Tuesday, October 2, 2012

நரைத்திடாக் காதல்..........


                                     நரைத்திடாக் காதல்......
                                     ----------------------------


அன்புள்ள காதலிக்கு, இந்தக் கடிதம் படிக்கத் துவங்கும் போது உன் முகம் சிவப்பது உணருகிறேன். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று  வெட்கத்தால் ஏற்படுவது அடுத்தது கோபத்தால் ஏற்படுவது. வெட்கம் புரிந்து கொள்ளக் கூடியது. கோபம்....? பொத்தாம் பொதுவாகக் காதலிக்கு என்று எழுதினால் கோபம் வராதா என்ன...?இந்தக் கடிதம் , அன்பே, எல்லாக் காதலிகளுக்கும் பொருந்தும். அதனால்தானே யாவரும் படிக்கும்படியாக எழுதுகிறேன்.

அநேகமாக காதலிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள்.? எல்லாம் பேசுவார்கள். ஆனால் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். இதுதானே நடைமுறை. ?. ஒருவரின் ரூப லாவண்யத்திலோ , கம்பீரத்திலோ மனதைப் பறி கொடுக்கிறார்கள், ஏதோ சொல்லத் தெரியாத கவர்ச்சியே அடுத்தவரிடம் மனம் ஈர்க்கச் செய்கிறது. அழகு என்பது அதில் ஒன்றுதான். இல்லையென்றால் அழகில்லாதவர் காதல் வசப் படுவதில்லையா ? இந்தமாதிரியான எண்ணங்களே, கண்ணே , என்னை “ இன்னார்க்கு இன்னார் “ என்று ஒரு பதிவு எழுத வைத்தது. அறிந்துகொள்ள உந்தப் பட்டால் படித்துப் பார்.

ஒருவர் கண்ணுக்குத் தெரியும் ஒருவித அழகு, மற்றவர் கண்ணுக்குப் புலப் படாமல் போகலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் “  BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER “  என்பார்கள். அது போகட்டும். எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டது ஒரு அந்திமாலைப் பொழுது. . செக்கச் சிவந்த ஆதவனின் கிரணங்கள் மேற்கே மறையும் தருவாயில் ,  உன் கன்னச் சிவப்பு முன் நிற்க முடியாமல் , கோபத்தில் அவன் வானத்தையே இருளச் செய்ய முயன்று கொண்டிருந்தானே, அப்போதுதான். கூடவே வானில் வெள்ளி நிலவு தலை காட்டி உன் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது கண்டேன். பின்னொரு தினம் அந்த நாளை நினைத்து உன்னிடம் ஒரு கவிஞன் எழுதியதை நினைவூட்டினேன். ஞாபகம் இருக்கிறதா. ?நிலவைப் பிடித்து , அதன் கறைகள் துடைத்து, ,குறு முறுவல் பதித்த முகம் “ இப்பொழுது அதை எண்ணிப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து குறு முறுவல் பதித்தால் எப்படி இருக்கும். ? கணினியில் உபயோகிக்கப் படும்  SMILEY  போல் இருக்கும். ..!ஒரு விஷயம் பிடித்து விட்டால் என்ன குறை இருந்தாலும் அடிபட்டு விடும். அன்பே.... இது முக்கியம்...! இந்தமாதிரியான விருப்பும் வெறுப்பும் புற அழகில் கட்டுண்டிருக்கும்போதோ, அதிலிருந்து மீண்ட போதோ மட்டும்தான் தலை தூக்கும். உண்மையான காதல் முதலில் புற அழகால் தோன்றினாலும்  நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது வலுவாகும்.
கண்டவுடன் காதல் என்பது பொதுவாக ஆண்களுக்குத் தான் ஏற்படுகிறது. பெண்கள் காதல் வசப் பட்டு இருக்கிறார்களா என்பதை அறிவதே பெரும்பாடு அக அழகைக் காண அவர்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். நான் முன்பே சொன்னதுபோல் காதலர்கள் சந்தித்துப் பேசும்போது, அவர்கள் காதலை உறுதிப் படுத்திக் கொள்வதாக நினைத்து அது குறித்து மட்டும் பேசுகிறார்கள். காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை திருமணத்துக்குப்பின்னும் தொடரச் செய்வது மிகவும் அவசியம். காதலிக்கும்போது குறைகள் தெரிவதில்லை. திருமணத்துக்குப் பின் அவைதான் பூதாகாரமாகத் தெரியும். A PERFECT PERSONALITY  என்று யாரும் கிடையாது. குறைகளும் நிறைகளும் ஊடுருவி இருப்பதே மனித இயல்பு.

