Thursday, April 12, 2012

பூவே பூவே.......


                                                  பூவே பூவே..........

                                                -------------------


சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.!
----------------------------------------------------------------               

 .




12 comments:

  1. யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
    கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
    பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?//aahaaஅருமையான வரிகள்!

    ReplyDelete
  2. கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின புது மலர்கள் புத்தாண்டில் பூத்துக் குலுங்க புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா..

    நந்தன வ்ருடம் நந்தவன வருடமாக
    நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ஒரு பூவின் புலம்பல்
    ----

    பூத்தால் எனெக்கென்ன?

    பூக்காவிட்டால் தான் என்ன?

    மனிதர் நினைப்பை எல்லாம்

    என்மேல் ஏற்றிச் சொல்லல்

    எதில் சேர்த்தி?..


    பூக்காமல் இருந்தாலே நிம்மதி

    கொய்ய வருபவனைப் பார்த்து

    குலை நடுங்காமலாவது இருக்கலாம்..

    ReplyDelete
  5. 'ஒரு பூச்செடியின் புலம்பல்' என்று தலைப்பை மாற்றி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. சொல்லிச் சென்ற விதத்தில் எங்களுக்குள்ளும்
    ஆனந்தப் பூ பூத்தது

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
    ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
    பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு. // வார்த்தையில் அழகோ அழகோ ...

    ReplyDelete
  8. @ ஸாதிகா,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ ஜீவி,
    @ ஹரணி,
    @ லக்ஷ்மி,
    @ ரமணி,
    @ சசிகலா
    வருகை தந்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி
    பூச்செடியின் புலம்பல் இன்னொரு பரிமாணம்.
    பாராட்டுகளுக்கு நன்றியுடன் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு
    ( தமிழ் ) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஒரு முறை அழித்தால் மீண்டும் அதே இடத்தில் வளரும் என்று சொல்லக்கூடியது பயிர் மட்டுந்தான். அதனால் தான் பெண் மனதைப் பூவுக்கும் ஆண் மனதைப் பயிருக்கும் ஒப்பிட்டார்கள் :)
    இன்றைய கான் க்ரீட்வனங்களில் அசல் ரோஜா பார்க்கும் பேறு கிடைத்தது விடுங்கள்..

    ReplyDelete
  10. பூப்போன்ற மென்மையான கவிதை..

    ReplyDelete