மிக உயர்ந்த உன்னதமான கற்பனைகள் என் மனதில் எப்போதும் உண்டு.

    நேரில் சந்தித்து பேசுவதால் நாம் இதுவரை நமக்குள் செய்து வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை மேலும் உயரலாம் அல்லது சற்றே சரியலாம்.

    அதனால் யாரையும் அவசியமாகச் சந்திக்கத்தான் வேண்டும் என்றெல்லாம் நான் எப்போதும் நினைப்பது இல்லை.

    இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துகள் மட்டுமே.

    மற்றவர்களின் கருத்து என்னுடையதிலிருந்து வேறுபடலாம்.

    அவர்களின் கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  4. சந்தோசம் என்பது நம் மனதைப் பொறுத்து...!

    நன்றி ஐயா....

    ReplyDelete
  5. தெள்ளிய கருத்துக்கள் உங்களதும், திரு. கோபு சாரதும்.

    அனுபவங்கள்தான் பாடம் கற்பிக்கின்றன.

    ReplyDelete
  6. //என்னைப்பொறுத்தவரை என் தொடர்பு எல்லைக்குள் இருந்து, என்னுடன் பாசமாகப் பழகிவருவோரைப்பற்றி மிக உயர்ந்த உன்னதமான கற்பனைகள் என் மனதில் எப்போதும் உண்டு.

    நேரில் சந்தித்து பேசுவதால் நாம் இதுவரை நமக்குள் செய்து வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை மேலும் உயரலாம் அல்லது சற்றே சரியலாம். //

    இந்த வை.கோ. சார் தான் எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார்!

    அதென்னவோ தெரியவில்லை, தெரியாமலிருக்கும் வரை தான் உயர்வெல்லாம் போலிருக்கு. தெரிந்து விட்டால் எதுவும் சாதாரணம் தான் போலிருக்கு..

    தெரிந்தது தெரியாதது இதையெல்லாம் லட்சியம் பண்ணாதது சில கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் உறவே.
    தனிப்பட்ட மனிதர்கள் மறந்து போய்
    மனசுக்கு இசைந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் சிம்மாசனத்தை அலங்கரிக்கும் இங்கே!

    ReplyDelete
  7. ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்கும் போது நாம் பல சங்கடங்களைத் தவிர்க்கிறோம் என்று நினைப்பவள் நான்.இந்தக் கருத்தில் சிலர் மாறுபடலாம். ஆனால் , நட்பாலும் சில சங்கடங்கள் வரவே செய்கின்றன என்னைப் பொறுத்த வரை. அதை தவிர்ப்பது நல்லதே!

    ReplyDelete
  8. தெரிந்தவர்களையே தெரியாதது போல் நடந்துகொள்வது ‘பெரியமனுஷத்தன்மை’ ஆயிற்றே! (2) நடந்து முடிந்த பதிவர் திருவிழாவில், சினிமா சம்பந்தப்பட்ட கேபிள் சங்கர், சுரேகா, மதுமதி போன்றவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் மட்டுமே முக்கியத்துவம் உடையவர்களாகத் தோன்றினார்கள். ஒருவேளை நிதி திரட்டலில் இவர்கள் பங்கு அதிகம் இருந்திருக்கலாம். (3) சிறப்பு பேச்சாளர்கள் தேர்வு சிறப்பானதாக இல்லை. ஒருவேளை இவர்கள் முயற்சித்தும் சில பெரிய, கௌரவமான எழுத்தாளர்கள் வரச் சம்மதிக்கவில்லையோ என்னவோ! (4) அடுத்தமுறை இம்மாதிரி விழாக்கள் நடத்தும்பொழுது, உறுப்பினர் கட்டணம் குறைந்தது ரூ.100-ஆவது வாங்கப்படவேண்டும். அதைக்கொண்டு நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக நடத்த முடியும். (5) நிகழ்ச்சியின் நினைவு கூறத்தக்க அம்சம், புத்தக வெளியீடுகள் தாம். வெளியிடப்பட்ட ஐந்து புத்தகங்களுமே அந்தந்த எழுத்தாளர்கள் தம் சொந்தச் செலவில் பதிப்பித்தவை தாம். எனவே தனித்தனியாக வெளியீட்டு விழாவை அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் பட்சத்தில் ஆளுக்கு இருபதாயிரம் ரூபாயாவது செலவாகியிருக்கும். இப்போது அத்தொகை மிச்சமாகியது. இதற்காகப் பதிவர் திருவிழா அமைப்பாளர்களுக்கு நாம் நன்றி கூறித்தான் ஆகவேண்டும். – இமயத்தலைவன் (கவிஞர் இராய செல்லப்பா) –சென்னையிலிருந்து.