காதலிக்கும்போது எல்லாம் இன்ப மயமாக இருக்கும். காதலிப்பவரால் தேடப் பட்டும் விரும்பப் பட்டும் இருக்கும் நிலை மகிழ்ச்சிதருவது நிச்சயம் கிடைத்த பிறகு சில எதிர்பார்ப்புகள் நிறை வேறாதபோது வருத்தம் தோன்றுவதும் நிதர்சனம். இவ்வளவையும் நான் உன்னிடம் நேரில் சொல்ல முடியாதா என்ன. ? முடியும். ஆனால் மூடியாது. .! எங்கே என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் மாறிவிடுமோ என்னும் பயம் என் வாயை அடைத்து விடும். உனக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். கனவுகளும் நிதர்சனங்களும் ஒரு கோட்டில் சந்திக்கும்போது திருப்தியும் மன நிறைவும் ஏற்படுமானால் காதல் வெற்றி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.


பொதுவாகக் காதலிக்கும்போது ஒன்றை மறந்து விடுகிறோம். காதலிக்கும் நபர் தனி மனிதர் என்று தோன்றினாலும் அவருக்கும் உறவு, சுற்றம்  எல்லோரும் இருக்கிறார்கள்.என்பதை மறக்கக் கூடாது. பதின்பிராயங்கள் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் வளர்ந்த சூழலை  எல்லாம் மறந்து விட்டு கணவன் , மனைவி என்று மட்டும் நினைப்பது சரியாகாது. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டும். அதே சமயம் உறவுகளுடனான பந்தங்கள்  பலமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்பே, திருமண பந்தத்தில் சேரவிரும்பும் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த பந்தத்தினால் தழைக்கப் போகும் வம்ச வுருட்ச வேரூன்றி இருக்க  கண்வன் மனைவி பங்களிப்பு மகத்தானது. இது செய் ,அது செய் என்று கூறி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, நாம் வாழ்ந்து காட்டும் முறையைப் பின் பற்றும் பிள்ளைகளே அதிகம். ஆகவே அவர்களது வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது அவசியம்.

என்னடா இது  காதல் கடிதம் எதிர் நோக்கி இருப்பவளுக்கு ,, வாழ்வு முறை பற்றிய பாடமாக இருக்கிறதே என்னும் உன் எண்ணம் புரிகிறது. செல்லமே, சிந்தித்துப் பார். நாம் எத்தனை முறை உரையாடி இருப்போம். SWEET NOTHINGS  தவிர ஏதாவது பேசியிருப்போமா. என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள என் சிந்தனைகளின் போக்கும் உனக்குத் தெரிய வேண்டும் அல்லவா. நான் எண்ணுவதைக் கூறிவிட்டேன். உன் சிந்தனைகள் ஒத்து இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாறுபட்ட கருத்தோ, வித்துயாசமான எண்ணமோ இருந்தால் நீயும் எழுது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறக்கும்



கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் “ நான் வேண்டுவதெல்லாம்  நரை கூடும் பருவத்திலும் நரைத்திடாத காதல்தான் “
அப்படி இருக்க இந்த மடலை இன்னுமொரு முறை படித்துப் பார். . வேண்டியது கிடைக்க நினைத்து எழுதப் பட்டதே இக்கடிதம். இது நமக்கு மட்டும் பொருந்துவதல்ல. காதலிப்பவர் அனைவரும் உணர வேண்டியது.
எங்கெங்கு நோக்கினும் சக்தியடா... என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால் எனக்கோ எங்கெங்கு நோக்கினும் உன் உருவே என் முன் நிற்கிறது. என்றும் உன் நினைவுடன்........ உன் அன்பன்.    
  .

