Wednesday, December 26, 2018

விவேகாநந்தரின் எழுத்து


                            விவேகாநந்தரின் எழுத்து
                            ---------------------------------------
அன்புள்ள அளசிங்கர், பாலாஜி, ஜி.ஜி., மற்றும் சென்னை அன்பர்கள் அனைவருக்கும்,

எனது செயல்களைப் பற்றித் தொடர்ந்து உங்களுக்குத் தெரிவிக்காததற்காக என்னை மன்னியுங்கள். தினமும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கிறது. அதிலும் என்னைப் பொறுத்தவரை, பொருட்களைச் சொந்தமாகக் கொண்டு அவற்றைப் பாதுகாக்கின்ற வாழ்க்கை முற்றிலும் புதியது. எனது சக்தியில் பெரும்பகுதியை அது விழுங்கிவிடுகிறது. உண்மையிலேயே அது ஒரு பெருந்தொல்லைதான்.

பம்பாயிலிருந்து கொழும்பு போய்ச்சேர்ந்தோம். சிங்களர்களின் உடையும் முகமும் உங்கள் தமிழர்களுடையது போல்தான் இருக்கிறது. அவர்களது மொழி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மொழியைப் பொறுத்த வரையில், உச்சரிப்பைக் கேட்டால் அது உங்கள் தமிழ் போலவே உள்ளது.

ஜப்பானியரைப் பற்றி என் மனத்திலுள்ள அனைத்தையும் இந்தச் சிறு கடிதத்தில் எழுதி முடிக்க இயலாது. ஒரு விருப்பம் மட்டும் எனக்கு உண்டு; நம் இளைஞர்கள் ஆண்டு தோறும் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போக வேண்டும். இந்தியா சிறப்பும் நன்மையும் நிறைந்ததோர் கனவுலகம் என்றே ஜப்பானியர் இன்னும் கருதியிருக்கின்றனர்

ஆனால், நீங்களோ, நீங்கள் என்ன மக்கள்!...வாழ்நாள் முழுவதும் வெட்டிப் பேச்சு, வீண் பிதற்றல், நீங்கள் என்ன மக்கள்! வாருங்கள், இந்த மக்களை வந்து பாருங்கள், திரும்பிப் போய் வெட்கத்தில் உங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள். வெறும் கிழட்டு இனம், வெளியே வந்தால் உங்கள் ஜாதி போய்விடுமே! பல நூற்றாண்டுகளாக, உருண்டு திரண்டு பெருகிக்கொண்டே போகின்ற மூடநம்பிக்கைச் சுமை உங்கள் தலையை அழுத்திக்கொண்டிருக்கிறது

இந்த உணவா? அந்த உணவா? இது தீண்டத் தக்கதா? தீண்டத்தகாததா? என்றெல்லாம் வாதம் செய்வதிலேயே ஆற்றல் முழுவதும் விரயமாகிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துள்ள சமுதாயக் கொடுமை உங்கள் மனிதத் தன்மை முழுவதையும் நசுக்கிப் பிழிந்தெடுத்து விட்டது

நீங்கள் என்ன மக்கள்! இப்பொழுதும்தான் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் புத்தகங்களை ஏந்திக் கடற்கரையில் உலவியபடி, ஐரோப்பியரின் மூளை கண்டுபிடித்த துணுக்குகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள்; முப்பது ரூபாய் சம்பளத்திற்கான குமாஸ்தா வேலைக்காக, மிஞ்சிப்போனால், இளைய இந்தியாவினுடைய ஆசையின் உயர்வரம்பான ஒரு வழக்கறிஞன் ஆவதற்காக முனைந்து நிற்கிறீர்கள்

இதில் நமது ஒவ்வொரு மாணவரின் காலடியிலும்சோறு போடுஎன்று கேட்டவாறு நெளிகின்ற பட்டினிக் குழந்தைகளின் கும்பல் வேறு. இது அல்லவா உங்கள் லட்சணம். உங்களையும், உங்கள் புத்தகங்களையும், கோட்டுகளையும், பல்கலைக் கழகச் சான்றிதழ்களையும் மூழ்கடிக்கக் கடலில் போதிய அளவு தண்ணீரா இல்லாமல் போய்விட்டது