    ReplyDelete
  9. இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நானாகப் போய் என்னை அறிமுகப் படுத்தியும் இந்த வேளையில் யாராவது உதாசீனப் படுத்தினால் .....? //

    இதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இது நடந்து முடிந்த பதிவர் கூட்டத்திலும் என்னால் காண முடிந்தது. ஒன்று ஒரே ஊர்க்காரர்கள், அல்லது ஒரே வயதுக்காரர்கள், பெண் பதிவர்கள் என தனித்தனி தீவாகத்தான் பல பதிவர்களையும் காண முடிந்ததே தவிர புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் களமாக அதை காண முடியவில்லை.

    ReplyDelete
  10. இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நானாகப் போய் என்னை அறிமுகப் படுத்தியும் இந்த வேளையில் யாராவது உதாசீனப் படுத்தினால் .? //

    இதை நானும் பல சமயங்களில் அனுபவித்திருக்கிறேன்.என்ன செய்வது சிலரது மனோபாவம் அப்படி!..

    ReplyDelete
  11. @ ரமணி.
    நான் நினைத்தும் பார்க்காத கோணத்தில் உங்கள் கருத்துக்கள்பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ கோமதி அரசு
    நீங்கள் கூறுவது போல் அவர் மறந்திருக்கலாம். ஆனால் அப்போது என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஆர்வத்துடன் நட்பைப் புதுப்பித்துக்கொளளச் சென்ற எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. வருகைக்கும் கருத்டுக்கும் நன்றி.

    ReplyDelete

  13. @ கோபு சார் , மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ திண்டுக்கல் தனபாலன்
    சிறிய கருத்துப் பதிவில் சொன்னதை விட சொல்லாமல் சொல்லிச் செல்வதே அதிகம் என்று தோன்றுகிறது.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ சுந்தர்ஜி
    கானலை நம்பி ஏமாறுவதைத் தடுக்க எழுதிய பதிவு இது. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ ஜீவி
    /அதென்னவோ தெரியவில்லை, தெரியாமலிருக்கும் வரை தான் உயர்வெல்லாம் போலிருக்கு. தெரிந்து விட்டால் எதுவும் சாதாரணம் தான் போலிருக்கு../ கருத்துச் செறிவு நிறைந்த பின்னூட்டம் நன்றி

    ReplyDelete

  17. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    சங்கடங்களைத் தவிர்க்க சந்திக்காமலேயே இருக்கலாம் என்கிறீர்களா. இதையே நான் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றேன்....!

    ReplyDelete

  18. @ செல்லப்பா யக்ஞஸ்வாமி,
    பதிவர்கள் சந்திப்புப் பற்றிய பல பதிவுகளை விட அவற்றுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் நிறையவே தகவல்கள் தருகிறது.இதே கருத்துக்களை ஒரு பதிவாக எழுதினால் பல்வேறு கருத்துக்களால் மொய்க்கப் படுவீர்கள். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  19. @ டி.பி.ஆர். ஜோசப்
    /இதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இது நடந்து முடிந்த பதிவர் கூட்டத்திலும் என்னால் காண முடிந்தது. ஒன்று ஒரே ஊர்க்காரர்கள், அல்லது ஒரே வயதுக்காரர்கள், பெண் பதிவர்கள் என தனித்தனி தீவாகத்தான் பல பதிவர்களையும் காண முடிந்ததே தவிர புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் களமாக அதை காண முடியவில்லை./ இதை நான் ஓரளவு எதிர்பார்த்தேன். கருத்துரைக்கு நன்றி.


    ReplyDelete

  20. @ துரை செல்வராஜ்
    அனுபவங்கள் பல நேரங்களில் ஒருவிதம். கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. அவர் உங்களைப் பார்த்து பார்த்து எதுவும் நினைவில் இல்லை என்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவருக்கு ஞாபகமறதி என்னும் நோய் இருந்திருக்கலாம்.