    







  



 . 

12 comments:

  1. காதலிக்குக் கூட, 'அன்புள்ள காதலி'க்கு என்று ஆரம்பித்து கடிதம் எழுதினால், அந்த நெருக்கம் நெருக்கமாகத் தோன்றாது.

    அதெல்லாம் கதைகளில் தான்.

    'அன்புள்ள' என்று ஆரம்பித்து காதலியின் பெயரை சுருக்கி செல்லமாக அழைப்பதே, பக்கத்தில் காதலன் இல்லாத நேரத்திலும் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

    ReplyDelete

  2. @ ஜீவி, சூடான கருத்துக்கு நன்றி. அன்புள்ள காதலிக்கு என்று எழுதியவன், அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறானே.

    ReplyDelete
  3. ஓ.... காதலிக்கும் பொழுது இவ்வளவு யோசிக்கனுமா...?
    சரிங்க ஐயா. திரும்பவும் முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  4. நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும்.

    அழகாகச் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  5. காதலைப் பற்றி ஜெயகாந்தன் குறிப்பிட்ட ஒரு வாசகம்:
    காதல் தோன்றுவதற்கும், மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும். அது மேன்மை அடைவதும் , மலினம் ஆவதும் அந்த இரு நபர்களை சார்ந்த விஷயம்.

    ReplyDelete

  6. @ அருணா செல்வம்.
    ” திரும்பவும் முயற்சிக்கிறேன் “
    அப்போ முதல் முயற்சி. ? இதிலாவது பயன் விளைந்தால் மகிழ்வேன் அருணா செல்வம் அவர்களே.
    @ முனைவர் இரா. குணசீலன்,
    @ நாக சுப்பிரமணியம்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறீர்கள். ஆனால் விரிவாகப் பேசுவதற்கு பின்னூட்டங்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லையோ என்று பல சமயங்களில் நான் நினைத்தது உண்டு.

    இப்பொழுது நாகசுப்ரமணியன் குறிப்பிட்டிருக்கும் ஜெயகாந்தனின் கருத்து. அதை வைத்துக் கொண்டு எவ்வளவு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.. ஹூம்...

    ReplyDelete

  8. @ ஜீவி, என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். படிப்பவர் பின்னூட்ட எழுதுவதில்லையே என்று நான் எண்ணியதுண்டு. அதை எழுதியுமிருக்கிறேன அது ஏக்கம் அல்ல. ஒரு குறிப்பிட்ட கருத்தின் தாக்கம் தெரியாது போவதன் வெளிப்பாடுதான் அது. உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பதிவை நான் எழுதியதே நாகசுப்பிரமணியத்தின் குறும் பாடல் ஒன்று கண்டுதான். நரைத்திடாக் காதல் வேண்டும் என்றிருந்த அவருடைய கவிதை, செயல்படுத்தத் தேவை என்ன என்பதை இக்கட்டுரை ( கடித உருவில் )யில் விளக்க முயன்றிருக்கிறேன். பின்னூட்டங்களில் சர்ச்சை புரிய நான் விரும்புவதில்லை. நான் பின்னூட்டமாக எழுதும் போது என் கருத்துக்களை முன் வைப்பேன். அவற்றை நிலை நாட்டும் எண்ணம் எனக்கிருந்ததில்லை. நம் கருத்துக்கள் எழுதுவோம். படிப்பவர் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் நல்லது என்று எண்ணுவது என் வழி. உங்கள் இந்தப் பின்னூட்டத்துக்கும் இவ்வளவு விரிவாக நான் எழுதியது ஒரு தவறான கருத்து என் மேல் இருப்பதை சுட்டிக்காட்டவே. தெளிவாக்க கொடுத்த சந்தர்ப்பத்துக்கு என் நன்றி.