வாருங்கள், மனிதர்கள் ஆகுங்கள்! முன்னேற்றத்திற்கு எப்போதும் முட்டுக்கட்டையாக நிற்கின்ற புரோகிதக் கூட்டத்தை உதைத்துத் தள்ளுங்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள், அவர்களது இதயம் ஒருபோதும் விரிந்து பெரிதாகாது. பல நூற்றாண்டுகளின் மூட நம்பிக்கை மற்றும் கொடுங்கோன்மையின் வாரிசுகள் அவர்கள். முதலில் புரோகிதத்துவத்தை வேருடன் பிடுங்கி எறியுங்கள்

வாருங்கள், மனிதர்களாக ஆகுங்கள்உங்கள் குறுகிய வளைகளில் இருந்து வெளியேறி, பார்வையை விரியுங்கள். நாடுகள் முன்னேறுவதைப் பாருங்கள். மனிதனை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள், உயர்ந்த சிறந்த விஷயங்களுக்காக நாம் பாடுபடுவோம்.

பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள், அது மட்டும் வேண்டாம். மிக அன்புக்குரியவர்கள், மிக நெருங்கியவர்கள் புலம்புவதைக் கண்டாலும் திரும்ப வேண்டாம். பின்னால் பார்க்காதீர்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.

குறைந்தது ஓர் ஆயிரம் வாலிபர்களின் பலியையாவது இந்தியா வேண்டி நிற்கிறது- வாலிபர்களையே தவிர மிருகங்களையல்ல என்பதை மனத்தில் கொள்ளுங்கள். இறுகிப்போன உங்கள் நாகரீகத்தை உடைத்தெறிய இறைவனாலேயே கொண்டு வரப்பட்டுள்ள கருவியாக இருந்து வருகின்றது ஆங்கிலேயர் அரசாங்கம். அந்தா ஆங்கிலேயர் காலூன்ற இடம் அளிக்க உதவிய முதல் மக்களைத் தந்தது சென்னைதானே?

அந்தச் சென்னை இப்போது எத்தனை பேரைத் தரத் தயாராக உள்ளது? சுயநலமற்றவர்களான, முழு ஆற்றலுடன் பணி செய்யவல்ல, ஏழைகளிடம் அனுதாபம் கொள்கின்ற, பசித்துக் கிடப்பவர்களின் வாய்க்குச் சோறு தருகின்ற, பொதுமக்களுக்கு அறிவுக்கல்வி தருகின்ற- உயிரைக் கொடுத்தாவது இத்தகைய புதிய சமுதாய நிலையை உருவாக்கப் பாடுபடத் தயாராக உள்ள எத்தனை பேரை சென்னை தரப் போகிறது? உங்கள் மூதாதையரின் கொடுங்கோன்மையால் மிருக நிலைக்குத் தள்லப்பட்டுள்ளவர்களை மனிதர்களாக்குவதற்காக உயிர்போகும் வரையில் பாடுபடத்தயாராக உள்ள எத்தனை பேரைத் தந்துதவச் சென்னை ஆயத்தமாக உள்ளது?

உங்கள்,
விவேகானந்த.

(குறிப்பு: அமைதியாக, பரபரப்பின்றி உறுதியாக செய்யப்படுகின்ற செயலே வேண்டியது. பத்திரிகைப் பாராட்டுகளும், பெயரைப் பிரபலப்படுத்துகின்ற ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை- இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்)    
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புக்குரிய நண்பர்களே

விவேகானந்தர் அளசிங்கருக்கும் ஏனைய நண்பர்களுக்கும், 119 வருடங்களுக்கு முன் எழுதிய கடிதத்தின் கனல் இன்னும் அணையாமலும், இன்று நமக்கே நமக்காக
எழுதப்பட்டதாகவும் தோன்றி எழுச்சியூட்டுகிறது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கிலேய அரசாங்கத்துக்குப் பதிலாக- தன் சொந்த நாட்டின் ரத்தத்தையே ருசித்துக் கொழிக்கும்  அரசியல்வாதிகளையும், செல்லரித்துப்போன அதிகாரிகளையும், சுயநலம் மிகுந்த நம்மையும் கொண்ட - இந்திய அரசாங்கம். மற்றபடி நம் கலாச்சாரத்தை- நம் வேர்களின் மகத்துவத்தை மறந்த- எடுத்துச் சொல்லும் தலைவர்கள் இன்றி வறண்ட பாலைவனமாகவே கண்களுக்குப் படுகிறது.