    வலைபதிவர் சந்திப்புக்கு சென்று இருந்தால் நிச்சயம் ஒரு மூத்த பதிவர் என்ற முறையில் உங்களுக்கு மரியாதை செய்து இருப்பார்கள். சூழ்நிலையின் காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. தமிழில் “ கூடிக் கலைவது புலவர் தொழில் “ என்பார்கள். இங்கு புலவருக்குப் பதில் பதிவர் என்று சொல்லலாம். நன்றி!

    ReplyDelete
  22. ஜோசப் அவர்களே,

    //புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் களமாக அதை காண முடியவில்லை.//

    அதுக்குலாம், மச்சி/மாம்ஸ்/மாப்ளனு பேசி கட்டிங் வாங்கி கொடுக்க தெரியனும், நீங்க பச்ச தண்ணிக்கு மேல எதுவும் குடிக்க மாட்டிங்க,அதே போல எல்லாரும் இருப்பாங்கனு நினைச்சா என்கே இருந்து புது நட்பு ஏற்படும் :-))

    யூத்தா இல்லாட்டியும் யூத்து போல ஆக்டிங் கொடுக்க கத்துக்கிட்டா தான் பதிவர் சந்திப்புல எல்லாம் "நட்பு வளரும்"

    நீங்க சந்திப்புக்கு போனதே தெரியாம, வந்தா தெரியு,னு ஒருத்தர் நீங்க ஒரு பதிவில் போட்ட கமெண்டுக்கு பதில் சொல்லியிருந்தார்(பார்க்கலையோ) இப்படியா போன சுவடு தெரியாம போயிட்டு வரது அவ்வ்!

    அடுத்த தபா இப்படி எதுனா சந்திப்புக்கு போனா கூட நாலு பேர கூப்டு போய் , ஜோசப் அவர்கள் வருகிறார் வழி விடுங்கோனு சொல்ல வையுஙக இல்லினா உங்க வரவு "ரெஜிஸ்டர் ஆவாது :-))

    ReplyDelete
  23. //ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டுமே, எங்கோ ஓரிடத்தில் கும்பலாகக்கூடி விடுவதாலும், ஒருவரையொருவர் சந்திப்பதாலும் மட்டுமே பிரமாதமாக நட்பினை புதுப்பித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் கிடையாது. //

    இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  24. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா

    ReplyDelete
  25. அன்புள்ள ஐயா,.

    வணக்கம்.

    இதுகுறித்து விரிவாகப் பேசுவதில் பயனில்லை.

    எனினும் சுந்தர்ஜியின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

    இதில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உண்டு.

    உங்களின் பதிவு நிறைய பழைய சிந்தனைகளைக் கிளறுகிறது.

    ReplyDelete

  26. @ தி. தமிழ் இளங்கோ
    @ டாக்டர் கந்தசாமி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ஹரணி.
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
    @ வவ்வால்
    முதன் முதலில் என் தளத்துக்கு வந்து ஜோசப் சாரின் பின்னூட்டத்துக்குக் கருத்து பதித்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  27. //சுந்தர்ஜி said...

    தெள்ளிய கருத்துக்கள் உங்களதும், திரு. கோபு சாரதும்.

    அனுபவங்கள்தான் பாடம் கற்பிக்கின்றன.//

    தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி திரு. சுந்தர்ஜி.

    ReplyDelete
  28. //ஜீவி said...

    *****என்னைப்பொறுத்தவரை என் தொடர்பு எல்லைக்குள் இருந்து, என்னுடன் பாசமாகப் பழகிவருவோரைப்பற்றி மிக உயர்ந்த உன்னதமான கற்பனைகள் என் மனதில் எப்போதும் உண்டு.

    நேரில் சந்தித்து பேசுவதால் நாம் இதுவரை நமக்குள் செய்து வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை மேலும் உயரலாம் அல்லது சற்றே சரியலாம்.*****

    //இந்த வை.கோ. சார் தான் எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார்! //

    நமஸ்காரங்கள் திரு ஜீவி ஐயா.

    தங்களின் புரிதலுக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  29. // G.M Balasubramaniam said...

    @ கோபு சார் , மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.//

    புரிதலுக்கும் தங்கள் நன்றிக்கும், என் நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  30. //பழனி. கந்தசாமி said...