    ReplyDelete
  9. GMB சார்!

    என் பின்னூட்டம் தவறான புரிதலைக் தங்களுக்குக் கொடுத்து விட்டது போலிருக்கு.

    மூளையைக் கசக்கிக் கொண்டு எழுதும் பதிவுகளுக்கு எதிர்பார்க்கிற மாதிரி அதிகப் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று எழுதியிருக்கிறீர் கள். அதே மாதிரி ஒரு உணர்வு தான் இதுவும்.

    என் அனுபவத்தில் பின்னூட்டம் தான் பதிவு எழுதுபவர்களுக்கு வாசித்தவரோடு கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் தளம் என்று உணர்ந்திருக்கிறேன். சர்ச்சை என்றே இல்லை. எழுதியவரும், அந்த எழுத்தை வாசித்தவரும் ரசனையின் வேறொரு தளத்திற்குப் போகும் சுகானுபவம் அது. பதிவின் சுருக்கம் கருதி அதில் சொல்லாமல் விட்டதையும், பின்னூட்டத்தை ஒட்டி புதிதாகச் சொல்ல விரும்புவதைச் சொல்வதற்கும் பின்னூட்டத்தை உபயோகித்துக் கொள்ளுதல் நமக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு..

    காதலைப் பற்றி ஜெகே குறிப்பிட்ட அந்த வரிகள் எவ்வளவு அற்புதமானது! அதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் சொல்லி இந்தப் பதிவை ஒட்டிய வெவ்வேறான ரசனைகளை வெளிப்படுத்தியிருக்க லாமே என்கிற ஆதங்கத்தில் தான் சொன்னேன்.

    பதிவுகளை விட்டுவிடுங்கள். அவற்றின் எண்ணிக்கை பெரிதல்ல.
    பதிவு எழுத எடுத்துக் கொண்ட விஷயத்தின் பன்முக பார்வைகளை சகல கோணங்களிலும் தரிசித்து அனுபவிப்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கும்?.. எழுதியவரும் வாசித்தவரின்
    அனுபவ வெளிப்பாட்டை ரசித்து வாசகராகும் அற்புத தருணங்கள் அவை.. அதனால் தான் பிறர் எழுதிய பதிவுகளைக் கூட படித்தோம் நம் எண்ணத்தைச் சொன்னோம் என்று போய்விடாமல், மற்றவர்களின் பின்னூட்டங்களில் நமக்கு என்ன செய்தி கிடைக்கிறது என்று கவனிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

    என் பின்னூட்டம் மாறுபட்ட கருத்தை தங்கள் மனத்தில் விதைத்திருந்தால் அதற்காக வருந்துகிறேன், GMB சார்!





    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. 'அன்பே இல்லாத காதலிக்கு' என்று தொடங்கி நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன் - இன்பமான பின் விளைவுகளை அனுபவித்திருக்கிறேன்.

    சுவாரசியமான மடல் - நரை என்று இங்கே காலக்கட்டத்தைக் குறிப்பிடுகிறீர்களென்று நினைக்கிறேன். முடியிழ்ந்தவனுக்கு நரையும் திரையும் ஒன்றுதான் :)

    ReplyDelete

  12. @ அப்பாதுரை, நான் இங்கு நரை என்று கூறுவது வயதாவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகத்தான் என்றும் இளமையாய் இருக்க வேண்டிய காதலை,நரைத்திடாத காதலை, வேண்டுபவருக்கான மடல்.

    ReplyDelete