வெறும் வார்த்தைகள் எந்தப் பலனையும் தராது. செயல். அமைதியான முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் சுயநலமற்ற செயல் என்பதே விவேகானந்தரின் உரத்த குரல் சொல்லும் தொனி.

நாம் எங்கு இருக்கிறோம்? என்னவாக இருக்கிறோம்? இப்போதும் கூட விழிக்காது போனால் எதிர்காலம் என்னவாக இருக்கும்

நூறு வருடங்களுக்கு முன்னால் ஆயிரம் இளைஞர்கள் என்னும் கணக்கு இன்றைக்கு ஒரு லட்சம் என்று மாறலாம். ஒரு லட்சத்துக்குப் பின் ஒரு கோடி என்பது மிக எளிதுமிகப் பொறுமையாக, மிக உறுதியாக, வன்முறையற்ற, மொழி, ஜாதி, மதம் கடந்து ஒருமித்த வகையில் முன்செல்லும் விதத்தில் நம்மால் இயங்க முடியும்ஒவ்வொருவரும் நமக்கு நம்பிக்கையளிக்கும் ஒவ்வொரு பத்துப் பேரிடம் விவாதித்து இந்த வட்டத்தைப் பெரிதாக்க முடியும்வாழ்வதும், மடிவதும் ஒரு முறை. இறந்த பின்னும் வாழ்வது எப்போதோ ஓர் முறைதான். யாரோ வெகு சிலர்தான். அந்தச் சிலராய் நாம் இருப்போம்

நமக்குத் தலைவர்கள் யாரும் தேவையில்லை. சுயநலம் தவிர்த்த, தியாகத்துக்குத் தயாரான நாம் எல்லோருமே தொண்டர்களாய் இருப்போம்சிறு பொறி ஊழித்தீயாக எழக்கூடிய சாத்தியம் இன்றைய தொழில்நுட்பத்தில் எளிதானதாக இருக்கையில்  விடாப் பிடியாய் நாம் செயல்படுகையில், காலம் நம் தலைவனைத் தேடிக் கொண்டுவரும்.    

ஒரு இந்தியனின் ஒட்டுமொத்தக் குரலாக- என் கிராமம், என் நகரம். என் மாவட்டம், என் மாநிலம் எனும் எல்லைகளைக் கடந்து - உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

அன்பின் சுந்தர்ஜி, என் டேஷ் போர்டில்  இப்பதிவு கண்டு படித்தும் விட்டேன். உங்களுக்குத் தெரியும் நான் ஆரம்ப முதலே என் பதிவுகளில் என் ஆதங்கங்களையே என் பாணியில் எழுதி வருகிறேன். அந்தக் கருத்துக்ளுடன் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். பாரதி ,விவேகாநந்தர் போன்றோரின் கருத்துக்களை சிறு வயது முதலே படித்து அதனால்தானோ என்னவோ கொஞ்சமாவது அந்த தாக்கம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். நீங்கள் என் எழுத்துக்களை பரவலாக படித்து இருக்கிறீர்கள் என்பதால் இவற்றை எழுதுகிறேன். அவர்களது எழுத்துக்கே கிடைக்கத் தவறிய ஒப்புதல்கள் என் எழுத்துக்கா கிடைக்கப் போகிறது. .நல்ல எழுத்துக்களையும் சிந்தனைகளையும் தேடிப் பிடித்து வெளியிடும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.  
பதிவின் கடைசி வரிகள் நான்ந்தேடி எடுத்த  பதிவு என்று தெரியப்படுத்தும்   சுந்தர் ஜிக்கு  எழுதிய  பழைய கடிதம் ஒன்றில் இருந்து எடுத்தது 