    *****ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டுமே, எங்கோ ஓரிடத்தில் கும்பலாகக்கூடி விடுவதாலும், ஒருவரையொருவர் சந்திப்பதாலும் மட்டுமே பிரமாதமாக நட்பினை புதுப்பித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் கிடையாது.*****

    //இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன்.//

    தங்களின் புரிதலுக்கும், கருத்தை வழிமொழிவதாகச்சொல்வதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  31. அழகான பதிவுக்கு அற்புதமான கருத்தூட்டங்கள். கருத்தூட்டங்கள் அனைத்தும் தங்களின் கருத்தோட்டத்தைச் சார்ந்துள்ளமையைப் பார்த்தீர்களா அய்யா! உண்மையை, நல்லதை நல்ல உள்ளங்கள் ஏற்கத் தான் செய்கின்றன. சிந்திக்க வைக்கும் பகிர்வை பகிந்தமைக்கு நன்றி அய்யா. (தாமதமான வருகைக்கு பொருத்துக் கொள்ளுங்கள் அய்யா)

    ReplyDelete
  32. GMனய்யா,

    //@ வவ்வால்
    முதன் முதலில் என் தளத்துக்கு வந்து ஜோசப் சாரின் பின்னூட்டத்துக்குக் கருத்து பதித்தமைக்கு நன்றி...//

    ஏற்கனவே உங்க தளத்துல ஏதோ கருத்து சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.

    ஜோசப் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் உங்கள் பதிவின் தாக்கத்தின் விளைவே, ஆனால் தனியா பதிவுப்பற்றியும் சொல்லி இரூக்கனும்,தவறிட்டேன்.மன்னிக்கவும்.

    சுருக்கமா சொன்னால் மிக யதார்த்தமாக நிதர்சனத்தை சொல்லி இருக்கீங்க,

    "என்னை யார் என தெரியாதவங்க எனக்கும் தெரியாதவங்க" இது ஒன்றே பலப்பக்கம் எழுதினாலும் சொல்ல முடியாததை சொல்கிறது!

    # இச்சந்திப்புக்கு போகாததால் இழக்க எதுவும் இல்லை அதிக பட்சம் "பிரியாணி" மிஸ்ஸாகி இருக்கும் தட்ஸ் ஆல்!

    ஏன் எனில் வெகு சிலர் கூடிய நிகழ்வு,கூடியவர்களும் வந்தவர்கள் யார் என்றே அறியாமல் கலைந்துவிட்டார்கள்,

    உதாரணமாக, ஒரு பதிவர் பின்னூட்டத்தில்,இன்னொருத்தரை கேட்கிறார் ,மண்டபத்துல என் பக்கத்தில உட்கார்ந்து இருந்தீங்க ஏன் என்னிடம் அறிமுகம் செய்துக்கொள்ளவில்லைனு, அட மூதேவி அவர் அறிமுகம் செய்யல்லைனா என்னா நீ செய்யலாமேனு நினைச்சுக்கிட்டேன் :-))

    இப்படித்தான் பக்கத்தில உட்கார்ந்து இருந்தாலும், ,அவர் முதலில் பேசட்டும்னு இவரும், இவர் முதலில் பேசட்டும்னு அவரும் ஆளுக்கு ஒரு திசை பார்த்துக்கிட்டு பேசவும் இல்லை,கடசி வரையில் மேடையில் என்ன நடந்துச்சுனு பார்க்கவுமில்லை:-))

    இதே போல அவ்வப்போது சிலர் கூடி நடத்துவது வழக்கம் ,போனவர்களை விட போகாதவர்கள் எண்ணிக்கை தான் அதிகம்,எனவே நீங்க மெஜாரிட்டி பக்கம் :-))

    இப்படியான நிகழ்வுக்கு முடிஞ்சா போகலாம் ,இல்லைனா வரிசையா வர பதிவுகளுக்கு "தமாஷா கமெண்ட்" போட்டு கலாய்க்கலாம்!

    முன்னவர்களை "overshadow" செய்கிறார்கள் இப்போ இருக்கும் சிலர்,நாளை இதையே பின் வருபவர்கள் இவர்களுக்கும் செய்யக்கூடும்,அதான் வாழ்க்கை!


    மனசில பட்டதை சொல்லி இருக்கேன்,இதுக்கு எத்தினிப்பேர் பாய்வாங்களோ அவ்வ்!

    ReplyDelete