21 comments:

  1. இன்றைக்கும் இது நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. முதலில் சில வரிகளை அடிக்கோடிடலாமா என்று இருந்தது ஆனால் பதிவைப்படிப்பவர்களுக்கு நான் அடிக்கோடிட இருந்த வரிகள் தெரிந்திருக்கும் என்பதால் செய்ய வில்லை

      Delete
  2. விவேகானந்தரின் கடிதம் மனதிற்கு எழுச்சியூட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. நம்மில் இன்னும் பல விவேகாநந்தர்கள் வந்தாலும் நாம் மாறுவோமா என்பது சந்தேகமே

      Delete
  3. //(குறிப்பு: அமைதியாக, பரபரப்பின்றி உறுதியாக செய்யப்படுகின்ற செயலே வேண்டியது. பத்திரிகைப் பாராட்டுகளும், பெயரைப் பிரபலப்படுத்துகின்ற ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை- இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்) //

    கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்பு.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இன்றைய கால கட்டத்துக்கு அமைத்யாகச் செயல் புரிதல் உதவாது என்றே தோன்று கிறது

      Delete
  4. இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகத்தான் கடிதத்தின் சாராம்சம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சூழலை மாற விட மாட்டார்கள்

      Delete
  5. நல்ல கடிதம். நல்ல நோக்கில்தான் பதிவு செய்திருப்பீர்கள். உங்கள் ஜெனெரேஷன், எங்கள் ஜெனெரேஷனில் (நாம் உள்பட) மாறுதலுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், அடுத்த ஜெனெரேஷனாவது மாற முயற்சிக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்கள் தானாக வருவதில்லை ஏற்படுத்தப்படுகின்றன

      Delete
  6. அவ்ளோ பழமையானதோ அக்கடிதம்... நம் புளொக்குகளும் பல நூற்றாண்டுகள் வாழும் என நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக பழமையான கடிதம்மட்டுமல்ல அன்றைய நிலையைச் சாடும்கடிதம்

      Delete
  7. விவேகானந்தரின் எழுத்து என்று தலைப்பிடாமல் இருந்திருக்கலாம்.
    'இவர் சொன்னார், அவர் எழுதினார்' என்பதற்காக வலிந்து பாராட்டும் வழக்கம் இன்னும் நம்மில் செத்துவிடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இவர் சொன்னார், அவர் எழுதினார்' என்பதற்காக வலிந்து பாராட்டும் வழக்கம் இன்னும் நம்மில் செத்துவிடவில்லை/ இருக்கிறது தெரிந்துதான் தலைப்பு சில கருத்துகள் என் கருத்து போல் இருப்பதாகப் பட்டது வாசகர்கள் நான் எழுதியதாக நினைக்கக் கூடாது அல்லவா

      Re

      Delete
    2. அப்படீல்லாம் நினைக்கமாட்டோம் சார்.... உங்கள் கருத்துக்கு ஒத்துவரும் கருத்துக்களைத்தான் நீங்க பிரசுரம் பண்ணுவீங்க. நீங்க என்ன 'விவேகானந்தர் சொன்ன பலவற்றையா இங்க எழுதுவீங்க. எது உங்களுக்குத் தோதுப்படுதோ அதைத்தான் அவர் பேர் போட்டு எழுதுவீங்க'.

      நான் வழக்கம்போல, அதில் குறை காண்பேன். நீங்க சொல்றீங்க, ஆனால் செய்யறதில்லை, நாங்க சொல்றதே இல்லை என்று சொல்வேன். ஹா ஹா.

      Delete
  8. நான் வழக்கம்போல, அதில் குறை காண்பேன். நீங்க சொல்றீங்க, ஆனால் செய்யறதில்லை, நாங்க சொல்றதே இல்லை என்று சொல்வேன். ஹா ஹா./ ஒரு பாதிசரி மறுபாதி அப்படி இல்லை
    //

    ReplyDelete
  9. அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தும் வரிகள்! இனியும் பொருந்தும் மாற்றம் வரவில்லை என்றால்..

    கீதா

    ReplyDelete